ஜெயகாந்தன்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

தம் நண்பர் ஜெயகாந்தனுடன் நடந்த  உரையாடல்களை  ஒரு  சுவையான கட்டுரைத் தொடராகத் தருகிறார் சீதாலட்சுமி அம்மா .


பொருளடக்கம்

சீதாம்மாவின் குறிப்பேடு - ஜெயகாந்தன்

சீதாலட்சுமி - மின்னஞ்சல் முகவரி seethaalakshmi@gmail.com


பகுதி 1

21-12-2009

டாக்டர். ஜெயகாந்தன்!

பட்டம் வழங்கப் போவதாக செய்தி மட்டும்தான் வந்திருக்கின்றது. ஆனால் ஏனோ உடனே அவர் பெயருடன் டாக்டர் பட்டத்தை ஒட்டிப் பார்க்க மனம் விழைகின்றது.

பள்ளிப்படிப்பு கூட முடிக்காதாவர்.

அச்சகத்தில் அச்சு கோர்க்கும் சாதாரண தொழிலாளி.

இவருக்குள் எப்படி இத்தனை சிந்தனைகள் கொட்டிக் கிடக்கின்றன!.வெளியில் சிதறிக் கிடப்பவை, சிந்தியவை இவர் பார்வைக்கு மட்டும் உயிரோட்டமாகத் தெரிகின்றதே!

மனிதர்களின் இதயங்களுக்குள் ஊடுருவிப் பார்க்கும் சக்தி எங்கிருந்து பெற்றார்!?

இவரைப்பற்றி எழுத என் மனம் கட்டளையிட்டுவிட்டது. என் அன்புக்குரிய நண்பர். 40 ஆண்டுகால நண்பர். குடும்ப நண்பர். எத்தனை சந்திப்புகள்! நாங்கள் கழித்த பொழுதுகள் அனைத்தும் அர்த்தமுள்ளவை.ஒருகாலத்தில் எனக்குள் ஒரு ஆசை இருந்தது.

ஜான்சனைப்பற்றி பாஸ்வெல் எழுதியது போல் ஜெயகாந்தனின் உரையாடல்களைத் தொகுத்து எழுத விரும்பினேன். கையிலே டேப் ரிகார்டர் சகிதமாகச் சுற்றியிருக்க வேண்டும். அப்படியிருந்தாலும் பதிவு செய்திருக்க முடியாது. சிறு அசைவும் கூட அவரிடமிருந்து திடீரென்று வெள்ளமென வரும் வார்த்தைகளின் ஓட்டம் பாதிக்கப்பட்டிருக்கும் அப்பொழுதே எழுதியிருந்தால் இந்த சமூகத்திற்கு ஓர் அரிய நூல் கிடைத்திருக்கும். இப்பொழுது என் நினைவுப் பெட்டகத்தில் தேடிப் பார்க்கும் வலுக் கூடக் குறைந்து விட்டது. இருப்பினும் தெரிவதையாவது பதிவு செய்ய வேண்டியது என் கடமையெனக் கருதுகின்றேன்.

என் நட்பு வட்டம் மிகப் பெரியது. நான் சந்தித்தவர்களில் உரையாடலில் மிகச் சிறந்தவர் ஜெயகாந்தன்.

HE IS ONE OF THE BEST CONVERSATIONALISTS IN MY LIFE. என்னைப் பற்றி நன்குணர்ந்த , எங்கள் குடும்ப நண்பர் பேராசிரியர் அரசு அவர்கள் கூறியது. ஜெயகாந்தன் ஒரு எழுத்தாளர். ஜெயகாந்தன் ஒரு பேச்சாளர்.

”இந்த இரண்டினைப் பற்றியும் நிறைய எழுதிவிட்டடர்கள். அவருடன் பேசும் பொழுது அவரிடம் கண்டவைகளை, உணர்ந்தவைகளை அவருடன் பழகியவர்கள் எழுத வேண்டும். சீதாம்மா, அவர் உங்களுக்கு நீண்ட கால நண்பர். நினைவில் இருப்பவைகளைப் பதிவு செய்யுங்கள். ஏற்கனவே நீங்கள் மீண்டும் எழுதத் தாமதித்துவிட்டீர்கள்.

தொடர்ந்து உங்களுடன் பழகிய பல அறிஞர்களைப் பற்றி எழுத வேண்டும். உங்கள் அனுபவங்களையும் பதிவு செய்யுங்கள் “ நான் எழுதும் நினைவலைகள் பிறந்த கதை இதுதான்!

சீதாம்மாவின் குறிப்பேட்டில் இனி என்னுடன் பழகிய பலரைப்பற்றி எழுத நினைத்துள்ளேன்.

வரிசையில் முதலில் வந்துவிட்டார் ஜெயகாந்தன்.

அபூர்வமான சூழலில் எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. நான் தான் அன்று நிறைய பேசினேன், எங்களிடையே நட்பு வளர்ந்ததற்குக் காரணங்கள் எங்கள் சமுதாயச் சிந்தனைகளும், பாரதியிடம் கொண்டிருந்த ஈடுபாடும் தான்.பல செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.. நாங்கள் இருவரும் அச்சமில்லாதவர்கள். வெளிப்படையாகப் பேசுபவர்கள். ஆடம்பரமில்லாதவர்கள்.

 அவரின் பார்வை குடிசைகளில் விழுந்தது. ஏழைகள் அவரின் உறவினர்கள். மற்றவர்கள் கண்களுக்குக் குறைவாகப் பட்டவைகள், ஏளனமாகக் கருதப் பட்டவைகளின் உள்ளுக்குள் போய்ப் பார்த்து உண்மைகளை சத்தம் போட்டுக் கூறியவர்.

 அவர் எண்ணங்கள் எழுத்தில் வந்தன. நான் செயலில் இறங்கினேன். இந்த விஷயத்தில் நாங்கள் ஒரே பார்வை கொண்டிருந்தோம்.கண்ணுக்குத் தெரியும் சாதனை அவருடையது.அவர் எண்னங்கள் எழுத்துக்களில் வெளிப்பட்டன

என் பணி வாழ்க்கையில் துன்பப்படுபவர்களின் துயர் துடைப்பது மனங்களில் வரைந்த சித்திரம்.  உணர்வுகள்.

என்னுடைய பணியில் எனக்குக் கிடைத்த குடும்பங்கள் நிறைய இருக்கின்றன. இரத்த சம்பந்த உறவுகளைவிட இதய சம்பந்த உறவுகளிடம் எனக்கு ஒட்டுதல் அதிகம். என் சாதனைகள் என்று கூறவில்லை. இறைவன் கொடுத்த வரம் இது.கடந்த கால நிகழ்வுகளை மனம் அசை போடும் பொழுது ஓர் மகிழ்ச்சி. எனக்கிருக்கும் வாழ்நாட்கள் குறைவு. இருக்கும் மணித்துளிகளை உங்களுடன் கழிக்க விரும்புகின்றேன். ஆம் இப்பொழுது நான் உங்களுடன் வாழ்கின்றேன்!   

பகுதி 2 

23-12-2009

ஜெயகாந்தன்பற்றி எழுதுகின்றேன் என்பதைப் பார்க்கவும் நிலா ரசிகனுக்கு ஒரே குஷி !

“அம்மா, அவர் பற்றி நிறைய எழுதுங்க “

அவன் ஆர்வத்திற்கு ஓர் அர்த்தம் இருக்கின்றது. அதுவும் ஒரு கதை. சிறிது காலத்திற்கு முன்னால் ஜெயகாந்தன் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரியில் சேர்ந்திருந்த சமயம். செய்தி கேள்விப் பட்டவுடன் மனம் வேதனைப் பட்டது. அமெரிக்காவில் இருந்ததால் உடனே என்னால் பார்க்கச் செல்ல முடியவில்லை. ஷைலஜாவிற்குச் சொல்லி விபரங்கள் விசாரிக்கச் சொன்னேன். அவளும் விசாரித்து எனக்கு விபரங்கள் எழுதினாள்.

ஜெயகாந்தன்பற்றி ஒரு தொடர் உடனே முத்தமிழில் எழுத ஆரம்பித்தேன். ஒரு நாள் சென்னைக்கு அவர் வீட்டிற்குத் தொலைபேசியில் கூப்பிட்டேன். கவுசல்யாதான் எடுத்தார்கள், அன்றுதான் ஆஸ்பத்திரி யிலிருந்து திரும்பி வந்திருக்கின்றார்கள். இருப்பினும் என்னுடன் ஜெயகாந்தன் பேசினார். சரியான நேரத்தில் நான் கூப்பிட்டிருக்கின்றேன்; அது நட்பின் சக்தி. நான் பேசியது அவருக்கு மகிழ்ச்சி. அவர்பற்றி நான் எழுதுவதைத் தெரிவித்து , அது முடிந்ததும் அவருக்குக் கொடுத்தனுப்புவதாகச் சொன்னேன்

ஜெயகாந்தனுக்குக் கலைஞர் உதவி செய்ததுபற்றிப் பத்திரிகை விமர்சனங்கள் கொஞ்சம் கடுமையாக வந்திருந்தன. என் கட்டுரையில் அதற்கு நான் விளக்கம் கொடுத்து எழுதியிருந்தேன். பின்னர் அதனை அச்செடுத்து அவரிடம் சேர்த்தவர் நிலா ரசிகன்.

மீண்டும் ஜெயகாந்தனிடம் பேசிய பொழுது , அப்பொழுது அவர் அதனைப் படித்து முடித்திருந்ததால் அவர் உடனே சொன்னதை என்னால் மறக்க முடியவில்லை -
“சீதாலட்சுமி, இப்படி எழுத உங்களுக்குத் தான் கட்ஸ் இருக்கும்”

உண்மை பேச தைரியம் வேண்டும். இத்தொடரிலும் கடைசியில் கொஞ்சம் விளக்கமாகவே  எழுதுவேன். இப்பொழுது நிதானத்துடன் எழுதுவதால் பல சுவையான, அர்த்தமுள்ள காட்சிகளைக் காட்ட முடியும்.

அடுத்து ஒரு நிகழ்ச்சியிலும் நிலா உடன் இருந்தான். ஒரு வருடத்திற்கு முன்னால் சென்னைக்கு வந்திருந்தேன். என்னால் தனியாக எங்கும் போக முடியாது. டாக்ஸியில் ஏறவும் இறங்கவும் கூட ஒருவர் என்னைப் பிடித்துக் கொள்ள வேண்டும். என்னுடன் இரு கவிஞர்கள் துணை வந்தனர். ஒருவர் நம் நிலா ரசிகன்; இன்னொருவர் கவிஞர் சஹாராத் தென்றல். நிலா எனக்குச் செல்லப்பிள்ளை ; சஹாரா எனக்குச் செல்லப்பொண்ணு. என்னைக் கவனித்துக் கொள்வதில் இருவருக்கும் போட்டி.

இவர்கள் யார்? எனக்கு இரத்த சம்பந்தமில்லாதவர்கள். ஆனால் என்னிடம் அவர்கள் காட்டும் பாசம் இமயத்தைப் போன்றது. இன்றும் என்னுடன் தொடர்பு கொண்டு என் நலம்பற்றி விசாரிப்பார்கள். இவர்கள் இருவருடனும் தான் ஜெயகாந்தன் வீட்டிற்குச் சென்றேன்.

எனக்கு அடுத்திருந்தது ஒருசாய்வு நாற்காலி. அதில் வந்து உட்கார்ந்தார் ஜெயகாந்தன். மற்றவர்கள் எதிரே அமர்ந்தனர். அவர் மனைவியார் வந்து நலம் விசாரித்துவிட்டுக் காபி எடுத்துவரச் சென்றார்கள். அவர் வீட்டிற்குச் செல்லும் பொழுது நானும் அவர் மனைவியும் சமயலறையருகில் உட்கார்ந்து பேசுவோம்; பின்னர்தான் ஜெயகாந்தன் இருக்கும் இடம் சென்று பேசுவேன்.
புறப்படும் முன்னர் கவுசல்யா அறைக்குச் சென்று பேசுவேன். இது அந்த நாள் வழக்கம்.

ஆனால் நாங்கள் சென்ற அன்று ஒரே அறையில் உட்கார்ந்து இருந்தோம். கவுசல்யா வந்து அமர்ந்தார். எங்கள் உரையாடல் அக்காலத்திற்குச் சென்றது.

ஜெயகாந்தன் ஒரு கேள்வி கேட்டார் -
”சீதாலட்சுமி, நாம் முதலில் சந்தித்தது எந்த வருடம்?”
”1970ல் சந்தித்தோம்”

அவ்வளவுதான் ! அதற்குப் பிறகு அவர்தான் பேசினார். இரு கவிஞர்களிடம் எங்கள் சந்திப்புகள், நாங்கள் ஊர்கள் சுற்றியது எல்லாம் விளக்கமாக அவர் கூறிவந்தார். எங்கள் சந்திப்பு, எங்கள் சுற்றுலாவிற்குப் பின்னர் அவர் என்னென்ன கதைகள் எழுதினார் என்பதைக் கவுசல்யா விளக்கி வந்தார். சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்த உரையாடல் அவர் மகன் வரவும் மாறியது.

அவர் அரசியல் பேச ஆரம்பித்தார். என்னால் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. நிலாதான் ஏதோ சமாளித்து வந்தான்.நான் ஜெயகாந்தனைப் பார்த்தேன். என் தவிப்பைப் புரிந்த அவர் “gossip” என்றார். ஆமாம், அவர் நினைத்தால் அர்த்தமற்ற பேச்சுகளுக்கிடையிலும் அவரால் அமைதியாக இருக்க முடியும்.

எனக்குள் ஒரு கேள்வி என்னை உறுத்திக் கொண்டிருந்தது. பதில் தெரிந்திருந்தும் கேள்வி உறுத்தியது; கேட்க முடியவில்லை. கேட்கும் சூழலும் இல்லை. ஆனால் அந்த வித்தகர் புரிந்து கொண்டு ஒற்றைச் சொல்லில் ஒரு வார்த்தை உதிர்த்தார். அப்படியே அதிர்ந்து போனேன்.

என் முகக் கலக்கத்தைப் பார்த்து ஒரு சின்ன முறுவல். “பரவாயில்லை” என்று அந்த முறுவலில் புரிந்து கொண்டேன். வெள்ளமென வார்த்தைகளையும் கொட்டுவார்; ஒற்றைச் சொல்லில் பல வார்த்தைகளையும் உள்ளடக்கிக் கூறும் திறமையும் உண்டு அவரிடம். “இன்னுமா என்னைப் புரிந்து கொள்ளவில்லை” என்று கேட்காமல் “பரவாயில்லை” என்று முறுவலால் பதில் கூறியவன் என் நண்பன். எத்தனை பேர்கள் இருந்தாலென்ன? எங்களுக்கிடையில் வாய்மொழி தேவையில்லை. பேசிக் கொள்ள முடியும். இந்த சக்தியை இன்னொருவரிடமும் நான் கண்டிருக்கின்றேன்.

திடீரென்று என்னை நோக்கி, “நாம் இருவரும் சேர்ந்து போய் கலைஞரைப் பார்க்கலாமா?” என்று கேட்டார். இப்பொழுது அவர் கேட்கக் கூடாத கேள்வி கேட்டு விட்டார். துடித்துப் போனேன்.

ஒரு காலத்தில் இருவரையும் சந்திக்க நான் எவ்வளவு முயன்றும் முடியவில்லை. அன்று நான் விரும்பிய சந்திப்பு இப்பொழுது வாய்க்க இருக்கின்றது. அவர் சுலபமாக் கேட்டுவிட்டார்.

என் கண்முன் ஒரு காட்சி. கலைஞர் முன் நானும் ஜெயகாந்தனும் - எங்கள் மூவரின் மன நிலை எப்படியிருக்கும்?

பகுதி 3

25-12-2009

கற்பனையில் காணும் காட்சிகள் சில விஷயங்களில் கற்பனையாகவே இருந்துவிடுதல் நலம்.என் இயலாமையைத் தெரிவித்துவிட்டு எழுந்து விட்டேன்.நிலாவின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாகக் காரை நோக்கி நடந்தேன். ஜெயகாந்தனும் உடன் மெதுவாக வந்தார். இருவரும் ஒன்றும் பேசவில்லை. மவுனம் சக்தி வாய்ந்த மொழி; அதற்கு ஆயிரம் அர்த்தங்கள் உண்டு.

காரில் ஏறும் முன்னர் “போய்வருகின்றேன் “ என்றேன்.

”ஊருக்குப் போகும் முன் வருவீர்களா?”

”நிச்சயம் வருவேன்.”

அவர் முகத்தில் ஒரு மலர்ச்சி. இனிமேல் இந்தியாவிற்குத் திரும்ப வருவேனா என்று தெரியாது. ஏனோ என் நெருங்கிய நண்பர்களைச் சந்திக்கும் பொழுது இறுதி விடைபெறுவது போன்ற உணர்வு. அமெரிக்கா புறப்படும் முன்னர் என் கணவருடனும் புனிதத்துடனும் அவரைக் காணச் சென்றேன். கவுசல்யா உடன் இருந்தார். நல்ல கலந்துரையாடல். இந்த முறை விடை பெறும் பொழுது என் கணவர் என் கையைப் பிடித்திருந்தார்.கனத்த மனத்துடன் அங்கிருந்து புறப்பட்டேன்.

சில நாட்களுக்கு முன் அவருடன் தொலை பேசியில் பேசினேன் “குரலையாவது கேட்க முடிகின்றதே” என்றார். இதுதான் வாழ்க்கை! இதுதான் நிஜம்.

விழியனும் வேணுவும் கலந்துரையாடலுக்குப் போயிருந்ததாக வேணு எழுதியிருந்தார். ஜெயகாந்தனுடன் கலந்துரையாடல் சுவாரஸ்யமானது. பார்ப்பதற்கே பரவசமாக இருக்கும்.

ஜெயகாந்தனைப் பார்க்க, அவருடன் பேச பலர் வந்து போவதுண்டு; இயல்பாகப் பேசுவதும் உண்டு. ஓரிருவர் வந்தால் பேசுவதைவிடக் கூட்டமாக சிலர் இருந்தால் திடீரென்று வேகம் வந்துவிடும். காட்டாறு போல் வார்த்தைகள் வரும். எதிரே உட்கார்ந்திருப்பவர் மயங்கி உட்கார்ந்திருப்பர். பலமுறை நான் கண்ட காட்சி. எங்கிருந்து இந்தத் திறனைப் பெற்றார்!? அவர் புத்தகங்கள் படிப்பதை நான் பார்த்ததில்லை;எனக்கு அதுபற்றித் தெரியாது. பிள்ளைப் பருவக் கதைகள் இப்பொழுது எங்கும் காணலாம். அங்கும் அரசியல் வாடை அடிக்கின்றதே தவிர, இந்தத் தத்துவங்கள் பேச எங்கு கற்றார்? அவர் ஒரு சுயம்பு. ஒருவேளை பூர்வ ஜன்மம் என்று சொல்வார்களே, அப்படித் தொடர் சங்கிலியாய் வந்ததுவோ!?

மேடைப் பேச்சில் எதையாவது சொல்லிவிடுவார்; அவை பிரச்சனையாகும். நான் சொல்வது மேடைப் பேச்சையன்று. அவர் தங்குமிடத்தில் நாம் உட்கார்ந்து பேச வேண்டும்; வான் மழைக்குக் காத்திருப்பது போல் காத்திருக்க வேண்டும். அந்தச் சொல்மாரியைத் தான் புகழ்ந்துரைக்கின்றேன்.

ஜெயகாந்தனின் வீடு கே.கே. நகரில் இருக்கின்றது. முன்பு இவருக்கு இன்னொரு இடம் உண்டு. ஆழ்வார் பேட்டையில் பிள்ளையார் கோயிலுக்கு மேல் ஒரு மாடி இவருடைய இடம். காலையில் கடமைகளை முடித்துவிட்டு இங்கு வந்து விடுவார்; இரவில்தான் போவார்.

ஒரு சின்ன அறை, முன்னதாக ஒரு சின்ன ஹால்; அவ்வளவுதான். அந்த ஹாலில் ஒரு பக்கம் பாதியளவில் ஒரு சுவர்;சின்ன அறையில் ஒரு கட்டில், அதில் ஒரு விரிப்பும், ஒரு தலையணையும் இருக்கும்; ஒட்டி ஒரு நாற்காலியும் இருக்கும். இன்னொரு நாற்காலி அந்த குட்டைச் சுவர் அருகில் இருக்கும்.அதிலேதான் இவர் உட்கார்ந்திருப்பார்.

சுவரையொட்டிக் கிழே பார்த்தால் ஒரு சின்ன சந்து; இருபக்கமும் வீடுகள். ஏழைகள் வாழும் தெரு அது; எப்பொழுதும் சத்தம் இருக்கும்; நம் நாயகனுக்கு அதைப் பார்க்கப் பிடிக்கும். இடுப்பில் ஒரு கைலி, மேலே சட்டை கிடையாது, ஒரு சின்னத் துண்டு. மீசையை முறுக்கிக் கொண்டு அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்.

ஹாலில் சிலர் உட்கார்ந்து கொண்டு அவர்களுக்குள் பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு சின்ன இடத்தில் இரு சின்ன உலகங்கள்.

ஒரு நாள் அவர்களிடம் கேட்டேன் -

“ஏன் இப்படி இங்கு வந்து உட்கார்ந்திருக்கின்றீர்கள்?”

“அம்மா, அவர் திடீரென்று பேச ஆரம்பிப்பார். அவர் பேச்சைக் கேட்கத்தான் காத்திருக்கின்றோம்”

அவர்கள் பைத்தியக்காரர்களா? ஆமாம், அறிவுப் பைத்தியம். ஜெயகாந்தனிடம் வெட்டி அரட்டையை எதிர்பார்க்க முடியுமா? இப்பொழுது அப்படிப்பட்ட காட்சிகள் கிடையா. அவர் வீட்டின் மாடியில் கூரை வேய்ந்த இடம் இருக்கின்றது. அங்கே சந்திப்புகள் நடக்கின்றன; கலந்துரையாடல்களும் இங்கேதான்; ஆனால் அந்தக் காலத்து அதிரடிக் கச்சேரிகள் இப்பொழுது இல்லை.

அந்தக் காலத்தில் எப்பேர்ப்பட்டவர்களாக இருந்தாலும் அந்தக் குடிலுக்கு வருவார்கள். நாகேஷுக்கு அங்கே வருவது மிகவும் பிடிக்கும். நடிகனென்றால் அறிவுப்பசி இருக்கக்கூடாதா!?

நான் இரு இடங்களுக்கும் சென்றிருக்கின்றேன். நாங்கள் மனம்விட்டுப் பேசுவோம்; ஆன்மிகம் முதல் அரசியல் வரை பேசுவோம். சமுதாயத்துடன் உறவாடுபவள் நான்; எனக்கு உளவியல் பிடிக்கும். அவர் பார்வையும் சமுதாயத்தில்தானே இருக்கும். பல விஷயங்களில் இருவருக்கும் ஒத்த உணர்வுகள் இருந்ததால் நல்ல நண்பர்களாக இருக்க முடிந்தது. மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம்; ஆனால் புரிந்து கொண்டு அவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டால் நட்பில் விரிசல் வராது.

ஜெயகாந்தன் பார்க்கும் ஒவ்வொன்றும் அவர் கதையில் வந்துவிடும். ஆழ்வார்ப்பேட்டையில் ஒரு கட்டட வேலை நடந்து கொண்டிருந்தது. அங்கேயே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு நாள் நான் போயிருந்த பொழுது அவர் பார்வையுடன் என் பார்வையும் தொடர்ந்தது.

ஒரு பெண் தலையில் செங்கல்லைச் சுமந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். போகின்ற பாதையில் ஒரு கையால் செங்கல் கூடையைப் பிடித்துக் கொண்டு, இன்னொரு கையால் இடுப்பில் இருக்கும் வெற்றி லையை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு போகின்ற பாதையில் சுவரில் அவள் ஏற்கனவே ஒட்டியிருந்த சுண்ணாம்பை எடுத்து நாக்கில் தடவிக் கொண்டு சென்றாள். இந்தக் காட்சியை அவர் எத்தனை முறை பார்த்திருப்பார்! “சித்தாள் சினிமாவிற்குப் போகின்றாள் “ என்ற கதையில் இக்காட்சி வரும்; இலக்கியவாதிக்கு மண்ணும் உயிருள்ளதே!

அவருடைய கதைகள் ஒன்றிரண்டைப் பற்றிப் பேசிவிட்டுச் சில நிகழ்வுகள் கூற இருக்கின்றேன். நம் காலத்தில் வாழும் ஒரு சில அறிவு ஜீவிகளைப் பற்றித் தெரிந்து கொள்வோம். நம்மிடையே அந்தத் திறன் இல்லாவிட்டாலும் ரசிக்கும் திறன் இருக்கின்றதே, அதுவும் சிறப்பானதே!

 

பகுதி 4

04-01-201

அக்கினிப் பிரவேசம்

இந்தக்கதை விகடனில் வரவும் பெரிதும் பேசப்பட்டது. இந்தக்கதையின் கரு ஓர் உண்மை சம்பவத்தையொட்டியது. படைப்பாளிக்குப் பார்க்கும் ஒவ்வொன்றும் சொந்தமாகிவிடும். சின்னக் கதையுடன் மனம் திருப்தி அடையவில்லை. அதனுடைய நீட்சிதான் சில நேரங்களில் சில மனிதர்கள்.

எத்தனைவிதமான மனிதர்கள்! எத்தனை சூழ்நிலைகள்! அலை அலையாய் வந்து போகும் மனிதனின் அவல உணர்வுகள். கங்காவின் பஸ் பயணத்தில் அவள் அனுபவிக்கும் உரசல்களும் இடிகளும் புதிதல்ல. ஆனால் ஒரு பெண்படும் அவஸ்தையை அப்படியே நம்மையும் உணர வைத்திருப்பார். அக்காட்சியைப் படிக்கும் பொழுது எனக்கே உடலில் பூரான் ஓடுவது போன்று ஓர் அறுவறுப்பான தாக்கம். வக்கிர குணத்திற்கு அப்பனும் உடன் பிறந்தானும் கூட விதிவிலக்கில்லை.

இப்படிக் கூறுவதற்காக என்னை மன்னிக்கவும்; இது பொதுவானதன்று. ஆனால் இது போன்ற பல புகார்கள் என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. நான் பார்த்த வேலை அத்தகையது.

கங்காவின் மாமாவின் செய்கைகளை வேறு யார் இப்படி எழுதியிருக்கமுடியும்? ஆனால் ஜானகிராமன் எழுதிய மோகமுள் நினைவிற்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

மோக முள் - அடிமனத்தில் ஒளிந்திருக்கும் உணர்வைக் கொக்கி போட்டு வெளியே இழுத்து , அந்தத் தவிப்பை வெளிக்காட்டிய விதம் இன்றும் கதை உலகில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கின்றது. உளவியல் கதைகளுக்கு ஆயுள் அதிகம். படிப்பவனுக்கு அவஸ்தை கொடுத்தாலும் உண்மைகள் உறங்காமல் என்றாவது கண் விழிப்பதைப் பார்க்கும் பொழுது வியக்காமல் இருக்க முடியாது. அந்தரங்கத்தைச் சுண்டி இழுப்பவை. ஜெயகாந்தனின் கதைகள் எல்லாவற்றிலும் மனிதனின் அந்தரங்கத்தைத் தோலுரித்துக் காட்டுவதைப் பார்க்கலாம். அவர் அதில் சமரசம் செய்துகொள்ளமாட்டார்.

