இறைவனைக் காண்போம்! 49 ஈ!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
ஈ என்றதும் சென்ற ஆண்டு வெளி வந்த ஒரு தமிழ் சினிமா பற்றி ஏதோ எழுதப் போகிறார் இவர் என எதிர் பார்ப்பவர்களுக்கு ஏமாற்றம் அளித்திடப் போவதற்கு மன்னிக்கவும்.  நான் எழுதப் போவது ஒரிஜினல் ஈயைப் பற்றி, அதான் ஆங்கிலத்திலே டொமெஸ்டிக் ஃப்ளை (domestic fly) என்கிறார்களே அது பற்றி.  ஈக்கு விஞ்ஞான ரீதியாய் அளிக்கப் பட்ட பெயர் மஸ்கா டொமெஸ்டிகா (Musca domestica)

 
ஈ1.jpg

Inline image 2


 

நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு ஆறு கால் ஜந்து ஈ.  ஆனால் அதனுள்ளும் நமக்குத் தெரியாத பல விஷயங்கள் உள்ளன.  அவற்றுள் நான் பார்த்து, படித்து அறிந்து கொண்ட சில விஷயங்கள் பற்றிதான் எழுத நினைக்கிறேன்.

 

உள்ளங் காலில் இருந்து உச்சந்தலை வரை உரோமங்கள் கொண்டது ஈ.  கண்ணாடி போன்ற ஒரு ஜோடி இறகுகள் உண்டு இதற்கு பறந்திட.  இதன் மற்றொரு ஜோடி இறகுகள் மிகச் சிறியதாய் பறந்திடும் போது சம நிலையில் வைத்திருக்க உதவிடும்.

 
ஈ2.png
ஈ3.jpg

Inline image 3

 

மனிதன், விலங்குகள், பறவைகள், பெரும்பாலான பூச்சி புழுக்கள் இவை எல்லா வற்றுக்கும் இரண்டு கண்கள் தான் இருக்கும்.  சிலந்தி வகைகளில் சிலவற்றுக்கு மூன்று ஜோடிக் கண்களும் சில வற்றுக்கு நான்கு ஜோடிக் கண்களும் இருக்கும்.  ஆனால் ஈக்களுக்கோ தும்பி போன்று ஆயிரக் கணக்கான கண்கள், இரு கூட்டமைப்பாக இருக்கும்.  இவை மனிதர்களால் காண முடியாதவற்றைக் கூடக் காண முடியும்.  உதாரணத்திற்கு ஒரு ஈ அதனைச் சுற்றி முன். பின், மேல், கீழ் என நாற் புறமும் நிகழ்ந்திடும் மிகச் சிறிய அசைவினைக் கூடக் காண முடியும்.  ஈ அடித்தவர்களுக்கு இது புரியும்! (இதிலிருந்துதான் வந்திருக்குமோ ஈ அடிச்சான் காப்பி என்பது, தன் விடைத்தாள் மட்டும் இன்றி பக்கத்து மேஜையில் இருக்கும் மற்ற மாணவர்களின் விடைத் தாள்களையும் பார்த்திட முடியுதே காப்பி அடித்திடும் மாணவனால்!)

 

ஈயை அடிப்பதற்கு ஒரு ஈ அடிக்கும் மட்டையை (fly swat) வைத்துக் கொண்டு அடிப்பதை விட்டு இரண்டு மட்டைகளைக் கையில் வைத்துக் கொண்டு அடிப்பது சுலபம் என்பவர்களும் உண்டு.  இரண்டு மட்டைகள் நகர்வதைக் கண்டு ஈ குழம்பி விடுமாம்!

 

மனிதர்களிடையே வியாதிகளைப் பரப்புவதில் முதலிடம் ஈக்களுக்குத் தான்.  இதுதான் அதன் உணவு என்றில்லாமல் எதையும் உண்ணும் ஈக்கள்.  அம்மா ஆசையாய் சமைத்து வைத்த உணவோ, இரத்தமோ, இறந்த உயிரினமோ, குப்பை கூளமோ, சாணமோ, மனித மலமோ எதுவாயினும் அது ஈக்கு உணவே.

 

ஈ தன் உணவை எப்படி உண்ணும்?  கடித்து சுவைத்து உண்ணுமா? இல்லை.  அது ஒரு பொருளின் மீது உட்கார்ந்தது அதன் மீது எச்சிலத் துப்பும்.  உணவினை ஓரளவு ஜீரணிக்கும் பலம் கொண்டது அந்த உமிழ் நீர்.  பின் ஈ அந்த எச்சிலை உரிஞ்சிவிடும்.

 

அடிக்கடி உணவினை உண்டு கொண்டிருக்கும் போதே ஈ சிறிது மலமும் கழித்திடும்.

 

சாணம், மலம், இறந்து அழுகிடும் உடல்கள், குப்பை மேடு என அசுத்தத்தின் இடையேயே வாழ்ந்திடும் ஈ தன் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அதிக நேரம் செலவழித்திடும் ஒரு பிராணி.  (மனிதர்களில் சிலர் தன் உடல் சுத்தத்திலும், அதை அழகாய் வைத்திருப்பதிலும் அதிக நேரம் செலுத்துகிறார்களே அது போலத்தான்.

உங்கள் வீட்டில், “போறுண்டி.  அது என்ன அறுபது நாழியும் கண்ணாடி முன்னே நின்னிண்டு அலங்காரம் பண்ணிக்கறது?  காலேஜுக்கு நாழியாச்சு.  கெளெம்பு” என்ற அம்மாவின் அதட்டல் கேட்டதுண்டா?

