நவராத்திரி நாயகியர் 2

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:38, 21 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

அழகு தெய்வங்கள்- நவராத்திரி நாயகியர் 2

அம்பிகையை ஆராதிப்பவர்கள் இந்த நான்கு நவராத்திரிகளிலும் சிறப்பு வழிபாடுகள் செய்வார்கள். என்றாலும் பொதுவாக சாரதா நவராத்திரியே எல்லாவற்றையும் விடச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. புரட்டாசி மாதம் மஹாலய அமாவாசைக்கு மறு நாள் பிரதமையிலிருந்து ஆரம்பித்து தசமி வரை கொண்டாடப் படுகிறது. தசமி விஜய தசமி என்ற பெயரில் கொண்டாடப்படும். இரண்யாட்சனின் வழியில் வந்த துர்கமன் என்ற அரக்கன் பூமியில் அனைவரையும் துன்பப் படுத்தி வந்தான். தேவர்களும் பூவுலக மாந்தர்களுக்கும் துணையாய் இருக்கும் வேதத்தை அழித்து ஒழித்துவிட்டால் யாகங்கள், யக்ஞங்கள் குறையும், தேவர்களுக்கு ஆஹுதியும் பித்ருக்களுக்குத் தில தர்ப்பணங்களும் நடைபெறாது என நினைத்து பிரம்மாவைக் குறித்துத் தவம் இருந்தான். வேதங்களை அழிக்க முடியாது என பிரம்மா சொல்ல, துர்கமன் வேதங்கள் தன்னைத் தவிர மற்றவர்களுக்குக் கட்டுப் படக்கூடாது என வேண்டினான். பிரம்மாவும் துர்கமனுக்கு அழிவு காலம் வந்துவிட்டது என்பதை உணர்ந்து சிரித்துக்கொண்டே, “அப்படியே ஆகட்டும்!” என்று சொல்கிறார்.
தேவி.jpg
படிமம்:தேவி


அன்றிலிருந்து பூமியில் ரிஷி, முனிவர்களும், அந்தணர்களும் வேதம் ஓத முடியவில்லை. அவர்கள் என்ன தான் நினைவு படுத்துக்கொண்டு பார்த்தாலும் நினைவில் வரவில்லை. அக்காலங்களில் வேதங்கள் வாய்மொழியாகவே பரப்பப்பட்டு வந்தது. ஆகவே எவருக்கும் சொல்லத் தெரியாமல், வைதீக காரியங்கள் அனைத்தும் நின்று போயின. சந்தியாவந்தனம், சிராத்தம், திதி தர்ப்பணங்கள், ஹோமங்கள், யாகங்கள், ஜப, தபங்கள் அனைத்தும் முற்றாய் ஒழிய தேவர்களுக்குக் கிடைக்கவேண்டிய ஆஹுதி கிடைக்காமல் பலமிழந்து கிழத்தன்மையை எய்த ஆரம்பித்தனர். தேவர்கள் அனைவரும் சக்தியை வேண்டி இமயமலைச் சாரலில் தவம் இருக்க ஆரம்பித்தனர். பூமியிலோ கடும் வறட்சி நிலவியது. மழை என்பதே இல்லை. ஆறுகள், குளங்கள் வறண்டு போயின. ஆங்காங்கே மனிதர்கள் தெருக்களில் மடிந்து விழுந்தனர். இதைக்கண்ட சில அந்தணர்களும் ரிஷிகளும், காட்டிலோ, இமயமலைச் சாரலிலோ சென்று தவமிருந்தாலொழிய நமக்கு நன்மை கிட்டாது என உணர்ந்து வலிமை இருந்த வெகு சிலர் இமயமலைச்சாரலுக்குச் சென்று தவத்தில் ஈடுபட்டனர். தேவலோகத்து மாந்தரும், பூலோகத்து மாந்தரும் அம்பிகையைத் துதித்து துர்கமனை வெல்லக் கூடியவள் அம்பிகை ஒருத்தியே என்று வேண்டித் தொழுதனர்.