பெண்களுக்கு மத்தியில் ஒன்று பேசப்படுவதைக் கேட்டிருக்கின்றேன் -“சின்னப் பசங்களைக் கூட நம்பி வெளியில் போகலாம். ஆனால் கிழங்களை நம்ப முடியாது “ எல்லோரும் அப்படியல்ல; ஆனாலும் பெண் மனத்தில் அப்படி எண்ணம் வந்துவிட்டதற்கு அவள் சின்னப் பெண்ணாக இருக்கும் பொழுது வயதானவர்கள் யாராவது சில்மிஷம் செய்திருக்கலாம், அல்லது அவள் சிநேகிதிக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டிருக்கலாம், அது மனத்தில் தங்கி இப்படி ஒரு கருத்தை அவள் சுமந்து கொண்டிருக்கலாம்.

“சில நேரங்களில் சில மனிதர்கள்” தலைப்பே தனித்துவம் கொண்டது. இது திரைப்படமாக வந்தபொழுது , அதில் அத்தனை பாத்திரங்களும் உயிர் பெற்று நடமாடினர். குறிப்பாக லட்சுமி, கங்காவாகவே மாறிவிட்டார். பொதுவாகப் பிரபலமான கதைகள் திரைப்படமாகும் பொழுது ஒரு விமர்சனம் வரும். “கதை மாதிரி சினிமா இல்லே” ஆனால் இந்தப் படம் மட்டும் சிறப்பாக வந்திருந்தது.

”கங்கா எங்கே போகின்றாள் ?” இது பெற்ற சிறப்பைப் பெறவில்லை. ஆங்கிலத்திலும் இப்படித் தொடர் நிலையில் கதைகள் வரும்பொழுது மூன்றாவதில் தொய்வு காணலாம்.

கல்கியின் நினைவு இங்கே வருகின்றது. பார்த்திபன் கனவு எழுதினார். அதில் அவர் காட்டும் சிற்பக்கூடத்தில் பிறந்தது சிவகாமியின் சபதம். ஓவியக் கூடத்தில் பிறந்தது பொன்னியின் செல்வன். அவரே பொன்னியின் புதல்வர். நாட்டிய மங்கைக்கு உயிர் கொடுக்கவும், நரசிம்ம வர்மனை இளைஞனாக்கிக் காதலனாக்கவும் ஆசை வந்துவிட்டது. அதே போல் பார்த்திபன் வரைந்தஓவியங்களில் சோழர் காலத்துப் பெருமைகளைக் கண்டார். அவருக்குத் தெரிந்த செய்திகள் அனைத்தையும் யார் வாயிலாகவாவது பேச வைத்தார்.

எண்ணங்களைச் சுமக்கும் பொழுது எழுத்தாளன் பிரசவ வேதனையில் தவிப்பான். கோலைப் பிடித்துவிட்டால் வார்த்தைகள் குதித்தோடி வெள்ளமென வடிந்தோடும். மனித உணர்வுகளை அப்படியே ஓவியமாக்குவதில் சிறந்தவர் ஜெயகாந்தன். ஒரு கதை, இரு கதை என்று மற்றவர் எழுதியிருக்கலாம்ம். ஆனால் ஜெயகாந்தனின் கதைகளை அனைத்தும் உளவியலும், சிந்தனைத் திறனும் கலந்தவை. ஒரு மனிதரின் உணர்வுகளின் தாக்கமே ”ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்”.

அவர் எழுதிய பல கதைகள் பிறந்தவிதம் பற்றி என்னுடன் மனம் விட்டுப் பேசி இருக்கின்றார். எங்கள் இருவருக்கிடையில் ஒளிவு மறைவாக எந்த நிகழ்வும் கிடையாது. அந்தரங்கம் புனிதமானது. ஆனாலும் தகுந்த நண்பர்கள் இருந்தால் அந்த அறையைத் திறந்து காட்டுதல் சரியே.

கௌசல்யா ஒரு படித்த பெண்மணி. வானொலி நாடகங்களிலும் மேடை நாடகங்களும் நடித்துவந்தார். மிகச் சிறந்த நடிகை. சேஷாத்ரி குழுவில் இருந்தார். இவர் நடித்த தனிக்குடித்தனம் பின்னால் கே. ஆர். விஜயா நடித்த திரைப் படமாகியது. படம் வந்த காலத்தில் கௌசல்யாவைப் போல் விஜயா அந்த அளவு சிறப்பாக நடிக்கவில்லை என்பர்.

ஜெயகாந்தனிடம் செயலாளராகப் பணியில் சேர்ந்தார் கௌசல்யா. நடிப்பையும் விடவில்லை. இரு அறிவு ஜீவிகளின் சங்கமம்; ஜெயகாந்தனின் துணைவியானார். அப்பொழுதும் சில நாட்கள் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். அவரை அழைத்துச் செல்லும் ஜெயகாந்தன் சபாக்களின் வெளியிலேயே இறக்கிவிட்டு வந்து விடுவார். நாடகங்கள் பார்க்க மாட்டார். கௌசல்யா புத்திசாலிப் பெண்மணி. அவராகவே நடிப்பதை நிறுத்திவிட்டார். ஜெயகாந்தன் அவர் நடிப்பதைத் தடுக்கவில்லை.

சில உணர்வுகள் அவர் கதையில் காணலாம்.பிறருக்கு அறிவுரை கூறுவதை விரும்ப மாட்டார் ஜெயகாந்தன். அந்த சொல்லே அவருக்குப் பிடிக்காது. பிறர் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லையென்றால் அவர் பேச்சில் அவரின் மறுப்பு இருக்கும். ஒவ்வொரு விஷயத்திலும் அவரது அணுகுமுறை மிகவும் வித்தியாசமாக இருக்கும். கேட்பவர் முதலில் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும், சிந்தித்துப் பார்க்கும் பொழுது பின்னர் அதன் யதார்த்தம் புரிந்துவிடும். அவரிடம் போலித்தனம் கிடையாது. முரட்டுத்தனம் உண்டு. நுனிப்புல் மேய்வதைப் போன்று படிப்பவர்களுக்கு அவர் காட்டும் பல அரிய செய்திகள் புலப்படாது. ஒவ்வொரு வரியையும் வார்த்தையையும் ஆழ்ந்து பார்க்க வேண்டும்.சில சமயங்களில் மனித உணர்வுகளின் அரிச்சுவடி ஜெயகாந்தன். பல சமயங்களில் வாழ்வியலின், சமூக இயலின் அகராதி.

சில நிகழ்வுகளைக் கூறுவேன். அவரின் பார்வையையும் விளக்குவேன். புரிந்து கொள்வீர்கள். அதற்குமுன் இன்னும் கொஞ்சம் அவர் கதையைப் பற்றிப் பேச வேண்டியிருக்கின்றது.

ஒரு நாள் நானும் என் நண்பர் நிருபர் நாராயணனும் ஜெமினி கணேசனைப் பார்க்கச் சென்றிருந்தோம். அங்கே நம் ஜெயகாந்தன் அவர்களைப் பற்றிய பேச்சு வந்தது.

 

பகுதி 5

07.01.2010

ஜெயகாந்தன் தன் பெயரிலேயே காந்தத்தை வைத்திருக்கின்றார். அவர் பெயரைப் பார்க்கும் பலருக்கும் பதிவை எட்டிப் பார்க்கத் தோன்றுகின்றது. அவரைப் பற்றிப் பல கோணங்களில் எழுதியுள்ளார்கள்.

சாதாரண நிலையிலும் ஒரு விஷயத்தைக் கூறினால் அவர் அதனை எவ்வளவு யதார்த்தமாக எடுத்துக் கொள்கின்றார் என்பதை உதாரணங்களுடன் கூற விரும்புகின்றேன். அவர் எழுத்துக்களைத் தொடர்ந்து ஊன்றிப் படிப்பவருக்கு எப்பொழுதாவது ஓர் அனுபவம் ஏற்படும் -“எப்படி நம்மைப் புரிந்து கொண்டு எழுதுகின்றார்” என்று. அவர் எழுத்தில் எங்கோ நம் நிழலும் பதிவாகியிருக்கும்.
தொடருக்குத் திரும்புகின்றேன்

நிருபர் நாராயணன் womens weekly, womens era போன்ற பல ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு நிருபர். எங்கள் இருவர் தொழிலுக்கும்
சம்பந்தம் இருந்தது. அவரைப்போன்று சில நிருபர்களின் வட்டத்தின் நட்பு எனக்குக் கிடைத்தது. குமுதம் அரசியல் நிருபர் பால்யூ இவர்கள் கூட்டத்திற்கு வருவதில்லை. பால்யூ தனிக்காட்டு ராஜா.ஆனாலும் எல்லோருக்கும் நண்பர். Investigation journalism தனியாக அப்பொழுது அவ்வளவு வளராதகாலம். இந்தியன் எக்ஸ்பிரஸில், வடநாட்டுப் பத்திரிகைள் சிலவற்றில் அது வளர ஆரம்பித்திருந்தது. நாட்டின் பிரதமர் இந்திரா காந்தியையே திணற அடித்தவர் கோயங்கா அவர்கள். தமிழகத்தில் இந்தப் பத்திரிகை நிருபர்களே எல்லாச் செய்திகளையும் சேகரித்து வந்தனர். எனவே நாங்கள் சந்திக்கும் பொழுது சுவையான செய்திகள் நிறையக் கிடைக்கும். என்னுடைய பணிக்காலப் பிரச்சனைகளில் எனக்குப் பக்க பலமாக இருந்தது இந்தப் பத்திரிகையுலகம் தான்.

நாராயணனுக்கு என் மீது மதிப்பு அதிகம். தன் நண்பர்களிடம் என்னைப்பற்றி நிறைய சொல்லி இருக்கின்றார். அவரால் ஆர்வமூட்டப் பட்ட பலரிடமும் என்னைக் கூட்டிச் சென்று அறிமுகப்படுத்துவார். அப்படித்தான் ஜெமினி கணேசனின் அறிமுகம் கிடைத்தது.
நான் சென்ற அன்று பொது விஷயங்கள் நிறைய பேசினோம். காதல் பற்றிக் காதல் மன்னன் பேச, பெண்ணியம் பேசும் நான் அவர் கருத்துக்களைச் சாடினேன். நேரம் போனது தெரியவில்லை. அன்று மாலை ஜெயகாந்தன் வீட்டிற்குக் ஒரு நேரம் குறிப்பிட்டு வருவதாகச் சொல்லி இருந்தேன். எனவே விவாதத்தை இடையில் நிறுத்திப் புறப்பட முயன்றேன். காரணம் கேட்ட பொழுது போகும் இடம் சொன்னேன். உடனே அவர் கௌசல்யா புகழ் பாட ஆரம்பித்துவிட்டார். சிறந்த நடிகை மட்டுமல்ல, அறிவார்ந்த பெண் என்றும் சொன்னார்.சில சம்பவங்களைக் கூறியபொழுது அவருக்குக் கௌசல்யாவின் மேல் எவ்வளவு மதிப்பு இருக்கின்றது என்பது புரிந்தது.ஜெயகாந்தனின் கதைகள் சிலவற்றைப் பற்றி அலசிப் புகழ்ந்தார். யாரிடம் பேசினாலும் ஜெயகாந்தன் பெயரைச் சொன்னால் உடனே அவர் எழுத்தைப் பற்றிய விமர்சனம் கேட்கலாம். ஒரு காலக் கட்டத்தில் அவர் எழுத்தின் வீச்சு அப்படி எல்லை கடந்து பரவியிருந்தது.
என் தோழி புனிதமும் கௌசல்யாவைப் பற்றிப் புகழ்ந்து சொல்லி இருக்கின்றார்.புனிதவதி இளங்கோவன் சென்னை வானொலியில் வேலை பார்த்து வந்ததால் அவர்களுக்குள் நெருங்கிய தொடர்பு இருந்தது.

பிறர் கூறி அறிவதற்கு முன் நானே அவர்களுடன் பழகியதால் அவர்கள் தெளிவையும், எதையும் ஆணித்தரமாகக் சொல்லும் விதமும் கண்டு வியந்திருக்கின்றேன் .சில சமயம் ஜெயகாந்தனிடம் பேசுகின்றோமோ என்ற நினைவு கூட வந்திருக்கின்றது. கே.கே. நகர் வீட்டிற்குச் சென்றால் அவர்களுடன் கொஞ்ச நேரமாவது தனித்து அமர்ந்து பேசுவேன். நல்ல சிந்தனையாளர். நினைப்பது மட்டுமல்ல அதனை வெளிப்படுத்தும் முறையும் வியக்க வைக்கும். என் கணவரையும் அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தியிருக்கின்றேன். அவரும் கௌசல்யாவின் சிந்தனையாற்றலையும், பேசும் தன்மையையும் புகழ்ந்திருக்கின்றார்.

ஜெயகாந்தன் அதிகமாக எழுதிக் கொண்டிருந்த காலம். அவர்கள் இருவரையும் சேர்ந்து பார்க்கும் பொழுது ஒரு கற்பனை என் மனத்தில் நிழலாடும். பாரதம் எழுத வியாசருக்கு உதவியவர் விநாயகப் பெருமான். வியாசரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து எழுத வேண்டும். அதுவும் புரிந்து எழுத வேண்டும். ஜெயகாந்தனின் படைப்புகள் எதுபற்றிக் கேட்டாலும் வரிக்கு வரி கௌசல்யாவிற்குத் தெரியும். ஜெயகாந்தன் அவர்களைப் பாராட்டும் பொழுது அவருக்குப் பக்கத் துணையாயிருக்கும் கௌசல்யாவைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது.

நம் நாயகர் உடல் நலம் குன்றி ஆஸ்பத்திரிக்குச் சென்று சிகிச்சை பெற்றுப் பிழைத்து வந்தபின், அவரின் தேவை இன்னும் கூடுதலாயிற்று. பார்வையாளர்களைக் குறைத்துக் கொண்ட காலத்தில் எண்ணங்களைப் பரிமாறிக்கொள்ள அறிவுசார்ந்த ஒரு தோழமை அவசியம் வேண்டும். உடல்நலம் கருதி வெளியிலிருந்து வருபவர்களைச் சிறிது காலம் குறைத்துக் கொண்டனர். இன்று தோழியாய் இருந்து அந்த அறிவு ஜீவியைப் பாதுக்காத்து வருகின்றார். ஜெயகாந்தனைப்பற்றிப் பேசும் பொழுது அந்தப் பெண்மணியை என்னால் நினைக்காமல் இருக்க முடியாது. தொடரிலும் அவர் பெயரைப் பதிவு செய்ய வேண்டியது என் கடமை என நினைத்தேன். இம்முறை சென்னைக்குச் சென்றால் நான், ஜெயகாந்தன், கௌசல்யா மூவர் மட்டும் உட்கார்ந்து நிறையப் பேசவேண்டும் என்று இப்பொழுதே கூறிவிட்டேன். இருவரும் சிரித்துக் கொண்டே சம்மதமும் தெரிவித்துவிட்டனர். முதியவள் நான் முணுமுணுக்க நிறையச் செய்திகள் இருக்கின்றன; அவர்களிடம் புலம்ப வேண்டும்.

இனி நம் ஜெயகாந்தனைப் பார்க்கலாம்.

திடீரென்று அவர் எழுதிய கதைகள் ஒன்றிரண்டாவது படிக்க ஆசை வந்துவிட்டது. கண்களில் முதலில் பட்டது “யுக சந்தி”

கௌரிக்குப் பத்துவயதில் திருமணம், பதினாறு வயதில் விதவை.என் பெரியம்மா மீனாட்சியம்மாளின் நினைவு வந்தது. 7 வயதில் திருமணம். 21 வயதில் விதவை. மிகவும் அழகாக இருப்பார்கள். நீண்ட கூந்தலாம். மொட்டையடித்து மூளியாக்கப் பட்டார்கள்.சாகும் பொழுது 83 வயது. 80 வயது வரை புகுந்த வீட்டில், கணவன் இல்லாத வீட்டில் கடுமையாக உழைத்தார்கள். 81வயதானது.புகுந்த வீட்டார் வீட்டைவிட்டு அனுப்பிவிட்டார்கள். அவர்களுக்குக் குழந்தைகள் கிடையாது. அது ஒரு பெருங்கதை. பிறகு சொல்கின்றேன். கௌரிப்பாட்டியைப் பார்ப்போம்.

கௌரிப் பாட்டிக்குக் குழந்தை இருந்து பேரன் பேத்திகளும் இருந்தனர். ஆசார வாழ்க்கை. அதாவது கட்டுப்பாடான வாழ்கை. காலம் சுழல்வதை யாராலும் மாற்ற முடியுமா? அவள் பேத்தி கீதா திருமணமாகிப் பத்து மாதங்களில் விதவையாகிப் பிறந்தகம் வந்து பாட்டியின் மடியின் முகம் புதைத்துக் கதறி அழுத பொழுது பாட்டி அவளை அரவணைத்துக் கொண்டாள். அதற்குப் பாசம் மட்டும் காரணமன்று. இறந்த காலத்தின் நிகழ்காலப் பிரதிநிதியாய் அவளில் தன்னைக் கண்டாள்.
கீதா வீட்டிற்குள் முடங்காமல் படித்து ஆசிரியர் தொழில் பார்க்க அயல் ஊருக்குச் சென்ற பொழுது பாட்டியும் உடன் சென்றாள். தன் மகனைக் காண கிராமத்திற்கு வந்த பொழுதுதான் அந்தச் செய்தியை அறிகின்றாள். விதவைப் பெண் கீதா மறுமணம் செய்து கொள்ளப் போகின்றாள். தன் பிறந்த வீடு தன்னை ஒதுக்கிவிடும் என்பதைக் கூறி தனக்கு வாழ்வு வேண்டிச்செல்வதை மறைக்காமல் தெரிவிக்க வேண்டியதைக் கடமையாக நினைத்துக் கடிதம் அனுப்பியிருக்கின்றாள். மேலும் கூறுவதை அப்படியே ஜே.கே அவர்களின் வார்த்தைகளில் கூற விரும்புகின்றேன் -  “உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்திற்கு ஆட்பட முடியாமல் வேஷங்கட்டித் திரிந்து , பிறகு அவப்பெயருக்கு ஆளாகிக் குடும்பத்தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணந்திருக்கின்றேன்”.இங்கே அவர் கருத்தாக எதையும் கூறவில்லை. அவள் நினைப்பதைக் கூறிவிடுகின்றார்.

கௌரிப்பாட்டிக்கு விதவை வாழ்க்கையின் கொடுமை தெரியும். தன் பேத்தியுடன் இருக்கப் புறப்பட்டுவிட்டாள்.

எதையும் அறிவுரையாகக் கூறமாட்டார் ஜே.கே. காட்சிகளில் உண்மை உணர்வுகள் புதைந்திருக்கும்.

என் தாயின் நினைவு வருகின்றது. வாடிப்பட்டியில் வேலை பார்க்கும் பொழுது நாடக மேடையில் வேற்று ஆடவன் என்னைத் தொட்டதால் என் கற்பே போய்விட்டது என்று கதறி அழுத அப்பாவி அம்மா பல வருடங்கள் கழிந்த பின்னர் அவர்கள் பார்வையின் கோணம் எப்படியிருந்தது என்பதை அடுத்துக் கூறுகின்றேன்.

என்னிடம் சில பக்குவங்கள் ஏற்பட்டதற்குக் காரணம் ஜெயகாந்தன் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பின்னால் நான் கூறப்போகும் சம்பவங்களே சான்றுகளாகும் .

 

பகுதி 6

10.01.2010

குருவம்மா ஒரு கிராமத்துப் பெண். அவள் பட்டப்படிப்பை முடித்து என் துறையில் பணியாற்றச் சேர்ந்தாள். சில மாதங்களில் அவள் வாழ்வில் காதல் புகுந்தது. செய்தி அறிந்த அவள் தந்தை கொதிப்படைந்து அவளைச் சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று சொந்தக்காரப் பையன் ஒருவனுடன் கட்டாயத் திருமணம் செய்து முடித்துவிட்டார்.

ஒருவர் வாழ்க்கை திருமணத்துடன் முடிவடைவதில்லை. அது ஆரம்பம். பொருந்தாத திருமணம். குடும்பத்தில் எப்பொழுதும் சண்டை. நாளுக்கு நாள் அது அதிகமாகவும் கணவனை உதறிவிட்டாள். பெற்றவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம் அவள் ஒதுங்கிய இடம் ஒரு போலீஸ் அதிகாரியின்நிழல். குருவம்மாளுக்கு மறுவாழ்வு கிடைத்தது. அவர் திருமணமாகாதவர். யாராவது அவளை முதலில் பார்க்கின்றவர்களாக இருந்தால் “ எவ்வளவு அடக்கமான பெண். நல்ல பெண் “ என்று போற்றுவார்கள். அவர்களைத் தூற்றுவாரும் இருந்தனர்.

என் மீது அவளுக்குப் பிரியம். என்னுடன் மனம் விட்டுப் பேசுவாள். என் வீட்டிற்குத்தான் வருவாள். என் தாயாரைப் பார்க்க வருவதால் பூ வாங்கி வந்து அம்மா கையில் கொடுத்துவிட்டு நமஸ்காரம் செய்வாள். அவள் வீட்டிற்கு வரும்பொழுது சமையல் அறை சென்று ஏதாவது செய்து எடுத்து வந்து அம்மாவிற்குக் கொடுப்பாள். எங்கள் வீட்டுச் சமையலறைக்கு யாரும் செல்லலாம், சமைக்கலாம். என் அப்பாவின் காந்திக் கட்சியின் சக்தி அது. என் தாயாருக்கு அவளைப் பிடிக்கும்.

குருவம்மாள் ஒருவனைக் காதலித்தாள்; இன்னொருவனை மணந்தாள்; கட்டியவனை உதறிவிட்டு இன்னொருவனின் கையைப் பிடித்துக் கொண்டுவிட்டாள். பழங்கால
மாமியின் அபிப்பிராயம் தெரிய ஆவல் -
“ எங்க காலத்துலே பொண்களுக்கு எந்த வாழ்க்கை அமையறதோ அதுலே ஐக்கியமாயிண்டு வாழ முடிஞ்சுது. இப்போ காலம் மாறிடுத்து. கன்னா பின்னான்னு கண்டவனோட சுத்தாம யாரோ ஒருவனுடன் எப்போ வாழ ஆரம்பிச்சுட்டாளோ அப்பறம் அவளைப் பத்தி பேச என்ன இருக்கு? இப்போ மனம் ஐக்கியமா இருக்கற இடத்துலே நன்னா வாழறா” என் அம்மாவா இப்படி பேசறது?!. ஆமாம். ஓர் ஆடவன் கை பட்டால் கற்பு போச்சுன்னு அழுத அம்மாதான். இதுவே யதார்த்தம். இதுதான் நிஜம். ஒன்றில் பழகிட்ட மனசு இன்னொன்றை ஏற்றுக் கொள்வது எளிதல்ல. ஜே. கே யின் கதை கற்பனையன்று. மாற்றங்களை ஜீரணித்து வருபவர்களில் பாட்டியும் ஒருத்தி. அன்று எழுதப்பட்டவை இப்பொழுது சாதாரணமாகிவிட்டன.

ஆடையின்றி அலைந்தோமே
உண்மை ராசா உண்மை
ஆடை சுத்தி அலைஞ்சோமே
உண்மை ராசா உண்மை.
ஆடை குறச்சு அலையறோமே
உண்மை ராசா உண்மை
ஆடையையும் விட்டலைவானே
உண்மை ராசா உண்மை

இது இந்தக் கிழவியின் புலம்பல். எதையெல்லாம் இழக்கின்றோம் என்பதை உணர்ந்துகொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். வரட்டுப் புலம்பல்களும், அசட்டு எழுத்துக்களும் வளர்ந்து வருகின்றன.

நான் ஒரு தவறு செய்துவிட்டேன். என்னைப் பற்றிச் சரியாக அறிமுகப்படுத்திக் கொள்ளவில்லை. “எவளோ ஒருத்தி, அந்தக்கால மனுஷி, படிச்சுட்டு அரசாங்கத்திலே
ஒரு வேலை, அதிலும் பெண்களுக்கு நல்லது செய்யற வேலையாம், மிஷின்லே தைக்கறது, எம்பிராய்டரி வேலை கத்துத் தர்ரது போல வேலை, அப்போ அப்போ எதோ கதை எழுதறது இப் படி இருக்கறவ, ஏதோ படிச்சதையெல்லாம் எழுதறா,பாவம் வயசானவ எழுதட்டும் “ இப்படி என்னைப் பற்றிப் பலரையும் நினைக்க வைத்துவிட்டேன்.

என்னைப் பற்றிய அறிமுகம் தனியாகச் செய்ய வேண்டியது என் கடமை . விரைவில் தனியாக எழுதுவேன். என் நினைவலைகள் என் பணிகளைக் காட்டும் ஒரு திறந்த வெளி. இப்பொழுது இத்தொடர்பற்றிப் பேசலாம்.

என் பணியிடம் மணம் வீசும் மலர்கள் நிறைந்த நந்தவனம் இல்லை. அது ஒரு காடு. அங்கு மான்களும் இருக்கும். சிங்கம், புலியும் இருக்கும். ஒரு லட்சத்திற்கும் மேல் பெண்கள் பணியாற்றும் துறை. தன்னையும் பாதுகாத்துக் கொண்டு பிறரையும் பாதுகாக்க வேண்டிய காலம். மனிதர்களைப் புரிந்து கொண்டால் பிரச்சனைகளை எளிதாகச் சமாளிக்க முடியும். என் மனத்தில் குழப்பம் ஏற்படும்பொழுது நான் தேடிச் செல்லும் இடம் ஜெயகாந்தன் குடில். அவர் எனக்கு ஒரு சுமைதாங்கியல்ல, ஓர் ஊன்றுகோல். என் தள்ளாட்டத்தை ஒடுக்கி நிமிர்த்தும் ஓர் உறுதியான ஊன்றுகோல். நான் கற்கும் பாடசாலை.

என் சுமைதாங்கிகள் மணியனும் சாவியும். துன்பமோ, இன்பமோ நான் போய்ப் புலம்பும் இடம் மணியனும் சாவியும். எனக்கு ஆறுதல் கூறி அமைதிப் படுத்துவார் சாவி. பாராட்டி ஊக்கமளிப்பார் சாவி. மணியனோ ஓடி வந்து என் துயர்களைய எல்லாம் செய்வார். பாராட்ட வேண்டிய இடத்தில் தனக்குக் கிடைத்துவிட்ட பெருமையாக எல்லோரிடமும் சொல்லிக்கொள்வார். எங்கள் குடும்பத்தில் அவரும் ஒருவர். என் அண்ணன் மா.ரா. இளங்கோவனும், மணியனும் இல்லாமல் இருந்திருந்தால் இப்பொழுது நான் எழுதிக் கொண்டிருக்க மாட்டேன். என்னைப் புரிந்து கொள்ளவே இந்த சில வரிகள்.

ஜெயகாந்தனிடமிருந்து நான் பெற்ற சக்தியை, அதனால் நான் பெற்ற தெளிவைக் காட்டச் சில சம்பவங்கள் கூறுகின்றேன். சமுதாயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வளிப்பது என் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். இதை அணுக, உளவியல் அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.

குப்பனுக்கு 16 வயதிருக்கும். சுறுசுறுப்பானவன். பள்ளிப் படிப்பை முழுவதும் முடிக்கவில்லை. அவன் வாழ்க்கையில் ஒரு சம்பவம். அவனுக்குப் புதுப்பாடம் ஒருத்தி கற்றுக் கொடுத்தாள். அவளுக்கு 40 வயது. குப்பனுக்கு அது விளையாட்டாக இருந்தது. அவனுக்குப் பிடித்தும் இருந்தது. அது முதல் அது போன்ற வாய்ப்புகள் வரும் பொழுது மறுக்காமல் விளையாடிக்கொண்டிருந்தான். சில ஆண்டுகளில் கொஞ்சம் ஒதுங்க ஆரம்பித்தான். பின்னர் கொஞ்சம் ஒதுக்க ஆரம்பித்தான். தேர்வு செய்து விளையாடும் மன நிலையும் வந்தது. பின்னர் “சீ” என்று ஒதுக்கித் தள்ளவும் ஆரம்பித்துவிட்டான்.

