மானங் காத்த மைந்தர்மரபு விக்கி இருந்துDev (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:58, 19 பெப்ரவரி 2010 அன்றிருந்தவாரான திருத்தம் எழுதியவர்:உ.வே.சாமிநாதய்யர் தட்டச்சு செய்து அளித்தவர்: தமிழ்த்தேனீ
தமிழ்நாட்டில் உள்ள சில சில ஊர்களில் பரம்பரையாகக் கவிஞர்கள் இருந்து வருகிறார்கள். அவ்வூர்களுள் வேம்பத்தூரென்பது ஒன்று,அது மதுரைக்கு கிழக்கேயுள்ளது. சங்ககாலமுதல் இன்றளவும் அவ்வூரில் கவிஞர்கள் இருந்து வருகின்றனர். அங்கே உள்ள சோழியப் ப்ராமணர்களுள் இளைஞர்களும் எளிதிற் செய்யுட்கள் இயற்றும் ஆற்றலுடையவர்களாக இக்காலத்தும் விளங்குகிறார்கள். வேம்பற்றூர்க் குமரனாரென்னும் சங்கப் புலவர் அவ்வூரினரென்றே கருதப்படுகிறார்.
அவ்வூர்ச் சோழியர்களிற் பலர் பண்டைக்காலத்தில் வேறு வேறிடஞ் சென்று தங்கள் தங்கள் கல்வி மிகுதியையும் வருத்தமின்றிச் செய்யுள் இயற்றும் வன்மையையும் புலப்படுத்தி அங்கேயுள்ள அரசர், ப்ரபுக்கள் முதலியோரால் நன்கு மதிக்கப்பெற்று விளைநிலம் முதலியவற்றை அடைந்து வாழ்ந்து வந்தனர். அங்கனம் அவர்கள் இருந்த ஊர்கள், வீரசோழன் அல்லது வீரை, தென்காசி, கீழைப்பாவூர், வல்லநாடு, இருப்பையூருணி,திருநெல்வேலி, கரிவலம்வந்த நல்லூர், கற்குளம், பனையூர், குறுங்காவனம் அல்லது குறுங்களாவனம் முதலியன.
வேம்பத்தூராருள் ஒருவராகிய பெருமாளையரென்னும் ஒரு வித்துவான் திருநெல்வேலியிலிருந்த சைவ வேளாளப் பிரபுக்களின் பேராதரவால் அந்நகரத்தில் வசித்து வரலானார். வரன்முறையாக இலக்கிய இலக்கணங்களைப் பயின்ற அவர் நெல்லையப்பர் விஷயமாக ஏதேனும் நூல் இயற்ற வேண்டுமென்றெண்ணினார். அவருடைய அன்பர்களும்,அவருக்கு ஆதரவளித்த பிரபுக்களும் பிரபந்தமொன்று செய்தால் நலமாயிருக்கும் என்று விரும்பினர். அங்கனமே சில தினங்களில் அவர் நெல்லை வருக்கக்கோவை என்னும் பிரபந்தத்தை இயற்றி முடித்தார். மொழிக்கு முதலாகும் உயிரெழுத்துக்களிலும் உயிர் மெய்யெழுத்துக்களிலும் ஒவ்வொன்று ஒவ்வொரு பாட்டின் முதலில் முறையே வரும்படி அகப்பொருட்டுறைகளை அமைத்துப் பாடுவது வருக்கக் கோவையாகும், பாம்பலங்காரர் வருக்கக்கோவை, மாறன் வருக்கக் கோவை முதலியவை அவ்வகையைச் சார்ந்தனவே.