அம்பிகை நீலோத்பல மலர் போன்ற கண்களுடன் நீலமலை போன்ற திருமேனியுடன் திருக்கரங்களில் அம்பு, தாமரை, மலர்-தளிர்-வேர்-பசி-தாகம்-நரை ஆகியவற்றைப் போக்கும் தன்மை கொண்ட ஏராளமாகச் சாறைப் பெருக்கும் குணமுள்ள பழங்களால் ஆன பூங்கொடியையும், வில்லையும் ஏந்திக் காட்சி அளித்தாள். பார்க்கவே கண் கோடி வேண்டும். அவளோ எனில் சதாக்ஷியாக நூறு கண்களோடு காட்சி தந்து தன் திருக்கரங்களில் இருந்து மழையைப் பொழியச் செய்தாள். வறண்டு கிடந்த ஆறுகளில் வெள்ளம் அலைமோத, நீர்நிலைகள் நிரம்ப, செடி, கொடிகள் காணாதது கண்டது போல் நீரை உறிஞ்சிச் செழிப்புற்றன. தேவர்களும் தங்கள் மறைவிடத்திலிருந்து வெளியே வந்து அந்தணப் பெருமக்களோடு தேவியைத் துதித்தனர்.
துர்கா.jpg


என்றாலும் பசியினால் பாதிக்கப்பட்டு மிகவும் பலஹீனமான நிலையில் இருந்த அவர்களால் தேவியைச் சரிவரத் துதிக்க முடியவில்லை. ஆகவே தேவியிடம் தங்கள் நிலையைச் சுட்டிக்காட்டிப் பசியைப் போக்குமாறும் பூவுலகில் மீண்டும் வேத கோஷம்கேட்கும்படி செய்யுமாறும் வேண்டினார்கள். அம்பிகை இவர்கள் பிரார்த்தனையைக் கேட்டுத் தன் கையிலிருந்த பூங்கொடியின் மூலம் அனைவருக்கும் வேண்டிய உணவுப்பொருட்கள், காய்கனிகள், தானிய வகைகள், சாத வகைகள் போன்றவற்றை உண்டாக்கி அவர்கள் பசியை ஆற்றினாள். இப்படித் தங்கள் பசியாற்றிய அம்பிகையை சாகம்பரி எனத் துதித்தனர் அனைவரும். அம்பிகையைத் துதித்து வாழ்த்தி அவர்கள் செய்த வழிபாடுகளின் சத்தம் துர்கமனின் காதுகளில் போய் விழுந்தது. உடனே தன் மாபெரும்படையோடு வந்த அவன் அனைவரையும் அடித்து விரட்டினான். “தாயே, காப்பாற்று!” என்று அலறிக்கொண்டு ஓடிய அவர்களை துர்கமனின் தாக்குதலில் இருந்து காத்த அம்பிகை அவர்களை ஓர் ஒளிமயமான சக்கரத்தால் தனியே நிறுத்தினாள். சக்கரத்துக்கு வெளியே அம்பிகை இருந்துகொண்டு துர்கமனோடு போரிட்டாள். படிமம்:துர்கா


அசுரப் படைகளை அழிப்பதற்காகத் தன் உடலில் இருந்து அநேக சக்திகளைத் தோற்றுவித்தாள். காளிகா, தாரிணி, பாலா, திரிபுரை, பைரவி, ரமை, பகலை, மாதங்கி, திரிபுரசுந்தரி, காமாக்ஷி, துலஜா தேவி, ஜம்பினி, மோகினி, சின்னமஸ்தை, குஹ்யகாலி என்ற பெயர்களில் தோன்றிய சக்திகள் ஆரவாரத்தோடு அசுரப் படையை அழித்தனர். பத்து நாட்கள் போர் நடந்தது. பதினோராம் நாள் போரில் துர்கமன் சிவந்த மாலை தரித்து, சிவப்பு வஸ்திரத்தோடு, சிவப்புச் சந்தனம் இட்டுக்கொண்டு வந்து அம்பிகையோடு நேருக்கு நேர் போரிட்டான். ஆயுதங்களை ஏவி அவனை அழித்தாள் அம்பிகை. துர்கமனின் உடலில் இருந்து ஓர் ஒளி தோன்றி அம்பிகையின் திருமேனியில் கலந்து மறைந்தது. அசுரனின் கொடுமையிலிருந்து தப்பிய அனைவரும் அம்பிகையைத் துதித்தார்கள். அம்பிகை வேதங்களை அந்தணர்களிடம் ஒப்படைத்துவிட்டு, துர்கமனை சங்கரித்ததால் நான் துர்கி என அழைக்கப்படுவேன். என்னுடைய நாமம் ஆன துர்கி என்பதையும், சதாக்ஷி என்பதையும் உச்சரிக்கிறவர்கள் மாயை வெல்வார்கள் என ஆசி கூறி மறைந்தாள். இதுவே நவராத்திரி தோன்றியதன் ஆரம்ப சரித்திரம்


--Geetha Sambasivam 15:24, 20 நவம்பர் 2010 (UTC)




பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=நவராத்திரி_நாயகியர்_2&oldid=3238" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 21 நவம்பர் 2010, 06:38 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,178 முறைகள் அணுகப்பட்டது.