ஜே .கே யுடன் இந்த மன நிலைபற்றிப் பேச்சு வந்தது. ” தவறு என்று திருந்திவிட்டானோ ? “ என்று கேட்டேன். அவர் பதில் முதலில் வியப்பைக் கொடுத்தாலும் அதன் யதார்த்தம் பின்னர் புரிந்தது. “குப்பன் எப்பொழுதும் சரி, தப்பு என்று நினைத்திருக்க மாட்டான். யதார்த்தமாகக் கிடைப்பதை அனுபவித்து வந்திருக்கின்றான். காலம் மாற மாற ரசனைகளும் ஈர்ப்புகளும் மாறுவது இயற்கை. அதற்கேற்ப அவன் செயல்களும் மாறி வந்திருக்கின்றன. வீட்டில் இருக்கும் பெரியவர்களில் தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இப்படி நடப்பது கூடத் தெரியாதவர்களே அதிகம். தெரிந்தால் அவர்கள் கையாளும் விதத்தில் அவன் திருந்தலாம் அல்லது கொடூரமானவனாகவும் ஆகலாம். இது புதிதில்லை. பெரிதாக வெளியில் தெரிவதில்லை ”ஒரு மனிதனின் குணங்கள் அவர்களது பிள்ளைப் பருவத்தில் ஏற்பட்ட பல அனுபவங்களால் பாதிக்கப்படுவதுண்டு. தீர்வு கிடைக்க வேண்டுமெனில் அன்புடன் சாமர்த்தியமாகக் கையாள வேண்டும். “

எனக்குக் கிடைத்த சரியான படிப்பினை இது. ஏற்கனவே இயல்பாக என்னால் யாரையும் நேசிக்க முடிந்தது. வாடிப்பட்டியில் கருப்பன் சிறையிலிருந்து வந்தவுடன் முதலில் வயிற்றுக்கு நிறையச் சோறு போடுவேன். அவனைத் தூங்கச் சொல்லிவிட்டு வெளியில் சென்று அவனுக்கு இரு வேஷ்டி சட்டைகள் காசிருந்தால் வாங்குவேன்; அல்லது நண்பர்கள் வீடுகள் சென்று பழைய உடுப்புகள் வாங்கிவந்து அவனுக்குக் கொடுப்பேன்; கொஞ்சம் காசும் கொடுத்து அனுப்புவேன்.


அவன் ஒரு அடியாள். ஓர் அம்பு. எய்பவன் எவனோ? அவனுக்கு வேறு வேலை கொடுக்கவே பயந்தனர். எனவே கை, கால் வெட்டுவதே அவன் வேலை. அவனிடம் வேறு எங்காவது சென்று திருந்தி வாழச் சொல்லிக் கொண்டிருந்தேன். வாடிப்பாடியை விட்டு மாற்றலானதும் அவனைப்பற்றிய செய்தி தெரியாது.அவன் எங்கோ போய்விட்டான் என்று மட்டும் தெரியும். ஐந்து ஆண்டுகள் கழிந்த பின்னர் திடீரென்று ஒரு நாள் அவன் என் வீடு வந்தான். நான் அப்பொழுது இருந்தது கோயம்புத்தூரில்; கர்ப்பமாக இருந்தேன். எனக்குப் பிரசவம் ஆகப் போகின்ற செய்தி அறிந்து பார்க்க வந்திருந்தான்.

அவன் இருக்கும் இடம் எனக்குத் தெரியாதே தவிர அவன் என்னைப் பற்றி எல்லாம் அறிந்திருந்தான். இப்பொழுது வேறு ஊர் சென்று கூலி வேலை செய்து பிழைத்து வருவதாகக் கூறினான். தன் நிலையே சரியில்லாததால் திருமணம் செய்து கொள்ளவில்லையாம். எனக்கு நல்லபடியாகப் பிரசவம் ஆகிப் பிழைத்துவர பழனிக்குப் போய் வேண்டிக் கொண்டானாம். பிரசாதம் எடுத்து வந்திருந்தான். பிரசாதம் கொடுத்த அவன் கைகளைப் பிடித்துக்கொண்டு அழுதேன். தாயைப் போன்ற அவன் பரிவில் நான் நெகிழ்ந்தேன். பலர் மேனியைப் பதம் பார்த்த அந்தக் கைகள் என் கண்ணீரைத் துடைத்தன.மனிதன் பிறக்கும் பொழுது கெட்டவனாகப் பிறப்பதில்லை. கெட்டவனாக்கப் படுகின்றான். நல்லவனாகவும் மாற்றப்பட முடியும். ’பாவத்தை வெறு, பாபியை நேசி’ இது ஏசுநாதரின் பொன்மொழி. இராமாயணத்தை எழுத இறைவன் தேர்ந்தெடுத்தது வால்மீகியைத்தான்.

குற்றவாளிகளிடமும் குறையை மட்டுமே கண்டேன். எனவே என்னால் யாரையும் நேசிக்க முடிந்தது. பல காரணிகளில் ஜே.கேயும் ஒருவர். காழ்ப்புணர்ச்சி வேண்டாம். மறக்க முடியவில்லையா, மன்னித்துவிடுங்கள். அடுத்து ஒரு காவியக் காட்சி காட்டப் போகின்றேன்.

பகுதி 7

10.01.2010

நயமான காட்சி ஒன்றைக் காட்டுவதாகச் சொன்னேன். அதற்குள் நம்மவரின் கதைபடிக்க ஆசை பிறந்துவிட்டது. படிக்க ஆரம்பித்தால் உடனே முடித்து வைக்கும்படியாகவா எழுதுவார் ! நாம் அதில் லயித்து விடுவோம். நம் மனக்குதிரையும் ஓட ஆரம்பிக்கும். நான்மட்டும் விதிவிலக்கா?

படித்த கதை - ஒரு பிடி சோறு.
அவர் கதைகளுக்கு விமர்சனம் செய்யும் நோக்கில் நான் எழுதத் தொடங்கவில்லை. அவருடைய எழுத்துக்கள் பிறந்த இடம், அவர் எண்ணங்கள் புழங்கும் இடம்பற்றிப் பேச ஆசை. அந்த சிம்மம் கர்ஜிக்க ஆரம்பித்தால் அந்த கர்ஜனையின் வலிமை பற்றி எழுதத் துடிப்பு.
ஜெயகாந்தனின் எழுத்துக்கள் யதார்த்தமானவை. இதை நான் மட்டும் சொல்லவில்லை. பலரும் சொல்வதுதான். புதுமைப் பித்தன் எழுத்தும் வாழ்க்கையைப் படம் பிடித்துக்காட்டும் யதார்த்தமானவை. நடுத்தர குடும்பக்கதைகளை லக்ஷ்மியும் யதார்த்தமாகவே எழுதியுள்ளார். ஜானகிராமனோ ஆத்மாவைத் தட்டி எழுப்புவதில் யதார்த்தமானவர்.
எத்தனை யதார்த்தங்கள்? எல்லாம் ஒன்றா? இல்லை. இல்லவே இல்லை. இப்பொழுது நான் விளக்கங்கள் கூறப் போவதில்லை. ஒரே நாளில் இந்நால்வர் கதைகளையும் ஆளுக்கு ஒன்றாக எடுத்துப் படியுங்கள். நீங்கள் உணர்வீர்கள்.

நான் கொடுக்கும் பழைய சோறு வேண்டாம்.
ஒரு பிடி சோறு கிடைப்பது கூட இயலாத ஒருத்தியின் கதை ஒரு பிடி சோறு. சென்னைக்குப் பிழைக்க வந்தவள் ராசாத்தி. அக்காலத்தில் இப்பொழுது போல் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப் படவில்லை. வருகின்றவர்கள் கட்டட வேலைக்கு கிராமங்களிலிருந்து கூட்டமாக வருவார்கள். கல்லுடைக்க, மண்சுமக்க இப்படிப் பல வேலைகளுக்குச் சித்தாளாக வேலை செய்யப் பெண்களும் வருவர்கள். இவர்களுக்கு எல்லா நாட்களிலும் வேலை கிடைப்பதில்லை.

வயிறு இருக்கின்றதே. பசிக்கச் சோறு வேண்டும். விருந்தன்னமா வேண்டுகின்றார்கள்?!. வேலை இல்லையென்றால் பசிக் கொடுமை. அதனைப் போக்க அவளுக்குத் தெரிந்தது இன்னொரு வியாபாரம். அவளிடம் இருந்த முதலீடு அவள் உடம்புதான். விபச்சாரம் அவள் தொழிலன்று. உடல் இச்சைக்காகவும் அவள் கடை விரிக்கவில்லை. பணம் தேவையென்றால் எவனாவது வருவான், அவன் கேட்பதைக் கொடுத்து இவளுக்கு வேண்டியதைப் பெறுவாள். இது தினசரி வியாபாரமும் இல்லை. அவ்வப்பொழுது அவள் இந்தத் தொழிலையும் செய்து வருவாள். அவளுக்கு ஒரு மகன் மண்ணாங்கட்டி. .முகவரி இல்லாத ஒரு மண்பொம்மை. . இந்த இருவரின் வாழ்க்கைதான் ஒரு பிடி சோறு. இதைப் படித்தவுடன் நான் எங்கோ பயணம் சென்று விட்டேன்.

ஜெயகாந்தன் மாளிகைவாசியல்ல. மண் குடிசைக்குப் போவார்; அங்கு பழைய சோறு சாப்பிடுவார். அப்படிப் போய்த்தான் கதை எழுத வேண்டுமா என்று நீங்கள் கேட்பது தெரிகின்றது. அவர் கதையா எழுதினார்? அவர் எழுத்தில் உடன் வாழ்ந்து நம்மையும் உணரவைக்கின்றாரே!. அந்த சக்தி அவருக்கு எப்படி கிடைத்தது?அவருடன் போய் அவர் உணர்வுகள் ஓடும் பாதையை நேரில் பார்த்து உணர்ந்தவள் நான்.எனக்கு எழுதத்தெரியாது. ஆனால் உணர முடியும். அவருடன் நான் சென்ற பயணமும், நான் உணர்ந்ததும் இத்தொடரில் எழுதுவேன்.

என் சொந்த அனுபவம் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். சமுதாய அக்கறையுள்ளவர்கள், சீர்மைப் படுத்த என்ணுகின்றவர்களின் சிந்தனை எப்பொழுதும் சமூகத்தையே சுற்றிவரும். முதன் முறையாக நன் என் பத்து வயது மகனைக் கூட்டிக் கொண்டு பம்பாய் சென்றிருந்தேன். அது ஒரு தொழில் அதிபர் வீடு. அவர் தங்கை என் துறையில் வேலை பார்த்து வந்தாள். அவளின் அழைப்பின் காரணமாகச் செல்ல முடிந்தது.
அவர் பெயர் சந்திர மோகன். உழைப்பால் உயர்ந்த மனிதர். கிருஷ்ணன் அவருடைய நண்பர். நெற்றியில் நாமம். எப்பொழுதும் அவர் நா கிருஷ்ணா என்று சொல்லிக் கொண்டே இருக்கும். இப்பொழுது அவருக்கு என்னால் சோதனை.. கிருஷ்ணன் வேறு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நான் போன அன்று, இரவில் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்திருந்தோம். நீங்கள் ரசிக்க உரையாடல் மட்டும் போதும் .

“அம்மா. உங்களுக்கு பம்பாயில் எங்கெல்லாம் போக வேண்டும் என்று சொல்லுங்கள். கிருஷ்ணன் உங்களைக் கூட்டிச் செல்வார். அவரை லீவு போடச் சொல்லுகின்றேன். எந்த நேரமானலும் சுற்றிப் பார்த்துவிட்டு வாருங்கள். உங்கள் விருப்பம் சொன்னால் போதும்.”

“எனக்கு தாராவி போக வேண்டும். அங்குதான் தமிழர்கள் நிறைய இருக்கின்றார்களாம். அவர்கள் வீடுகளைப் பார்க்க வேண்டும்”

“இந்தத்தமிழ் நாட்டு வாசிகளுக்கே ஒரு பைத்தியம். தமிழன் மட்டும்தானா மனுஷன், மத்தவங்களையும் பாக்கத் தோணலியா ?”, கிருஷ்ணன் கிண்டலடித்தார்.

நானும் சிரித்துவிட்டு,“பிழைக்க வந்த இடத்தில் அவர்கள் ஒண்டிக் கொண்டு வாழ்கின்றார்களாம். அவர்கள் வாழ்க்கை முறையைப் பார்க்க வேண்டும். அங்கு ஒரு சாராயக் கடையில் பெண்ணே வியாபாரம் செய்கின்றாளாம். அந்த சாராயக் கடைக்குப் போய்க் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பார்க்க வேண்டும். அங்கு அவர்களுக்கு ஒரு சங்கக் கட்டடம் இருக்கின்றதாம். அங்கும் போக வேண்டும் “ என்றேன்

“அப்பா சந்திரன், இந்தம்மா என்னைச் சாராயக் கடைக்குக் கூப்பிடறாங்க. அங்கெல்லாம் என்னால் போக முடியாது. சாராய பாட்டில் வேணும்னா நான் வாங்கிட்டு வரேன். ஏம்மா, பிள்ளையார் கோயில் இங்கே விசேஷம் அங்கே போகணுனு தோணல்லியா?

கிருஷ்ணனின் ஆத்திரம் புரிந்தது. நல்ல மனிதர். நான் விளக்கவேண்டும் “கிருஷ்ணன் பிள்ளையார் இல்லாத இடம் ஏது? அதையும் பின்னால் பார்க்கலாம் .மஹாலட்சுமி கோயிலுக்கும் போகவேண்டும்.. நான் ஒரு சமூக சேவகி. வாழும் சூழலைப் பார்க்க வேண்டும். .நான் எங்கு சென்றாலும் குடிசைகள் பக்கம்தான் போவேன். அவங்க எப்படி வாழறாங்கண்ணு பார்க்கணும். எனக்குக் குடிக்க சாராயம் வேண்டும்னா சொல்றேன் “என்றவுடன் எல்லோரும் சிரித்துவிட்டார்கள்

“அப்புறம் வேறு எங்கெல்லாம் போகணுன்ம்னு சொல்லிடுங்கோ.  அதுக்கேத்தாப்பலே  ஏற்பாடு செய்யணும் “ என்றார் சந்திரன்

“சிவப்பு விளக்கு ஏரியா போகணும்.”

“அய்யோ” என்று கத்திவிட்டார் கிருஷ்ணன். சந்திரன் மட்டும் என்னை சுவாரஸ்யமாகப் பார்க்க ஆரம்பித்தார்.

“அங்கே வீடுகளுக்குள் போய் அந்தப் பெண்களுடன் பேசணும்”

“அது ரொம்பக் கஷ்டம்”என்று முறைத்தார் கிருஷ்ணன்.

“அதுக்கேத்த ஆட்களைப் பிடிச்சு போய்ப் பார்க்கலாம். அம்மா கதை எழுதப்போறாங்க போல இருக்கு.”என்று சந்திரன் கூறவும் நான் மறுத்துத் தலையாட்டினேன்.

“பெண்கள் படும் கஷ்டங்கள் எனக்குத் தெரியணும். என்னால் ஏதாவது உதவி செய்ய முடியுமான்னு பாக்கணும் “ என்றவுடன் சூழ்நிலை அமைதியாயிற்று

“ இன்னும் என்னவெல்லாம் பார்க்கணும்?”

“இதுவரை நைட் கிளப் பார்த்ததில்லை. ஒண்ணு பாக்கணும். பாதி ராத்திரியில் பிளாட்பாரத்தில் தூங்குவாங்களே, அவங்களைப் பாக்கணும். . எழுப்பி பேசல்லாம் வேண்டாம். “

கிருஷ்ணன்தான் நெளிந்து கொண்டிருந்தார். அவர்தானே கூட வரப் போகின்றவர். இந்த அனுபவங்களை விரிவாக நினைவலைகளில் பதிய இருப்பதால் இதற்கு மேல் எழுதவில்லை என்னை யாரும் இதனைப் பார்த்து அறிக்கை கேட்கவில்லை. எங்கெல்லாம் துயர்கள் என்று கேள்விப் படுகின்றேனோ அங்கே அவைகளைப் பார்க்க எண்ணுவது என் இயல்பு. எனக்கும் ஜெயகாந்தனுக்கும் குடிசை வாழ்க் குணங்கள், அதாவது போலித்தனம் இல்லாத வாழ்க்கை. அவர் எழுத்தில் வடித்தார். நான் முடிந்த அளவு செயலில் இறங்கினேன். அவருக்கு எப்பொழுதும் வெற்றி. ஆனால் நான் வெற்றியையும் தோல்வியையும் சந்திக்க வேண்டிவரும்.

ராசாத்தி செய்ததை எவ்வளவு நாசுக்காகச் சொல்லுகின்றார். படுக்கை அறைக் காட்சிகளை அலங்காரப்படுத்தி காட்டவில்லை. ஜானகிராமன் எழுதிய மோக முள்ளை இப்பொழுது எடுத்துப் படித்துப் பாருங்கள். அந்தக் கருத்தே ஒரு முள், மோக முள். ஓர் இளைஞனின் மனத்தவிப்புதான் முழுவதும். “இதுக்குத்தானா இவ்வளவும் “

அப்பப்பா, ஆமாம், இதுக்குத்தான் இவ்வளவு தவிப்பும். ஒரு சொல்லில் புரியவைக்கும் விந்தை மனிதர்கள் காலத்தில் வாழ்ந்த பெருமையும் உண்டு. பெண்ணின் உடலை நான்கு பக்கங்களில் பிரித்துப் போட்டு அசிங்கப் படுத்தும் காலத்திலும் வாழ்கின்றோம். சின்னப் பிள்ளைகளும் புத்தகங்களைப் படிக்க முடியாவிட்டாலும் படம் பார்க்க்ன்றார்கள். அவர்களால் முழு உடம்பைப் பார்க்க முடியாது. திகைப்பை விதைக்கின்றோம். மனத்திற்குள் ஒட்டவைத்துப் பார்க்கும் காலத்தில் வாழ்கின்றோம்.
பிள்ளைகளைக் குறை கூற முடியுமா? எங்கள் காலத்தில் உடன் பிறந்தான் இல்லையென்றால் ஆண், பெண் குழந்தைகளின் உறுப்புகள்பற்றி கூடத் தெரியாமல் வளர்ந்து வந்தோம். என் காலத்தில் எல்லாம் பார்த்து வருகின்றேன்.

அடுத்து புதுச்செருப்புக் கடிக்கும்.

ஜெயகாந்தா, நான் கேட்கத் துடிக்கும் கேள்வியை நீ கேட்டுவிட்டாய். உனக்கு டாக்டர் பட்டம் கொடுத்து அந்த பட்டத்திற்குப் பெருமைதேடிக் கொண்டுவிட்டான் மனிதன். அடுத்து அந்தச் செருப்பைப் பார்ப்போம்.


பகுதி 8

17.01.2010

நந்தகோபாலுக்குத் திருமணமாகி ஆறு மாதங்களாகிவிட்டன. ஆனாலும் கணவன் மனைவிக்கிடையில் சுமுகமான உறவில்லை. அவன் விருப்பப்படி அவள் ஈடு கொடுக்கவில்லை. அவனுக்கு எரிச்சல். அவளுக்கோ அலட்சியம். இப்படி இருந்தால் குடும்பம் உருப்படுமா?

ஆத்திரத்தில் அவனுக்கு உறக்கம் வரவில்லை. நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியில் செல்கின்றான். மனைவியோ அலட்சியமாகக் கதவைச் சாத்திவிடுகின்றாள். அதுவும் அவன் ஆண்மைக்குக் கிடைக்கும் அடியாக உணர்கின்றான்.

பிள்ளைப் பருவ நினைவுகள் அவ்வப்பொழுது அவன் நினைவில் வந்து முள்ளாய் உறுத்தும். இரவு நேரத்தில் அம்மா சத்தம் போட்டுக் கத்துவதும் , அப்பா அடிப்பதும் எல்லாம் ஒலிகளாய் இவன் இருக்குமிடம் வரும். பொழுது புலர்ந்துவிட்டால் அதே அப்பாவும் அம்மாவும் ஒன்றும் நடக்காதது போல் பேசும் காட்சிகள் உணர்ச்சியில் ஆழமாகப் பதிந்துவிடும். இன்றும் அவைகள் அவனை ஆட்டிப்படைக்கின்றன.

“பெற்றோர்கள் சண்டையைவிடவும் அந்தப் பெற்றோரின் சமாதானங்கள் அவன் மனத்தை மிகவும் அசிங்கப் படுத்தின” இது ஜெயகாந்தனின் வார்த்தைகள். விமர்சிக்கலாம். ஆனால் இது யதார்த்தம். என் பிள்ளைப் பருவத்திலும் எனக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இது சரியா தப்பா என்பதில்லை. குழந்தைகள் மனங்களில் எப்படி ஆழமான புண்களாகப் பதிந்துவிடுகின்றது என்பதைச் சிந்திக்க வேண்டும்.

 அவன் வீட்டைவிட்டுப் போவதும் பிடிக்கவில்லை. ஆனாலும் கடந்தகாலப் புண்களும் இக்கால அடிகளும் அவனைத் துரத்திவிட்டன.அவன் இப்பொழுது போகும் இடம் எங்கே? அதுதான் அவன் கடந்தகாலம்.

 திருமணமாகும் முன் அவனுக்கு அறிமுகமாகின்றாள் கிரிஜா. ஏதோ சின்னச் சின்ன வேலை செய்கின்றாள். உடன் பிறந்த ஒருவனும் எங்கேயோ இருக்கின்றான். ஒற்றை மரமாக ஒருத்தி.எப்படியோ காலம் நகர்கின்றது. மரபு வாழ்க்கை அவளுக்கில்லை. பாதையில் வரும் அனுபவங்களை யதார்த்தமாக எடுத்துக் கொண்டு நடந்து கொண்டிருக்கின்றாள்.

நம்பிக்கை அல்லது தேவை காரணமாகச் சில ஆண்களோடு அவளுக்கு உறவு நேர்ந்திருக்கின்றது” இது ஜெயகாந்தன். ஒருத்தியல்ல, ஆயிரக் கணக்கான பெண்களை இது போன்ற நிலையினில் பார்த்திருக்கின்றேன். நந்தகோபாலுக்கும் ஒரு நாள் உறவு ஏற்பட்டது. சிறுகதை தொடர் கதையாயிற்று.வெளியில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் இவள் வீட்டில் சாப்பிட ஆரம்பித்தான்; சொல்லப் போனால் குடும்பமே நடத்தினான். அவள்தான் இவனைத் திருமணம் செய்து கொள்ளக் கட்டாயப் படுத்தினாள். ஆனால் அவனுக்குக் கிடைத்த கசப்பான அனுபவங் களுக்குப் பிறகு இப்பொழுது கிரிஜாவைத் தேடி வந்து விட்டான். அவளிடம் தன் உள்ளக் குமுறலைக் கொட்டுகின்றான். அப்பொழுது கிரிஜா பேசுவதில்தான் ஜெயகாந்தனின் தனித்துவம் தெரிகின்றது. அந்தக் காலத்தில் வேறு யாரும் இப்படி எழுதத் துணிந்ததில்லை.

“பாருங்க, வய்பா வர்ரதற்கு டிரெய்ண்ட் ஹாண்டா கேக்குறாங்க.? நான் டிரைண்ட் ஹாண்ட். அதுதான் என் டிஸ்குவாலிகேஷன் “.

இதைவிட ஒரு சாட்டையடி இருக்க முடியுமா ? ஜெயகாந்தனுக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததால் , அதைக் கொடுப்பவர்கள் உயர்ந்திருக்கின்றார்கள். அடுத்து கிரிஜா கூறுவது ஆண்மகனுக்கு ஒரு பாடம்.

“செருப்புகூடப் புதுசா இருந்தா கடிக்குதுங்கோ !. அதுக்காகப் பழஞ்செருப்பை யாராவது வாங்குவாங்களா?!”

இதைவிடப் படிப்பினையை எளிமையாகக் கூறமுடியுமா? “புதுச்செருப்பு கடிக்கும்” கதையைப் படிப்பவரிடமிருந்து இது வெறும் மிகையான கதை என்று உடனே ஒரு விமர்சனம் வரும்.  

அய்யா, பெரியோர்களே, இது இப்பொழுதும் தொடர்கதை. பத்திரிகையில் வருபவைகளைச் சொல்லவில்லை. இது போன்ற பிரச்சனைகள் என்னிடமே நிறைய வந்திருக்கின்றன. இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். ராஜு கணிணியில் பட்டம் பெற்று டில்லியில் வேலை பார்த்து வந்திருக்கின்றான். அவனுக்குத் திருமணமாகி இதே போன்று அவனுடைய இயல்புக்கு ஒத்துழைப்பு கிடைக்காததால் அவளுக்கு உடல் நோய் என்று சொல்லிப் பிறந்தகம் அனுப்பி விட்டான். அத்துடன் விவாகரத்துக்கும் முனைந்துவிட்டான். தனிமையில் அமெரிக்காவில் வேலை கிடைத்தது. அரட்டை மூலம் அறிமுகமானான். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் கதையைக் கூறினான்.

கொஞ்சம் பழகட்டும் என்று காத்திருந்தேன். நடந்த சம்பவங்களைக் கூச்சப்படாமல் சொல்லச் சொன்னேன். என் முதுமையும் அணுகுமுறையும் அவன் நடந்தவைகளை அப்படியே ஒன்றுவிடாமல் கூறினான். இவனுக்கு அவசரம், அவளுக்கு மிரட்சி. இது மட்டும் காரணம் அன்று.இன்றைய ஊடகத்தாக்கங்களும் சூழலும் இளைஞர்களை கற்பனை உலகில் சஞ்சரிக்க வைத்து நிஜ வாழ்க்கையில் அவர்களைப் புரட்டி எடுக்கின்றன!

இளைஞன் பெண்ணின் விழிகளையும் இதழ்களையும் வருணித்துத் திரும்பத் திரும்பக் கவிதைகளை எழுதிக் குவித்துக் கொண்டிருக்கின்றான். கொஞ்சம் முதிர்ந்தவன், அனுபவப்பட்டவன் காதலென்று காம சூத்திரத்தை அறுவை செய்து கூறு போட்டுக் கொண்டிருக்கின்றான். இளைஞர்களில் நிலைபற்றி சில சம்பவங்களைக் கூற விரும்புகின்றேன்.

இவள் கிழவி, இவளுக்கு எப்படி இக்கால இளைஞர்களைத் தெரியும் என்ற கேள்வி எழும்புமே?! சமுதாயப் பணிக்கு ஓய்வு கிடையாது. அந்தப் பணியில் வயதுகள் எல்லையும் கிடையாது.கருவில் உருவாவதற்கு முன்னே அந்த நிலத்தைப் பண்படுத்தும் முதல் பணி ஆரம்பமாகி விடுகின்றது.

கணிணி கற்க ஆரம்பித்தவுடன் அரட்டையில் கூடிய இளஞர்களை வைத்து ஓர் அமைப்பை
உருவாக்கினேன். மாதந்தோறும் கூடுவோம். கூட்டம் இல்லாத நாட்களிலும் வீடு தேடி வர ஆரம்பித்தார்கள். அவர்களுடன் அவர்கள் பிரச்சனைகளும் என்னிடம் வந்தன.

