தமிழ் இலக்கிய வகைகள்-சுமேருத் தமிழ் உட்பட-1மரபு விக்கி இருந்துUlagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:13, 28 பெப்ரவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம் திராவிட மெய்யறிவு வரலாறு- 5.1 படலம் ஐந்து: ஆகமீயத்தின் தமிழக வரலாறு 1: அறிமானங்கள் தமிழ் இலக்கிய வகைகள்- சுமேருத் தமிழ் உட்பட-1 முனைவர் க். லோகநாதன் 2012
1.0 இதுவரை நாம் முதல் நான்கு படலங்களில் விளக்கியது “ஆகமீயம்” எனும் கோட்பாடாகும். திராவிட மக்களின் மெய்றிவின் வரலாற்றுப் போக்கினை இயலிய நூன்னெறி வழி புரிந்துகொள்ளும் ஓர் முயற்சியாகும். எந்திராயணம் மந்த்ராயணம் தந்திராயணம் என்றுப் பிரியும் இந்த ஆகமீயம், அனைத்தும் இறைவனது திருநடமே எனும் கோட்பாட்டின் இன்னொரு வடிவமாகும். உலகின் எல்லா மாந்தர்களின் சிந்தனை வரலாற்றினை புரிந்துகொள்ள வழி செய்யும் ஓர் கடைப்பிடி அல்லது ‘தெரிவி” (Theory) ஆகும். 1.1 திராவிட மெய்யறிவுச் சிந்தனையின் நெடிய வரலாற்றில் எத்தனையோ வகையான புதியப் புதியச் சிந்தனைகள் தோன்றி பலதறப்பட்ட இலக்கியங்களாக மலர்ந்துள்ளன. தொல்காப்பியம் எட்டுத் தொகை நூற்கள் தோன்றிய கடைச் சங்க காலமும் ஓர் இடைப்பட்ட காலமே. அதற்கு முன்பு இவற்றின் தோற்றத்தை முதரற் சங்க காலம் என கருத்தக்க சுமேருத் தமிழ் இலக்கியத்தில் காண்கின்றோம். இந்த பரந்துபட்ட இலக்கியங்களை எல்லாம் தொகுத்து முற்றாகப் பார்க்க, அடிப்படையில் ஓர் ஒழுங்கு ஓர் நியதி தோன்றுகின்றது. அடுத்தடுத்து வந்துள்ள இலக்கியங்கள் தற்செயலாய் தோன்றியவன அல்ல. 2.0 இந்த இலக்கியங்களின் தொகுப்பு ஓர் இயக்கதின் வெளிப்பாடு. முழுதாகப் பார்க்க புறவுரு-புதையுரு என்று நூலிய முறையிற் காண, புதையுருவாக பற்பல அறிவின் செலவுகள் இருப்பதைக் காண்கின்தோம். அவற்றையே ‘அறிமானங்கள்’ என்கின்றொம். (மார்> மான்> மானம்: அசைவு செலவு; அறிமானம்: அறிவின் செலவுகள்) தோன்றி நிற்கின்ற இலக்கியங்களைக் கொண்டு அவற்றின் புதையுருவாக நிற்கின்ற அறிமானங்கள் முதலில் அடையாளம் காணப்பட்டு , பிறகு இன்னும் நுழைந்து ஆழச் சென்று அத்தகைய அறிமானங்களையும் புரிந்து கொள்ள முயலும் போதே ஆகமீயத்தின் எந்திராயணம் மந்திராயணம் தந்திராயணம் போன்று கருத்துக்கள் பெரிதும் தேவைப்படுவது உணர்வோம். எந்திராயணத்தின் அறியந்திரங்கள் உளவெந்திரங்கள் போன்றவை இல்லையென்றால், இலக்கியங்கள் காட்டும் அறிமானக்கள் இல்லை, ஆகவே தோன்றி நிற்கின்ற இலக்கியங்களும் இல்லாதொழியும் 2.1 எல்லா அறிமானங்களையும் தொகுத்து பார்க்கும்போது அவற்றை மேலான பரச் செலவின் ‘பரமானங்கள்’ என்றும் உலகில் இயல்பான அபரச் செலவின் ‘அபரமானங்கள்” என்றும் வகுக்கலாம். இவற்றை இன்னும் இன்னும் நுட்பமாகவும் வகுத்துக் காணலாம். காட்டாக அபரமானங்களை, புறவாழ்க்கையை நிறுத்தும் புறமானங்கள் என்றும், அகவாழ்க்கையை நிறுத்தும் அகமானங்கள் என்றும் இவற்றை எல்லாம் புரிந்துகொள்ள விழைவதால் வரும் அகழ்மானம் என்றெலாம் வகுக்கலாம். இன்னும் பலவாறு பிறகு வரும். அபரமானங்களின் மேற்கணக்கு நூற்கள் 3,0 கடைச் சங்கம் மருவிய காலத்து நூற்கள் பெரும்பாலும் நயவிசாரணை செய்வதின் ‘கீழ்கணக்கு” நூற்கள் என, இதற்கு மூலமாக இருக்கும் உலக வழக்கையை மெய்ப்பட நிறுத்தும் பெரும்பாலான கடைச் சங்க காலத்து நூற்களை ‘மேற்கணக்கு நூற்கள்’ என்று கூறுவது