 

ஈயை சிறிது நேரம் கூர்ந்து பாருங்கள்.  அது அடிக்கடித் தன் கால்களால் கண்கள், இறக்கைகள், உடல் இவற்றை சுத்தம் செய்து கொண்டே இருப்பதைப் பார்க்கலாம் நீங்கள்.

 

ஈக்களின் திருமணம் ஈயாகப் பிறந்த இரண்டு நாட்களுள்!  மேலும் அன்றே முதலிரவு!  அதுவும் ஒரு முறைதான்!  ஆனால் பெண் ஈ ஆண் ஈயின் விந்துவைத் தன் உடலுள் சேமித்து வைத்துக் கொண்டு, தடவைக்கு 75 முதல் 150 வரையிலான, ஒன்று முதல் ஒன்றரை மில்லி மீடர் நீளம் கொண்ட முட்டைகளை பல முறை, சாணம், மலம், இறந்த உயிரினம் இவற்றில் இடும்.  அந்த முட்டைகளும் ஒரே நாளில் புழுக்களாக (maggots) முட்டைகளில் இருந்து வெளியே வந்து உணவு உண்ண ஆரம்பிக்கும்.  இந்த நிலையில் அவற்றுக்குக் கால்கள் கிடையாது.

 

ஒரு வாரத்தில் புழுக்கள் உலர்ந்த, குளிர்ச்சியான இடங்களுக்கு நகர்ந்து, கருஞ்செங்கல் நிற கூட்டுப் புழுக்களாக மாறிடும்.  பின் இந்த கூட்டுப் புழுக்கள் உடலில் மாற்றங்கள் அடைந்து சிறகு கொண்ட ஈயாக மாறி, கூட்டுக்குள் இருந்து வெளியே வந்திடும்.

 

இறக்கை முளைத்து வெளி வந்த ஈக்கள் வாழ்வது இரண்டு வாரங்கள் முதல் ஒரு மாதம் வரைதான்.  ஆனால் அந்த ஒரு மாதத்திற்குள் மனிதனுக்கு என்ன கேடுகள் விளைக்க முடியுமோ அத்தனையும் விளைத்திடும்.  எப்படி?

 

ஈக்கள் அசுத்தமான இடங்களிலும், இறந்த மற்றும் அழுகிடும் உடல்களிலும் தங்கள் உணவைத் தேடுவதால், உண்பதால், அவற்றில் கால்களிலும் அவற்றின் உடலுள்ளும் பலவிதமான நோய்க் கிருமிகளும் இருக்கும்.  அவை நம் உணவின் மீதும் வந்து உட்காரும்.  உட்கார்ந்த உடன் எச்சிலைத் துப்பும்.  விடாது உணவு உண்டு கொண்டே இருக்குமாதலால் அவ்வப்போது சிறிது மலமும் கழிக்கும்.  . 

இப்படிப் பலவற்றையும் உண்டிட அதன் மீது அமர்வதால் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தன் கால்களால் கிருமிகளை பரப்புவது மட்டும் இன்றித் தன் மலத்தின் வழியேயும் வியாதிகளைப் பரப்பிடும்.  இப்போது புரிகிறாதா வியாதிகளைப் பரப்புவதில் உலகில் முதல் இடம் ஈக்களுக்கு ஏன் என்று? 

 

 

சரி இந்த அளவு நமக்குத் தீங்கிழைக்கும் ஈக்களுக்கு எதிரிகளே இல்லையா இவ்வுலகில் என்றால் இருக்கிறார்கள் என்பேன்.

 

ஈக்களைத் தன் உணவாகக் கொண்ட சில பறவைகள் உள்ளன.  உதாரணத்துக்கு “தேனீத் தின்னி, வால் நீண்ட கருங்குருவி”.  ஈக்களையே தன் பிரதான உணவாகக் கொண்ட உயிரினம் பச்சோந்தி. இவை தவிற கூட்டுப் புழு நிலையிலேயே அவற்றைக் கொன்று தின்று அதே கூட்டினுள் தன் முட்டையை இடும் ஒரு வகைக் குளவி, என இவை எல்லாம் ஈக்களின் எதிரிகள்.

 

இதோ இந்த ஈயின் கூட்டுப் புழுக்களைப் பாருங்கள்.  ஒவ்வொன்றிலும் ஒரு சிறு துவாரம்.  அதைச் செய்தது வேறு யாரும் இல்லை.  ஒரு குளவிதான்!

 


 Inline image 1



சரி இந்த ஈக்களை உலகில் எங்கெல்லாம் காண முடியும்?  உலகில் ஈக்கள் இல்லாத இடமே இல்லை எனலாம்.  மனிதர்கள் வாழ்ந்திடும் இடங்களில் பறக்கும் பூச்சிகளில் சுமார் 90 சதவிகிதத்துக்கும் மேலானவை ஈக்கள் தானாம்.

 

ஈ இல்லாத இடம் இல்லை

ஈ போல் எதிரி நமக் கில்லை

என்று பாடலாமோ?

 

இயற்கையில் தான் எத்தனை வினோதங்கள்!

 
நடராஜன் கல்பட்டு
--Geetha Sambasivam (பேச்சு) 08:48, 9 ஜூன் 2015 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=இறைவனைக்_காண்போம்!_49_ஈ!&oldid=13041" இருந்து மீள்விக்கப்பட்டது