பாசுர மடல் 097 : அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் - 3மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 14:27, 9 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்
அவதாரங்களும் கூர்தலியக் கோட்பாடும் [ 3 ].
அவதாரக் கோட்பாடு என்பது மிகத் தொன்மையான ஒரு இந்திய வழக்கு. தமிழின் முதற் சான்றுகளாக சங்கப் பாடல்களைச் சொல்லலாம். நற்றிணைக் கடவுள் வாழ்த்தில் திருமால் வேதத்தில் போற்றப் படும் பரம்பொருள் என்றும், அவர் உலகிற்குக் காரணப்பொருள் என்றும் அறிகிறோம். அகநானூற்றில் கிருஷ்ணாவதாரச் செய்தி ஒன்றும்,இராமாவதாரச் செய்தியொன்றும், பரசுராமாவதாரச் செய்தியொன்றும் வருகிறது. முதல் மூன்று ஆழ்வார்களின் பாடல்களில் கூர்மம், வராகம், நரசிம்மன், வாமனன்,இராமன், கண்ணன் அவதாரங்கள் இடம் பெறுகின்றன. பெரியாழ்வார் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டிற்குள் இந்த அவதார வரிசை ஒரு ஒழுங்கிற்குள் வந்து விடுகிறது.
எனவே எப்படிப் பார்த்தாலும் இந்தியக் கூர்தலியச் சிந்தனை, ஆங்கிலச் சிந்தனையைவிட பல நூற்றாண்டுகள் முந்தியவை. எனவேதான், முதன் முதலாக ஐரோப்பாவை உலுக்கிய கூர்தலியச் செய்தி இந்தியா வந்த போது "கிணற்றுக்குள் போட்ட கல்" போல் சத்தமில்லாமல் இருந்தது :-)
சிலப்பதிகாரம் பேசும் ஒரு பாடலிலும் ஒரு செய்தி ஒளிந்து கொண்டுள்ளது. அதாவது,
வடவரையை மத்தாக்கி
என்பது அது. இந்தக் கடல் வயிறு கலக்குதல் என்பது ஒரு ஆழமான தொன்மம். பல பொருள் கொண்டது. பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி தனது முனைவர் ஆய்வேட்டில் அது "உப்புக் காய்ச்சுவதை"க் குறிக்கலாம் என்கிறார். அல்லது கடல் என்பது உணவுக் களஞ்சியம் என்பதைச் சுட்டலாமென்றும் சொல்கிறார்.
கூர்தலியப் பார்வையில் உயிர்கள் தோன்றிய விதத்தைக் குறிப்பதோ இது என்றொரு சந்தேகம் இப்போது எழுகிறது. அதாவது முதல் உயிர்கள் தோன்றியகாலக் கட்டத்தில் கடல் என்பது வின் கற்களாலும், மின்னல், இடிகளாலும் தாக்கப் பட்டு கலங்கிய ஒரு நிலையில் இருந்திருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.Stanley L.Miller (1952) என்ற அமெரிக்க விஞ்ஞானி இத்தகைய ஒரு சூழலை ஆய்வகத்தில் உருவாக்கி சோதனை செய்ததில் உயிர் தோன்றுவதற்குத் தேவையான அமினோ அமிலங்கள் உருவாவதைக் கண்டார்! இப்படிக் கலங்கிய கடலின் அடிவயிற்றை விஞ்ஞானிகள் "hot soup" என்றுதான் சொல்கின்றனர்!!
ஆமையாய்க்
என்ற பெரியாழ்வார் திருமொழி திருமாலைக் கங்கையாய், ஆழ்கடலாக வருணிப்பது இங்கு உற்று நோக்கத் தக்கது. இப்படியான ஒரு சூடான இரசித்திலிருந்து உயிர்கள் வேதிமச் சேர்க்கையால் உருவாகின்றன. இந்த வேதிமச் சேர்க்கைக்கு உயர் சக்தி தேவைப் படுகிறது. அதை இன்றைய பூமியால் தந்திருக்க முடியாது. ஏனெனில் இன்றைய பூமி மிகவும்குளிர்ந்து விட்டது. அன்று அவ்வாறில்லை. எரிமலைகளும், வின் கற்களும், இடியும், மின்னலும் சதா தாக்கிக் கொண்டிருந்தன. அமினோ அமிலங்கள் எரிமலை கக்கிய அமோனியா, கரியமில வாயு மற்றும் நைட்டிரஜன் இவைகளின் வேதிமச் சேர்க்கையால் உருவாகின்றன.