தகும். காமம் வீரம் ஆகியவற்றையேப் பொருளாகக் கொண்டு கால இடக் கட்டில் விடமுடியாது அகப்பட்டு சிற்றறிவினவாகி. உலகியல் இன்பங்களையே பொருளாக மதித்து அவற்றையே அடைந்து மகிழும் வகையில் உயிரின் உழைப்புக்கள் இருக்க அதனின் அறிவின் செலவுகள் அபரமானங்களாவே இருக்க, எழுகின்ற இலக்கியங்கள் மேற்கணக்கு நூற்களாகும். காட்டாக குறுந்தொகையிலிருந்து ஓர் பாடல்: பாடல் 7: கண்டோர் கூற்றாக ஓர் இளம்பெண் தன் காதலனுடன் உடன்போக்கு செல்வதைப் பாடுவது. வில்லோன் காலன கழலே தொடியோள் மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர் யார்கொள் அளியர் தாமே யாரியர் கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி வாகை வெண்ணற் றொலிக்கும் வேய்பயி லழுவ முன்னி யோரே 3.1 இப்படிப்பட்ட உலகியல் நாட்டத்துப் பாடல்கள் உலகின் எல்லா மொழிகளிலும் முதன்முதல் தோன்றி இருக்க வேண்டும்- அடிப்படை வேட்கையாகிய காமத்துடன் வீரத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் இவ்வாறு. ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட முதற் சங்கத் தமிழாகிய சுமேருத் தமிழிலும் இத்தகைய உலகியல் நாட்டத்து குறும்பாடல்கள் பல உண்டு. காட்டாக: 1. உளு ஓடி உளு ஓடி 4. Ta. Eritu eekaaL (d) eeNkiga akam (“) 8. உளு ஓடு! கடுகல்லே சூர் தாக்கு எம்ம அவ் தொடரும்
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.2 4.0 இலக்கணச் சிந்தனை மேலே காட்டப்பட்ட மேற்கணக்கு நூற்களையே ஆய்ந்து வெளிப்படாது புதையுருவாகவே கிடக்கும் மெய்யியல்புகளை நுண்ணிதின் கண்டறியும் அறிவின் செலவுகள், அறிமானங்கள் இலக்கண நூற்களை படைக்க துணை நிற்கின்றன. சுமேருத் தமிழில் தோன்றி பல ஆயிரக்கணக்கான வருடங்கள் வளர்ந்து செழித்து கடைச் சங்க அல்லது இடைச் சங்க காலத்தில் தொல்காப்பியம் போன்ற மாபெரும் நூற்களாக வளர்ந்துள்ளன. முதன் முதலில் மொழியை எழுதும் முயற்சியில் பெரும் வெற்றி கண்ட சுமேருத் தமிழர்கள், நிச்சயமாக எழுத்தாராய்ச்சி போன்றவற்றில் சிறப்பாக மேம்படிருக்கவேண்டும் இல்லையேல் தொல்காப்பியம் போன்ற மாபெரும் இலக்கண நூற்கள் கி,மு, 500 வாக்கில் தோன்றி இருக்க முடியாது. இதற்குச் சான்றாக பல நூற்கள் பாடல்கள் சுமேருத் தமிழில் உண்டு. கண்டு கொள்க. 4.1 இந்த இலக்கண நூற்கள் அகத்தே கொண்டிருக்கும் அறிமானஙகளைக் காண, அவற்றை ‘பராபரச் செலவுகள்’ என்று கூறலாம --அபர உலகியல் மேற்கணக்கு இலக்கியங்களில் புதைந்து கிடக்கும் பரங்களை, உலகப் பொதுக்களை கண்டு மொழிபடுத்துவதால் இவ்வாறு. உலகியல் அனுபவங்களின் நேரடி மொழியியல் வெளப்பாடுகளை இலக்கியங்களாகத் தேர்ந்து, அவற்றை நூந்நெறி வழி இரட்டுரு நூற்களாகக் கொண்டு, புறவுருக்களின் வழி புதையுருக்களைக் கண்டு இலக்கணக் கூறுகளை தெளிவது என்பது தொல்காப்பிய மரபு கொண்டிருக்கும் தனிச் சிறப்பாகும். திராவிட மெய்யறிவுச் சிந்தனையின் போக்கையே நிறுத்துவது இதுதான். இதனாலேயே தமிழச் சிந்தனை தனிச் சிறப்புடையதாக சுடர்கின்றது. 4.2 இன்னும் ஓர் தனிச் சிறப்பையும் இங்கு மறவாது கூறவேண்டும் இலக்கியமாக தொல்காப்பிய மரபு யாதைக் கொண்டது என்று காணும் போது புலவர்களால் புனைந்து எழுதப்பட்ட பாடல்கள் கதைகள் செய்யுள்கள் போன்றவற்றோடு பேச்சு மொழியாகவே விளங்கிய மொழியாக்கங்களையும், அது பொழுது உடன் வரக்கூடிய மெய்ய்ப்பாடுகளையும் (paralinguistic features) மொழியின் கூறுகளாகவே கொண்டது வேறெங்கும் சமீப காலம் வரை கானாத ஒன்றாகும். ‘ செய்யுள் வழக்கு” ‘வழக்கியல் வழக்கு’ ‘நாடக வழக்கு” என்றெல்லாம் மொழியின் தோற்றங்களைக் கண்டு அவற்றோடு வரும் மெய்ப்பாடுகளயும் மொழியின் கூறுகளாகவேக் கொண்டு இலக்கண ஆராய்ச்சி செய்த சிறப்பு வேறெங்கும் கானாத ஒன்றாகும். 