ஒருவன் கதை. தப்பு, கதையல்ல நிஜம் ஒரு நாள் நள்ளிரவில் என் தொலைபேசி ஒலித்தது. எடுத்தால் மோகன் கோபத்துடன் பெண்களைத் திட்ட ஆரம்பித்தான். (உண்மைப் பெயர்களைச் சொல்ல விரும்பவில்லை) பொறியியல் கல்லூரியில்படிக்கும் பொழுது நான்கு ஆண்டுகளாகக் காதலியாக இருந்தவள் பிரிந்து விட்டாள். இவனுக்கு உடனே வேலை கிடைக்கவில்லை. அமெரிக்காவில் வேலை பார்க்கின்றவன் அவளுக்குப் புருஷனா இருக்கவேண்டும் . அவள் பெற்றோர் அமெரிக்கா மாப்பிள்ளையைக் காட்டவும் மனம் மாறி விட்டாள்.

“வாழ்க்கையில் இது சகஜம். ஸாரி,என் கல்யாணத்திற்கு வா” என்று கூறிப் பத்திரிகையைக் கொடுத்து விட்டுப் போய் விட்டாள்.இவன் குடிக்க ஆரம்பித்துவிட்டான்.  அன்று அவன் பிறந்த நாள். காதலியைத் திட்ட வேண்டும; பெண்ணினைத்தைத் திட்ட வேண்டும். அதனால் என்னக் கூப்பிட்டுத் திட்டுகின்றானாம். “சரி திட்டு” என்றேன். பேசிக் கொண்டிருந்தவன் அழ ஆரம்பித்த்து விட்டான். முடிந்தால் உடனே , வீட்டிற்கு வா என்றேன். விடிந்த பிறகு வருவதாகச் சொன்னான்.

காலையில் அவன் வந்த பொழுதும் போதை தெளியவில்லை. என்னைப் பார்க்கவும் சத்தம் போட்டுக் கதறினான். அவன் புரிந்து கொண்ட காதல்பற்றிப் பேசினான்.  அவன் ஏக்கத்தைப் புலம்பினான். நான் பொறுமையாகக் கேட்டேன். பிறகு அம்மா என்று ஓடிவந்து என் மடியில் தலை வைத்துக் குமுறினான். நான் ஒன்றும் பேசவில்லை. கொஞ்சம் கொஞ்சமாகக் கொதிப்பு அடங்கியது அன்று முதல் தினமும் வர ஆரம்பித்தான். கதையிலும் சினிமாவிலும் வரும் காதல், நிஜ வாழ்க்கை இவைகளைப்பற்றி யதார்த்தமாகப் பேச ஆரம்பித்தோம். அறிவுரைகள் யாருக்கும் பிடிக்காது. மனம்விட்டு எதையும் பேச முடிகின்ற இடத்திற்குப்போகத் தயக்கம் இருக்காது என்று சொல்வதை விட அங்கு செல்ல ஆர்வம் பிறக்கும். அவனுக்கு நம்பிக்கை பிறக்க ஆரம்பித்தது. ஏமாற்றத்தைத் துடைத்து விட முடியாது,
.அவனுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய வேண்டும். அப்பொழுது கூட ஏமாற்றத்தின்
வடு இருக்கும்.

 அவனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தது. குழந்தையாய் மகிழ்ந்து எனக்குத் தெரிவித்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. அழகான மனைவி. புகைப்படம் அனுப்பினான். தொலைபேசியில் கூப்பிட்டான். ’அம்மா’ என்றான் அவனுக்குப் பேச்சு வரவில்லை. “சரிடா கண்ணே, எதுவும் பேச வேண்டாம் சந்தோஷமா இரு என்றேன். இப்பொழுது அவனுக்குக் குழந்தைப் பிறந்திருக்கின்றது. உடனுக்குடன் எனக்கு அவன் செய்தி அனுப்பிவிடுவான்.

எங்கள் சந்திப்புகளால், என்னுடைய யதார்த்த அணுகுமுறைகளால் ஒருவன் செத்துவிடாமல் இன்று மகிழ்ச்சியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றான்.  தேவதாஸ் என்று தன்னை நினைத்துக் கொண்டு காதலுக்காகச் சாவதுத்தான் சரி என்று நினைத்துக் குடித்துக் கொண்டிருந்தான். ஊடகங்களின் தாக்கம் இளைஞர்களை அதிகம் பாதிக்கின்றது. பெரியவர்களும் அந்தக் காலத்தை நினைத்துக் கொண்டு பிள்ளைகளின் மாற்றங்களைப் புரிந்து கொள்லாமல், சரியாக வழி நடத்த முயலாமல் இருப்பதும் ஒரு காரணமாகும். Adolescent psychology ஐப் பொதுப்படையாகப் பேசிவிட முடியாது. ஒவ்வொரு பிரச்சனையையும் தனியாகப் பார்க்க வேண்டும்..உளவியல் என்பது சாதாரணமானதன்று.

இன்னொருவன் பிரச்சனையால் போலீஸ் ஸ்டேஷன்வரை போக வேண்டிய சூழல் வந்தது.
அவனைக் காப்பாற்றியதோடு நானும் சாட்சி சொல்லப் போக வேண்டியதில்லை என்று
சூழலை மாற்றினேன்.. சமுதாயப் பணியில் உயிர் போகும் சூழலும் ஏற்படலாம்.
இந்த சம்பவத்தை அடுத்துக் கூறுகின்றேன்.

 

பகுதி 9

22.01.2010

வாழ்க்கை எப்பொழுதும் யதார்த்தமாக இருந்துவிடுவதில்லை. திடீர்த் திருப்பங்களும், சில நேரங்களில் அதிர்ச்சிகளும் காண நேரிடலாம். பல அனுபவங்கள் பெற்ற என்னையே ஆட்டிவைத்த ஓர் நிகழ்வு. மேலோட்டமாகப் படித்தால் “இந்தம்மா இப்படி வம்பை விலைக்கு வாங்கியிருக்க வேண்டாம்” என்று எண்ணத்தோன்றும். அது தவறில்லை. அதுதான் யதார்த்தம். ஆனால் நான் அச்சப்பட்டு விலகியிருந்தால் சில உயிர்கள் போயிருக்கும். சிலர் சிறைகளுக்குப் போயிருக்கவேண்டும்.

நள்ளிரவு.  அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். திடீரென்று வீட்டின் காலிங் பெல் அடித்தது. நான் வீட்டில் தனியாக இருந்தேன். ஏற்கனவே போலீஸ் துறையில் வேலை பார்க்கின்ற ஒரு நண்பர் கூறியது நினைவிற்கு வந்தது.

“சமூக சேவைன்னு இப்போதும் ஏதாவது செய்துகிட்டிருக்கீங்க. ராத்திரி யார் வந்து உதவின்னு கேட்டு வந்தா கதவைத் திறக்காதீங்க. தெரிஞ்ச பசங்க வந்தாலும் திறக்காதீங்க. சில புகார்கள் வர 010ஆரம்பிச்சிருக்கு. சில பணக்காரப் பசங்க கூடச் செலவுக்கு அதிகமா பணம் வேண்டி, திருட ஆரம்பிச்சிருக்காங்க. தனியா இருக்கறதுனாலே எதையும் செய்யலாம்”. இந்த சம்பவம் நடந்தது .

நான் எழுந்திருந்து போய் விளக்கு போட்டு பார்த்தேன். முன்னால் கம்பிகளுடன் கூடிய ஜன்னல். வந்திருந்தவன் என் அன்புக்குரிய செல்லப் பிள்ளை சிவா. துடிதுடிப்பு அதிகம். அவன் பக்கத்தில் வேறு யாரோ ஒரு பையனும் நின்று கொண்டிருந்தான்.

”ஏண்டா சிவா, வீட்டுக்கு வர்ர நேரமா இது. காம்பவுண்ட் சுவத்தில் ஏறிக் குதிச்சு வந்திருக்கியே. நல்ல வேளை நான் கிழவி. இல்லேனா ஊர் என்ன நினைக்கும். கதவைத் திறக்க மாட்டேன், போய்த் தொலை.”

”அம்மா, கோவிச்சுக்காதீங்க. ரொம்ப ரொம்ப முக்கியமான விஷயம். உங்க கிட்டே என்ன செய்யறதுன்னு கேட்க வந்திருக்கேன். ஒருத்தர் உயிர் ஆபத்துலே இருக்கு. அதான் வந்தேன், திறங்கம்மா.”

அதற்கு மேல் தயக்கம் இல்லை. சிவாவும் என்னைப் போல் ஒரு அசடு. யாருக்காவது கஷ்டம்னா வரிஞ்சு கட்டிக் கொண்டு உதவி செய்வான். கதவைத் திறந்து உள்ளே வரச் சொன்னேன். அவர்கள் உள்ளே வரவும் வாசல் கதவைப் பூட்டி விட்டேன். உட்கார்ந்த உடனே சிவா பேசினான். அவன் பேசப் பேச அதிர்ச்சியில் என்னால் பேச முடியவில்லை. அதன் சுருக்கம் மட்டும் கூறுகின்றேன்.

வந்தவன் பெயர் குமார். அவனும் சிவாவுடன் கல்லூரியில் படித்து வருகின்றான். மூன்றாம் வருடம். அவனுடைய அப்பா பணக்காரர். மதுரையில் இருக்கின்றார். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் தான் குழந்தைகள். மகன்மேல் உயிரையே வைத்திருக்கின்றார். அவனுக்கு ஒரு காதலி. அவள் ஊர் சேலம் பக்கம். (இங்கே ஊர்ப் பெயர்கள் கூட மாற்றி  எழுதியிருக்கின்றேன் ).இருவரும் பல வருடங்களாகக் காதலித்து வந்திருக்கின்றனர். ஒரு முறை இருவரும் திருப்பதிக்குச் சென்றிருக்கின்றனர். இரவு தங்கலில் இணைந்துவிட்டனர். பலன் அந்தப் பெண் கர்ப்பவதியாகி விட்டாள். இப்பொழுது ஏழு மாதங்கள் ஆகிவிட்டன. குமாருக்கு இப்பொழுதுதான் சொல்லி இருக்கின்றாள். ஒரு டாக்டரிடம் போயிருக்கின்றார்கள். ஏழு மாதக் குழந்தையை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. வயிற்றில் அறுவை செய்து எடுக்கக் கூடாது. திருமணமாகாத ஒருத்தியின் வயிற்றில் வடு இருப்பது அந்தப் பெண்னுக்கு நல்லதல்ல. எல்லாம் பேசிய பின் சிகிச்சை செய்யவேண்டுமென்றால் ஒரு காகிதத்தில் இருவரும் கையெழுத்து போட்டுக் கொடுக்க வேண்டும். பெண்ணுக்கு என்ன ஏற்பட்டலும் டாக்டர் மேல்
பொறுப்புச் சுமத்தக் கூடாது.

இதைக் கேட்கவும் இருவரும் பயந்து விட்டனர். ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சைக்கு முன்னர் இது போன்று எழுதி வாங்குவது வழக்கம். எனவே டாகடர் சாதாரணமாகக் கேட்டது இவர்களுக்குப் பயத்தைக் கொடுத்து விட்டது. சிவாவிடம் ஆலோசனை கேட்டிருக்கின்றார்கள். அவனும் சின்னப் பையன். ஆலோசனை கேட்க என்னிடம் கூட்டி வந்து விட்டான். செய்தி சொல்லி வரும் பொழுதே என் ஆத்திரமும் வளர்ந்தது. திட்ட ஆரம்பித்துவிட்டேன்.

 “பாவிப் பயலே, போயும் போயும் கோயில் ஸ்தலங்களுக்குப் போயா தப்பு செய்தீர்கள். எல்லாத்துக்கும் அவசரம் ! ஊரெல்லாம் குடும்பக் கட்டுப்பாடு திட்டப் பிரச்சாரம் நடக்குதே, ஜாக்கிரதையாக இருந்திருக்க வேண்டாமா?” 

“அம்மா, திட்டம் போட்டு செய்யல்லே. சாமி கும்பிடத்தான் போனோம். ராத்திரி ஒரே இடத்தில் தங்கினோம். இதுவரை இப்படி தங்கினதில்லே தப்பு செய்துட்டோம். “இப்படி சொல்லிவிட்டு குமார் அழ ஆரம்பித்துவிட்டான். 

“குமார், அந்தப் பொண்ணு மேலே எனக்கு சந்தேகமா இருக்கு. எந்தப் பெண்ணுக்கும் ஏழு மாதம் ஆகிற வரைக்கும் தான் கர்ப்பமானது தெரியல்லேனு சொல்றது நம்பும் படியா இல்லே. நாளைக்கு அவளயும் கூட்டிக் கிட்டு வா. பேசுவோம். இப்போ நான் ஒண்னும் சொல்ல முடியாது. யோசிக்கணும் “.

அம்மா, எப்படியோ நடந்து போச்சு. அந்தப் பொண்ணுக்கு என்னமாவது ஆனா இவனும் செத்துடுவான். கோவிச்சுக்காதீங்க. என்ன செய்யலாம்னு சொல்லுங்க. செய்யச் சொல்றேன் என்று சிவா அவன் நண்பனுக்காகப் பரிந்து பேசினான்.

மறுநாள் அந்தப் பெண்ணுடன் வரச் சொன்னேன். இப்பிரச்சனையை விட்டு விலக விரும்பவில்லை. அவர்கள் செய்தது சரி , தப்பு என்று சொல்லும் நிலை கடந்துவிட்டது. இரு உயிர்கள் சம்பந்தப்பட்டது. எப்படியும் காப்பாற்றியாக வேண்டும் என்றே நினைத்தேன்.

மறுநாள் காதலி மாலாவுடன் குமாரும் சிவாவும் வந்தனர். ஆண்கள் இருவரையும் போகச் சொல்லிவிட்டு அந்தப் பெண்ணுடன் தனியாகப் பேசினேன்.எப்படி ஒரு பெண் தான் கர்ப்பமாகி இருப்பதை ஏழு மாதம் வரை தெரியாது என்று சொல்ல முடியும் ? நான் வேலை பார்த்த துறையில் கர்ப்பிணிகள் பாதுகாப்புப் பிரிவில் பல ஆண்டுகள் வேலை பார்த்திருக்கின்றேன். மேலும் நான் ஒரு தாய். கேள்விகளின் விபரங்கள் இங்கே தர விரும்பவில்லை. நான் கேள்விகள் கேட்கக் கேட்க அழ ஆரம்பித்துவிட்டாள். கடைசியாக ஒன்று கேட்டேன்.

குமார் பணக்காரவீட்டுப் பையன் என்று தெரிந்து திட்டமிட்டுச் செய்தாயா? இதைக் கேட்கவும் சத்தமாக அழுது கொண்டே வெளியே ஓடினாள். அவளைப் பிடித்துக் கொண்டு குமார் உள்ளே வந்தான். சிவாவும் வந்தான். குமாருக்கு என் மேல் ஆத்திரம்.”அவளிடம் நீங்கள் அப்படி பேசி இருக்கக் கூடாது. உங்கள் உதவி வேண்டாம். அவளுக்கு ஏதாவது ஆனால் நானும் தற்கொலை செய்து கொண்டு செத்துப் போவேன் “என்று கோபமாகச் சொல்லிவிட்டு புறப்பட்டான். “நில்லு. நிலைமையை இன்னும் மோசமாக்காதே. உட்கார். பேசுவோம்” சிவா அவன் நண்பனைச் சமாதானப் படுத்தி உட்காரவைத்தான்.

மாலாவின் அப்பா ஜாதி வெறி பிடித்தவர். வேற்று சாதிப் பையனுக்குப் பெண் கொடுக்கமாட்டார். குமாரின் அப்பா நல்லவர். மகன் விருப்பத்தை அறிந்தால் முதலில் கோபப்பட்டாலும் பின்னால் சமாதானம் ஆகிவிடுவார். ஆனாலும் எதுவும் தீர்மானமாக நினைக்க முடியாது. எனவே இருவரையும் ஏதாவது கோயிலுக்குச் சென்று உடனே திருமணம் செய்து கொள்ளச் சொன்னேன். என்னை வரச் சொன்னதற்கு மறுத்து விட்டேன். நண்பர்களைக் கூட்டிப் போகச் சொன்னேன். கர்ப்பத்தை இப்பொழுது கலைக்க முயன்றால் உயிருக்கு உத்திரவாதம் கிடையாது என்பதை உணர்த்தினேன். இப்பொழுதே கொஞ்சம் வயிறு உப்புசமாக தெரிந்தது. இன்னும் ஒரு மாதம் போனால் மறைக்க முடியாது. குழந்தைப் பிரசவம் பிரச்சனை. அவர்கள் திருமணம் செய்து கொண்டால் அந்தப் பெண்ணை வேறு இடத்தில் வைத்துப் பாதுகாக்க உதவி செய்கின்றேன் என்றேன். ஆனால் அவர்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினேன். குழந்தை பிறந்த பிறகு இரு வீட்டாருக்கும் தெரியப்
படுத்துவதே புத்திசாலித்தனம். திருமணமாகிவிட்டால் போலீஸ் உதவியையும் நாடலாம் என்று சொன்னேன்.

இன்னும் 15 நாட்களில் நான் அமெரிக்கா புறப்பட வேண்டியிருந்தது. எனவே இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் முடித்து , பின்னர் என்னை வந்து பார்க்கச் சொன்னேன். அப்படி செய்தால்தான் நான் புறப்படும் முன் மாலா எங்கே , யாருடன் தங்கலாம் என்பதைச் சொல்வேன் என்றேன். இதைத்தவிர வேறு வழியில்லை. தாமதித்தால் மாலாவின் உயிருக்கும் ஆபத்து, அவர்கள் காதலுக்கும் ஆபத்து என்று கூறிவிட்டேன்.

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் என்ற ஒன்றை யாருமே நினைக்கமாட்டான். குமார் வந்து போன இரண்டாம் நாள் நானும் என் தங்கை சரசாவும் காஞ்சிக்குக் காமாட்சி தரிசனம் செய்யச் சென்றிருந் தோம். சென்னைக்குச் செல்லும் பொழுதெல்லாம் ஒரு முறையாவது என் அம்மா காமாட்சியைப் பார்க்காமல் வர மாட்டேன். அங்கிருந்து திரும்பும் பொழுது குரோம்பேட்டையில் உள்ள என் தங்கை வீட்டிற்குச் சென்றோம். அங்கே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சிவாவும் குமாரும் அங்கே இருந்தனர். குமார் அழுது கொண்டிருந்தான். பைத்தியம் பிடித்தவனைப் போல் இருந்தான். மாலாவின் அப்பா வந்து மகளைக் கூட்டிச் சென்று விட்டார். எங்கு சென்றார்கள் என்பது தெரியவில்லை.. குமாருக்கு உடனே மாலா வேண்டுமாம் அல்லது எலெக்ட்ரிக் ரயிலில் விழுந்து இறந்து விடுவானாம். சிவா அவனைக் கூட்டி வருவதற்குள் மிகவும் கஷ்டப் பட்டிருக்கின்றான். காதல் படுத்தும்பாடு!

எத்தனை அனுபவங்கள் இருந்தும் ஒன்றும் எனக்குக் கை கொடுக்கவில்லை. அப்படியே திகைத்துப் போய்விட்டேன்.


பகுதி 10

24.01.2010

எதிரே அமர்ந்திருந்த சிவாவையும் குமாரையும் திகைப்புடன் பார்த்தது ஒரு நிமிடம்தான். என்ன செய்ய வேண்டும் என்று அனுபவ அறிவு உணர்த்திவிட்டது.சூடான விவாதம் தொடங்கியது -

”குமார், இப்பொழுது என்னிடம் என்ன உதவி எதிர்பார்க்கின்றாய்? தெளிவாகச் சொல்.”

“உங்களுக்கு இருக்கும் செல்வாக்கில் போலீஸ் மூலம் எனக்கு மாலாவை மீட்டுத் தாருங்கள்.”

”போலீசிடம் உனக்கும் மாலாவுக்கும் என்ன உறவென்று கூறுவது?”

”அவள் என் காதலி; அவள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் அப்பா.”

“சட்டப்படி நீ அவளை இன்னும் மணக்கவில்லை. அவள் அப்பாவிற்கு இருக்கும் உரிமைகூட உனக்குக் கிடையாது. அவள் மேஜரான பெண். அவளை நீ கெடுத்து கர்ப்பமாக்கிவிட்டாய் என்று அவள் சொன்னால் உன்னைக் கைது செய்யலாம்.”

“அவள் அப்படி சொல்ல மாட்டாள்.”

”இப்பொழுது அப்பாவுடன் போயிருக்கின்றாளே! சண்டை போட்டு உன்னிடம் வந்திருக்கலாமே?”

“அவள் பயந்து போய் கூடப்போயிருக்கின்றாள்.”

“அதே பயத்தில் அவள் அப்பா சொல்லிக் கொடுத்தபடி பேச மாட்டாளா?”

இப்பொழுது குமாருக்கு அதிர்ச்சி - மாலா பயத்தில் அப்படி கூறலாம்.

“அப்படியானால் மாலா இனிக் கிடைக்கமாட்டாளா?”

”இந்தச் சூழ்நிலையில் போலீஸ் உனக்கு உதவ முடியாது. நீ தகராறு செய்தால் அவள் அப்பா புகார் கொடுப்பார். உன்னைக் கைது செய்யலாம்.”

”அப்போ ரயில்லே விழுந்து சாகறேன்.”

”எதுக்கும் உனக்கு அவசரம். நீ இருக்கற லட்சணத்துக்குப் பொண்டாட்டி, புள்ளே!  காதல்ங்கறது விளையாட்டில்லே. சொல்றதைக் கேளு. மதுரைக்குப் போ. உன் அப்பா கால்லே விழு. முதல்லே உன்னைத் திட்டுவார். அடிச்சாலும் அதிசயமில்லே. ஆனால் உன்னைச் சாக விடமாட்டார்.
உன் நிலைமையைச் சொல்லு. முதல்லே உன் அக்காகிட்டே எல்லாம் சொல்லிடு. மகனைப் பறி கொடுக்க எந்தப் பெத்த மனசும் ஒத்துக்காது. உடனே பஸ்ஸுலே போ.”

அவன் பதற்றம் குறைய ஆரம்பித்தது.

”சரி அப்பா கிட்டே போறேன். அதுக்குள்ளே மாலாவுக்கு ஒண்ணும் ஆகாதே. என் புள்ளையைக் கொன்னுட்டா?”

”நீங்களும் டாக்டர் கிட்டே போனீங்களே எதுக்கு? கொல்லத்தானே. இப்போ மட்டும் பாசம் பொங்குதோ?!. உன் மாலாவுக்கு ஒண்ணும் ஆகாது. உன் அப்பா பணக்காரர். உனக்கு மாலா கிடைப்பாள்.”

”சரி. ஊருக்குப் போறேன்.”

“சிவா, நீ கூடப் போய் அவனை மதுரை பஸ்ஸில் ஏத்திவிடு. பஸ் புறப்படவும் எனக்கு போன் செய்”. என்று சிவாவிடம் கூறிவிட்டு “மதுரைக்குப் போன பின் அங்கிருந்து சிவாவுக்கு போன் செய். அடிக்கடி அங்கே நடக்கறதை அவன் கிட்டே சொல்லு. இப்போ போ “ என்று குமாரையும் அனுப்பி வைத்தேன்.

அப்பாடா என்று படுத்தேன். உறக்கம் வரவில்லை. பிள்ளைகள் பெற்றோர்களுடன் சேர்ந்து விடுகின்றார்கள். இனி அவர்கள் பொறுப்பு.

பொழுது விடிந்தது. குமார் வீடு போய்ச் சேர்ந்துவிட்டான். ஆனால் அத்துடன் கதை முடியவில்லை. எனக்கு மதுரையிலிருந்து போன்கால். பேசியது குமாரின் அக்கா. வீட்டில் பெரிய சண்டை. இப்பொழுது அப்பாவும் அழ ஆரம்பித்துவிட்டார். எப்படியோ மகனுக்கு மாலாவைத் திருமணம் செய்து வைக்க ஒப்புதல் கொடுத்துவிட்டார்.

மாலாவின் வீட்டிற்குத் தொடர்பு கொண்டால் அங்கு மாலா வரவில்லையென்றும், அவள் அப்பாவும் அங்கில்லையென்றும் தகவல்தான் கிடைத்தது. மாலாவின் வயிற்றில் வளர்வது குடும்ப வாரிசு. அதை அழித்திருந்தால் திருமணம் செய்து வைக்க முடியாது என்று குமாரின் அப்பா சொல்லிவிட்டார். அதனால் குமார் அறைக்குள் போய் இருந்து கொண்டு வெளியில் வருவதில்லை. சாப்பிடவில்லை. அவன் அப்பாவும் இன்னொரு அறைக்குள் போய்விட்டார். எனவே அவன் அக்கா கவலையால், இனிமே என்ன செய்யவென்று கேட்டாள்.

மாலாவின் அப்பா ஜாதி வெறி பிடித்தவராக இருக்க வேண்டும். குமார் பணக்கார வீட்டுப் பையன் என்று தெரிந்தும் மகளை மறைத்து வைத்திருக்கின்றார்  என்றால் அவருக்கு ஜாதிதான் பெரிது என்பது நன்றாகத் தெரிகின்றது. நிச்சயம் கர்ப்பம் கலைக்கப்பட்டுவிடும். அப்படி மட்டும் அவர் செய்துவிட்டால் குமாரின் அப்பா திருமணத்திற்கு நிச்சயம் ஒப்புதல் தரமாட்டார். இதனை விளக்கமாக எடுத்துச் சொன்னேன். எப்படி இருந்தாலும் மணம் செய்து கொடுப்பதாக அப்பாவைச் சொல்லச் சொன்னேன். அதில் குமார் கொஞ்சம் சமாதானம் ஆவான். நாளாக ஆகக் கொஞ்சம் கொஞ்சமாக மனம் தேறிவிடுவான். சண்டை வேண்டாம் என்று சொன்னேன். அதன்பின் போன் வரவில்லை. நான் அமெரிக்கா புறப்படும்வரை போன் வரவில்லை. சிவாவை என்னை வழியனுப்ப வர வேண்டாம்என்று சொல்லிவிட்டேன். அவன் எனக்குப் பல மெயில்கள் அனுப்பினாலும் பதில் அனுப்பவில்லை.

ஓராண்டு கழித்துச் சென்னை சென்ற பின் சிவாவை வீட்டிற்குக் கூப்பிட்டேன். சந்தோஷமாக ஓடி வந்தான் அவனாகக் குமாரைப் பற்றி எதுவும்  பேசவில்லை. நானாகக் கேட்ட பின் நடந்தவைகளைக் கூறினான். மாலாவின் கர்ப்பம் கலைக்கப்பட்டு விட்டது. கொஞ்ச நாட்கள் கழித்துக் கல்லூரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டாள். இப்பொழுது கட்டுப்பாடுகளுடன் கல்லூரிப் படிப்பு.

குமாரும் மாலாவும் பேசிக் கொள்வதில்லை. பரீட்சை முடிந்த அன்றே மாலா காணவில்லை. தேடினால் குமாருடன் இருந்தாள். எப்படியோ திருமணம் செய்து கொண்டு அதனை ரகசியமாக வைத்திருந்தனர். படிப்பு முடியவும் சேர்ந்து விட்டனர். மாலாவின் அப்பாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. குமாரின் அப்பா அவர்கள் இருவரையும் ஏற்றுக் கொண்டு விட்டார். இதுதான் வாழ்க்கை.

ஜெயகாந்தன் தொடருக்கும் இந்த நிகழ்வுக்கும் என்ன சம்பந்தம்?  ஜெயகாந்தனுடன் முதல் சந்திப்பைக் கூறப் போகின்றேன்.

