அன்றொருநாள்: மார்ச் 18மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:14, 19 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் இன்னம்பூரான்
‘அன்றொருநாள்: மார்ச் 10 & 18: வாழ்க! நீ எம்மான்!’ இழையின் தொடரே இது. பொன்னூட்டங்கள் அளித்த அன்பர்களுக்கு நன்றி. என் கடன் பணி செய்து கிடப்பதே என்பவர்கள் பின்னூட்டம் எதிர்ப்பார்க்கலாகாது என்று மற்றொரு இழையில் விவாதிக்கப்பட்டது. இழைக்கு ஷோபை தருவதே பின்னூட்டம் தான். எழுதுபவருக்கு டானிக். அவை இழைக்கு மேன்மை தரக்கூடும் என்பதற்கு,‘அன்றொருநாள்: மார்ச் 10 & 18: வாழ்க! நீ எம்மான்!’ இழை ஒரு சான்று. ஒரு அரிய திரைப்படமே வந்திறங்கியது. அரிய புதிய தகவல்களையும், கருதுகோள்களையும் தேடி வரவழைக்கத் தூண்டும் பின்னூட்ட டானிக் என்பதற்கு சான்று, இன்றைய இந்த இழை. பின்னூட்டங்களே! உங்களை முன் வந்து, ‘வருக, வருக’ என்று வரவேற்கிறோம்.
‘ஒரு மனிததெய்வத்தின் கீர்த்தி பாடப்பட்டது’ என்ற அன்றைய ஈற்றடியின் அடித்தளம், 1819லியே இங்கிலாந்தில் எழுதப்பட்ட ஒரு அரசியல் சார்ந்த கவிதை. அதுவே நவீன ஒத்துழையாமை இயக்கத்திற்கு அடி கோலியது என்பது அநேக வரலாறுகளில் காணப்படாத உண்மை. பி.பி.ஷெல்லி என்ற பிரபல கவிஞரின் The Mask of Anarchy என்ற அந்த கவிதை தன்னை மிகவும் பாதித்ததாக, அண்ணல் காந்தி கூறியிருக்கிறார். அந்த கவிதையின் பின்னணியை சற்றே நோக்குவோம்.
‘பீட்டர்லூ படுகொலை’ என்று கேள்விபட்டிருக்கிறீர்களோ? 1819 ம் வருடம். அக்காலத்தில் இங்கிலாந்தில் நடைமுறையில் இருந்த உணவு தான்யம் பற்றிய சட்டம் ஏழை மக்களை மிகவும் பாதித்தது. சோத்துக்கு லாட்டரி. மக்களில் 2% செல்வந்தருக்கு மட்டுமே வாக்குரிமை. மான்செஸ்டரில், ஆகஸ்ட் 16 காலை, ஒரு கூட்டம் கூடியது; கட்டுக்கோப்புடன், கெளரதையாக நடந்து கொண்டனர், ஏழை மக்கள். ஒரு ஜட்கா வண்டி தான் மேடை. பேன்னர்களில் ‘சீர்திருத்தம் வேண்டும்’, ‘வாக்குரிமை’, ‘பிரதிநிதித்துவம்’ என்ற கோஷங்கள். மேலும் கேளுங்கள். ‘அன்பு வேண்டும்’ என்ற கனிவான பிரார்த்தனை. அதிகார வர்க்கம் மிரண்டது. ஒரு மினி ஜாலியன்வாலா பாக்! பாய்ந்து, பாய்ந்து வந்த படை நிராயுதபாணிகளாக, கெளரதையாக வந்திருந்த மக்களை தாக்கியது. கத்தியால் குத்தப்பட்டு இறந்தவர்கள் 18; படுகாயமுற்றோர் 700. ஒரே ஒரு ராணுவ அதிகாரி, இந்த படுகொலையை எதிர்த்தார். யாரும் செவி சாய்க்கவில்லை. அதிகப்படி சோகம் யாதெனில், தாக்கிய படையில் இருந்த உதவி பட்டாளத்தில் இருந்து தாக்கியவர்கள் பாமரமக்களே. அரச குடும்பம் முதல், ஆளுமை இந்த தாக்குதலை ஆதரித்தது ஒரு வெட்கக்கேடு. இங்கிலாந்தில், வாழ்க்கையின் எந்த இன்னல்கள் பாடுபடுத்தினாலும், அந்த நாட்டு மக்களிடையே, ஒரு மெல்லிய நகைச்சுவை ரேகை ஓடிய வண்ணம் இருக்கும். நெப்போலியனை வீழ்த்திய வாட்டர்லூ போருக்கு விழா எடுக்கும் ஆங்கிலேயர்கள், ‘பீட்டர்லூ’ என்று ஒரு இழிவுச்சொல்லையும் ஆங்கில அகராதியில் சேர்த்து விட்டனர்.