4.3 இவ்வாறு ‘மொழி’ என்பதை பல வகையான வழக்குகளின் தொகுப்பு, அதில் எழுதப்படுவது மாத்திரம் அல்ல எழுதப்படாத பேச்சு மொழியும் அதனோடு வரும் அங்கமொழியும்( body language) மொழிகளே எனக் கொண்டு எங்கெங்கு பொருளின், அர்த்தத்தின் வெளிப்பாடோ ஆங்கெல்லாம் மொழி இருக்கின்றது என்று உணர்ந்து, இவ்வாறான மொழிகள் வழியே காணவரும் பொருளாய்வே திராவிட மெய்யறிவு வரலாற்றின் உயிர்நாடியாக இருக்கின்ற ஓர் கூறுவாகும். இது நாம் வேறெங்கும் காணவும் முடியாத ஒன்றுமாகும். இனி அடுத்து எவ்வாறு தொல்காப்பிய மரபின் இலக்கண ஆய்வுகள் எந்திராயணம் மந்திராயணம் தந்திராயணம் எனும் முக்கூற்று ஆகிமீயத்தின் தோற்றுவாயாகவும் திகழ்கின்றது என்பதைக் கண்டு மகிழ்வோம். தொடரும்
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.3 தொல்காப்பியமும் ஆகமீயமும் 5.0 தொல்காப்பியத்தின் ‘பொருள் அதிகாரம்’ எனும் மூன்றாம் நூலே முதன்மையானது. இதனைத் திறன்படச் செய்யவே சொல்லதிகாரமும் எழுத்ததிகாரமும் தோன்றி இருக்கவேண்டும். பொருள் அதிகாரமாவது, மக்கள் காணும் பொருள்(meanings) அதாவது வேட்கைகளைப் பற்றிய ஆய்வாகும். எதன் பொருட்டு மொழித் தொழில் உடற்றொழில் உளத் தொழில் என்றவாறு பல்வேறு தொழில்களில் விழுந்து பற்பல வெளிப்படுத்துகின்றார்களோ அவையே ‘பொருள்’ எனப்படுவது. ‘நாட்டங்கள்’ எனினும் அமையும். 5.1 இவற்றை எல்லாம் தொகுத்து அகத்திணை என்றும் புறத்திணை என்று பாகுபடுத்தியது, மேலும் இவற்றை கைக்கிளை பெருந்திணை என்ற நிலன் இல்லா இரண்டு திணகளோடு நிலன் உள்ள குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என்றவாறு திணைகளை ஏழு ஆக்கி அவற்றின் புறமாக வெட்சி போன்ற இன்னும் பல திணைகள் வழியாக புரிந்துகொண்டது மிகவுஞ் சிறப்பானது. இவற்றில் அகந் ஐந்திணை ஏற்புடைத்து என்று கூறி நிலன் இல்லாத கைக்கிளையையும் பெருந்திணையையும் பாடற்குரியது அல்ல என்று ஒதுக்கியுள்ளதும் சிந்தனைக் குரியதாகும். நிலன் உள்ள நடு ஐந்திணையும் அன்பின் ஐந்திணை எனப்பட, நிலன் இல்லாத ஒருதலைக் காமம் ஒவ்வாக காமம் போன்ற இருபாலரும் புரிந்துகொண்டு ஒத்தமனதினராய் அன்பினராக வாழாத கைக்கிளையும் பெருந்திணையும் போற்றக் கூடியது அல்ல என்று உணர்த்தியுள்ளது அக்காலத்து நயவிசாரனையின் பண்பைக் காட்டுகின்றது. மனம் ஒத்தலே தெய்வீகமாகும் நல்லதுமாகும் என்று குறிப்பாய அவர்கள் உணர்த்தியுள்ளனர். 6.0 இனி எல்லா பொருட்களையும் அதாவது பதார்த்தங்களையும் முதல் கரு உரி எனக்கொண்டு இந்த திணகட்கு இவற்றை ஒதுக்கியுள்ளதும் சிறப்பானது. பாலைக்கு தனி நிலன் இல்லை. படுதிரை வையம் பாத்திய பண்பாகிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பவற்றின் திரிபு நிலையே, வறட்சியுற்ற நிலையே பாலை என்பதாகும். இனி உரிப்பொருளாக கொள்ளப்பட்டவை கீழ் வரும் தொல்காப்பியச் சூத்திரத்தில் தெளிவு: ‘புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை தேருங்காலை திணைக்குரிப் பொருளே’ பேச்சு மொழி செய்யுள் மொழி அங்கமொழி என மொழி ஏன் ஓரிடத்தில் ஓர் காலத்தில் மெய்ப்பட உளதாகி நிற்கின்றது? என்ற கேள்வி எழ, உரிப்பொருள் அவ்ற்றின் நிமித்தம் காரணமாக என்ற விளக்கம் இங்கு. ‘பிரிவு’ என்ற உரிப்பொருள் எழுந்து நிற்க ‘சென்று வருகின்றேன்’ என்பன போன்ற மொழியாக்கங்கள் மெய்யாகின்றன என்பதொடு வருத்தம் மிக்க தோற்றமும் அங்கமொழியாக அங்கு வந்தமைகின்றது. 