முதலில் அவர் பாத்திரம் கங்காவைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம். என்றோ ஒரு நாள் அவளைக் கெடுத்துவிட்டுப் போனவனைத் தேடிபிடித்து, அவன் திருமணமானவன் என்று தெரிந்தும், அவன் தன்னைச் சின்ன வீடாகக் கூட வைத்துக் கொள்ள மாட்டான் என்றும் தெரிந்தும் அவனுடன் பழகினாளே, எதற்கு? அவளை முட்டாள் என்று சொல்லலாமா? காதல் புகழ் பாடுகின்றவர்கள் வேறு விதமாக நினைக்கலாம். கசப்பான நினைப்பை இனிமையாக்கச் சில வினாடிகள் பேச்சிலே பிறக்கும் பாசத்தை விரும்பிய ஒருத்தி என்று கூறலாமா? கானல் நீரைத் தேடி ஓடிய பைத்தியம் என்றும் சொல்லலாமா? கங்காவைப் போன்ற எத்தனை பெண்களை நாம் காண முடியும்?!

கதைக்காகப் படைக்கப்பட்ட பாத்திரமா? இல்லை. எங்கோ அவளைப் போன்ற ஒருத்தி
இருக்கின்றாள். எழுத்தாளனுக்குச் சில நேரங்களில் எங்கோ நடக்கும் நிகழ்வுகள் அவனையும் அறியாமல் படிவது உண்டு. இந்த அனுபவத்தை சிலர் உணர்ந்திருக்கக் கூடும். ஒன்றைப் பார்க்கும் பொழுது, இதனை நாம் எங்கோ பார்த்திருக்கின்றோமே என்று நினைப்பு சிலருக்கு வருவதுண்டு. சில பாத்திரங்கள், சில நிகழ்வுகள் அரிதானவை.

சீதாலட்சுமி என்று ஒரு பெண். ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்புகின்றாள். கோயில், குளம் பார்க்காமல், அழகான இடங்களைத் தேடிப் போகாமல், சிவப்பு விளக்கு ஏரியா, சாராயக் கடை, நைட் கிளப், நள்ளிரவு பிளாட்பாரக் காட்சிகள் காண விரும்புகின்றாள். இப்படி எத்தனை பெண்கள் இருக்கின்றார்கள்?!.

உயர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னும் அமைதியாகப் பொழுதைப் போக்காமல், ஏதாவது பிரச்சனை என்று கண்டு விட்டால் உடன் ஓடுகின்றாளே! குமாரின் பிரச்சனையை அவள் தேடிப் போகவில்லை. தானாக வந்ததுதான். ஆனாலும் பயந்து ஒதுங்கவில்லை. அவள் பிழைக்கத்தெரியாத முட்டாளா? இப்படி ஒன்றா இரண்டா, எத்தனை எத்தனை பிரச்சனைகளுடன் போராடியிருக்கின்றாள். பித்துப் பிடித்தவளா? எப்படியோ அவள் வித்தியாசமானவள்.

ஆம், நான் வித்தியாசமானவள். எனக்குள் ஒரு பேராசை பிறந்தது. என்னிடம் கொட்டிக் கிடக்கும் பல கதைகளைச் சரியாக வடிக்க ஓர் எழுத்தாளனைத் தேடினேன். பலர் என்னைச் சுற்றி இருந்தாலும் ஒரே ஒரு கோல்தான் அதனை ஓவியமாகத் தீட்ட முடியும் என்று நினைத்தேன்.

ஆம், அந்த எழுத்தாளர்தான் ஜெயகாந்தன். நான் அவரைப் பார்க்க விரும்பினேன். அவரைப் பற்றி நிறையத் தெரியும். அவர் கதைகள் எல்லாம் படித்திருக்கின்றேன். ஆனால் அவரைப் பார்த்ததில்லை. முதல் சந்திப்பு நிகழ்ந்த ஆண்டு 1970.என்னுடன் இருந்தவர்கள் பழனியம்மாளும் ராஜியும். உயிரோட்டமான சந்திப்பு.

அடுத்துக் கூறுகின்றேன்.


பகுதி 11

28.01.2010

ஜெயகாந்தனுடன் முதல் சந்திப்பைச் சுவையாக எழுத நினைத்திருந்தேன். ஆனால்
திடீர்ச் சுழ்நிலை அதனைச் சுடச் சுட செய்தியாக்கிவிட்டது. ஒரு சம்பவம் எழுதலாமா என்று தயங்கிக் கொண்டிருந்தேன். கிடைத்த செய்தி என் தயக்கத்தைத் தூக்கி எறியவும் செய்துவிட்டது.

சமீபத்தில் சங்கரநேத்திராலயா ஆய்வு நிறுவனம் நடத்திய இலக்கிய ஆன்மீகச் சொற்பொழிவில் ஜெயகாந்தன் பேசியிருக்கின்றார்.

“பெண்கள் இப்போது சுதந்திரம் பெற்றுவிட்டனர்.இன்று பெண்கள் யாரும் கணவனுக்கு அடிமையில்லை. மாறாக இப்போது பெண்கள் பொருள் , போகம், புகழ் போன்ற பல விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டனர். அதுவும் அவர்கள் சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “.

ஜெயகாந்தனின் மேடைப் பேச்சென்றால் திடீர் வெடி வெடிக்கும். அது எப்பொழுதாவதுதான். இந்தப் பேச்சு காற்றோடு போயிருக்கும். ஆனால் பத்திரிகைகளுக்குச் சுடச் சுடச் செய்தி வேண்டுமே!. அவ்வளவுதான். பேட்டிகள், பேட்டிகள் பேட்டிகள் தலைப்பு “ஜெயகாந்தனுக்கு எதிர்வெடி போடும் பெண்கள், மகளிர் அமைப்பினர் “

ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலாளர் திருமது வாசுகி அம்மையார் புள்ளி விபரங்களுடன் ஜே.கே அவர்களுக்குக் கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார்.. இந்த அமைப்பு எப்பொழுதும் எங்கு ஆய்வுகள் நடத்தினாலும் புள்ளி விபரங்களைச் சேகரித்து வைப்பவர்கள். பெண்கள் முன்னேற்றத்திற்காகச் செயல்படும் ஓர் அமைப்பு.

அடுத்துச் சாடியிருப்பவர் தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி திருமதி ராமாத்தாள் அவர்கள்.அரசு சார்புடையது.

நான் இருப்பது அமெரிக்கா. தமிழகச் செய்திகளை உடனே எனக்கு அனுப்ப இப்பொழுது சில குழந்தைகள் வந்துவிட்டனர். ஜே. கே அவர்களின் பெயரின் வசீகரம். அவரைப்பற்றி எழுத ஆரம்பிக்கவும் சிலர் எனக்கு ரசிகர்கள் ஆகிவிட்டனர்.

இரு வாரத்திற்கு முன்னால் துளஸிதாஸுடன் தொலைபேசியில் பேசினேன். அப்பொழுது
அவர் கூறினார் “மீண்டும் ஜே. கே அவர்களின் புத்தகங்கள் நிறைய படிக்க ஆரம்பித்துவிட்டனர். இளைஞர்களுக்கு மத்தியில் மீண்டும் ஓர் எழுச்சி “ என்றார். அவர் எழுத்துக்கள் சிரஞ்சீவித் தன்மை வாய்ந்தவை. . இப்போழுது ஜே. கே அவர்களின் பேச்சால் எழுந்த பிரச்சனைகளைப் பார்க்கலாம்.

பொதுப்படையாகக் குறித்துப் பேசியதுதான் குழப்பத்திற்குக் காரணம். இது ஒரு trend. ஒரு பிரச்சனையைத் தெரிந்து கொள்ள சில வழிகள் இருக்கின்றன. Study or research. பத்திரிகைகளைப் பார்த்து, செவி வழிச் செய்திகளைக் கேட்டு ஒரு முடிவிற்கு வரக் கூடாது. அதாவது அது முழுமையானதல்ல. சில பிரச்சனைகளையாவது உள் புகுந்து கொஞ்சம் பார்த்துவிட்டுப் பேச வேண்டும். இன்னும் ஆழமாகப் போக நினைத்தால் ஆய்வுகள் செய்தாக வேண்டும். ஆய்வுகள் அறிக்கைகளை வைத்துப் பேசும் பொழுது கூட நம் பகுதியில் நாமும் கொஞ்சமாவது ஆய்வு செய்திடல் வேண்டும்.

ஒரு சின்ன உதாரணம் சொல்லுகின்றேன்.

1967ல் தி. ,மு. க ஆட்சிக்கு வந்ததது. அறிஞர் அண்ணா முதல்வராகவும் அவருக்கு ஆலோசகராக வந்தவர் திரு. முருகேச முதலியார் அவர்கள், அறிஞர் பெருமான். அரசுத் துறைகளைப் பற்றி ஆய்வு செய்து ஓர் அறிக்கை சமர்ப்பித்திருந்தார். அதிலே மகளிர் நலத்துறையை மிகவும் குறைவாக மதிப்பிட்டு அறிக்கை கொடுத்திருந்திருந்தார். அதிலே அவர்கள் பெண் ஊழியர்களை அலங்காரப் பதுமைகள் என்று குறிப்பிட்டு விட்டார். அண்ணா அவர்களும் அந்த அடிப்படையில் தமிழ் நாட்டில் உள்ள மகளிர் நலத்துறையை மூடிவிடலாம் என்று முடிவு எடுத்து பத்திரிகைகளில் அறிவிப்பும் செய்துவிட்டார்.

இந்தப் பி்ரச்சனையில் நான் நேரடியாகச் சம்பந்தப் பட்டவள். அப்பொழுது நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட மகளிர் நல அதிகாரியாகப் பணியாற்றி வந்தேன். செய்தி அறிந்து சென்னைக்குக்கு உடனே ஓடினேன்.

பத்திரிகை உலகம் எனக்குக் கை கொடுத்தது. கதைகள் எழுதி பேரும் புகழும் பெற்றதில்லை. காரணம் நான் தொடர்ந்து எழுதவில்லை. ஆனால் நண்பர்கள் அதிகம் கிடைத்தனர். என் கதைகள் அதிகமாக வெளிவந்த பத்திரிகை சுதேசமித்திரன் வாரப் பத்திரிகையாகும். அப்படியே அதன் உதவி ஆசிரியர் மா. ரா. இளங்கோவன் பழக்கமானார். அவர் குடும்பத்தில் நானும் ஒருத்தியானேன். அவர்களுக்கு இந்த முருகேச முதலியாரை நன்கு தெரியும். புனிதம் குடும்பத்திற்கு மிகவும் பரிச்சயமானவர். இளங்கோவனை அழைத்துக் கொண்டு திரு முருகேச முதலியார் அவர்களைச் சந்திக்கக் கோட்டைக்குப் போனேன்.

எதற்காக நான் வந்திருக்கின்றேன் என்று சொன்னேன். அவர் மிகப் பெரிய அளவில் உயர்மட்ட அதிகாரி. நான் சாதாரணமானவள். இருப்பினும் என்னை அழைத்துச் சென்றவர் அவருக்கு மிகவும் வேண்டியவர். எனவே என்னைப் பேச அனுமதித்தார்.

நான் கேட்ட முதல் கேள்வி  - அவர் கொடுத்த ஆய்வறிக்கையின் புள்ளிவிபரங்கள் எந்த மாநிலத்தில் சேகரிக்கப் பட்டவை ?.

இதற்கு அவர் எனக்குப் பதில் கூற வேண்டிய அவசியமில்லை. இப்படிக் கேட்டதற்கு என் மேல் நடவடிக் கையும் எடுக்கலாம். ஆனாலும் என் குரலின் அழுத்தம் கண்டு உடனே பதில் கொடுத்தார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை என்று.

அப்பொழுதுதான் நான் காந்தி கிராமத்தின் பயிற்சி முறைகளை, கல்லுப்பட்டி பயிற்சி முறைகளை விவரித்தேன். திருச்செங்கோடு ஆசிரமமும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் காந்தீயத்தை விதைத்தி ருந்தது. இங்கெல்லாம் பயின்றவர்கள் அலங்காரப் பதுமைகளாக இருக்க முடியாது என்றேன். உத்தரப் பிரதேச ஆய்வு தமிழகத்திற்குப் பொருந்தாது என்றேன்.தமிழ் நாட்டில்தான் மகளிர், குழந்தைகள் நலத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுச் சிறப்பாக, நாட்டிற்கே முன்னோடியாக இருப்பதை விளக்கினேன். நான் அதை நிரூபிக்கவும் செய்ய முடியும் என்றேன்.

 பாருங்கள் ஆய்வு என்பதில் சிந்திக்க வேண்டியது நிறைய இருக்கின்றன. அப்பொழுது எனக்கு ஓரளவே தெரியும். 1979க்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக அப்பிரிவில் இன்னும் தெளிவு பெற்றேன். ஆனாலும் அப்பொழுது என்னால் ஒரு பெரிய அதிகாரியுடன் பேச முடிந்தது. பின்னர் மகளிர் நலத் துறை மூடினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்ள நேரிடும் என்றேன். ஏன், நானே அதில் முன்னின்று உயிர் மரிப்பேன் என்றேன். பெண்ணியம் மேடையில் முழங்கினால் போதாது. பிரச்சனையைத் தீர்க்கமுறையுடன் செயலில் இறங்க வேண்டும். என் மீது அவர் கோபப் படவில்லை. முதல் காரணம் நான் விவாதத்தில் முறைப்படி விளக்கினேன். அண்ணன் மா.ரா. இளங்கோவன் உடன் இருந்ததால்தான் பேச அனுமதியே கிடைத்தது. அதற்குப் பிறகுதானே என் பேச்சு. என் வாதங்களின் உண்மைகளைப் புரிந்து கொண்டவர் என்னை உட்கார வைத்துவிட்டு, “இதோ வருகின்றேன் “ என்று சொல்லிவிட்டு முதல்வர் அறைக்குச் சென்றார். ”பிறகு வாருங்கள்” என்று அனுப்பவில்லை. சம்பந்தப்பட்ட கோப்பு கையெழுத்திற்காக முதல்வர் மேசையில் இருந்த நேரம்.

ஒரு மணி நேரம் தாமதித்துச் செயல்பட்டிருந்தாலும் கையெழுத்தாகி இருக்கும்.

இருக்கையில் இருக்க முடியவில்லை. என் அண்ணன்தான் என்னைச் சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் ஆலோசகர் வந்தார்.”அம்மா, சரியான நேரத்தில் வந்தீர்கள். உங்கள் துறைக்கு ஆபத்தில்லை. உங்களை அமைதியாகப் போகச் சொன்னார் முதல்வர் “ என்றார். அறிஞர் அண்ணாவைச் சந்தித்த பொழுது, மேடைப்பேச்சால் மயக்கியிருந்த அந்த மாமனிதரைப் பார்க்கும் பொழுது என்னால் பேச முடியவில்லை. அழுதேன். திராவிட வரலாற்றில் அவருக்கு இணையானவர் கிடையாது. என் துறையைக் காப்பாற்றியதற்காகக் கூறவில்லை.

அவரை விடுத்து தமிழக வரலாறு எழுத முடியாது. மனித நேயம் மிக்கவர். அவர் பெயர் வாழ இந்த ஒன்று போதும்.இந்த விஷயங்களை என் இலாக்காவிற்கோ, வேறு யாருக்கும் சொன்னதில்லை. பேருக்காகப் புகழுக்காக இதைச் செய்யவில்லை. இது பற்றி அறிந்தவர்களில் ஒருவர் இன்னும் உயிருடன் இருக்கின்றார். அவர்தான் புனிதவதி இளங்கோவன். என்னை எங்காவது இதைப் பதியும்படி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவர் கணவர் உடன் வரவில்லையென்றால் என்னால் ஒன்றும் செய்திருக்க முடியாது. அவருக்குத் தன் கணவர் செய்த உதவி பதியப்பட வேண்டும் என்பது அவா. எனக்கு அத்துடன் இந்த உண்மை தமிழக அரசு சமூக நலத்துறைக்கும் தமிழக அரசுக்கும் தெரிய வேண்டும். தேவைப்படின் பழைய கோப்பினைப் பார்க்கட்டும். அதன் பயணம் எங்கு நிறுத்தப் பட்டது என்பது தெரியும்.

ஜே.கே இன்று மறைமுகமாக உதவி செய்துவிட்டார். புள்ளி விபரங்கள் பற்றிய விபரம் மட்டுமல்ல, பெண்கள் முன்னேற்றத்திற்குப் பாடுபடுகின்றவர்கள் நம்மை அண்டி வரும் நோயையும் புரிந்து கொண்டு செயலாற்ற வேண்டியிருக்கின்றது.ஜெயகாந்தன் அவர்கள் பேச்சு கிளப்பியிருக்கும் கேள்விகளுக்கு அடுத்துப் பதில்கள் தருகின்றேன்.

எங்கள் முதல் சந்திப்பு நிகழ்ந்த விதமும், பின்னர் அவர் பேசியதும், இன்னொரு சமயத்தில் பெண்களைப் பற்றிக் கூறியதையும் கூறுகின்றேன்.பெண்ணினம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இனியும் நாம் ஏமாறக் கூடாது. நம்மை ஏமாற்றவிடக் கூடாது. நமது தேவைகள் எதுவென்று புரிந்து, நம் சூழ்நிலை மாற்றங்களையும் புரிந்து கொண்டு போராட வேண்டும். நமக்குத் தெரியாமல் நம்மை நோய் பற்றினால் நோயையும் அகற்ற வேண்டும்.” சுதந்திரமான அடிமைகளாக மாறுவது கொடுமை “ என்ற ஜெயகாந்தனின் சொல்லில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு; மனம்விட்டுப் பேசுவோம்.

பகுதி 12

05.02.2010

ஜெயகாந்தனுடன் முதல் சந்திப்பு

என் தோழி பழனியம்மாள்தான் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தது.தாராபுரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பழனியம்மாள். 1967ல் வெற்றி பெற்ற அவர்கள் ஊட்டிக்குக் குடும்பத்துடன் வந்தார்கள். சீசன் நேரம். திடீரென்று வந்ததால் இடம் கிடைக்க வில்லை. அங்கே மாவட்ட மகளிர் நல அதிகாரியாகப் பணி யாற்றிக் கொண்டிருந்தேன். உதவி கேட்டு வந்தவர்களை உடன் தங்கச் சொன்னேன். அன்று முதல் இன்று வரை எங்கள் நட்புத் தொடர்கின்றது.

ஆசிரியையாகப் பணியாற்றியவர் தந்தையின் விருப்பத்தால் அரசியலில் நுழைந்தார். அப்பொழுதும், தான் பணியாற்றிய துறையில் அதிகம் பற்றுக்கொண்டு இருந்ததால் அவர்கள் நண்பர்கள், பார்வையாளர்கள் பெரும்பாலும் அதே துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களுடன் பழகவிட்டு எனக்கு இன்னும் பல புதிய நண்பர்கள் கிடைத்ததை மறுப்பதிற்கில்லை. பழனியம்மாள் மூலம் ராஜியின் நட்புக் கிடைத்தது.

சென்னையில் பல முக்கியமான பத்திரிகை நிருபர்களை அறிமுகப்படுத்தியது ராஜி.
ஜெயகாந்தனைச் சந்தித்துப் பேச வேண்டும் என்ற என் ஆவலைக் கூறவும் ராஜியின் ஆலோசனைபேரில் பழனியம்மாள்தான் ஜெயகாந்தன் அவர்களுடன் பேசியது. அவரும் மறுப்பு எதுவும் கூறாது சந்திக்க ஒப்புக் கொண்டார். பொதுவான ஓர் இடம் ஏற்பாடு செய்தோம் நான், பழனியம்மாள், மற்றும் இன்னொரு நண்பரும் ஜெயகாந்தன் அவர்களை வரவேற்றோம். அந்த நாளை மறக்க முடியாது

1970 வது வருடம். விடுப்பு எடுத்து ராணி மேரிக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஜே.கே யின் பெயர் உச்சத்தில் இருந்த காலம். அவர் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். பல சிந்தனைகளில் என்னை உணர்ந்திருக்கின்றேன். இருந்தும் அவரைச் சந்திக்க 70ல் தான் முடிந்தது.

காலையில் 11 மணிக்கு வந்தார். இரவு 7 மணி வரை பேசி இருக்கின்றோம். அதிகமாகப் பேசியவள் நான் தான்.எப்படி பொறுமையுடன் உட்கார்ந்திருந்தார் என்று ஆரம்பத்தில் வியந்தேன். அவரிடம் கூர்மையான பார்வை மட்டுமன்று. பொறுமையுடன் கேட்கும் திறனும் இருந்தது. அதிலும் ஒருவர் வேதனைகளை, சோதனைகளைச் சொல்லும் பொழுது அவரிடம் ஒரு கனிவைப் பார்க்கலாம். நாம் முட்டாள்தனமாகப் பேசினாலும் நம் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பாரே யல்லாது நம்மைக் குறைத்து மதிப்பிடமாட்டார்.

ஜெயகாந்தனுக்குள் பல ஜெயகாந்தன்கள் உண்டு.

புறப்படும் பொழுது பழனியம்மாள்தான் ஒரு கேள்வி கேட்டார்.

“எங்க சீதா சொன்னது, கதையா எழுதுவீங்களா?

“சீதாலட்சுமி அம்மையாருக்கு என்னிடம் அவைகளைக் கூற வேண்டும் என்ற ஓர் அவா. மனச்சுமையை இப்பொழுது இறக்கிவிட்டார். நான் எழுத மாட்டேன். அவர் புரிந்து கொள்வார்” என்றார் சிரித்துக் கொண்டே
ஆம். அவர் கண்களைப் பார்த்தவுடன் புரிந்து கொண்டேன். அந்தப் புரிதல்தான் எங்கள் நட்பை வளர்த்தது. நான் அவரிடம் என் அனுபவங்கள் அனைத்தும் கொட்டினேன். “எழுதலாமா?” என்று கேட்டிருந்தால் “எழுதக்கூடாது” என்று கூடச் சொல்லியிருக்கலாம். மனித மனம் அப்படி.

He is a good listener.

உரையாடலில் எல்லோரையும் மதிப்பார். மாறுதலான கருத்துக்கள் வரும் பொழுது மறுப்புத் தெரிவிக்கத் தயங்கியதில்லை. அவர் கூறும் கருத்தைப் பிறர் ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தமாட்டார். அதே நேரத்தில் தம் கருத்தில் உறுதியாக நிற்பார். பல முறை அவர் பலருடன் கருத்தாடலில் அவர் நிலையை நேரில் பார்த்த அனுப்வத்தில் கூறுகின் றேன். தனிப்பட்ட ஒருவரைப்பற்றிக் கருத்து கேட்டால் சொல்ல மாட்டார். இதுவும் என் அனுபவத்தில் கண்டது.

ஒரு நிகழ்வைக் கூறுகின்றேன் -
நிகழ்வைக் கூறும் முன்னர் ஒன்றைத் தெரிவிக்க விரும்புகின்றேன். ஜே.கே அவர்களின் பேச்சு எழுப்பிய பிரச்சனைக்கு நிச்சயம் விளக்கங்கள் தருவேன். ஏனென்றால் அப்பிரச்சனையில் என் அனுபவங்களும் ஆய்வுகளும் அதிகம். அதற்கு முன்னுரையாக இந்த நிகழ்வு இருக்கும்.

என் தோழிகளில் ஒருத்தி. அவள் கேரளத்து அழகி. செதுக்கிய சிலையைப் போன்ற மேனி. சுருண்ட , நீண்ட கூந்தல். அழகுக்கு அதிகம் அழகு செய்து கொள்வாள். அழகி என்றே அழைப்போம். (அவள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை) அவள்ஒரு சமூக சேவகி. கவுரவத்திற்காக இந்த சேவகி என்ற பட்டம் சுமக்கவில்லை.

குப்பத்தில் அவள் காட்டும் பரிவினைக் கண்டவள் நான். ஏழைகளுக்குக் கஷ்டம் வரும் பொழுது அவர்களுக் காகப் பாடுபடுகின்றவள். மூக்கை மூடிக் கொண்டு, முகத்தைச் சுளித்துக் கொண்டு குப்பத்தில் நடக்க மாட்டாள். போகும் பாதையில் ஒரு குழந்தை கீழே விழுந்தால் உடனே அந்தக் குழந்தையைத் தூக்கி அணைத்துக் கொண்டு மருத்துவரிடம் எடுத்துச் செல்வாள். அந்தக் குழந்தை மூக்கு ஒழுகுகின்றதே, சிரங்கு இருக்கின்றதே என்று அவள் எண்ண மாட்டாள்.

இவற்றை நான் சொல்வதற்குக் காரணம், ஒரு சிலர் சேவைகள் செய்கின்றோம் என்று குப்பத்திற்கு வந்துவிட்டு நடந்து கொண்ட முறைகளையும்
பார்த்திருக்கின்றேன். இவ்வளவு சேவைகள் செய்கின்றவளை யாரும் புகழவில்லை. பதிலாக வம்புகள் அவளைச் சுற்றிவரும். அதைப்பற்றிக் கூட அவளுக்கு வருத்தம் கிடையாது. அவளைப் பற்றி மற்ற ஆண்களிடம் நல்ல அபிப்பிராயம் இல்லை.அவர்கள் மோசமாகப் பேசுவதுதான் அவளுக்கு மனத் துன்பத்தைக் கொடுத்தது. அவர்கள் அணுகுமுறையும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

அவளிடம் இயற்கையாக இருந்த அழகுடன் அவள் செய்து கொள்ளும் மேக்கப் மற்றவர்களின் கண்களை உறுத்தியது. இது அவள் இயல்பு. இதுவே அவளின் குறை. பல முறை எடுத்துச் சொன்னேன். அதை அவள் ஏற்கவில்லை . அவள் மலையாளத்துக்காரியாக இருந்தாலும் தமிழ் இதழ்களையும் படிப்பாள். அவளுக்கும் பிடித்தமான எழுத்தாளர் ஜெயகாந்தன். அவள் அவரைப் பார்க்க விரும்பினாள். அநேகமாக என் நண்பர்கள் எல்லோரையும் அவள் பார்த்திருக்கின்றாள். என்னுடன் அதிகமாக உடன்வருபவள் அவள்தான். அவள் எங்கும் வேலை பார்க்கவில்லை.
ஏற்கனவே ஜெயகாந்தனிடம் இவளைப் பற்றிப் பேசியிருக்கின்றேன். அவளது மனக்குறையைப் பற்றியும் பேசி இருக்கின்றேன்.

அவளை ஒரு நாள் ஆழ்வார்பேட்டை இடத்திற்கு அழைத்துச் சென்றேன். வழக்கம்போல் அன்றும் சிலர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இவர் குட்டைச் சுவரருகில் உட்கார்ந்திருந்தார் . மாடிப்படியேறி உள்ளே நுழையவும் அவரும் எங்களைப் பார்த்தார். அங்கு அமர்ந்திருந்த மற்ற வர்களும் பார்த்தார்கள். அவர்களுக்கு என்னைத் தெரியும். எனவே சின்னப் புன்னைகை. ஆனால் அவர்கள் பார்வை என் தோழியின் மேல் படவும் முதலில் வியப்பு, பின்னர் ஒருவருக் கொருவர் பார்த்துக்கொண்ட விதம் சரியாக இல்லை.

ஜே.கே. அவர்கள் எங்களை அறைக்குள் அழைத்துச் சென்றார். அறிமுகப்படலம் முடிந்த பின் அவள் சமூகப் பணிகள் பற்றி விசாரித்தார். எவ்வளவு நேரம்தான் அதையே பேச முடியும். அவளோ அவர் கதைகளைப் பற்றியோ, பொது விஷயங்களைப் பற்றியோ பேசாமல் உட்கார்ந்திருந்தாள். மவுனத்தைக் கலைக்க நான் பேச  ஆரம்பித்தேன். எனக்கே அந்த நிமிடங்கள் பிடிக்கவில்லை. ஜே. கே அவர்கள் சாதாரணமாக உட்கர்ந்திருந்தார். சீவனற்ற பொழுது.