இந்த துர்ச்சம்பவத்தின் விளைவுகள்: 1.மக்கள் சக்தி பெருகியது. 2. வாக்குரிமை கிடைத்தது. 3. தொழிற்சங்கங்கள் அமைக்க, இது ஹேதுவாயிற்று. 4. மான்செஸ்டர் கார்டியன் என்ற மக்களாதரவு இதழ் தோன்றியது. அதற்கும், நமக்கும் உள்ள சம்பந்தம் பற்றி ஒரு நாள் எழுதலாம்.
இது பற்றி ஷெல்லி எழுதிய The Mask of Anarchy என்றை நீண்ட கவிதை, அஹிம்சை ஒத்துழையாமை இயக்கத்தின் கோட்பாட்டை தெளிவுறக் கூறிய இலக்கியமாக, கருதப்படுகிறது. பீட்டர்லூ நடந்த வருடமே எழுதப்பட்ட இந்த கவிதையை 13 வருடங்களுக்கு பிறகு ஷெல்லி காலமான பிறகு தான் பிரசுரிக்க முடிந்தது. முதல் சில வரிகளின் தமிழாக்கத்தை, என்னால் இயன்றவரை, உரை நடையில் அளித்து, முழு கவிதையை உசாத்துணையாக, இணைக்கிறேன்.
“காவற்காடு. அடர்த்தியான காடு. வானளாவிய நெடுமரங்கள். அந்த வனாந்திரம் போல சாந்தி நிலவுகிறது. கை கட்டி கட்டுக்கோப்பாக நிற்கும் உங்களிடம் நன்மரங்களைப் போல் அசையா உறுதியை, உங்கள் கண்ணொளியில் காண்கிறேன். தோல்வி காணாத போரின் சின்னங்கள் அவை தான். கொடுங்கோலர்கள் ஊடே பாய்ந்து வெட்டிக் குத்தினாலும், கட்டுக்கோப்பாக நிற்கும் உங்களுடைய கண்ணொளியில் ‘அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!’ என்ற ‘பளிச்’ மின்னல்! அவர்களின் ஆத்திரம் தணியும். நாணமிகுந்து, சிவப்பேறிய கன்னங்களுமாக, குனிந்த தலையுடன், வருவார்கள். ‘மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்/ சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து/வேரிமயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி/ மூரிநிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்/ போதருமாப்போலே...’ மக்கள் சக்தியான நீ, தளைகளை உதறி, நீண்ட துயில் கலைந்து புறப்பட்டு விட்டாய்! வெற்றி நமதே. நீ ஒரு திரள். அவர்கள் ஒரு சுருள்...’
எந்த கடலிலிருந்து மூழ்கி எடுக்கப்பட்டாலும் நன்முத்து, நன்முத்தே. இந்த மான்செஸ்டர் நகருக்கும், மஹாத்மா காந்திக்கும் ‘அன்பு வேண்டும்’ என்ற கனிவான பிணைப்பு ஒன்று உண்டு. உற்ற தருணம் கிடைத்தால், அதை சொல்கிறேன்.
இன்னம்பூரான் 18 03 2012
http://www.ualberta.ca/~dmiall/Shelleys/Peterloo.jpg
உசாத்துணை: http://www.archive.org/stream/masqueanarchyap00huntgoog#page/n6/mode/2up
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:14, 19 மார்ச் 2012 (UTC) |