நவராத்திரி நாயகியர் 3

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:39, 22 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக



ஈசனுக்கு ஒரு ராத்திரி தான். சிவராத்திரி. ஆனால் அம்பிகைக்கு நவ ராத்திரி. நவம் என்றால் ஒன்பது என்பதை அறிவோம் அல்லவா?? ஒன்பது ராத்திரிகள் அம்பிகையின் வழிபாட்டில். சிவராத்திரியிலோ இரவு முழுதும் தூங்காமல், சாப்பிடாமல் விரதம் இருப்போம். ஆனால் அம்பிகையின் நவராத்திரியிலோ வித விதமான சாப்பாடுகள், பலகாரங்கள், பட்சணங்கள், சுண்டல் வகைகள் எனச் செய்து சாப்பிடுவதோடு அல்லாமல் விநியோகமும் செய்கிறோம். தாயல்லவா அவள்??நம் அம்மா நம்மைப் பட்டினி போட்டுவிட்டுத் தான் மட்டும் எப்போவானும் சாப்பிட்டுப் பார்த்திருக்கோமா?? நாமே நம் குழந்தைகளைப்பட்டினி போட்டுட்டுச் சாப்பிடுவோமா?? அகில உலகத்தையும் ஆட்டி வைக்கும் சக்தி படைத்த அம்பிகையும் தன் வழிபாட்டில் அனைவருக்கும் வயிறு நிறையச் சாப்பாடும், மனம் நிறைய பலவிதமான ஸ்லோகங்களையும் காட்டிக் கொடுத்திருக்கிறாள். ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் அதனால் தான், “ஸ்ரீமாதா” என அம்பிகையை விளித்து ஆரம்பிக்கிறது. அம்பிகையின் வழிபாட்டில் அம்பிகையின் பல்வேறுவிதமான தோற்றங்கள் பற்றிச் சொல்லப் படுகிறது. “அநகா அத்புத சாரித்ரா” என அம்பிகையைப் போற்றும் லலிதா சஹஸ்ரநாமம். அப்படி அநேகவிதமான அற்புதமான சரித்திரங்களைக் கொண்டவள் அம்பிகை. இந்தச் சரித்திரங்களை வர்ணிக்கும் நூல் தேவி பாகவதம் ஸ்ரீ வேத வியாசரால் எழுதப் பட்டது. இதில் அம்பிகையின் திருவிளையாடல்களோடு, அம்பிகையைக் குறித்த பல்வேறுவிதமான துதிகளும், வேதங்கள் எவ்வாறு அம்பிகையைத் துதிக்கின்றது என்பதைச் சுட்டும் துதியும் இடம் பெற்றிருக்கும். இந்த தேவி பாகவதத்தை நவராத்திரி காலங்களில் படிப்பதும்,படித்து மற்றவர்க்குச் சொல்லுவதும் மிகுந்த நன்மை பயக்கும். ஸ்ரீவேத வியாசர் ஜனமேஜெயனுக்கு இந்த தேவி பாகவதத்தை விவரித்துக் கூறினார் என்பதும், இந்த நவராத்திரி வழிபாட்டில் பயனடைந்த மன்னர்களைப் பற்றியும் கூறி இருக்கிறார். சீதையைப் பிரிந்து கஷ்டத்திலும் துயரத்திலும் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமரும் நவராத்திரி வழிபாட்டைச் செய்து அதன் மூலம் பயன் பெற்றார் என்றும் அரிச்சந்திரன் பட்டம் ஏறிய புதிதில் குழந்தைப்பேறு வேண்டி விரதம் இருந்ததும், வருணனுக்குத் தன் முதல் குழந்தையை ஒப்படைப்பதாய்க் கூறியதும், அதில் வாக்குத் தவறியதும், அதனால் பட்ட கஷ்டமும் பின்னர் அதிலிருந்து தப்பியதும் அதன் பின்னர் சத்தியவான் ஆக மாறிப் பட்ட கஷ்டங்களும், கடைசியில் சுடுகாட்டில் வெட்டியானாக இருந்து தன் சொந்த மகன் உண்மையாகவே இறந்து அவனைத் தானே எரிக்க நேர்ந்தபோது சதாக்ஷியை தியானித்ததையும் அவள் அருளால் அனைவரும் உயிர் பிழைத்து மீண்டும் அயோத்திக்கு வந்ததையும் தேவி பாகவதம் விரிவாய்க் கூறும்.