நெல்லை வருக்கக் கோவை இயற்றி நிறைவேறியவுடன் பெருமாளையர் அதனை அரங்கேற்ற எண்ணினார்.பலரால் நன்கு மதிப்பட்ட பண்டிதராதலின் அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற வேண்டு மென்றெண்ணிய அன்பர்கள் அதற்காவன செய்தமைத்தார்கள். பெருமாளையரும் தாம் இயற்றிய அந்நூல் சிறப்பாக அரங்கேற்றி முடியுமென்ற உவகையிலாழ்ந்திருந்தார்.ஸ்ரீ சாலீவாடீசுவரப் பெருமான் சந்நிதியில் அரங்கேற்றுதற்குரிய முயற்சிகள் செய்யப்பட்டன. அரங்கேற்றும் நாள் வந்தது. உள்ளூராரையன்றி அயலூர்களிலிருந்தும் ப்ரபுக்களும் வித்துவான்களும் வந்திருந்தார்கள். பெருங் கூட்டத்தினரிடையே பெருமாளையர் இருந்து அரங்கேற்றத் தொடங்கினார். அவருடைய மனம் மிக்க ஊக்கத்தோடு இருந்தது. காப்புச்செய்யுளை அவருடைய மாணாக்கருள் ஒருவர் வாசித்தார், அது - (வெண்பா) இதை வாசித்தவுடன் கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று “இக்கவியில் ஒரு ஆட்சேபம் இருக்கிறது” என்று சொன்னார். பெருமாளையருக்கு ,”எடுத்தவுடனே அபசகுனம் போல இந்த மனிதன் ஏதோ சொல்லுகிறானே “ என்ற எண்ணம் வரவே அவருடைய ஊக்கம் தளர்ந்துவிட்டது. ஆட்சேபஞ் செய்தவர், “ வீதியெல்லாம் செங்கயலும் சங்கினமும் நீரோடுலாவி வரும் என்று பாடியிருக்கிறீரே ; வீதியில் கயலும் சங்கினமும் நீரோடு ஓடுகின்றனவா.?” என்றார்.
பலகாலமாகப் பிரபுக்கள் தமிழ்க்கவிஞர்கள் முதலியவர்களுடைய நன்மதிப்பைப் பெற்று வாழ்ந்துவந்த பெருமாளையர் ஆட்சேபஞ் செய்தவருக்கு விடை கூறுவதைப்பற்றி யோசிக்கவில்லை. அப்பொழுது முதன்முதலாக அரங்கேற்றத்தொடங்கிய நூலுக்கு இறங்குதுறையில் நீத்தானதுபோல ஆட்சேபம் உண்டாயிற்றே! நம்முடைய நன்மதிப்புக்கு இழுக்கு வந்துவிட்டதே!’ என்ற எண்ணம் அவர் நெஞ்சில் தோன்றி வருத்தத் தொடங்கியது. அதனால் அவர் எல்லாவற்றையும் மறந்து திசை மயக்கம் அடைந்தவர்போல் சிறிது நேரம் இருந்தார். ஆட்சேபத்துக்கு ஸமாதானம் சொல்ல இயலாமல் அவர் விழிப்பதாகவே அங்கிருந்தவர்கள் யாவரும் எண்ணினார்கள்.
பெருமாளையருக்கு சிறிது நேரம் கழித்தபிறகுதான் நாம் இன்ன நிலையில் இருக்கிறோம் என்ற நினைவு வந்தது. தம்மேல் அவமதிப்பு அதிகமாகும்படி அவ்வளவு நேரம் மௌனமாக இருந்து விட்டதற்கு வருந்தினார். அவருக்கு அந்நூலை அரங்கேற்ற மனம் இடந்தரவில்லை. ஆகையால் “கடவுளுடைய கிருபை இப்பொழுது பூரணமாக என்பக்ஷம் இல்லையென்று தோன்றுகிறது. அதனால் அரங்கேற்றம் இப்பொழுது நடைபெற என் மனம் உடன்படவில்லை, பின்பு வைத்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு மனத்துயரோடு வீடு சென்றனர். வந்திருந்த யாவரும் தத்தமக்குத் தோற்றியவாறு பலவிதமாக எண்ணிக்கொண்டு சென்றனர். தமக்கிருந்த நன்மதிப்புக்கு பெருங்குறைவு வந்துவிட்டதாக எண்ணி எண்ணிப் பெருமாளையர் வருந்தினார்; அவருடைய மனப்புண் ஆறவேயில்லை. சில காலத்துக்குப் பின்னர் அவருக்கு ஒரு குமாரர் பிறந்தார். குமாரர் பிறந்த சில வருஷங்களுக்கப்பால் பெருமாளையர் இறந்தனர்.