புறப்பட்டு விட்டேன். அவர் அவளைப் பற்றி அவளிடம் எதுவும் பேசவில்லை. அடுத்தவர்க்கு அறிவுரைகள் கூறுவது அவருக்குப் பிடிக்காது. ஆனாலும் பிரச்சனைகளைக் கூறிக் கேட்டுக் கொண்ட பிறகும் கூட ஒரு பெண்ணின் சுதந்திர உணர்வில் அவர் தலையிட விரும்ப வில்லை. வெளியில் வந்த தோழி முணுமுணுத்துக் கொண்டே வந்தாள்.

அந்த வாரமே மீண்டும் அவரைச் சந்திக்கப் போனேன். நான் போனால் பொதுவாக நானும் சுவருக்குப் பக்கத்தில் நாற்காலி போட்டுக் கொண்டு அவரிடம் பேசுவேன். அல்லது அங்கிருப்பவர்களிடம் பேசுவேன். எப்பொழுதாவது சில விஷயங்கள் அவரிடம் தனித்துக் கூற விரும்பினால் அறைக்குள் போய் உட்கார்ந்து பேசுவோம். அன்று நான் எதுவும் கூறும் முன்னர் அறைக்குள் போய் உட்கார்ந்தார். நான் என்ன பேச வந்திருக்கின்றேன் என்பதை அவர் உணர்வார்.

என் தோழியிடம் அவர் சரியாகப் பேசவில்லை, புத்திமதி கூறவில்லை என்று சண்டை போட்டேன். அவரோ சிரித்துக் கொண்டிருந்தார். என் தோழியை அவர் விமர்சிக்கவே இல்லை. அது அவருக்குப் பிடிக்காது. ஆனாலும் நான் கேள்விகள் கேட்டுக் கொண்டே இருந்தேன்.

என்னிடம் அவர் திடீரென்று ஒரு கேள்வி கேட்டார்; அதிர்ந்து போனேன்.

“சீதாலட்சுமி, என்றாவது உங்கள் தோற்றத்தைப் பற்றி நினைத்துப் பார்ப்பதுண்டா?“

என் கேள்விகளுக்கு கேள்விதான் விடையா ? விடை தெரியவில்லை.

மேலே எதுவும் பேசாமல் வந்துவிட்டேன். ஆனால் ஒரு வாரத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் விடைகள் கிடைத்தன.


 பகுதி 13

07.02.2010

என் நெருங்கிய உறவினர் ஒருவருடன் நானும் என் தோழியும் பேசிக்கொண்டிருந்தோம். அப்பொழுது திடீரென்று என் தோழி அவரிடம் ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டாள். எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்த கேள்வி. அவள் கேள்வி கேட்டவர் நான் பெரிதும் மதிக்கும் ஒருவர். அவரோ சிரித்துக் கொண்டே என்னைப் பார்த்தார். அவர்களிடையே நடந்த உரையாடலை முடிந்த மட்டும் நினைவில் இருப்பதைப் பதிய விரும்புகின்றேன். அதன் வலிமையை அப்பொழுதுதான் புரிந்து கொள்ள முடியும்.

” சீதா என்னைவிட அதிகமாகப் பழகுகின்றாள். அவளை எல்லோரும் மதிக்கின்றனர். அவளைப்போல் நானும் ஆத்மார்த்தமாக சமூகப் பணி செய்கின்றேன். என்னிடம் ஏன் தவறாக அணுகுகின்றார்கள் ? ”

இந்தக் கேள்வியைக் கேட்டவுடன் சத்தம் போட்டே சிரித்துவிட்டார்.

”அவளைப் பாருங்கள். அவள் புடவையும், ரவிக்கையும் !? கொஞ்சமாவது பொருத்தமாக இருக்கா ? ஒழுங்கா டிரஸ் பண்ணக்கூடத் தெரியவில்லை... ”

அவர் முடிப்பதற்கு முன் என் தோழி பேசினாள்.

”அவளுக்கு எத்தனையோ முறை சொல்லிக் கொடுத்தேன். அவள் மாறவே இல்லை .”

”அதுதான் இயல்பு. உங்கள் இருவருக்கும் ஓர் இயல்பு. உங்களுக்கு அலங்காரம் பிடிக்கும். அவளுக்குத் தன்னைப்பற்றியே சிந்தனையில்லாமல் ஊரைப் பற்றித்தான் நினைப்பு. அவள் இயல்பு அவள் செய்யும் வேலைக்குப் பொருந்திவிட்டது. ”

”அப்படின்னா, பெண்ணுக்கு சுவாதந்திரியம் கிடையாதா? ”   (அவள் கேரளத்துப் பெண்)

”உங்களை யார் கட்டாயப் படுத்துகிறார்கள்? உங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. அலங்காரமும் அழகும் முதலில் மனிதனை ஈர்ப்பதை மறுக்கவில்லை. ஆனால் அவன் மனத்தில் தங்குவது அதுவன்று.
நீங்கள் ஒரு பணி தேர்ந்தெடுத்துக் கொண்டீர்கள். உங்களை குப்பத்தில் வேலை பார்க்கவோ, அவர்களுக்காக நீங்கள் நிதி திரட்டவோ உங்களை யாரும் கட்டாயப் படுத்தவில்லை. சுதந்திரமாக நீங்கள் எடுத்த முடிவு. அதற்கேற்ப ஆடை, அலங்காரங்கள் இருக்க வேண்டும்; செய்யும் பணிக்குப் பொருந்தும் தோற்றம் அமைய வேண்டும்.”

”ஆண்களுக்காக நாங்கள் எங்களை மாற்றிக் கொள்ள வேண்டுமா ? ”

”இந்தக் கேள்வி சரியில்லையம்மா? ஆணாக இருந்தாலும் அதுதான்.

” ராஜா வேஷம்போடுகின்றவன் கோவணத்துடன் சிம்மாசனத்தில் உட்கார்ந்தால் சிரிக்க மாட்டார்களா? ஆணோ, பெண்ணோ யாராயினும் அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்பத் தோற்றத்தையும், பழகும் முறை களையும் வைத்துக் கொள்ள வேண்டும். தோற்றத்தை மாற்றிக் கொள்ள முடியாதவர்கள் விமர்சனம்பற்றிக் கவலைப் படக்கூடாது. சமரசம் செய்து கொள்ள வேண்டியது நீங்கள் தான் ”

”அப்படி என்ன மோசமாக அலங்காரம் செய்து கொள்கின்றேன் ? ”

”மோசமில்லை, ஆனால் பொருந்தவில்லை. விருந்துக்கும் விழாவிற்கும் செய்து கொள்ள வேண்டியவைகளை ஏழைகளுக்காக மற்றவர்களைச் சந்திக்கப் போகும்போது செய்தல் கூடாது.”

”அப்போ வேஷம் போடணுமா ?”

” வேஷம் இல்லை. உதாரணத்திற்கு நீங்கள் லிப்ஸ்டிக் போடாமல் வெளி வருவதில்லை. வடநாட்டில் சகஜமாகப் போடுவார்கள் ஆனால் தென்னகத்தில் கிடையாது. அதிலும் தமிழகத்தில் கிடையாது. முகத்திலும் மேக்கப் பவுடரும் அதிகம். நேராக மேடைக்கு நடிக்கச் செல்லுகின்றவர்கள் போல் இருக்கின்றீர்கள். அதனால் சிரிக்கிறார்கள். ”

என் தோழியின் முகம் வாடியது

” தவறாக நினைக்க வேண்டாம். மற்றவரை மயக்கி நிதி வசூல் செய்வதாக அவர்கள் நினைக்க வழி கொடுத்துவிட்டீர்கள். அத்துடன் அலங்காரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்பவரைப் பார்த்தால் ஆண் சபலத்துடன் முயற்சி செய்யும் எண்ணமும் தோன்றுவது இயல்பு. ”

” ஆண்கள் சின்ன புத்திக்காக என்னை மாத்திக்கணுமா? “

”நீங்க தானே வருத்தப்படுறீங்க ? அவர்கள் என்ன பேசினாலும் வருத்தப் படாதாதீங்க. தப்பா அணுகினா அடிங்க. மதிப்புக் கொடுக்க ணும்னு மட்டும் நினைக்காதீங்க. ‘ஊரோடு ஒத்து வாழ்”னு ஒரு பழமொழி உண்டு. எங்கே வாழ்கின்றோமோ அந்த இடத்துக்கு ஏற்றாற்போல நம்மைக் கொஞ்சம் மாற்றிக் கொண்டால் பிரச்சனை இல்லை.”

அவள் மவுனமாகத் தலையாட்டினாள்.
”சீதா ஊருக்காகத் தன்னை மாற்றிக் கொண்டாள் என்று சொல்ல வில்லை. அவ இயல்பே அதுதான். அவள் வேலைக்கும் அது பொருந்திப்போச்சு .நீங்க இவ்வளவு சேவை செய்தும் உங்க தோற்றம் தான் அதுக்குத் திரை போட்டிருக்கு. கொஞ்சம் மாற்றிக் கொண்டால் உங்களுக்குப் பிரச்சனைகள் வராது. முடிவு எடுக்கும் சுதந்திரம் உங்களுடையதுதான்.”

அன்றைய சந்திப்புக்குப் பிறகு என் தோழியும் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தாள். காந்தி கிராமத்தில் டாக்டர் சவுந்திரம்மா கூறியது நினைவிற்கு வந்தது - “நீங்கள் செய்யப் போவது சமுதாயப் பணி. தோற்றத்தில் எளிமை, பேசிலே கனிவு இரண்டும் இருக்க வேண்டும்”

என்னிடம் இயல்பாக எளிமை இருக்கலாம். ஆனால் அதுவும் சில நேரங்களில் பாதிப்புத் தந்தது. நான் பணி செய்த அலுவலகங்களில் என்னைக் குறை கூறுவார்கள் .

“அம்மா, நீங்க துணை இயக்குனர். மாநில அளவு பதவி. கொஞ்சம் டீஸென்டாக டிரஸ் செய்யக் கூடாதா? ”
அவர்கள் கூற்றும் சரி; என் உறவினர் பேசிய அனைத்தும் சரி.

எனக்கும்தான் படிப்பினை. ஆனால் என்னால் என்னை மாற்றிக் கொள்ளவே முடியவில்லை. இதில் என் தோழி என்னை விஞ்சி விட்டாள். அவளால் தன்னை மாற்றிக் கொள்ள முடிந்தது .

ஜெயகாந்தன் நேரடியாக எதுவும் சொல்லவில்லை. என்னை ஒரு கேள்வி கேட்டு, பதிலைச் சிந்திக்க வைத்துவிட்டார்.சில நேரங்களில் அது அவர் இயல்பு. அவர் சொல்லிய “சுதந்திர அடிமைகள் “என்னைச் சிந்திக்க வைத்தது. அவர் கூறியதாகச் சொல்லப்பட்ட சில வரிகளை வைத்து அபிப்பிராயம் கூற நான் விரும்பவில்லை. ஆனாலும் மகளிர் அமைப்புகளும் அவர்கள் கருத்துக்களை முன் வைத்திருப்பதால் நானும் சிந்தித்தாக வேண்டும். இது என் கடமை.

ஓர் இளைஞனிடம் கருத்துக் கேட்டேன். அவன் சொன்னது -“மாற்றங்கள் முன்னால் மெதுவாக வந்தன. இப்பொழுது வேகம் அதிகரித்திருக்கிறது. ”  அதிலும் பெண்களிடம் மாற்றங்கள் சுனாமி போல் வேகமாக வந்து கொண்டிருக்கின்றன. சோடா புட்டியை  உதாரணம் காட்டலாம்.

நிதானமாகத் திறந்தால் சரி அல்லது வேகமாகத் திறந்தால் சோடா முகத்தை வந்து தாக்கும். வேகமாய் வரும் மாற்றங்களில் மனம் மயங்கலாம். அப்பொழுது சுயமாய்ச் சிந்திக்கும் திறனும் குறையலாம். முன்பு ஆதிக்கத்திற்குள் கட்டுப்பட்டிருந்தவர்கள், இப்பொழுது சுதந்திரப் போக்கில் கட்டுண்டு விட்டதைத்தான் சுதந்திரத்திற்கு அடிமை என்று கூறியிருக்க வேண்டும்.

“Outburst statement because of frustration “ - இதைச் சொன்னவன் அமெரிக்காவில் வாழும் பையன். வேறு யாருமில்லை; என் பேரன்.

ஒரு கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் தெருவில் குடித்துவிட்டுச் சென்றால், அவ்வூர்ப் பெரியவர்கள் அதைக் காணும் பொழுது ஊரே கெட்டுவிட்டது என்பார்கள். அதனால் ஊர் முழுவதும் குடித்துக் கொண்டு அலைகின்றார்கள் என்று அர்த்தமல்ல. ஜெயகாந்தன் அவர்களுக்கும் ஆதங்கம். கீழ் நிலையில் வாழும் பெண்களைக் கூட அனுதாபத்துடனும் அக்கறையுடனும் பார்ப்பவர். எனவே அவர் காணும் மாற்றங்களில் ஏற்பட்ட வெளிப்பாடாக இருக்கலாம். அதனால்தான் சுதந்திர அடிமைகள் என்று முடித்திருக்கின்றார். அவருக்குள் பாரதியும் உண்டு.

எல்லோராலும் இப்படி இணைத்துச் சிந்திக்க முடியுமா?
மகளிர் அமைப்புகள் கண்டனக் குரல் எழுப்பியதைத் தவறு என்றும் கூற முடியாது. ஒட்டுமொத்த விமர்சனம் அவர்களைக் கொந்தளிக்க வைத்திருக் கின்றது. அவர்கள் கடமையை அவர்கள் செய்தார்கள்.

சமுதாயத்தில் உருண்டு புரண்டவள் நான். ஓய்வு எடுத்து முடங்கி இருக்கும் என்னையும் உசுப்பி விட்டிருக்கின்றது. முடிந்த அளவு ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்க ஆரம்பித்துவிட்டேன். ஒரு நாளில் முடிக்கும் பணியன்று. ஆனால் ஏதோ ஒரு பாதைக்கு வித்திடலாம். அதனை அலசிப் பார்க்க இது ஏற்ற களமன்று. தனி மேடையில் அந்த ஆவர்த்தனம் வைத்துக் கொள்ளலாம்.

இப்பொழுது ஜெயகாந்தனுடன் வெளியூர் பயணம் செல்வோம்.

பகுதி 14


“சீதாலட்சுமி, என்னைப்பற்றி எழுதப் போகின்றீர்களா?” என்னைக் கேள்வி கேட்பது போன்ற பார்வை. அதற்கு ஒரு தனி அர்த்தம் உண்டு. என்னைப்பற்றி, என் அனுபவங்களைப் பற்றி எழுத நான் தேர்ந்தெடுத்த
எழுத்தாளர்தான் ஜெயகாந்தன். எங்கள் முதல் சந்திப்புக்குக் காரணம் அதுதான். என் தோழிகள் அமைத்துக் கொடுத்த சந்திப்பு. அவர்கள் வேண்டு கோளுக்கு இணங்க எங்களைப் பார்க்க வந்தார். .அன்று என்னைப் பேச விட்டு அவர் மவுனமாக இருந்தார். என் தோழிகள்தான் இடையில் பேசுவார்கள். ஒன்றிரண்டு வார்த் தைகளை மட்டும் உதிர்த் தார்.(எழுதத்தான் தெரியும் போல் இருக்கின்றது. சரியான உம்மணாம் மூஞ்சி என்று நினைத்துக் கொண்டேன்). நான் எளிதில் உணர்ச்சி வசப் பட்டு விடுவேன். என் குறைகளில் அதுவும் ஒன்று. சமுதாயத்தில் மீது இருந்த கோபத்தில் உரத்துப் பேசிய கணங்களும் உண்டு. அவரோ பொறுமை யாகக் கேட்டுக் கொண்டிருந்தார்

He is a good listener

அவர் எழுத்தின் வலிமைக்கு அதுவும் ஒரு காரணம். அவர் புறப்படும் பொழுது என் தோழி பழனியம்மாள் தான் ஒன்றைக் கேட்டார்கள் .

“சீதா சொன்னவைகளை எழுதுவீர்களா?”


“என்னிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருக்கின்றார்கள். எல்லாம் கொட்டிவிட்டார்கள். இவர்க ளுக்கு ஒரு வடிகால் தேவை. அவர்கள் மனம் இப்பொழுது சமாதானம் ஆகியிருக்கும். இவர்களைப் பற்றி எழுதமாட்டேன்.சீதாலட்சுமியால் என்னைப் புரிந்து கொள்ள முடியும்.”


அவர் பார்வையை என் பார்வை சந்தித்த பொழுது அவர் கூற்றின் உண்மையை நான் உணர முடிந்தது. ஆம், என்னைப்பற்றி யாரும் எழுத வேண்டாம் என்று நினைத்தேன். ஒரு ஆண்மகனிடம் புலம்பி என்னைக் கோழையாக்கிக் கொண்ட அவமானத் துடிப்பு சிறியதாக உணர்ந்தேன். மனக்குரங்கு குதிப்பதை அடக்கினேன். அதே நேரத்தில் உளவியல் தெரிந்த ஒருவரிடம் பேசியதில் ஒரு திருப்தியும் தோன்றியது. எனக்கு ஒரு நண்பன் கிடைத்துவிட்டான் என்று மனம் குதியாட்டம் போட்டது. எங்கள் நட்பு இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. எங்கள் சந்திப்புகளில் நான் வெளிப்படுத்திய செய்திகள் எத்தனை எத்தனை!. ஆனால் அவர் எழுத்தில் என் செய்திகளின் சாயல் கூட வந்ததில்லை. சொன்ன வாக்கின்படி நடக்கின்றார்

He is a gentleman of words

அவரைப்பற்றி, அவர் எழுத்துக்களைப் பற்றி பலரும் எழுதிவிட்டார்கள். நம்மில் ஒருவராக அவரைப்பற்றி எழுத விரும்புகின்றேன். அவரை நான் கண்ட கோணங்களில் காட்ட விரும்புகின்றேன். ஒவ்வொருவருக் கும் அவரைப்பற்றிய கருத்து இருக்கும். அது அவர்கள் சுதந்திரம். நான் எழுதுபவைகள் அவருடன் பழகிய பொழுது நான் உணர்ந்தவை. எல்லா வற்றையும் எழுதினால் நீண்ட தொடராகிவிடும். . சில காட்சிக ளாவது பார்க்கலாம். அப்படி என்னைப்பற்றி எழுத நான் என்ன தனித் தகுதி படைத்தவளா? அவர் பாத்திரங்கள் சாதாரணமானவர்கள். ஆனால் ஒருவருக்கு ஒன்று, அல்லது சில பிரச்சனைகள் இருக்கும். ஆனால் பிரச்சனைக் குவியலில் வாழ்ந்த ஒருத்தி. சமுதாயத்துடன் மோதிய ஒரு போராளி.! உருண்டு புரண்டு, மீண்டும் எழுந்து நிமிர்ந்து நின்றவள் நான். எழுத்தாளர் டாக்டர் லட்சுமி அவர்களும் என்னிடம் ஒரு விருப்பம் தெரிவித்தார்கள். “சீதாலட்சுமி, ஒருவாரம் நாம் இருவரும் மகாபலிபுரம் போய்த் தங்குவோம். உங்கள் அனுபவங்கள் எல்லாம் கூறுங்கள் நான் எழுத விரும்புகின்றேன். ‘


அவர்கள் மென்மையானவர்கள் . ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பிய பின், பத்திரிகைகளைப் படித்து விட்டு அதிர்ந்தார். மாற்றங்களை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. உலகம் யாரையும் பொருட் படுத்தாது மாற்றங்களில் உருண்டு ஓடிக் கொண்டிருக்கும்.


“உங்கள் எழுத்துக்கு நான் பொருந்தமாட்டேன். நான் அடக்கமில்லாத ஒரு பெண். பிரச்சனைகளைக் கூட முரட்டுத்தனமாகவே சந்திக்கின்றவள். ஒரு காலத்தில் என்னைப்பற்றி ஜெயகாந்தன் எழுதவேண்டு மென்று விரும்பினேன். பின்னால் யாரும் எழுதுவதை நான் விரும்பவில்லை. என் ஓட்டம் நின்று களைத்துப் போய் உட்காரும் பொழுது நானே எழுதுவேன்’


ஜெயகாந்தன் எழுத மறுத்த கதையின் நாயகி நான். அவளே பேச வந்துவிட்டாள். கதைப் பாத்திரமும் கதாசிரியனும் சந்தித்துப் பேசுவது கதையில் கண்டிருக்கலாம். இப்பொழுது வாசகர்களும் பார்க்கப் போகி் றார்கள். விசித்திரமான, வேடிக்கையான சந்திப்பு. இனி கற்பனைக் குதிரைகளுக்கு கிராக்கி வந்துவிடும். விமர்சனங்கள் பறக்கலாம். சுவையான பயணம் மட்டுமல்ல சூடான விருந்தும் உண்டு. அவரிடம் செய்திகளைக் கூறும் பொழுது சில கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லில் பதில் இருக்கும். சில கேள்வி களுக்கு நீண்ட விளக்கம் கிடைக்கும். ஆனால் பல கேள்விகளுக்குப் பதில்களாகக் கிடைத்தது ஒன்று சிரிப்பு அல்லது மவுனம் சென்னை மெரீனா கடற்கரை சென்றால் வித விதமான , சுவாரஸ் யமான காட்சிகள். அங்கே டொம்மிக் குப்பம், நொச்சிக் குப்பம் இருக்கின்றதே! போயிருக்கின்றீர்களா? அங்கே ஏதாவது ஒரு வீட்டுக்குள் நுழைந்து பார்த்திருக்கின்றீர்களா? ஒரு வீட்டில் அரிய காட்சியொன்றை நான் கண்டேன். தாயென்றால் பாலூட்டி சீராடும் அம்மாவை நமக்குத் தெரியும். நான் போன பொழுது வீட்டுக் கதவு பூட்டப் படாமல் சாத்தி இருந்தது. பெயர் சொல்லிக் கூப்பிட் டேன். யாரும் வரவில்லை. மெதுவாகக் கதவைத் திறந்தேன். ஒரு குழந்தை தூளியில் தூங்கிக் கொண்டி ருந்தது. இது ஒரு அதிசயமா என்று கேலியாகப் பார்க்கின்றீர்களா? கொஞ்சம் பொறுங்கள்.பக்கத்து வீட்டுக்காரி வந்தாள்

”எங்கே வள்ளி ?”

”அவள் வீட்டு வேலை செய்யப் போய்ருக்கா. வர நேரமாகும் குழந்தை எழுந்தா யார் பாத்துப்பாங்க ? அது எழுந்திருக்காதும்மா. சாராயம் கொடுத்துத் தூங்க வச்சுட்டுப்போவா.”

பாலூட்டும் தாய் சாராயம் கொடுத்துத் தூங்க வைத்திருக்கின்றாள். இந்தக் கொடுமையை நான் பார்த்த பொழுது துடித்தேன் .


”என்னம்மா செய்றது? பச்சப்புள்ளையை வேலை செய்ற வீட்டுக்குக் கூட்டிட்டுப் போக முடியாது. புருசனும் குடிகாரன். இவதான் சம்பாதிக்கறா. ஏதோ அரை வயத்துக் கஞ்சியாவது கிடைக்குது.”


அரசாங்கத்தை, அல்லது ஆளும் கட்சியைத் திட்டத்தோன்றுகின்றதா? நம் நாட்டு வளர்ச்சியை வரை கோடு போட்டு பார்க்கக் கூடாது. முக்கோணம் போடுங்கள். அதான், குடும்பக் கட்டுப்பாட்டுக்குப் போடு வோமே. இந்த முக்கோணம் மூன்று பக்கமும் ஒரே அளவா போடக் கூடாது. அடிப்பாகம் மிக மிகப்பெரிது ஆம், பொருளாதாரத்தில் அடிமட்டத்தில் இருப்பவர்கள் அதிகம். மத்தியதரக் குடும்பம் ரெண்டுங் கெட்டான்.அரசாங்கத்திடம் கற்பக விருட்சம் கிடையாது. வரிப்பணம் அதிகரிக்க வேண்டும். மேலும் சுமை. அர்த்தம் கெட்டு நாம் நிறையப் பேசுகின்றோம். என்னளவில் செய்ய முடிந்ததைச் செய்தேன். முழுப்பிரச்சனையைத் தீர்க்கும் வலிமை எனக்குக் கிடையாது. கோபம் மட்டும் வந்தது.


இன்னொரு அம்மாவையும் காட்ட விரும்புகின்றேன். கிண்டியிலிருந்து 45B பஸ் பிடித்து நந்தனம் சென்று கொண்டிருந்தேன். அலுவலக நேரம், கூட்டம் அதிகம். சைதாப்பேட்டையில் பஸ் சில நிமிடங்கள் நின்றது. ஒரு பெண் கையில் அழும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு வந்து பிச்சை கேட்டுக் கொண்டிருந்தாள். அவ்வப்பொழுது துணியை விலக்கிக் குழந்தைக்கு உடம்பு சரியில்லை என்று சொல்லிக் கொண்டு வந்தாள். என் பார்வைக்கு வந்த பொழுது நான் அதிர்ந்துவிட்டேன். குழந்தையின் ஆசன வாயிலில் சிகப்பாக பெரிய சதைக் கட்டி.என்ன வென்று கேட்கும் முன் பஸ் புறப்பட்டு விட்டது. அன்று முழுவதும் அமைதி இல்லை.


இரண்டு நாட்களில் அவளை எலெக்ட்ரிக் டிரைனில் பார்த்தேன். என் பக்கம் வரவும் காசு கொடுத்து மெதுவாக விசாரித்தேன். அவள் குழந்தையை எக்மோர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றா ளாம். அவர்கள் கவனிக்கவில்லையாம். காசு வசூலித்து வேறு நல்ல டாகடரிடம் காட்டப் போகின்றாளாம் எனக்குப் புரிந்துவிட்டது.


நானே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப் போகின்றேன் என்றேன். திரு திருவென்று விழித்தாள். மெதுவாக நகர ஆரம்பித்தாள். எக்மோர் வந்தது. அவளை இறுகப் பற்றிக் கீழே இறக்கினேன். திமிரி ஓடப் பார்த்தாள். பக்கத்தில் இருந்தவர்களை உதவிக்குக் கூப்பிட்டேன். முதலில் தயங்கினார்கள்.” இவள் பெரிய தப்பு செய்யறா. குழந்தையைக் காப்பாத்தணும், ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் இவளைக் கூட்டிப் போக வாங்க. உடனே நீங்க போய்டலாம். நான் ஒரு பெரிய ஆபீஸர்தான்” என்றேன். பின்னர் தயங்காமல் வந்தனர். அவளைப் பிடித்துக் கொண்டு ரயில்வே போலீஸ் நிலையம் சென்றோம். உள்ளே போகவும் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டேன். உடன் வந்தவர்களை அனுப்பிவிட்டேன். அங்கிருந்து எங்கள் டைரக்டருக்கு போன் செய்து விபரம் கூறவும் அவர்களே போலீஸ் நிலயத்திற்கு தொலை பேசியில் பேசி உதவி செய்யச் சொன்னார்கள். போலீஸ் ஜீப்பில் எக்மோர் குழந்தைகள் ஆஸ்பத்திரிக்குச் சென்றோம். அப்பொழுது அங்கே டைரக்டராக இருந்தவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.