7.0 இனி கடைச்சங்க இலக்கணப் புலவர்கள் மொழிகள் மூலம் செய்த பொருளாய்வில் இதனோடு நிற்கவில்லை. மொழி வெளிப்பாடுகளின் மூல நிலனாக ஐந்திணைகள் இருக்க, அவை அசத்துப் பொருளாகவே இருக்க, பொருளோடு கூடிய மொழியின் ஊக்கிகளாக அவை இருக்க முடியாது. மற்று யாவைதான் உண்மையான மொழி ஊக்கிகள்? என்று கேட்டு ‘தெய்வங்களே !’ என்று முடிக்கின்றார்கள். காண்க: மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன் மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே இங்கு பாலைக்கு தனி தெய்வம் இல்லை. எப்படி பாலை தனி நிலன் அல்லையோ, ஏனைய நிலன்களில் புதைந்து கிடக்கும் ஒன்றோ, அதேப் போலத்தான் அதன் தெய்வமும்: மாயோன் சேயோன் இந்திரன் வருணன் போன்ற தெய்வங்களின் மூல தெய்வமாகிய களவியலில் கூறப்படும் ‘பாலது ஆணை’ என்ப்படு ‘பால்’ எனும் சிவப்பரம்பொருளே பாலைத் திணையின் தெய்வமாகும். 8,0 இவற்றை எல்லாம் தொகுத்து பார்க்கும்போது, தொல்காப்பியர் பொறிலியப் பார்வையின் மேற்கணக்கு நூற்களை கண்ட கையோடு, அவற்றை இரட்டுரு நூற்களாகக் கொண்டு திணைகளாகிய புதையுருவைத் தேடிச் சென்றமையின், நூலியப் பார்வையும் பெற்றவராக தெரிகின்றார். மேலும் மூலத்தில் இப்படி சித்துப் பொருட்களாகிய தெய்வங்களை மேலும் மூலமுழுமுதல் தெய்வமாக சிவபரம்பொருளைக ‘பால்’ எனப்பட்ட தெய்வத்தை கொண்ட சிறப்பின் காரணமாக அவர் நுதலியப் பார்வையும் பெற்றவராக தென்படுகின்றார். இது பழம் பெரும் ஓர் மரபு என்றும் தொல்காப்பிய சூத்திரங்களிலேயே அறியக் கிடக்கின்றது என்பதின் கடை சங்க காலத்திற்கு முன்பே தோன்றிவிட்ட ஓர் மரபாகும் எனபதும் தெளிவு 8.1 இவ்வாறு பொறிலியப் பார்வை நூலியப் பார்வை நுதலியப் பார்வை என்று பல பார்வைகள் வழியாக மொழியையும் பொருளையும் கண்ட சிறப்பின் அவர்கள் எந்திராயணம் மந்திராயணம் தந்திராயணம் எனும் முக்கூற்று ஆகமீயத்தின் வழி மொழி ஆய்வு அல்லது பொருளாயவு செய்தவர்கள் என்பது உண்மையாகின்றது. தொல்காப்பியர் காலத்திலேயே இன்று இங்கு இந்நூலில் மிக விரிவாக வரலாற்றின் போக்கினை திறன்பட தெரிந்துகொளத் தரும் தெரிவியாக விளக்கப்ப்டும் ஆகமீயம் அன்றே அடையாளம் தெரியும் வகையில் விளங்கியுள்ளதைக் காண்கின்றோம். எங்கே தெய்வங்களே அவற்றின் தந்திரங்களாலேயே மொழியாக்கங்கள் என்று அவர்கள கூறுவதின் இதன் உண்மை அறியக் கிடக்கின்றது. தொடரும்
திராவிட மெய்யறிவு வரலாறு- 5.4 2: அறவழிச் சிந்தனையின் கீழ்கணக்கு நூற்கள் 9.0 நந்நயம்(நல்லது) அந்நயம்(அல்லது) என்பவை யாவை எனும் கேள்வியே ‘நயவிசாரணை”. இதையே அறநெறி ஆயவு என்றும் வடமொழியார் தர்மம் எது அதர்மம் எது என்ற ஆய்வு என்றும் கூறுவர். வடமொழியார் வேதமும் வேதம் சார்ந்த நூற்களும் யாதை பரிந்துரைக்கின்றதோ அவையே தர்மம் என்று கூறி நயவிசாரனையை வேத மரபில் முடக்க, தமிழ் நூற்கள் அதிலும் குறிப்பாக கீழ்கணக்கு நூற்கள் பரந்த விரிந்த முறையில். பல கோணங்களில் இந்த நயவிசாரணையை செய்து திராவிட மக்களுக்கு பெரும் புகழைச் சேர்க்கும். ‘நெறி’ என்பது ஓர் வாழ்க்கை முறையாகும். இதில் ‘நந்நெறி’ என்பதே போற்றுதற்குரிய வாழ்க்கை முறையாகும். எப்படி வாழ்வது? என்ற அடிப்படை மெய்யறிவு கேள்விக்கு அமையும் பதிலே “ ‘நந்நெறிச் சார்ந்து” என்பது. இந்த நந்நெறியே தமிழர் தம் அறநெறியாகும். இந்த அறநெறியை பல்வேறு கோணங்களில் அலசும் நூற்களே பதிணெண் கீழ்கணக்கு நூற்கள் ஆகும். உலகியல் நாட்டங்களை, காமத்தை வீரத்தைப் பாடும் நூற்கள் மேற்கணக்கு நூற்களாக, அந்த அபரச் சிந்தனை விட்டுக் கழன்று பரச் சிந்தனையில் வீழ்ந்து, வாழ்க்கைக்குத் தேவையான நந்நெறி தான் யாது என்ற நயவிசாரனை (ethical investigations) எழ கீழ்கணக்கு நூற்களின் தோற்றத்தைக் காண்கின்றோம். புறவுருவாக நிற்கும் உலகியல் சிந்தனையில் புதையுருவாக, அடியில் கீழே புதைந்து கிடப்பதை வெளிப்படுத்தி இலக்கியமாக வடிக்கும்போது பிறப்பனவே கீழ்கணக்கு நூற்கள். 9.1 இந்த நயவிசார்ணை பிறகு தனியோர் படலத்தில் மிக விரிவாக ஆயப்படும். இங்கு இத்துறையின் நூற்களாகிய கீழ்கணக்கு நூற்களும் அவற்றின் தோற்ற மூலமாக இருக்கும் சிந்தனை எந்திரங்களே பொதுவாகவும் சுருக்கமாகவும் விளக்கப்படும் 9.2 இத்தகைய நூற்கள் சங்கம் மருவிய காலத்தில் அதாவது கி.பி 2ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 4-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலப்பகுதியில் தோன்றியவை எனினும், நயவிசாரனை மிகவும் தொன்மையானது. திராவிட மெய்யறிவுச் சிந்தனையை, சுமேருத் தமிழ் இலக்கியங்களையும் உள்ளடக்கிக் காணும் போது இதன் உண்மை தெரியவரும், உலகத்தில் முதன் முதல் எழுதப்பட்ட நூலாக அறிஞர்களால் கருதப்படும் சுமேருத் தமிழ் ‘சூருபாக்கின் நெறி( nari)” கி,மு 3000 ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்ட ஒன்றாக இருக்கலாம். அதில் புதைந்து கிடக்கும் பெரும்பாலான விசயங்கள் ஏது நுதலிய முதுமொழிகளாக. அறத்தை வற்புறுத்தும் மொழிகளாக இருக்கின்றன. தந்தை மகனுக்கு உரைத்து நல்வழிப்படுத்தும் திறத்தனவாக இந்நூல் அமைகின்றது. காண்க: Suuruppaakin NeRi 38. ki.sikil dam tuku-e-de nam-mu-un-ne-e inim.sig.ga mah-am ( Do not speak with a girl if you are married(?). the slander is strong) கீ சுக்கில தம் தொகுயிட்டே நாம் முன்னியே, எனம் சீக்க மா ஆம் " Ta. kii sukkila tam tokuyiddee naam munniyee, enam ciikka maa aam ( Don't try to abduct a virgin in order to get a wife, the slander will be great) >>> இத்தகைய அறிவுரைகள் பழமொழி போன்ற வடிவில் வந்தாலும், மேலே காட்டியதைப் போல, ஏது நுதலிய முதுமொழிகளாகவும் இருக்கின்றன. பிறகு அளவைச் சிந்தனையின் தோற்றத்தை இத்தகைய முதுமொழிகளிலேயே காணவிருக்கின்றோம். 10.0 திணைவழி நயம் அல்லது அறம் கடை சங்க காலத்தின் மிகச் சிறபான ஆய்வு பொருளாய்வும் அங்கு ஏழு திணைகளை அகம் என்றும் அவற்றின் புறம் என்றும் வகுத்து எல்லா வகை மொழியாக்கங்களையும் அதன் வழி செயல்களையும் வகுத்தறிந்ததே. அதில் ஒருதலைக் காமத்து கைக்கிளையையும் ஒவ்வாக் காமத்து பெருந்திணையையும் நிலன் இல்லா ஆகவே மூலத்தில் தெய்வங்கள் இல்லா திணகளின் ஒழுக்கங்கள், ஆகவே போற்றப்படக்கூடியவை அல்ல, நல்லது அல்ல, நயமானது அல்ல என்றவாறு தேர்ந்தது சிறப்பிற்குரிய ஒன்றாகும். இதனால் அன்பின் ஐந்தினை ஒழுக்கங்களாகிய முல்லை குறிஞ்சி பாலை