நம்மாழ்வார் என்ன சொல்கிறார்? ..........சேர்க்கை செய்து தன்னுந்தியுள்ளே,
இந்த "சேர்க்கை செய்து" என்ற பதம் உண்மையில் ஒரு வேதியியற் பதம். வேதிமற் சேர்க்கைகள்தான் உலகை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த சேர்க்கைகளுக்குத் தேவையான சக்தியை அவை பஞ்சபூத பெளதீகத்தாற் பெருகின்றன. இப்படித்தான் உலகு உயிர் அவன் படைத்திருக்க வேண்டும் (அறிவியல் "படைப்பவன்" ஒருவன் வேண்டும் என்று எண்ணுவதில்லை. எல்லாம் தன்னிச்சையாக நடைபெறுகின்றன எனச் சொல்கிறது. அதுவேறு விஷயம்).
தேவவுலகு, தெய்வவுலகு என்பவை என்ன என்று பின்னால் சிந்திக்கலாம். முதலில் உயிர் கொண்ட பூவுலகு தோன்றியதைப்பார்ப்போம்.
கடல் வயிறு கலக்கிய புராணத்தில் வேறொரு செய்தியும் உண்டென்று படுகிறது. அதுதான் இந்த "ஆலகால விஷம்". அது என்ன ஆலகால விஷம்? அது புறப்பட்டு உயிர்களை அழித்துக் கொண்டு தேவர்களை விரட்ட அவர்கள் சிவனிடம் தஞ்சம் புக அவர் அதை உண்டு "நீல கண்டனாக"....
இந்த ஆலகால விஷம் என்பது இன்று உயிர் வளி என்று நம்பப்படும் "ஆக்ஸிஜன்" தான்!
ஆச்சர்யமாக இருக்கிறதா? முதல் உயிர்கள் தோன்றி பாக்டீரியாக்களும் பிறவும் கலக்கிய கடலைச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில் சூரிய ஒளியை வேதிமச் சேர்க்கையால் சக்கரையாக்கும் வித்தையை (ஒளிச்சேர்க்கை) சில உயிரனங்கள் (phyto-planktons) கற்றுக் கொள்கின்றன. இப்படியான ஒளிச்சேர்க்கையின் பக்க விளைவுதான் இந்த உயிர்வளி. இந்த உயிர்வளி ஒரு காலக் கட்டத்தில் இந்த உலகை பயமுறுத்தியது. ஏனெனில் முதலில் தோன்றிய உயிர்களுக்கு உயிர்வளியைப் பயன்படுத்தும் தேவை இல்லாததால் அதுவே நஞ்சாகப்போனது. உலகு முழுவதும் பரந்திருந்த உயிர்வளியைப் பயன்படுத்தி வாழும் தன்மையை பின்னர் உயிர்கள் பெறுகின்றன. அதற்கேற்ற ஒரு உயிர்வேதியியல் (biochemistry) உருவாகிறது. அப்போது உயிர்கள் "வாழ" இந்த வளி முக்கியமானதாகப் போய்விடுகிறது. இதுதான் சிவபெருமான் உலகைக் காத்த கதைக்கான அறிவியல் வாசிப்பு.
என்ன இப்படிச் சிந்தனை போகிறது என்ன எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது. ஆனால் தொன்மங்களுள் புதைந்துள்ள உண்மைகள் மெதுவாகத்தான் தெரிய வருகின்றன. 1998ம் ஆண்டு பிப்ரவரி 20 தேதியிட்ட Science நோவாவின் கப்பல் (Noah's arc) புனைவு அல்ல என்று சொல்கிறது! மத்தியதரைக் கடல், போஸ்போரஸ் வழியாக உடைத்துக் கொண்டு கருங்கடலுள் உட்புகுந்த போது 200 நயாக்கரா நீர்வீழ்ச்சிகளின் அளவான தண்ணீர் 500 கிலோ மீட்டர் வட்டத்திற்குள் கேட்கும் வண்ணம் பெரும் சத்தத்துடன் உட்புகுந்து இருக்கிறது.
இது கிளப்பிய அழிவில் வெளியேறிய பண்டைய மக்கள் மெசபடோமிய,சுமேரிய நாடுகளுக்கு 7500 ஆண்டுகளுக்குமுன் வந்து குடியேறிய போது இக்கதைகளைக் கொண்டு வந்து அதுவே பின் நோவாவின் கப்பல் தொன்மமாக உருவெடுத்திருக்க வேண்டும்என்று Wiiliam Ryan, மற்றும் Walter Pitman என்ற ஆய்வாளர்களின் கருங்கடல் ஆய்வுசுட்டுகிறது. இதே நிகழ்வுதான் மச்சாவதாரத்திற்கும் ஆதாரமாக இருக்கவேண்டும். அதைப்பின்னால் பார்ப்போம்.
இது ஒரு திறந்த கேள்வி. ஒரு முற்று முடிவன்று. சிந்தனைக்கு ஒரு விருந்து அவ்வளவே. இத்தகைய நூல்கள் பல ஆங்கிலத்தில் வந்துள்ளன. நம் தொன்மங்களை மீள்பார்வை செய்ய இப்போது நல்ல தருணம்.
நா.கண்ணன்.
|