ஶ்ரீராமனின் பாதையில்- அயோத்தி 5

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:30, 30 ஜனவரி 2014 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
அயோத்தி முடிவு! நந்திகிராமம்--தொடர்ச்சி!
பரதன் இருந்த குகையே இன்னொன்று விக்கிரமாதித்தனால் கண்டுபிடிக்கப்பட்டது என்ற அறிவிப்பைச் சென்ற பதிவில் பார்த்தோம். அதுவும் தற்போதைய "பரத் -ஹநுமான் மிலன் மந்திருக்கு அருகேயே உள்ளது.  அங்கே  சுமார் 27 தீர்த்தங்கள் உள்ளதொரு தீர்த்தஸ்தானம் இருக்கிறது.  தற்சமயம் அதைச் சுற்றிக் கிணறு போல் கட்டியுள்ளனர். பரதனின் குகைக்கான அறிவிப்புப் பார்க்கலாம்.  ஆனால் உள்ளே செல்ல விடுவதில்லை.



தவக்கோலத்தில் பரதன்.  இங்கே தன் மனைவியுடன் காணப்படுகிறான்.



பரதன் மனைவி மாண்டவி


மன்னனுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்கும் வண்ணம் நந்திகிராமத்திலேயே தங்கிய குலகுருவான வசிஷ்டர்


பரதன் தவமிருந்த குகை குறித்தும் 27 தீர்த்தங்களைக் குறித்துமான அறிவிப்பு


பரதன் பூஜித்ததாய்ச் சொல்லப்படும் ராமர் பாதுகை.  எழுத்தால் எழுதி இருக்கேன்.  ஆனால் மங்கலாகத் தெரிகிறது. :(


இக்ஷ்வாகு குலத்தவர் வழிபட்ட சிவன் சந்நிதி.  இது புதுசாய்த் தான் இருக்கு. ஆனால் முன்னர் லிங்கம் இருந்ததாய்ச் சொல்லப்படுகிறது.



தீர்த்தக் கிணறு.  இங்கே கோயிலை நிர்வகிக்கும் சந்நியாசி(பெரும்பாலான கோயில்களை சந்நியாசிகளே நிர்வகிக்கின்றனர்.) அன்று பலருக்கு அன்னதானம் செய்து  கொண்டிருந்தார்.  அதைப் படம் எடுக்கவில்லை. ஆனாலும் அன்னதானத்துக்கு எங்களால் ஆன தொகையைக் கொடுத்தோம். இம்மாதிரி நிறைய சந்நியாசிகளால் நிர்வகிக்கப்படும் கோயில்கள் அயோத்தியில் நிறைய இருக்கிறது.  வசூலும் நிறையவே கேட்கின்றனர். இதில் நிறையவே கவனம் தேவை.  இதற்கடுத்துத் தான் மணிபர்பத் போனோம்.  அங்கே பழைய பெளத்த ஸ்தூபம் மேலே இருக்கிறதாய்ச் சொன்னார்கள்.  செல்லும்போதே மணி ஐந்து ஆகிவிட்டது.  அதோடு மேலே ஏறவும் கூடாது என மருத்துவர்கள் கட்டளை.  முன்னோர்கள் வேறே மலை ஏறும் வழியில் கூட்டம் கூட்டமாய்க் காத்திருந்தனர்.  ஆட்டோவிலோ எதையும் வைத்துவிட்டுப்போகக் கூடாது என்று அன்புக் கட்டளை. காமிராவை வெளியே எடுக்க விடாமல் முன்னோர்கள் படுத்தல்.  தேநீர் குடிக்கக் கடைக்கு வெளியே அமர்ந்தால் கூடவே அவங்களும்!  அயோத்தி நகரை மேலிருந்து பார்க்கலாம் என்றும் சொன்னார்கள்.  எனினும் ஆவலை அடக்கிக் கொண்டோம். இதுவும் முற்றிலும் ராணுவப் பாதுகாப்போடு காணப்பட்டது.

சற்று நேரம் அந்த இயற்கையான சூழலில் அமர்ந்திருந்து தேநீர் அருந்திவிட்டுப் பின்னர் அங்கிருந்து கிளம்பி, நாங்கள் தங்கி இருந்த விடுதிக்குக் கிளம்பினோம்.  அங்கிருந்து இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆயிற்று.  அதுவும் வழியை அடைத்திருந்ததால் சுற்றிச் சுற்றி நகருக்குள் வரவே அரை மணிக்கும் மேலாயிற்று.  அங்கிருந்து விடுதிக்கு வந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு விடுதிக் காப்பாளரிடம் மறுநாள் கான்பூர் செல்ல வண்டி கிடைக்குமா என்று கேட்டோம்.  அவரும் கேட்டுவிட்டுக் கான்பூர் செல்ல வண்டியின் விலையைக் கிட்டத்தட்டக் கூறினார்.  எங்கள் பிரயாணத்திட்டத்தில் அயோத்தியிலிருந்து கான்பூர் சென்று அங்கே இருந்து அருகிலுள்ள பிட்டூர் என்னும் ஊரிலுள்ள வால்மீகி ஆசிரமத்தைக் காண்பது.  பின்னர் கான்பூரிலிருந்து கிளம்பும் சித்ரகூட் எக்ஸ்ப்ரஸில் சித்திரகூடம் செல்வது என இருந்தது.

ஆனால் கான்பூர் செல்ல லக்நோவைத் தாண்டித் தான் செல்லவேண்டும் என்றும் பணம் அதிகம் ஆகும் என்றும் சொல்ல பயணத்திட்டம் மாறியது. அயோத்தியிலிருந்து மீண்டும் லக்நோவே சென்று அங்கிருந்து கிளம்பும் சித்திரகூட் எக்ஸ்பிரசில் சித்திரகூடம் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டது.  விளைவுகள் எப்படி இருக்கும் என அப்போது தெரியாது. விடுதிக் காப்பாளரிடம் மறுநாள் லக்னோ செல்ல வண்டிக்கு ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு அன்றைய தினம் நன்றாய்க் கழிந்த திருப்தியுடன் மறுநாளைக் குறித்த கவலை ஏதுமில்லாமல் படுத்துத் தூங்கினோம். மறுநாள் விடிந்தது.

--Geetha Sambasivam (பேச்சு) 09:30, 30 ஜனவரி 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 30 ஜனவரி 2014, 09:30 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,201 முறைகள் அணுகப்பட்டது.