மருதம் நெய்தல் ஆகிய ஒழுக்கங்கள் தாம் நயமானவை என்று மதிக்கப்பட்டிருக்கின்றது. உல்க வரலாற்றில் முதன் முறையா வெளிப்படும் ஓர் நயப் பண்பு ஆகும். எந்த ஒழுக்கம் தெய்வத்தால் ஊக்குவிக்கப்படுகின்றதோ, அத்னால் எந்த ஒழுக்கம் அன்பின் மேம்பாட்டினால் பல்லோருடன் ஒத்துப்போகும் பண்புடையதாக யாவை இருக்கின்றதோ அவை நயமானவை என்ற மதிப்பீடு வேறெங்கும் காணாவொன்று. இந்த போக்கினை விடாது வளர்க்கும் கீழ்கணக்கு நூற்களில் ‘திணை மாலை 50” ‘ஐந்திணை 70’ ‘திணை மொழி 50” ‘திணை மாலை 150” போன்ற நூற்களும் இன்னும் பலவும் இருக்கின்றன. ‘களவழி’ என்னும் நூல் புறத்திணையை சார்ந்த ஒன்றாகத் தெரிகின்றது. திணைமால போன்றவை அகநானூறு புறநானூறு போன்ற பாடல்கலின் சுருகங்களாக அமைய களவழிப் பாடல்கள் புறத்திணை ஒழுக்கத்தின் குறும்பாடல்களாக அமைகின்றன; காண்க 7: அஞ்சனக் குன்றேய்க்கும் யானை அமருழக்கி இங்குலிகக் குன்றே போல் தோன்றும் - செங்கண் வரிவரால் மீன் பிறழும் காவிரி நாடன் பொருநரை அட்ட களத்து உரை: வரால் மீன் பிறழும் காவிரி நாடன் தன்னோடு போர் செய்வாரைக் கொன்ற போர்க்கலத்தில், நீல மலையைப் போன்ற யானைகள் போரின் கலை கலங்கி சாதிலிங்க மலையைப் போல் சிவந்து தோன்றும் இங்கு போரில் பகைவரைக் கொள்ளல், போற்றற்குரிய ஓர் செயலாகப் பாடப்படுவதைக் காண்க. ஓர் கொலைத் தொழில் இப்படிப்பட்ட சூழல்களின் நல்ல ஒன்றாக ஆய்விடுகின்றது 11.0 சுவை வழி நயவிசாரனை மிகவும் பழமையானதும் பல பண்பாடுகளில் காணவருவதுமாகிய ஒன்றே ‘நந்நயம் அந்நயம்’ என்பவை சுவை தொடர்புடையன என்று மதித்து மனதிற்கு எது இனியதாக இதமாக இருகின்றதோ அதுவே நயமானது, இன்னாதது அல்லது கசப்பானது அகிதமானது பொல்லாதது, அந்நயம் என்று மத்தித்தலுமாக பல கீழ்கணக்கு நூற்கள் உள்ளன. அவை ‘இனியவை 40’ ‘இன்னா 40’ போன்றவை ஆகும்; கட்டாக ‘இனியவை 40’ பாடல் 3: ‘ஏவது மாறா இளங்கிளைமை முன் இனிதே நாளும் நவைபோகான் கற்றல் மிக இனிதே ஏருடையான் வேளாண்மை தான் இனிது ஆங்கு இனிதே தேரிற்கோள் நட்புத் திசைக்கு” பொருள்: ஏவலை மாறாது செய்யும் மக்களுடைமை மிகவும் இனிது. குற்றம் இலனாய் நாள்தோறும் சிறப்பான நூற்களைக் கற்றல் மிக இனிது. தனக்கென உழு காளைகளை உடையான் பயிர்த்தொழில் இனிதான ஒன்று. அதுபோல தான் செல்லும் திசை எல்லாம் நட்பு பாராட்டல் இனிய ஒழுக்கமாகும். இங்கு இனிய இன்னா போன்ற மதிப்புக்கள் திணைச் சிந்தனையை விட்டு நீங்கி உள்ளத்து எழும் உணர்வினை முன் நிறுத்தி ஓர் செயலின் நயப் பண்பினை அளக்கும் போக்கினைக் காண்கின்றோம் 12,0 மருந்தியல் நயவிசாரணை நல்லது என்பது மனக் கவலை மனப்பிணி என்பன போன்ற அவதிகளைப் போக்குவது எனும் கருத்து மிகப் பழமையானதும் பரவலானதும் ஆகும். கீழ்கணக்கு நூற்கள் பல இத்தைய வழியில் நயவிசாரனை செய்வன வாகும், ‘திருகடுகம்’ ‘ஏலாதி’ ‘சிறுபஞ்ச மூலம்’ போன்ற நூற்கள் அவற்றின் பெயரிலேயே இத்தகைய சிந்தனைப் போக்கினை காட்டி நிற்கின்றன. காட்டாக ‘சிறுபஞ்ச மூலம்’’ எனும் நூலிலிருந்து ஓர் பாட்டு; 4. கற்புடையப் பெண் அமிர்து கற்று அடங்கினான் அமிர்து நற்புடைய நாடு அமிர்து நாட்டுக்கு - நற்புடைய மேகமே சேர்கொடி வேந்து அமிர்து சேவகனும் ஆகவே செய்யின் அமிர்து பொருள்; மனைவியின் கற்பொழுக்கம் கணவர்க்கு மனப்பிணைகளை எல்லாம் போக்கும் அமிர்து, வெகுவாக கற்று ஞானம் வளர்த்து செருக்கெல்லாம் ஒழித்தான் சொல் உலகத்தார்க்கு