இவை அனைத்தையும் ஜனமேஜயனுக்கு விரிவாய்க் கூறிய வியாசர் சதாக்ஷியின் சரித்திரத்தைக் கேட்பவர்கள் கோரிக்கைகள் நிறைவேறி அம்பிகையுடன் ஒன்றுபடுவார்கள் எனவும் கூறுகிறார். தேவியின் இந்த மஹாத்மியம் மேதஸ் என்னும் முனிவரால் நாட்டை இழந்த அரசன் சுரதனுக்கும், மனைவி, மக்களால் துன்புறுத்தப்பட்ட சாமதி என்னும் வியாபாரிக்கும் சொல்லப் பட்டது. இருவரும் முனிவரின் வழிகாட்டுதலில் நவராத்திரி வழிபாடுகள் செய்தனர். நவராத்திரி விரத முறையை இப்போது பார்ப்போம்.


புரட்டாசி மாதம் மஹாலய அமாவாசை அன்றே பூஜைக்கு உரிய ஏற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டும். விரதம் இருக்க முடிந்தால் ஒருவேளை உணவு எடுத்துக்கொள்ளலாம். மறுநாள் பிரதமை அன்றில் இருந்து பூஜை தொடங்க வேண்டும். பூஜை செய்யும் இடம் சமதளப் பரப்பாக இருத்தல் நலம். மேடு-பள்ளம், ஏற்ற, இறக்கம் இல்லாமல், சுத்தமான இடத்தை முடிந்தால் பசுஞ்சாணத்தால் மெழுகி நான்கு பக்கமும் கோலங்களால் அலங்கரித்து நடுவில் பெரியதாக மணைக்கோலம் போடவேண்டும். இட வசதி இருப்பவர்கள் தூண்களை நடலாம். இடவசதி இல்லாதவர்கள் கடையில் விற்கும் மண்டபங்களை வாங்கிக்கொள்ளலாம். மண்டபத்தை நன்கு அலங்கரித்து மண்டபத்தின் உச்சியில் காவிக்கொடி கட்டவேண்டும். அம்பிகை உருவம் படைத்த கொடிகள் நிறையக் கிடைக்கும்.
Poojamandapam.jpg
மண்டபத்தின் நடுவில் சதுரமான பீடம் அமைக்கவேண்டும். ஸ்ரீவித்யா வழிபாட்டில் சிறந்தவர்களை அழைத்தோ, அல்லது நமக்கே ஸ்ரீவித்யா வழிபாட்டு முறைகள் தெரிந்திருந்தால் நாமே செய்து கொள்ளலாம். கூடியவரைக்கும் ஐந்து புரோகிதர்கள் இருத்தல் நலம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒருத்தர் வந்தாலே பெரிய விஷயம். ஆகவே வழிபாட்டு முறைகள் தெரிந்த ஐவரை அழைத்துக்கொள்ளலாம். நீராடிப் புத்துணர்வுடன், நித்ய கர்மாநுஷ்டானங்களைச் செய்து விட்டு பூஜையை உடன் வந்திருக்கும் நண்பர்களோடு ஆரம்பிக்கவேண்டும். வேதங்கள் தெரிந்தவர்களாய் இருத்தல் நலம். பீடத்தில் வெண்பட்டு ஆசனம் அமைத்து, சங்கு, சக்ர, கதாதாரியாய் அம்பிகையைப் பிரதிஷ்டை செய்யவேண்டும். அம்பிகையின் வடிவம் கிடைத்தால் நல்லது. ஆடை, ஆபரணங்கள், புஷ்பங்களால் அம்பிகையை அலங்கரிக்க வேண்டும்.
Kalasam.jpg