பெருமாளையருடைய குமாரர் உரியபருவத்தில் அவ்வூரிலுள்ள வித்துவான்களிடத்தில் தமிழ்க்கல்வி கற்று வந்தார். “ குலவிச்சை கல்லாமற் பாகம்படும்” என்பதற்கேற்ப அவருக்குத் தமிழறிவு விரைவாகப் பெருகலாயிற்று. தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் நல்ல பயிற்சியைப் பெற்று விளங்கினார்; கவி இயற்றுவதிலும் பிரசங்கம் செய்வதிலும் முறையே ஆற்றலுடையவரானார். ஒரு நாள் அவர் தம் வீட்டிலுள்ள சுவடிகளை எடுத்துப் பரிசோதித்து வருகையில் நெல்லைவருக்கக் கோவை கிடைத்தது, அது தம் தந்தையாரால் இயற்றப்பெற்றதென்றறிந்து அதைப் படித்துப் பார்த்து இன்புற்றார். அந்நூல் இருப்பதாகவே அதுகாறும் அவர் அறியவில்லை, அக்காலத்தில் அவருடைய தாயார் இருந்தனர். அவரிடம் அதைப்பற்றி விசாரிக்கலானார்;
குமாரர் தாயாருக்கு கையிலிருந்த சுவடியைக் காட்டினார்.
தாயார்: ஐயோ, அந்தச் சுவடியை நீ ஏனப்பா எடுத்தாய்? உன்னுடைய தகப்பனார் அதனால் அடைந்த வருத்தம் போதாதா? அதுதான் உன் தகப்பனாரைக் கெடுக்க வந்த சனியன்.
தாயார்: அரங்கேற்றமா? அதைப்பற்றிச் சொல்லுகிறேன்,கேள்: நீ பிறப்பதற்கு முன்பே இதை அவர் பாடினார், அரங்கேற்றத்துக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்தார்கள். அரங்கேற்றம் ஆரம்பிக்கும்போது எவனோ ஒருவன் முதற்பாட்டே தப்பு என்றானாம். அவ்வளவுதான். உடனே அவருக்கு மானத்தால் மனம் ஒடிந்து போய்விட்டது. அதன்பிறகு அவருக்குப் பழைய சந்தோஷம் வரவேயில்லை. அரங்கேற்றமே நடக்கவில்லை. அந்தச் சுவடியையும் மூலையிலே போட்டுவிட்டார்.
குமாரர்: முதற்பாட்டிலே என்ன தப்பு? ஏதாவது ஞாபகம் இருக்கிறதா?
தாயார்: அவர் ஒன்றுமே பேசவில்லை,யாரோ சொல்லிக் கொண்டிருந்தார்கள்; அது என் காதில் விழுந்தது; வீதியெல்லாம் மீனும் சங்கும் நீரோடு ஓடுமா என்று அவன் கேட்டானாம்; இதுதான் ஞாபகம் இருக்கிறது.