ஆயுளை நீட்டிக்கும் அமிர்து. நட்பு பாராட்டி போற்றி வரவேற்கும் நாடுகள் அமிர்து, அமைதியை விரும்பும் அருள் மழை பெய்யூம் மேகத்தையேக் கொடியாகக் கொண்ட வேந்தனது அரசாட்சி மக்களுக்கு அமிர்து; அதேப் போலவே அரசாட்சிக்கு உறுதுனையாக இருக்கும் அரசு சேவர்கள் செயல்களுமாம். இங்கு நயமான ஒழுக்கங்கள் செயல்கள், அவற்றின் தோற்ற மூலம் கருதப் படாது, அவை கொண்டு வரும் பயன்களைக் கருதியே நயம் என்றும் அந்நயம் என்றும் மதிக்கப்படுவதைக் காண்க. தொடரும் திராவிட மெய்யறிவு வரலாறு- 5.5. 13,0 மெய்யுணர்வின் நயவிசாரண மெய்யுணர்வு என்பதும் மெய்யறிவு விசாரனை என்பதும் திராவிட சிந்தனை வரலாற்றில் மிகப் பழையானது என்பதொடு மையமானதும் ஆகும். இது பொதுவாக எலல பண்பாட்டிலும் அமைந்த ஓர் கூறும் ஆகௌம். சுமேருத் தமிழ் சூருபாக்கின் நெறியிலேயே ‘ நிகழ்நம் கல்கல்-இன் நிகவே மெய் கல்கல்’ என்று வருவதோடு, யார் மெய்களைக் கற்று அகத்திலே இருத்துகின்றார்களோ அவர்களது கண்கள் ஒளிவிட்டுச் சுடரும் என்ற குறிப்பும் அங்கு உண்டு. நந்நயம் என்பது மெய்யுணர்வைத் தருவது, அந்நயம் என்பது அதற்குப் புறம்பானது என்ற கருத்து கடைச் சங்க நூற்களிலும், கீழ்கணக்கு நூற்கள் பலவிலும் மிகவும் பரவலாக காணப்படும் ஒன்றாகும். காட்டாக சில: கணிமேதாவியார் தன் ஏலாதியில்: மையேர் தடங்கண் மயிலன்னாய் சாயலே மெய்யறிவினை ஆராய்ந்து தெளிந்தாரே மேலானவற்றை உரைக்கின்ற திறனை பெறுவர்; பிறர் சிற்றறிவும் சினமும் பொய்யும் கபடும் கள்ளமும் உடையராய் சாக்காடு தரும் உடல்நோய் மனநோய்கட்கு ஆளாகுவர் என்கின்றார். மேலும் பொய்கையார் தம் இன்னிலையில்: உண்மை மால் ஈர்த்து இருள்கடிந்து சார்ஐயம் பெரும் ஆற்றலோடு அற்பப் பொருட்களின்மேல் அவாவினை கொண்டு செல்லும் ஐம்புலன்களை, எண்ணுதல் திறத்தோடு அறிவாய்விற்கு ஆளாக்கி ஊர்ந்து செல்கின்ற இயல்பினை தனது இயல்பதாகக் கொண்டு வாழ்கின்ற ஒருவன் அதனால், உண்மையறிவினை மறைத்து நிற்கும் மாலாகிய அகத்திருளை ஈர்த்து துமித்து அறுத்து இலாப்போக்கி, உளத்திலே பற்பல புண்கள் -- கலக்கங்கள் அவதிகள் உலைச்சல்கள் -- போன்றவற்றை உளதாக்கும் ஐயந் திரிபுகள விலக்கி, பொருட்களை மெய்யாகக் காணும் திறனுடைய நுண்ணுணர்வினனாகி, இதன் காரணமாக மேலாகி, தெய்வபதத்திற்கு சமமாகிய அண்ணா நிலைப் படுவன் என்கின்றார். 14.0 பழமொழியும் நயமும் பழமொழிகள் என்பன நாலாயிர ஆண்டுகட்கு முற்பட்ட சுமேருத் தமிழ் இலக்கியங்களில் பரவலாக காணப்படும் ஒன்றாகும். இத்தகைய பழமொழிகளின் தொகுப்புக்கள் பல அக்காலத்திகேயே உண்டு. பழமொழிகள் என்பன வாழ்க்கை ஓட்டத்தில் தோன்றி வாழ்வின் பல கூறுகளை ஆழ விளக்கும் பண்பினதாய் விளங்கி, ஓர் அழகிய சூத்திரம் போல் அறிவினை துளக்கி நிற்கும் சொல்லாட்சிகள் ஆகும். ‘தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை’ என்பது ஒர் பழமொழி. குழந்தை வளர்ப்பு முறையைப் பற்றி ஓர் கருத்து இங்கு ஓர் உவமையோடு சொல்லப்படுகின்றது. ஓர் தாய் எப்படிப்பட்ட குணத்தவளோ அவளைப் போலவே அவள் வளர்த்து விடும் குழந்தைகளும் இருக்கும் என்பதே இங்கு வெளிப்படும் கருத்தாகும், இத்தகைய பழமொழிகள் காலத்துக்குக் காலம் தோன்றி மக்கள் நாவில் நின்று பின் மறைந்து ஒழிவன, கீழ்கணக்கு நூற்களில் ஒன்றாக ‘பழமொழி 400’ என்றவோர் அழகிய நூல் முன்றுரை அரையனார் எனும் சமணப் பெரியார் ஒருவரால் படைக்கப்பட்டு