வடிவம் கிடைக்காவிட்டால் கலசம் ஒன்றை அமைத்து அதில் நீரை நிரப்பி, முடிந்த வரைக்கும் காசுகள், மணிகள் தங்கம், ரத்தினங்கள் என்று போட்டு மாவிலைகளையும் நீருள்ள நல்ல தேங்காயையும் வைத்து, அதற்கு அம்மன் போல் அலங்காரங்கள் செய்து கொள்ள வேண்டும். சங்கல்பம் செய்து கொள்ளும்போது, குடும்பம், தெரு, நகரம், நாடு, உலகம் என அனைத்துத் தரப்பு மக்களின் க்ஷேமத்திற்காகவும் பிரார்த்திக்க வேண்டும். சந்தனம், அகில், பச்சைக்கற்பூரம், கஸ்தூரி போன்ற வாசனைப் பொருட்கள், மந்தாரை, செண்பகம், மல்லிகை, முல்லை, பிச்சி(அம்பாளுக்குப் பிரியமானது பிச்சி) ஆகியபூக்களாலும், வில்வத்தாலும் அர்ச்சனைகள் செய்து, சாம்பிராணி, குங்கிலியம், போன்றவற்றால் தூபங்கள் போட்டு தீப வழிபாடும் செய்து, கற்பூர ஆரத்தியும் செய்யவேண்டும். நிவேதனமாகப் பழங்கள், பழரசங்கள், பஞ்சாமிர்தம், சித்ரான்னங்கள், சர்க்கரைப் பொங்கல், அன்னம், உளுந்து வடை போன்றவற்றை நிவேதனம் செய்ய வேண்டும்.
Mandapam with amman.jpg
தினம் மூன்று காலங்களில் அதிகாலை, நடு மதியம், மாலை ஆகிய வேளைகளில் பூஜை செய்தால் நல்லது. அப்படி முடியாதவர்கள் அவரவர செளகரியம் போல் காலையிலோ அல்லது மாலையிலோ செய்யலாம். இந்த விரதம் எடுத்துக்கொண்டு பூஜை செய்பவர்கள் பூஜை முடிந்ததுமே உணவு உட்கொள்ளவேண்டும். ஒருவேளை உணவு மட்டும் எடுத்துக்கொள்ளலாம். முடியாதவர்கள் ஒரு வேளை உணவும், மற்ற வேளை ஏதேனும் பலகாரமோ எடுத்துக்கொள்ளலாம். நவராத்திரியின் ஆரம்ப நாள் ஹஸ்த நக்ஷத்திரம் இருத்தல் மிகவும் சிறப்பானதாய்க் கருதப் படுகிறது. தினமும் வழிபாடுகள் செய்ய இயலவில்லை எனில் கடைசி மூன்று தினங்களான, சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று தினங்களாவது செய்யலாம். அஷ்டமி அன்று பூஜை செய்தல் மிகவும் சிறப்பு. அன்றுதான் பத்ரகாளி அநேக கோடி யோகினிகளோடு தோன்றி தக்ஷ யாகத்தை அழித்தாள் என்று கூறுவார்கள். “மஹாசதுஷ்ஷஷ்டிகோடி-யோகினீ-கணஸேவிதா” என்று லலிதா சஹஸ்ரநாமம் கூறும். இனி முதல் நாளில் இருந்து கடைசி நாள் விஜயதசமி வரையிலும் பெண் குழந்தைகள் எம்முறையில் அழைத்து வழிபடவேண்டும் என்பதும், கொலு வைப்பதன் தாத்பர்யமும், கொலுவை எப்படி வைக்கவேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும் காண்போம்.


--Geetha Sambasivam 09:37, 22 நவம்பர் 2010 (UTC)



பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=நவராத்திரி_நாயகியர்_3&oldid=3281" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 22 நவம்பர் 2010, 09:39 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,423 முறைகள் அணுகப்பட்டது.