நெல்லையிலுள்ள அன்பர்கள் முயற்சியினால் ஸ்வாமி சந்நிதியில் அரங்கேற்றுவதற்காக ஒரு பெரிய சபை கூட்டப்பட்டது.முதற்பாட்டுக்கு அவர் அர்த்தம் சொல்லத்தொடங்கினார்; “இது பிழையுள்ளதென்று முன்பு ஒருவர் ஆட்சேபிக்க,எந்தையார் மனவருத்தத்தால் அரங்கேற்றவில்லையெனக் கேள்வியுற்றேன்: இதில் எவ்வகைப் பிழையும் இல்லை. வீதியெல்லாம் தேரோடும், செங்கயலும் சங்கினமும் நீரோடுலாவி வரும்; இத்தகைய நெல்லையென முடிவு கொள்ளவேண்டும். இவ்வளவு அருமையான நூலை இயற்றிய என் தந்தையாருக்கு இந்த ஆட்சேபத்துக்கு விடைதெரியாமல் இருப்பதற்கு நியாயமில்லை. “மயிர் நீப்பின் வாழாக் கவரிமாவன்னார்” என்பதற்கேற்ப மிக்க மானமுடையவராதலின் எல்லா வற்றையும் மறந்து துன்பக்கடலில் ஆழ்ந்தார், ஆட்சேபித்த பொறாமைக்காரர் யாரோ தெரியவில்லை; அவ்வொருவருடைய செயலால் அக்காலத்தில் இருந்த பலரும் இந்நூலின் அருமை பெருமைகளை யறிந்து இன்புறக் கூடவில்லை. என் செய்வது!” என்று சொல்லிவிட்டு, மேலே நூல் முழுவதற்கும் விரிவாகப் பொருள் கூறி அரங்கேற்றி நிறைவேற்றினார்.
அவர் தம் வீட்டிற்கு வந்தார். அவருடைய தாயார்,அரங்கேற்றம் நிறைவேறியதும் தம்குமாரர் சிறப்பு பெற்றதுமாகியவற்றை முன்பே அறிந்தவராய் எல்லையில்லாத உவகையுடன் அவர் வரவை எதிநோக்கி காத்திருந்தார். வரும்போதே குமாரர், “அம்மா! அப்பாவுக்கு இருந்த குறையை நீக்கிவிட்டேன்” என்று சொல்லிக்கொண்டு வந்தார். “என் சிங்கமே !இப்பொழுது அவர் இருந்து சந்தோஷப்படக் கொடுத்து வைக்கவில்லையே!” என்னும் பொழுதே தாயாரின் கண்களில் ஆனந்த பாஷ்பமும் துக்கக்கண்ணீரும் கலந்து சிந்தின. ***************************************** * இச் செய்யுளின் பிற்பகுதியின் பொருள் வருமாறு-- கார் ஓடும்-- கருநிறம் பரவிய, சுந்தரத்தர்,- திருக்கழுத்தைடையுடையவரும் அந்தரத்தர்க் - ஞானகாயத்தையே திருமேனியாகக் கொண்டவரும், கந்து அரத்தர்-பற்றுக்கோடாகிய செம்மை நிறமுடையவரும், அம் தரத்தர்- திருமுடியில் நீரைத்தாங்கியவரும், கந்தர் அத்தர்- முருகக் கடவுளின் தந்தையாரும், அம் தரத்தர்- அழகிய தகுதி யுடையவருமாகிய சிவபெருமான், காப்பு- காவல் புரிந்து வீற்றிருக்கும் இடம், நெல்லைக் காப்பென்று முடிக்க. அத்தலத்துக்கு உரியதாக அடியேன் இயற்றும் நூல் இனிது முடியும் வண்ணம் பாது காத்தருள்வாரென்பது கருத்து. அந்தரம்- ஆகாயம், கந்து – பற்றுக்கோடு; அரத்தம்- சிவப்பு;அம் –நீர்;அழகு- தரம், தகுதி இச்செய்யுளின் பொருள் என்னுடைய ஆசிரியர் மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களால் முன்பு தெரியவந்தது. {இந்த அரிய செய்தியை எனக்குச் சொல்லியவர்,சேலத்தைச் சார்ந்த சாருவாயென்னுமூரிலிருந்த கதிற்வேற்கவிராயரென்பவர்} |