விசாரித்ததில் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்.அவள் துணைக்குத் தங்க வேண்டும் என்று சொன்னவுடன் தங்க மாட்டேன் என்று போய் விட்டாளாம். அவளிடம் உண்மையைக் கூறும்படி மிரட்டவும் உண்மைகள் வெளி வந்தன. அவள் கணவனும் குடிகாரன். குழந்தையைக் காட்டிப் பிச்சை எடுக்கச் சொன்னதும் அவனே தான். புருஷன் அடிப்பான் என்று அழுதாள். இவள் அம்மா மட்டுமல்ல, ஒருவனின் மனைவியும் கூட. பெற்றவளேயானாலும் தான் பெற்ற பிள்ளை வலியால் துடித்தும் பெற்றமனம் இங்கே கல்லாகிவிட்டததைக் காண்கின்றோம்.


தாய்ப் பாசத்தைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுகின்றோம். இந்த வகையி னரை எதில் சேர்ப்பது? இச்சையில் ஆடவன் மிருகமானால் இல்லற சோதனையில் பெண் இயந்திரமாக மாறுகின்றாளே!  பாசம், பரிவு எல்லாம் பதுங்கி விடுகின்றன. குழந்தையை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு அவள் கணவனை போலீஸ் உதவியுடன் கூட்டி வந்து எங்கள் டைரக்டர் முன் நிறுத்தினேன். அவனுக்கு மனைவி, குழந்தை வேண்டுமென்றால் அவளை அவன் கொடுமைப் படுத்தக் கூடாது. அல்லது பிடித்து கேஸ் போட்டு ஜெயிலுக்கு அனுப்பிவிடுவோம் என்று கூறவும் பணிந்தான். குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு. ஆனால் பொண்டாட்டியை அடித்தால் போலீஸ் வந்துவிடும் என்று தெரிந்தததால் திட்டுவதுடன்  நிறுத்திக் கொண்டான். குழந்தை பிழைத்தது. அடிவாங்குவதும் அப்பொழுது நின்றது. ஆனால் இது முழுமையான தீர்வாகுமா?


தீர்வு காணமுடியாத பிரச்சனைகள் எத்தனை எத்தனை! தினமும் பல பிரச்சனைகள் சங்கிலித் தொடராக என்னைத் தேடிவரும். நான் பார்த்த பணி சமூகநலம். நான் ஒரு சமூக மருத்துவர். இலாகா அளவில் முடிந்ததைச் செய்வோம். ஆனாலும்  மனத்தில் திருப்தி இருக்காது. மணியனிடம் போய்ச் சொல்லுவேன்.” அசடு, ஊர்ன்னு சொன்னா எல்லாம்தான் இருக்கும். “ . என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். சாவியிடம் சொன்னனல் உச் கொட்டுவார். ஆரம்பத்தில் கொஞ்சம் சொன்னேன். எதிரொலி இல்லை. ஜெயகாந்தனிடம் ஓடிப் போய் புலம்புவேன். ஒரு நாள் அருகில் இருந்த ஒருவர் “அம்மா பாவம், உளர்றாங்க” என்றார். அன்று முதல் நானும் ஜெயகாந்தனிடம் “உங்களிடம் உளறணும் எப்போ வர “ என்று கேட்க ஆரம்பித்தேன். அவரும் “ எப்போ வேணும்னாலும் வாங்க. உளறுங்க. உளறலைக் கேட்க எனக்கு இரண்டு காதுகள் இருக்கின்றன” என்பார். ஆமாம் ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு விடலாம். மண்டைக்குள் செலுத்தினால்தானே கோலுக்கு வந்து அது எழுத்தாகும். சமத்துப் பிள்ளையாண்டான். சொல் விளையா டலில் சாம்பியன்.


குடிகாரப் புருஷனைப்போல் பொறுப்பில்லா அப்பனாக இருந்துவிட்டால் அங்கும் கொடுமைகளும் நடக்கும். இன்னொருத்தியைப் பற்றி ஒரு புகார். நிலையான வேலை பார்க்கின்ற ஒருத்தி விபசாரமும் செய்கின்றாள் என்று புகார். அவளிடம் பேசினேன். எனக்கு ஒரு ராசி உண்டு.. என்னிடம் பேசுகின்றவர்கள் அவர்கள் துன்பத்தை அப்படியே கொட்டி விடுவார்கள். அவளும் தான் செய்யும் இன்னொரு தொழிலை மறைக்க வில்லை அவள் சொன்னதைச் சொல்லுகின்றேன்.


“என் அப்பா ஒரு சூதாடி. பணம் திருடினதால் வேலை போச்சு. அதனாலே கவலையாம். கவலை மறக்க குடிக்கணுமாம். வீட்டில் இருக்கும் ஒவ்வொன்றாய் காணாமல் போச்சு. காப்பாத்த வக்கில்லாத ஆம்புள்ளைக்கு புள்ளங்க இருக்கலாமா? குடும்பக்கட்டுப்பாடு திட்டத்துலே ஆப்பரேஷன் செய்தால் அவன்  ஆம்புள்ளைத்தனம் போய்டுமாம். புள்ளே பெத்து பெத்து அம்மா உடம்பும் கெட்டது. லூப் போட்டுக் கோன்னு அம்மாகிட்டே சொன்னேன். என் தலைவிதி. அம்மாகிட்டே மக சொல்ல வேண்டியிருக்கு. ஏற்கனவே ஆறு புள்ளங்க. எங்கே தப்போ அப்புறமும் ரெண்டு குழந்தைங்க.பிறந்துச்சு. அம்மா ஆபரேஷன் செய்துட்டாங்க. என் சம்பாத்தியம் முழுசும் குடும்பத்துக்கு.ப் போய்டும். வெட்கம் கெட்ட அப்பன் எங்கே எனக்குக் கல்யானம் செய்து வைக்கப் போறான். கல்யாணம்னா அங்கேயும் நகை காசு இல்லாம நடக்குமா? அதுக்குத்தான் என் கல்யாணத்துக்குப் பணம் சேர்க்க இதை சைட் பிஸினஸாகச் செய்கின்றேன்”


என்னை யாரோ அடிப்பதுபோல் உணர்ந்தேன். அவள் உடல் பசிக்கு இரை தேடவில்லை. திருமணத்திற்குக் காசு வேண்டி விபசாரத் தொழில் ! இப்படி ஒரு ஸ்டேட்மெண்ட் கேட்டிருக்கிங்களா ? பேசும் சக்தி இழந்து
விழித்துக் கொண்டிருந்தேன். அடுத்த அடி விழுந்தது.

“என்னம்மா, அதிர்ச்சியா? உங்களுக்குத் தெரியுமா? இந்த தரகங்கிட்டே வர்ர ஆம்புள்ளங்க கேக்கறது அவங்களுக்குக் குடும்பப் பொண்ணு அல்லது காலேஜ்படிக்கிற பொண்ணு வேணுமாம்.. அவனுக்குக் குடும்பம் இல்லியா?., இவன் மக காலேஜுக்குப் போக மாட்டாளா.!? இவனுக்கு மட்டும் பத்தினி பொண்டாட்டி.வேணும். அடுத்தவன் பொண்டாட்டி இவனுக்கு வேணும்.. பாவிங்க. இவங்க திருந்தாம இருந்தா இனிமே பொண்டாட்டி second hand ஆகத்தான் கிடைப்பா”


இது கற்பனையன்று; இப்படி விதவிதமான எரிமலைக் குமுறலைக் கேட்டுக் கொண்டிருக்கின்றேன்.
ஓர் ஆசிரியர் செய்த சைட் வியாபாரம். மாணவர் களுக்கும் உடன் வரும் இளைஞர்களுக்கும் ப்ளூ பிலிம் போட்டுக் காட்டி சம்பாதிப்பது. ஒரு நிருபர் என்னிடம் சொன்னபொழுது நான் நம்பவில்லை. நானும் என் தோழி பேபியும் அவருடன் சென்றோம். என் மனம் கொதித்தது.


தெய்வத்திற்கு முன் வைத்துப் போற்றிவரும் தொழில் ஆசிரியத் தொழில். எனக்கு நாட்டுப் பற்றையும் துணிச்சலையும் கற்றுக் கொடுத்தவர் என் ஆசிரியர். பாரதியை எனக்குள் புதைத்தவர் எங்கள் ஆசிரியர் கே.பி.எஸ் நாராயணன் அவர்கள். இன்றும் எட்டயபுரத்தில் அவரிடம் படித்த மாணவர்கள் அனைவரும் அவரை நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.


எனக்கு மிகவும் பரிச்சயமான மனிதர். ஒருவர் தரகரிடம் குடும்பப் பெண் கேட்டு வீட்டிற்கே அழைத்துச் செல்லப் பட்டார். இவர் உள்ளே நுழையும் பொழுது வீட்டிற்குள் இருந்து ஓர் ஆண் வெளியில் சென்றிருக் கின்றான். கூடத்தில் ஒரு கிழவி சுவரின் பக்கம் முகம் திருப்பி படுத்துக் கொண்டிருக்கின்றாள். இவர் உள்ளே போய் உடலுறவு கொண்டிருந்த பொழுது குழந்தை அழும் சத்தம் கேட்டு உடனே அந்தப் பெண் இவரைப் பிடித்து தள்ளிவிட்டு எழுந்திருந் திருக்கின்றாள். பால் குடிக்கும் குழந்தை. அதன் பின்னர் அவர் விசாரித்த பொழுது அழுதது அவள் குழந்தை, வெளியில் சென்றது புருஷன், கூடத்தில் படுத்திருப்பது மாமியார் என்று சொல்லி இருக்கின்றாள். ஒன்றும் பேசாமல் பணம் கொடுத்து விட்டு வந்து விட்டார். என்னிடம் சொன்ன பொழுது ஓங்கி அடித்துவிட்டேன். அந்த மனிதனுக்கு மனைவி யும், இரு குழந்தைகளும் இருக்கின்றனர். சிறு வயது முதல் அவர்கள் குடும்பம் எனக்குப் பழக்கமானது. அவருக்குள் இப்படி ஒரு மிருகம் இருந்தது அன்றுதான் தெரியும்.


கள்ள உறவுக்கு எதுக்கைய்யா குடும்பப்பொண்ணும் கல்லூரி மாணவியும் ? நான் இத்தனை சம்பவங்கள் கூறினால் எதை எழுதுவார், எதை விடுவார்?. இவை களைக் கூறியதற்குக் நான் எத்தகைய பணியில் இருந்தேன் என்பதைப் புரிய வைக்கவும் நம்மைச் சுற்றிக் கொட்டிக் கிடக்கும் குப்பைகளையும் கொஞ்சம் அடையாளம் காட்டவும் விரும்பினேன்.


ஜெயகாந்தனின் பேச்சைக் கேட்க வருகின்றவர்கள் போல் அவரிடம் நிறைய பேச விழைகின்றவர்களும் வருவார்கள். சாதாரணமாகப் பார்க்க வருவார். அவர் பார்வை, அவர் சிரிப்பு, நம் நெஞ்சுக்குள் புதைந்தி ருக்கும் செய்திகளைத் தானே கொத்திக் கொண்டு வந்துவிடும். கோயிலுக்குப் போகின்றோம். கடவுளி டம் நிறையப் புலம்புகிறோம். உடனே அவர் காட்சி யளித்து நம் கவலைகளைப் போக்கி விடுவதில்லை. நம் கவலை களைச் சொல்லும் பொழுது மனத்தை அழுத்தும் பாரம் குறையும். இப்படி எழுதுவ தால் ஜெயகாந்தனைக் கடவுளாக்கி விட்டார் சீதா லட்சுமி என்று நினைத்துவிட வேண்டாம். குறைகளும் நிறைகளும் கலந்த ஒரு மனிதர் ஜெயகாந்தன். ஆனால் அவரிடம் மனம் விட்டுப் பேசும் பொழுது ஓர் ஆறுதல் கிடைக்கின்றது. சில மனிதர்களிடம் சில மின் அதிர்வுகள் இருக்கும். நம்முடன் ஒத்துப் போகாத வர்களை வெறுக்கின்றோம். நமக்கே காரணம் தெரியாது.

அரசியல்வாதிகள் கால்களில் விழும் கலாசாரத்தைப் பார்த்துக் கேலி செய்கின்றவள் நான். ஒரு நாள் என்ன நடந்தது தெரியுமா? 1986ல் நான் வெளி நாட்டிற்கு முதல் பயணம் செல்லவேண்டி வந்தது. அதுவும் மகளிர் நலன் பேசும் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ளப் போக வேண்டும். முதல் அமைச்சர் அவர் களிடம் சொல்லிவிட்டுப் போக நினைத்து கோட்டைக் குப் போனேன். அப்பொழுது முதல்வராக இருந்தவர் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆர் அவர்கள். அவரைப் பார்க்க நான் நுழையும் பொழுது அவர் வெளியில் செல்ல எழுந்து நின்று கொண்டிருந்தார். அவரை வணங்கிவிட்டு நான் செல்லப் போவதைக் கூறினேன். அவரும் சில விபரங்கள் கேட்டார். அவர் முகத்தையே பார்த்துக் கொண்டு விடை அளித்து வந்தவள் திடீரென்று அவர் கால்களில் விழுந்து நமஸ்காரம் செய்தேன். இது ஓர் அனிச்சை செயல்.


ஜெயகாந்தனிடம் அவர் தங்கி இருக்கும் இடத்தில் போய்ப் பார்த்தால் சிலரால் உணர முடியும். இப்படி எழுதுவதால் கிண்டல் செய்யத் தோன்றும். உங்கள் சிலரிடமும் அந்த சக்தி இருக்கலாம். உங்களை அறியாதவர்கள், புதியவர்கள் கூட உங்களைப் பார்க்கவும் விரும்பலாம். சிலருக்கு வெறுப்புத் தோன்றலாம். நாம் இவற்றை உணர்வதில்லை. ஜெயகாந்தனிடம் உளவியலைத் தர்க்க ரீதியாகப் பேசும் திறமை உண்டு. அந்தப் பேச்சுதான் பாதிக்கப் படும் மனங்களுக்கு ஒத்தடமாக இருக்கும். இங்கே நான் அவர் மேடைப் பேச்சைப் பற்றிச் சொல்ல வில்லை. எல்லோருக்கும் எல்லோரையும் பிடித்துவிடாது.


சங்கீதத்தை எடுத்துக் கொள்வோம். சிலருக்கு தோடி ராகம் பிடிக்கும்; சிலருக்கு பைரவி பிடிக்கும். ரசனைகள், ருசிகள் தனிப்பட்டவை. ஒரு காலத்தில் ஜி.என் பி. அவர்கள் சுத்த கர்நாடகத்தில் கலப்பு கொண்டு வருகின்றார் என்று கிசு கிசுத்தனர். டி. கே பட்டம்மாள் மாதிரி எம். எஸ் சுப்புலட்சுமி இல்லை.; பட்டம்மாள் பாடும் பொழுது ராகத்திற்காக சொற் களைப் பிரிக்காமல், அர்த்தம் பிரிந்து நிற்காமல் பாடுவார் என்பார்கள்.


ஜெயகாந்தனைப் பற்றியும் பல விமர்சனங்கள் இருப்பதை அறிவேன். நான் ரசித்ததை, நான் உணர்ந்த வைகளைக் கூறுகின்றேன். அவர் இல்லம், அவர் மற்றவர்களைப் பார்ர்க்கவும், பேசவும் எடுத்துக் கொண்ட ஆழ்வார்பேட்டைக் குடில், இரண்டிற்கும் போயிருக்கின்றேன். அவருடன் கிராமங்களுக்குப் போயிருக் கின்றேன். பயணங்கள் செய்திருக்கின்றேன். அவரின் பரிமாணங்களைப் பார்த்தவர்களில் நானும் ஒருத்தி. என் அனுபவங்களைக் கூறுகின்றேன் . அவ்வளவுதான். மாற்றுக் கருத்துக்களை மதிப்பவள் நான் என்ப தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். எங்களுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் உண்டு. எழுத்தா ளர்கள் எதனையும் விருப்பம் போல் வளைத்து எழுத முடியும். ஆனால் செயலாற்றுகின்றவர்கள் நிலை அப்படியன்று. பிரச்சனைகளை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அவற்றைச் சீராக்க வழி வகைகள் காண வேண்டும். செயல்படுத்தும் பொழுது வெற்றியும் கிடைக்கலாம், தோல்வியுற்றும் திரும்பலாம். விருப்பம் போல் அவ்வளவு எளிதில் முடிக்க முடியாது. ஒரு காலத்தில் நானும் கதைகள் எழுதிக் கொண்டிருந்தவள். எனவே இரண்டின் பலமும் பலஹீனமும் தெரியும்.


அடுத்து எழுதப் போகும் இரு சம்பவங்களுக்கு உளவியல் ரீதியாக ஜெயகாந்தன் கொடுத்த விளக்கங்களை எழுதுவேன்.



பகுதி 15

படைப்பதற்கு மட்டுமன்று; படிப்பதற்கும் திறன் வேண்டும். எனக்குப்  படிக்கும் ஆர்வம் வளர்ந்ததுவும் ஒரு கதையே


பாரதி இல்லத்தில் பிறந்தது ஆர்வம்
-------------------------------------


சிறுமியாய் இருக்கும் பொழுது மாலை நேரங்களில் எங்கள் தெருவில் இருக்கும் சாம்பு மாமாவிடம் போய் உட்கார்ந்து கொள்வேன். அவர் பாரதி பாடல்களை எனக்குப் பாடக் கற்றுத்தருவார். அதுவும் பாரதி எப்படி பாடினாரோ அதே ராகங்களில் , அதே பாணியில் சொல்லித் தருவார். பாட்டின் அர்த்தங்களையும் விளக்குவார்.அப்பொழுது சுதந்திரம் பெறாத காலம். எனவே எங்கள் பாட்டுக்களில் வேகம் அதிகம் இருக்கும். கையில் ஒரு நோட்டுப் புத்தகம் எடுத்துச் செல்வேன். அவர் சொல்லும் பாட்டுக்களை எழுதிக் கொள்வேன். அவர் முழுப் பெயர் திரு. சாம்பசிவ அய்யர், பாரதியின் தாய்மாமன். படிக்கும் ஆர்வத்திற்கு முதல் பிள்ளையார் சுழி போட்டவர் அந்த மாமா தான்.ஆர்வம் பிறந்த இடம் பாரதி பிறந்த இல்லம்.


கல்கியின் சந்திப்பு ஆசைக்கு வித்திட்டது
--------------------------------------------------

பாரதிக்கு நினைவு மண்டபம் கட்டும் விஷயமாக எட்டயபுரத்திற்கு ராஜாஜி அவர்களும் கல்கி அவர்களும் வந்திருந்தனர். அரண்மனை விருந்தினர் இல்லத்தில் தங்கி இருந்தனர். என் அப்பா சுதந்திரப் போராட்டத்தில் மும்முறை சிறைக்குச் சென்றவர். எனவே எட்டய புரத்திற்கு வரும் தலைவர்கள் அரண்மனையில் தங்கினால் போய்ப் பார்ப்பார். மேலும் எங்கள் ஊர் ராஜா, வரும் விருந்தினர்களைக் கவ னிக்கச் சிலருக்குப் பொறுப்பு கொடுத்து வைத்திருந்தார். அவர்களில் அப்பாவும் ஒருவர்.அவர் போகும் இடங்களுக்கு என்னையும் கூட்டிச் சென்று அவர்களை நமஸ்காரம் செய்யச் சொல்லுவார். அன்றும் வழக்கம் போல் ராஜாஜி அவர்களையும் கல்கி அவர்களையும் நமஸ்காரம் செய்தேன். திரும்பி வரும் பொழுது இருவரைப் பற்றியும் அப்பா நிறைய பேசினார். அந்த வயதில் மனத்தில் பதிந்தது கல்கி கதை எழுதுகின்றவர் என்பதுதான். அதன் பின்னர் அப்பா வாங்கிப் போடும் விகடன், கல்கியைப் படிக்க ஆரம்பித்தேன். அந்த வயதிலேயே கல்கி யின் வரலாற்றுக் கதைகளை விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன்


கற்பனைத் தேரில் ஏற்றிவிட்டவன் பாரதி
-----------------------------------------------------
பாரதி திருமணமான பிறகு எட்டயபுரம் வந்தபொழுது தான் பிறந்த இல்லத்திற்கருகில் உள்ள வீட்டில் கொஞ்ச காலம் குடியிருந்தார். அதே வீட்டில் நாங்களும் குடியிருந்தோம். என்னைக் கற்பனையில் மிதக்கப் பழக்கிய வீடு. அவன் தொட்ட இடமெல்லாம் நான் தொட்டு மகிழ்ந்தேன்  மாடியென்ற ஓர் சின்ன அறை. கற்பனையில் பாரதியுடன் அரட்டை.


கொல்லைப்புறமும் சின்னதுதான். அதனால்தான் காணி நிலம் வேண்டினானோ? அவன் நினைவுகள் என்னைத் தாலாட்டின. ஏழு வயதில் எனக்குக் கிடைத்த விளையாட்டுத் தோழன் பாரதி.


இலக்கியமும் வரலாறும் என்னைப் பிடித்துக் கொண்டன
---------------------------------------------------------------------
நான் படித்த பள்ளியும் பாரதி படித்த பள்ளி. எங்கள் ஆசிரியர்களும்  பாரதியைப்பற்றி அதிகமாகப் பேசுவார்கள். அந்தக் காலத்துச் சூழ் நிலையில் இருந்த சுதந்திர தாகம் அப்படி பேச வைத்தது.
துரைராஜ் என்று ஓர் ஆசிரியர். என் அப்பாவுக்குச் செல்லப் பிள்ளையானார். காரணம் அவர் நிறைய புத்தகங்கள் படிப்பார். என் தந்தை எனக்கு வரலாற்றுப் புத்தகங்கள் கொடுத்தால் என் ஆசிரியர்
இலக்கியப் புத்தகங்கள் கொடுத்தார்.


புதுமைப்பித்தனிடம் அழைத்துச் சென்றவர் சிதம்பர ரகுநாதன்
----------------------------------------------------------------------
முத்து என்று இன்னொரு ஆசிரியர் வந்தார். திரு. பாஸ்கரத் தொண்டைமான், மற்றும் தொ. மு. சி. ரகுநாதன் ஆகிய இருவரும் இவருக்குத் தாய்மாமன்களாவார். வாத்தியார் துரைராஜின்  தங்கையை முத்து மணந்தார். அதனால் நெல்லைக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தது. பெரியவரை ஒரு முறை பார்த்திருக்கின்றேன். ஆனால் ரகுநாதன் அவர்களைப் பல முறைப் பார்க்க முடிந்தது. பழகவும் முடிந்தது. அவருடைய எழுத்துவன்மை அப்பொழுது எனக்குத் தெரியாது. நான் ஒரு பள்ளி மாணவி.
பாரதியைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்பார். கல்கி கதை படிப்ப தைச் சொன்னேன் அப்பொழுது அவர் எனக்குச் சில பத்திரிகைகள், புத்தகங்களைக் கொடுத்து நான் படிக்க வேண்டும் என்று சொன்னார்.
வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டியன இருக்கும் புத்தகங்கள் என்றார். அத்தனையும் புதுமைபித்தன் எழுதியவைகள். எட்டயபுரம் சென்று அவைகளைப் படித்தேன். ஆனாலும் அப்பொழுது எனக்கு கதைபடிக்கப் பிடித்தது. புத்தகங்களைப் பத்திரமாக வைத்திருந்தேன்.


ஜெயகாந்தன் வருகை
-------------------------
படித்து முடித்து களப் பணிக்குச் சென்றவுடன் திடீரென்று பெரிய மனுஷியாகிவிட்டதைப் போன்று உணர்ந்தேன். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பணி. சமுதாயத்துடன் நெருங்கிப் பழக ஆரம்பித்தேன். புதுமைப்பித்தனை மீண்டும் படிக்க ஆரம்பிக்கவும். ஜெயகாந்தனின் எழுத்துக்களும் உடன் புகுந்தன. ஏனோ அவர்கள் இருவரும் எனக்கு உறவுகளாய் உணர்ந்தேன். அப்பொழுது ஒருவர் உயிருடன் இல்லை. இன்னொருவரின் முகம் பார்த்ததில்லை;
நான் செல்லும் மூலை முடுக்குகளுக்குக்கூட என் சிந்தனையுடன் அவர்கள் எழுத்துக்களும் தொடர்ந்தன


வியப்பளித்த தி.ஜ ரா
------------------------
நான் வேலைக்குப்போன இடத்தில் சோமமகாதேவன் என்ற ஓரு எழுத்தாளரும் பணியாற்றிக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான கதைகள் எழுதியவர். எல்லாம் கிராமியக் கதைகள். அவருக்கு நாடக உலகத்திலும் பயிற்சி உண்டு. அக்காலத்தில் இத்தகைய திறனுக்கு முன்னுரிமை கொடுத்து வேலைகள் தரப்பட்டன. அவர் என் படிக்கும் ஆர்வம் பார்த்து இன்னொரு பெயரைக் கூறிப் படிக்கச் சொன்னார். தி.ஜானகிராமன் அவர்களின் எழுத்தைப் படிக்க ஆரம்பித்தது அப்பொழுதுதான். அவர் எழுத்து எனக்கு பிரமிப்பைக் கொடுத்தது. இவர்கள் எல்லாம் மனிதர் களுக்குள் புகுந்து , உணர்ந்து பார்த்து வந்து
எழுதுகின்றார்களோ என்ற வியப்பு. இவர்களால் எனக்குள் ஓர் ஆசை உதித்தது. நானும் ஒரு நாள் மனித மனங்களைப்பற்றி எழுத வேண்டும் என்பதே நானும் எழுத்தாளர்கள் குடும்பத்தில் ஒருத்தியானது.

இன்னொரு எழுத்தாளரும் அங்கு வேலை பார்க்க வந்து சேர்ந்தார். அவர் பெயர் ருத்ர.துளசிதாஸ். இன்று 47 புத்தகங்களுக்குச் சொந்தக் காரர். அவர் என்னை எழுதத்தூண்டியது மட்டுமன்றி என்னை எழுத வைத்து, என் கதையைப் பத்திரிகைக்கும் அனுப்பினார். மரபுக் கவிதை எழுதக் கற்றுக் கொடுத்தவரும் அவரே. இன்னொரு எழுத்தாளரையும் கண்டுபிடித்தார். ஓ.எஸ். கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரிலும் அருள் சுடர் என்ற பெயரிலும் பல கதைகள் வெளி வந்திருக்கின்றன. விகடனில் என்னுடைய ஒரு கதை முத்திரை பெற்றதென்றால் அவரு டைய பல கதைகளுக்கு முத்திரை கிடைத்தன. அவர் மகளுக்குப் பூரணி என்று பெயர் வைத்தார். அப்பொழுது எங்கள் நண்பர் நா.பார்த்தசாரதி எழுதிய குறிஞ்சிமலர் வெளிவந்து கொண்டி ருந்தது. நாங்கள் தேனாறு என்ற கையெழுத்துப் பத்திரிகையும் நடத்திவந்தோம். நாங்களும் மதுரையில் இருக்கும் நா.பார்த்தசாரதி உட்பட சில எழுத்தாளர்களும் சேர்ந்து ஒரு சிறுகதைப் புத்தகம் வெளியிட்டோம்.


 நட்புக்கு இலக்கணமாய் வந்தார்கள் மணியனும் சாவியும்
-------------------------------------------------------------
வளர்ச்சிப் பணிகளைப் பார்க்க விகடன் ஒரு பத்திரிகையாளரை
அனுப்பியிருந்தது. அவர்தான் மணியன். அவரைக் கிராமங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றிக் காண்பிக்கும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. அன்று ஆரம்பித்த நட்பு அவர் சாகும் வரை நீடித்தது. என் குடும்பத்தில் ஓர் அங்கமானார். மணியன் விகடனில் வேலை பார்க்கும் பொழுது அவருக்கு மிகவும் பிடித்தமானவர் ஜெயகாந்தன். இருவரும் கடற்கரைக்குச் சென்று உட்கார்ந்து பேசுவார்கள் என்று மணியன் கூறியிருக்கின்றார். விகடன் அலுவலகம் சென்றபொழுது சாவியும் அறிமுகம் ஆனார். அவர் நட்புக்குரிய நல்ல மனிதர். அவரும் எனக்கு நெருங்கிய நண்பரானார். சாவியும் மணியனும் இரு வேறு திசைகளில் திரும்பிய பொழுதும் என்னுடன் கொண்ட நட்பைமட்டும் மாற்றவில்லை.