இன்றளவும் முற்றாக கிடைக்கும் நூலாக இது விளங்குகின்றது. அதிலிருந்து காட்டாக ஓர் பாடல்: 4. உள்ளூர் அவரால் உணர்ந்தாம் முதல் எனினும் எள்ளாமை வேண்டும் இலங்கிழாய்! – தள்ளாது அழுங்கல் முதுபதி ‘அங்காடி மேயும் பழங் கன்று ஏறாதலும் உண்டு’ உரை: விளங்கும் அணிகலன்களை அணிந்தவளே! ஒருவன் கைமுதல் சிறிதேயானாலும், விடா முயற்சியினால் அதனைப் பெரிதாக்கித் தன்னை இகழ்ந்த ஊரும் மெச்ச வாழலாம். முயற்சிதான் வேண்டும். பழைய ஊரிலுள்ள ஆரவாரம் மிகுந்த கடைத் தெருவில் மேய்ந்த மெலிந்த கன்றும் பின்னொரு காலத்தில் நலமே வளர்ந்து எருதாகிச் சிறப்படைதலும் உண்டு காண். இங்கு உவமை நயத்தோடு, இன்று அற்பமாகத் தோன்றும் ஒன்றை இகழக்கூடாது, பின் ஒரு நாள் அது மிகவும் சிறப்புற்றதாக விளங்கவும் கூடும் என்னும் நயச் சிந்தனையை ஓர் பழமொழி தாங்கி வருவதை இங்கு காண்கின்றோம். ஓர் தனி மனிதனின் உள்ளுணர்வாக எழும் ஓர் நயம், மக்களிடையே பரவலாக பரவி விட்டால் அது பழமொழியாகி குமுகாய உணர்வினையே நயத்தையே உருவாக்கி விடுகின்றது. 15.0 முத்தி முன்னறிவின் அறநெறி திராவிட மெய்யறிவு வரலாற்றில் முடிவானதும் மிக ஆழமானதும் பிற பண்பாடுகளில் அவ்வளவாக போற்றபடாதுமாகிய அறக் கோட்பாடு முத்தி முன்னறிவோடு தொடர்புடையது. உலகப் புகழ் பெற்று தமிழிற்கு பெரும் புகழைச் சேர்க்கும் திருக்குறளில் ஒருவாறு தோன்றி பின் சைவ சித்தாந்த நூற்களிலும் இன்னும் பல நூற்களிலும் விரிவாக ஆராயப்பட்ட அறநெறிக் போட்பாடு இதுவாகும். வீடுபேற்றிக்கு இட்டுச் செல்லும் செயல்களே அறச் செயல்கள், மற்றவை எல்லாம் புறச் செயல்கள் என்று விளக்கத் தொடங்கி அறநெயை திருநெறியாக்கிய பெருமை இந்த கோட்பாட்டிற்கு உண்டு. இனிய இன்னா என்றெல்லாம் கருதப்பட்ட நயம் அந்நயம் போன்ற மதிப்புக்கள் பாவம் புண்ணியங்கள் என்று உயர்ந்ததும் கன்மமாகிய இருவினைக் கருத்தோடு தொடர்புற்றதும் இங்குதான். சமயம் சார்ந்த முறையில் நயவிசாரணை சிறப்பதையும் இங்கு காண்கின்றோம். இதுவே பத்தி காலத்திற்குப் பிறகு மிக மிக விரிவாக ஆராயப்பட்ட விசயமாகவும் இருப்பதை பிற படலங்களில் காண இருக்கின்றோம் இங்கு இதன் தோற்றுவாய திருக்குறளில் வெளிப்பட்டிருப்பதை சுருக்கமாக இங்கு கண்டு பிறகு மிகவும் விரிவாக காண விருக்கின்றோம் கீழே வரும் குறள் வெண்பாக்களைக் காண்க: ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்” “ இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’ இங்கு ‘பிறவிப் பெருங்கடல் நீந்தல்’ என்பது வீடுபேறு அடைதல், முத்தி நிலைத் தலப்பட்டு மீண்டும் பிறவாமை மகிழ்தல். அது இறைவன் அடி சேரவேதான் மெய்யாகும் ஒன்று, மேலும் இருவினையாக கன்மத் தளையில் பட்டு உழன்றுகொண்டே இருந்தால் ஆன்மா அகத்தே இருளைச் சேர்க்கும் ஆணவ மலம் மிகும் என்று கூறி, சைவ சித்தாந்த மரபில் பெரிதும் பயிலும் கருத்துகளை இங்கு திருவள்ளுவர் அறிமுகப் படுத்துகின்றார் என்பதையும் காண்க. இனி இப்படிப்பட்ட இறைவனைப் போற்றிப் புகழ்ந்து மெய்யாக அவனது இயல்புகளை உணர்ந்து அனபின் அவனை நெருங்கவேதான் இந்த மலங்களின் தாக்கத்திலிருந்து விடுபட்டு தூய்தாகி செய்வதெல்லாம் நயமானதாகவே இருக்கும் என்கின்றார் இங்கு. இதன்வழி மறைந்து போன மிகப் பழைய, சுமேருத் தமிழிலேயே மிகவும் சிறப்புற்று இருந்த பத்தியின் மறுமலர்ச்சிக்கு வித்திடுகின்றார். தொடரும். |