இந்தத் தொடரின் நாயகன் ஜெயகாந்தனை மட்டும் பார்க்க பல வருடங்களாயின. 1970ல் தான் பார்க்க முடிந்தது. ஆனால் அவர் படைப்புகள் 60க்கு முன்னால் என்னிடம் வந்துவிட்டன. புத்தகங்களும் அவைகளின் படைப்பாளிகளும் எனக்கு அறிமுகமானதே ஒரு சுவாரஸ்யமான கதை. பிரபலமான எழுத்தாளர் ஒருவரை ஒரு மூதாட்டி தன் நண்பர் என்று கூறுவதை நம்புவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். இப்பொழுது கதை சொல்லிவிட்டதால் நம்பிக்கை பிறந்திருக்கும்..என் வாழ்க்கைப் பயணத்தில் சக பயணிகள் பலர் பத்திரிகை உலகைச் சேர்ந்தவர்கள்.அவர்களில் முதன்மையானவர்கள் மூவர். ஜெயகாந்தன், மணியன், சாவியுமாவார்கள்.


ஜெயகாந்தனின் சில கதைகள் உருவானதைப்பற்றிப் நாங்கள் பேசி யிருக்கின்றோம். பொதுவாக அவர் கதைகளைவிட என் அனுபவங் களைப்பற்றி அதிகம் பேசினோம். அரசியலும் பேசுவதுண்டு. என் அனுபவங்கள் ஒன்றுக்கு அவர் கூறிய கருத்துக்களைப் பார்க்கலாம்


மோகமுள்ளின் அவதாரங்கள்
---------------------------
தி.ஜ.ராவின் கதைகள் எனக்குள் தங்கி என்னை ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தன. மோகமுள்ளில் பாலுவின் மன நிலையை யதார்த் தமாகக் கொண்டு சென்றிருந்தார். அப்படியும் இருக்க முடியுமா என்று எனக்குள் தவித்த கேள்விக்கு வேறு ரூபத்தில் ஒருவரைப் பார்க்க நேரிட்டது. அவர் பள்ளிப் படிப்பு முடிக்கும் முன்னர் நாற்பது வயதான பெண்மணி ஒருத்தி புதிய விளையாட்டை அவருக்கு அறிமுகப் படுத்தினாள். அவருக்கு அது பிடித்திருந்தது. அந்த விளையாட்டிற்கு யார் கூப்பிட்டாலும் மகிழ்வுடன் பங்கு கொண்டார். நாட்கள் செல்லச் செல்ல வட்டம் குறுகியது. அந்த வட்டமும் புள்ளி வடிவாகி, அவரைத் தேடி வருகின்றவர்களை விடுத்து அவர் விரும்புகின்றவர்களுடன் விளையாட்டைத் தொடர்ந்தார். அந்த பட்டியலும் குறுகி , சிறுத்து மறைந்தும் போனது. ஜே .கே யுடன் இந்த மன நிலைபற்றிப் பேச்சு வந்தது.” தவறு என்று திருந்திவிட்டானோ ? “ என்று கேட்டேன். அவர் பதில் முதலில் வியப்பைக் கொடுத்தாலும் அதன் யதார்த்தம் பின்னர் புரிந்தது.


“ எப்பொழுதும் சரி, தப்பு என்று நினைத்திருக்க மாட்டான். யதார்த் தமாகக் கிடைப்பதை அனுபவித்து வந்திருக்கின்றான். காலம் மாற மாற ரசனைகளும் ஈர்ப்புகளும் மாறுவது இயற்கை. அதற்கேற்ப அவன் செயல்களும் மாறி வந்திருக்கின்றன “
இது எல்லோருக்கும் பொருந்துமா?


அப்படிச் சொல்ல முடியாது. சிலர் வாழும் சூழலில் தங்களுக்கென்று ஒழுக்க விதிகளை வகுத்துக் கொண்டு இது சரி, இது தவறு என்று தங்களை மாற்றிக் கொள்பவர்களும் உண்டு.


இப்படியும் ஒரு மனிதன்
-----------------------
இப்படிப் பேசிக்கொண்டு வரும் பொழுதே எனக்கு ஒருவனின் நினைவு வந்தது. அவன் பெயர் பெரிய கருப்பன். மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்தவன். ஒரு செல்வந்தரின் அடியாள். எஜமான் காட்டுகின்ற ஆளின் கையை, காலை வெட்டி ஜெயிலுக்குப் போகின்றவன். அவன் சிறைக்குப் போயிருக்கும் காலத்தில் அவன் தாய்க்கு ஜீவனத்திற்குப் பணம் கொடுத்து விடுவார். எனவே கருப்பனுக்கு அது ஓர் வேலை. பாவ புன்ணியம்பற்றி அவனுக்குத் தெரியாது. அவனைப் பெற்றவளும்  மகனின் வேலையாகத் தான் நினைத்தாள். சிறையிலிருந்து வரும் பொழுது முதலில் என் வீட்டிற்குத் தான் வருவான். அவனுக்கு நான், அவன் அன்பான அக்கா. அவன் செய்வது தவறு என்று நான் தான் சொல்லிக் கொண்டு வந்தேன்.


பழகிபோச்சு அக்கா. பாவ புண்ணியம்லாம் நேக்குத் தெரியாது. எஜமான்  சொல்றதைச் செய்வேன். அவன் ஒரு அம்பு. அவ்வளவுதான் இத்தகைய அடியாட்களைக் கொத்தடிமை என்று தான் நினைக்கத் தோன்று கின்றது. மனிதர்கள் இப்படியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அதுதான் உண்மை .


அந்த ஊரிலிருந்து மாற்றலாகிப் போக விட்டு அவனுடன் தொடர் பில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து அவன் என்னைத் தேடி கோயமுத்தூருக்கு வந்தான். அப்பொழுது நான் கர்ப்பிணி. அவனைப் பார்க்கவும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.


’எப்படிக் கண்டு பிடிச்சு வந்தே? எங்கே இருக்கே? கல்யாணம் ஆச்சா?’


’நீங்க எங்கே போனாலும் உங்களைப் பத்தி நான் விசாரிச்சுக்கிட்டு வந்தேன். நீங்க போனப்புறம் நீங்க சொன்னது என்னை உறுத்திக்கிட்டே இருந்தது. இதே ஊரில் இருந்தா எங்க எஜமான் சொல்றதைக் கேட்டுத் தான் ஆகணும். நான் ஊரை விட்டே போய்ட்டேன். நான் இருக்கற லட்சணத்துக்கு கல்யாணம் எதுக்கு? அக்கா, இப்போ கூலி வேலை செய்து பிழைக்கறேன். நீங்க புள்ளே உண்டாயிருக்கர விஷயம் கேள்விப்பட்டேன். பழனி கோயிலுக்குப் போய் நம்ம முருகன் சாமியை உங்களுக்காக வேண்டிக்கிட்டு பிரசாதம் கொண்டாந்திருக்கேன். இந்தாங்க ’


அவன் பேச்சு என்னை நெகிழ வைத்தது. அவன் கைகளில் பிரசாதம்.
அந்தக் கைகளில் முகம் புதைத்து அழுதேன். குழந்தை மனமும் பாசமும் என்னை உருக்கிவிட்டது. அந்தக் கைகள் பலரை வெட்டிய கைகள். ஆனால் எனக்கு? என் மீது பாசம் கொண்ட ஒரு குழந்தையின் கைகளா அல்லது பரிவு காட்டும் தாயின் கரங்களா?!அந்தக் கைகள் உணர்த்திய அன்பு என்னை மெய் சிலிர்க்க வைத்தது.


சில நேரங்களில் சில மனிதர்கள்
இது கதையல்ல இதுதான் நிஜம்


பகுதி 16


“இலக்கியம் கற்பனையை அறிதல் முறையாகப் பயன்படுத்தி வாழ்வை மதிப்பிட

முயலும் ஒரு துறை “  - ஜெயமோகன்


வாழ்க்கையைக் கற்பனைச் சிறகென்ற கோலினால் மெருகுபடுத்தி வரையும் ஓவியமே இலக்கியம். வாழ்வின் ஆதார உணர்வுகளை உயிர்ப்புடன் எழுதப்படும் பொழுது அவை அழியாத்தன்மை பெறுகின்றது. அது எல்லோராலும் முடிவதன்று.  வாழ்க்கையை ஊடுருவிக் காட்டிய ஒரு சிலரில் நம் ஜெயகாந்தனும் ஒருவர். எழுத்துக்களால் நம்மிடம் நெருக்கமாகிவிடுவர் படைப்பாளிகள்.  அவர்களைப் பார்க்க வேண்டு மென்பதோ, பழக வேண்டுமென்பதோ தேவையில்லை. நாம் ரசிப்பது அவர்கள் படைப்புகளை. சிலருக்குப் படைத்தவனுடன் பழகும் வாய்ப்புக் கிடைக்கும் பொழுது, அவனுடைய பல முகங்களையும் காண முடிகின்றது.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் , எல்லா முகங்களும் அழகாய் இருக்கும் என்று உத்தரவாதத்துடன் சொல்ல முடிவதில்லை. தனிப் பட்ட வாழ்க்கையை இங்கு நான் குறிக்கவில்லை. அவர்கள் அந்தரங்கம் நமக்கு வேண்டாம். எழுதத் தெரிந்தவர்கள் சிலருக்குப் பேசத் தெரிவ தில்லை. சிலர் பேசினால் இவரா இப்படி அருமையாக எழுதுகின்றார் என்று தோன்றும். ஆனால் மற்றும் சிலருடன் உரையாடும் பொழுது அவர் இன்னும் முழுமையாகத் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வில்லையே என்ற ஆதங்கத்தை உண்டு பண்ணி விடுவார்கள். ஜெயகாந்தனிடம் நான் உணர்ந்தது இது.
என் தோழி ஒருத்தி சமகால எழுத்தாளர்கள் பெயர்களைக் கூறி அவர் களைப் பற்றியும் நான் எழுதப் போகின்றேனா என்று கேட்கின்றாள்.
நான் இங்கு யாரைப்பற்றியும் திறனாய்வு செய்யவில்லை என்று மீண்டும் கூறிக் கொள்ள விரும்புகின்றேன். என் சமுதாயப் பணியில் நான் கண்டபிணிகளைப் பார்த்த பாதிப்பில் ஓடிச் சென்று இளைப் பாறிய இடம் ஜெயகாந்தன் குடில். பயணத்தில் சிலர் எட்டிப் பார்க்க லாம். அவ்வளவு தான். ஆனால் ஒன்றை ஒப்புக் கொள்கின்றேன். 90 வரைக்கும் அநேகமாகத் தமிழகப் பத்திரிகைளில் வந்தவை களைப் படித்திருக்கின்றேன்.அதன்பின் தமிழகத்தை விட்டு வெளியிடங்களில் வாழ வேண்டிய சூழலால் படிப்பது குறைந்துவிட்டது. விருப்பு  வெறுப்பு என்று என் படித்தலில் கிடையாது. எல்லாம் படிப்பேன். எப்படியும் ஒரு செய்தியாவது இருக்கும். சமுதாய அக்கறை உள்ளவன் எதையும் என்ன வென்று பார்க்காமல் ஒதுக்கமாட்டான் .


சில நேரங்களில் சில மனிதர்கள்
இது கதையின் தலைப்பு.

ஒவ்வொருவனின் வாழ்க்கையிலும் அவனே கூட ஒவ்வொரு நேரத்தில் ஒரு விதமாக இருப்பான். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. இந்தத் தலைப்பை என்று பார்த்தேனோ அன்று முதல் அதை நினைக்காத நாளில்லை. இது உளவியல் ரீதியாக எனக்கு உதவி செய்தது. குற்றவாளிகளைக் கூட அவர்கள் செய்த தவறுகளாக நினைத்து அவர்களுடன் இயல்பாகப் பழக முடிந்தது. பெரிய கருப்பனைப் போன்றவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.


நான் பணிக்கு வந்த மறு நாள் ஒருவனால் கெடுக்கப்பட்ட ஒருத்தி எனக்குக் கூறிய அறிவுரை “எல்லாரும் கெட்டவங்க இல்லே. ஆனா எப்போ கெட்டது செய்வாங்கன்னு தெரியாது. பெண்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்” படிப்பிலும் பதவியிலும் என்னைவிடக் குறைந்தவள். ஆனால் அவள் கூறியதுதான் எனக்குக் கிடைத்த அரிய படிப்பினை.

இதே கருத்தை “சில நேரங்கள் சில மனிதர்கள்” என்ற ஒற்றை வரியில்  அழகாகச் செதுக்கியவர் நம் ஜெயகாந்தன். பொதுவாக ஒரு சிலரின்  கதைத்தலைப்புகள் மனத்தைவிட்டு நீங்காது  நிலைத்து விடுகின்றன. இன்னொரு தலைப்பு தி.ஜ.ராவின் “மோகமுள்.” ஆனால் இதனைச் சேர்த்து நினைக்க வில்லை. மோகம் மனிதனை எப்படியெல்லாம் ஆட்டி வைக்கின்றது என்ற உண்மை நெஞ்சில் முள்ளாய்த் தங்கிவிட்டது. ஏற்கனவே ஆணினம் மேல் இருந்த கோபஉணர்வு, சமுதாயத்தில் சில அவலங்களைப் பார்க்கப் பார்க்க, ஆண் சிறு தப்புச் செய்தால் கூடச் சீறும் குணம் வளர்ந்துவிட்டது. வாழ்க்கையில் வழுக்கி விழுந்தவள், கணவனால் கைவிடப்பட்டவள், ஆதரவற்ற பெண்கள் இவர்களுக்குப்  புனர் வாழ்வு அமைத்துக் கொடுக்கும் பணி என்னுடையது. தினமும் அத்தகைய புகார்களைக் கேட்க வேண்டி வந்ததால் குற்றவாளிக் கூண்டில் ஆண் இனத்தை நிறுத்திப் பார்த்து வந்தேன். மோகம் என்பது பெண்ணுக்கும் உண்டு என்பதை அனுபவங்கள் காட்டிக் கொடுக்கவும் என் சீற்றம் குறைந்தது. சின்னஞ்சிறு பெண்ணைக் குதறிவிட்டு, பின் கொன்று குப்பைத்தொட்டியில் வீசும் ஆணை எப்படி வெறுக்கின் றேனோ அதை விட வயதான ஒருத்தி பள்ளிப் படிப்புக்கூட முடிக்கா தவனை விளையாட்டு என்று சொல்லிக் கெடுக்கும் பெண்னை அதிகமாக வெறுக்கின்றேன். இருவரையும் என்னால் மன்னிக்க முடியவில்லை. ஏனோ திடீரென்று ஜெயகாந்தன் கதை படிக்க வேண்டுமென்ற ஆசை வந்துவிட்டது. அமெரிக்க வரும் பொழுது எத்தனை புத்தகங்கள் தான் எடுத்துவருவது? ஆனால் ஜெயகாந்தன் புத்தகங்கள் மூன்று இருந்தன.  ஆனால் அவற்றைப் பார்க்க விரும்பாமல் கணினியில் மதுரைத் திட்டம் போய் என் பார்வையை ஓட்டினேன்.


யுகசந்தி


என் முகத்தில் சிரிப்பை வரவழைத்தது. அதற்குக் காரணம் உண்டு. முதலில் அந்தக் கதையைக் கொஞ்சம் சேர்ந்துப் பார்ப்போம் . பத்துவயதில் திருமணம், பதினாறு வயதில் விதவையான கௌரிப் பாட்டிக்குக் குழந்தை இருந்து பேரன் பேத்திகளும் இருந்தனர். ஆசார வாழ்க்கை. அதாவது கட்டுப்பாடான வாழ்கை. காலம் சுழல்வதை யாராலும் மாற்ற முடியுமா? அவள் பேத்தி கீதா திருமணமாகி பத்து மாதங்களில் விதவையாகி பிறந்தகம் வந்து பாட்டியின் மடியின் முகம் புதைத்துக் கதறிஅழுத பொழுது பாட்டி அவளை அரவணைத்துக் கொண்டாள். அதற்கு பாசம் மட்டும் காரணமல்ல. இறந்த காலத்தின் நிகழ்காலப் பிரதிநிதியாய் அவளில் தன்னைக் கண்டாள்.


கீதா வீட்டிற்குள் முடங்காமல் படித்து, ஆசிரியர் தொழில் பார்க்க அயல் ஊருக்குச் சென்ற பொழுது பாட்டியும் உடன் சென்றாள். தன் மகனைக் காண கிரமத்திற்கு வந்த பொழுதுதான் அந்த செய்தியை அறிகின்றாள்.


விதவைப்பெண் கீதா மறுமணம் செய்து கொள்ளப் போகின்றாளாம்.. பிறந்த வீடு தன்னை ஒதுக்கிவிடும் என்பதை உணர்வாள். தனக்கு வாழ்வு வேண்டிச் செல்வதை மறைக்காமல், தெரிவிக்க வேண்டியதைக் கடமையாக நினைத்துக் கடிதம் அனுப்பியிருக்கின்றாள். மேலும் கூறுவதை அப்படியே ஜே.கே அவர்களின் வார்த்தைகளைக் கூற விரும்புகின்றேன்.


“உணர்வு பூர்வமான வைதவ்ய விரதத்திற்கு ஆட்பட முடியாமல் வேஷங்கட்டித் திரிந்து , பிறகு அவப் பெயருக்கு ஆளாகிக் குடும்பத் தையும் அவமானப் படுத்தாமல் இருப்பதே சிறந்த ஒழுக்கம் என்று உணர்ந்திருக்கின்றேன். ஆமாம், , ரொம்ப சுயநலத்தோடு செய்த முடிவு தான். எனக்காகப் பாட்டியைத் ததிவிர வேறு யார்தான் தங்கள் நலனைத் துறந்து தியாகம் செய்துவிட்டார்கள்! “ கீதா இப்படியாகி வந்த பிறகுதான் பார்வதி அம்பியையும் ஜனாவையும் பெற்றெடுத்தாள். அதற்கென்ன அதுதான் வாழ்கின் றவர்களின் இயல்பு. வாழாத கீதாவின் உள்ளில் வளர்ந்து சிதைந்து, மக்கி மண்ணாகிப் பூச்சி அரித்து அரித்துப்புற்றாய்க் குவிந்திருக்கும் உணர்ச்சிகளை, நினைவுகளை, ஆசைகளை, கனவுகளை அவர்கள் அறிவார்களா? மொட்டையடிப்பதை விடுத்துப் பின்னல் போட அனுமதித்தவர், வெள்ளைத்துணியை கலர்த்துணியாக உடுத்தும் பொழுது ஒத்துக் கொண்டவர் வாழ்வுக்கு ஏங்கும் இயல்பில் மட்டும் கலாசாரம் போய்விட்டதாகக் கத்தும் போலித்தனத்தை கௌரிப் பாட்டியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. வீட்டில் எதிர்ப்பு வரவும்,  “நான் பிறந்த யுகம் வேறடா” என்று கூறிவிட்டு புது யுகம் போய்விட்ட  பேத்தியைக் காணப் புறப்பட்டுவிட்டாள். இரு யுகங்களின் சந்திப்பு நிகழ்ந்தது.


புதிய வார்ப்பு

இந்தக் கதையிலும் அதே இதய ஒலியைக் கேட்கலாம் .
பதினேழு வயது நிரம்பாத இந்துவிற்கு வேணு மீது காதல். அவனுடன்  புறப்பட்டுவிட்டாள். விஷயம் தெரியவும் பெற்றவன் இருவரையும் பிடித்து விட்டான். வேணுவின் மேல் திருட்டுப் பட்டமும், சின்னப் பெண்னை ஏமாற்ற நினைத்த குற்றமும் சொல்லிச் சிறைக்கு அனுப்பினான். மகளையே காதலனுக்கு எதிராகப் பொய் சாட்சி சொல்லச் செய்தான். வேணு அரசாங்கச் சிறையில். இந்துவும் வீட்டுக்காவலில் வைக்கப் பட்டாள். தினமும் சொல்லம்புகளால் காயப்படுத்தி அவளை நடைப் பிணமாக்கினான் தகப்பன். வாழ வேண்டிய பெண் ஏக்கத்தில் தவிக்க பெற்றவர்கள் எல்லா சுகங்களையும் அனுபவிக்க இங்கும் மனப் போராட்டம். சிறையி லிருந்து திரும்பிய வேணு வரவும் அவனுடன் இப்பொழுது பயமின்றிப் புறப்பட்டு விட்டாள். இந்து வேணுவிடம் சொன்னது “நாம் செய்தது, அப்ப செய்தது தப்பாக இருக்கலாம். அந்தக் காரியம் தப்பாப் போனதற்கே காரணம் நாம அதை அப்போ செய்தது தான். நான் அப்போ என் வாழ்க்கை யைத் தீர்மானிக்கற வயசிலே இல்லே. அதே காரியத்தை நான் இப்போ செய்யல்லேன்னா வாழ்க்கை கெட்டே போய்டும். எனக்கு வயசு வந்தாச்சு “ இவள் ஒரு புதிய வார்ப்பு.  இரண்டு கதைகளிலும் ஒரு காட்சி ஒற்றுமையைக் காட்டுகின்றது.


வீட்டில் வாழ முடியாமல் இருக்கும் பெண் இருந்தால் பெற்றவர்கள்  கூடத் தங்கள் நெருக்கத்தைக் காட்டுவது பாதிப்பை ஏற்படுத்துகின்றது.  எனக்கு வயது எழுபத்தைந்தாகிவிட்டது. நானே மூன்று நிலை களைக்  கண்டிருக்கின்றேன். நான் கிராமத்துப் பெண்.எங்கள் காலத்தில் அப்பாவும் அம்மாவும் சேர்ந்தால் தான் பிள்ளை உண்டாகும் என்று தெரியாது. அம்மா வயிற்றில் இருக்கும் பாப்பா வருவதைக் கூட, “சாமி வருவார். அம்மா வயத்தை தொடுவார். டபக்குன்னு பாப்பா வந்துடும் “ என்று கூறுவார்கள்..


கல்யாணமாகாத பெண் வீட்டில் இருந்தால் பையன் களுக்குக் கூடத் திருமணம் செய்வதை ஆதரிக்க மாட்ட்டர்கள். முதலில் பெண்ணின் திருமணம் நடத்தப்பட வேண்டும் என்று நினைப்பார்கள். அடுத்து வந்த காலம் “ரெண்டுகெட்டான் காலம். “என்று அவர்கள் பாணியிலேயே கூறலாம். சுழலின் தாக்கம் மனத்தில் ஏக்கத்தை உண்டாக்கியது இந்த காலத்தில்தான் புதுமைப் பித்தன், தி. ஜ.ரா, ஜெயகாந்தன் போன்றவர்கள் மனப் புழுக்கத்தைச் சுற்றி அதிகமாக எழுதினர்.
இப்பொழுது பெண்ணிற்குச் சமாளிக்கத் தெரியும்.

ஒரு நிஜத்தை ஏற்கனவே உங்கள் முன் காட்டினேன் இதே சூழலால் மனக் குமுறல் மட்டுமல்ல, நிலையான வருவாய் இருந்தும் விபசா ரத்தைத் தொழிலாய் எடுத்தஅந்தப் பெண் மட்டும் அப்படிப்பட்ட முடிவை ஏன் எடுத்திருக்க வேண்டும்? கண்ணியமான காதலன் கிடைக்க வில்லையா? கதைகளில் நல்ல நாயகனைக் காட்டிப் புது யுகம் காட்டலாம். ஆனால் வாழ்க்கை அவ்வளவு எளிதாக இல்லை. ஏற்கனவே வருவாய் இருக்கும் பொழுது ஒரு பெண் விபசாரத்தைச் சட்டென்று தன் தொழிலாக எடுக்க மாட்டாள். ஏதோ நடந்திருக்க வேண்டும்.

நான் ஒன்றும் அவளைக் கேட்கவில்லை. அந்த நிலையில் அதிகம் கேட்கக்கூடாது என்று எங்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது. அந்த நாள் சமூக சேவகி திருமதி அம்புஜமாள் அவர்கள் எங்களுக்குக் கொடுத்த பயிற்சி. ஒருத்தி மனக் குமுறலுடன் முன்னால் வந்து நிராதரவாய் நிற்கும் பொழுது கேள்விகள் கேட்கக் கூடாது .


“அவளே நொந்து போய் வந்திருக்கா. நீயும் குதறாதே.முதல்லே உள்ளே கூட்டிண்டு போய்ச் சாப்பிடச் சொல்லு; தூங்கட்டும். ரெண்டு நாள் ஆனா அவளே சொல்லுவா” அந்தக் காலத்தில் எங்களுக்குக் கிடைத்த வழிகாட்டிகள் மிக உயர்ந்தவர்கள். பெயருக்காக “சமூக சேவை” என்று சொல்கின்றவர்களல்லர்.
விசாரணை செய்த என்னால் அவளுக்கு மாப்பிள்ளை தேடித் திரு மணம் செய்து வைக்க முடியாது. ஆனால் ஏதாவது ஒரு தீர்வு காண வேண்டும் . இது கதையல்ல. விருப்பப்படி முடிவு செய்து விட முடியாது. ஆனாலும் ஏதாவது செய்ய வேண்டும். எனக்குத் தோன்றிய வழி ஒன்று தான்.  “உனக்கு வேறு ஊருக்கு மாறுதல் வாங்கித் தருகின்றேன். அங்கே உனக்குப் புது வாழ்வு கிடைக்கலாம். அப்பா, அம்மா பத்திக் கவலை வேண்டாம். பட்டுத் திருந்தட்டும். உன்னால் முடிந்த அளவு பணம் மட்டும் அனுப்பு. பொறுப்பைத் தலையில் சுமக்க வேண்டாம். இந்த வாழ்க்கை வேண்டாம்மா”
நான் கூறியதை கேட்டவுடன் ஓவென்று அழுதாள். அது நிஜ அழுகை.

அவள் விடும் கண்ணீர், ஏதோ ஒரு வெறுப்பில் இந்த அவல வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருப்பாள் எனத் தெரிந்தது. அவளை அணைத்துக் கொண்டேன். மார்பில் முகம் புதைத்து அழுதாள். அவளுக்கு அப்பொழுது அந்தத் தாய்மைப் பரிவு தேவையாக இருந்தது. இடம் மாறினால் அவளுக்கும் புதிய வாழ்வு கிடைக்கலாம். எல்லாம் ஒரு நம்பிக்கைதான். வாழ்க்கையின் அச்சாணிதானே நம்பிக்கை.  என்னால் பிரச்சனைகளை விட்டு ஓட முடியாது. எப்பொழுதும் வெற்றி கிடைக்கும் என்றும் சொல்ல முடியாது. ஆனால் முயற்சி செய்யாமல் விடமாட்டேன். நான் கதாசிரியர் அல்ல. சமூகத்தில் அதன் நலம் விரும்பும் ஒரு போராளி. செயலில் இறங்க வேண்டும்.

ஆமாம், யுகசந்தி என்ற தலைப்பைப் பார்க்கவும் சிரித்தேனே. காரணம் தெரிய வேண்டாமா? அது ஒரு வேடிக்கையான சம்பவம். அடுத்துக் கூறுவேன்.


பங்களிப்பாளர்கள்

Dev மற்றும் Ksubashini

"https://marabuwiki.org/index.php?title=ஜெயகாந்தன்&oldid=2144" இருந்து மீள்விக்கப்பட்டது