அன்றொருநாள்: மார்ச் 8

மரபு விக்கி இருந்து

Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:46, 17 மார்ச் 2012 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

இன்னம்பூரான் 


குடமுருட்டி ஆற்று வெள்ளம் போல்...



என் தந்தை தான் ‘ஓஹோ’ என்று படித்தவன் இல்லை என்று சொல்லிக்கொள்வார். அது அவருடைய ஏக்கம் போலும். ஆனால், ஒன்று திண்ணம். பால்யத்தில், நிலைப்படியில் அரிக்கேன் லைட்டை வைத்துக்கொண்டு, அப்பா சொல்லிக்கொடுத்த கவிதைகள், போகும் போதும், வரும்போதும் சொன்ன வரலாற்று தகவல்கள், தேசாபிமான கருத்துக்கள், செலவை பார்க்காமல் அவர் வாங்கித் தந்த நூல்கள், இவை தான் என்னை ஆளாக்கியிருக்கின்றன. அவருக்கு உணர்ச்சி பிரவாஹமெடுக்கும். டென்னிஸனின் ஈனாக் ஆர்டென், மாத்யூ ஆர்னால்டின் ஸோஹ்ரப் & ரஸ்டம் சொல்லிக்கொடுக்கும்போது, அவருடைய கண்களில் நீர் சுரக்கும். துடைத்துக்கொள்ள மாட்டார். சத்தமில்லாமல், அம்மா பிசைந்த சாதம் கிண்ணிகளில் தருவாள். மஹாகவி பாரதிக்கு, அவர்

கரும்புத் தோட்டத்திலே - ஆ!
கரும்புத் தோட்டத்திலே

ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும்
மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு
மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர்
கண்ணற்ற தீவினிலே - தனிக்
காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் - அந்தக்
கரும்புத் தோட்டத்திலே...’

என்று புழுங்கிய போது, செல்லம்மா பாரதி இப்படித்தான் அமுது அளித்தாளோ?

இன்று ஸோஹ்ரப் & ரஸ்டம் வந்து நிற்கிறார்கள்.தொன்மையில் (the ‘mystical’) பிறந்த கதை. , ஶ்ரீமத் பாகவத புராணம் கேட்பது போல், ஏகாக்ரஹசித்தத்துடன், கதை கேளும்.

பிறக்கும் போதே, ஜால் என்ற அரசனின் குமாரன் ரஸ்டம் ஒரு வயது குழந்தை போல் புஷ்டி. நாளாவட்டத்தில் அரும்பு மீசை.‘ஷாம்’ என்ற குண்டாம்தடியையும், ஒரு புரவியையும் அன்பளிப்பாக கொடுத்து, பகையை வென்று வாகை சூடி வா என்று அனுப்புகிறான், அரசன். புரவிக்கு ரஸ்டம் ராகுஷ் (மின்னல்) என்று பெயர் வைக்கிறான். போன இடத்தில் தமீனாவை மணக்கிறான். ஸோஹ்ரப் பிறக்கிறான். ரஸ்டம் தன்னுடைய தேசத்திற்கு திரும்புமுன், புதல்வனுக்காக கொடுத்த வைடூர்யத்தை, வயது வந்த பின், விவரம் சொல்லி தருகிறாள், தமீனா. தந்தையை தேடி தனயன் செல்லும் இடமோ அந்தக்காலத்து மரபுக்கு ஒக்க, போர்க்களம்.விதி விளையாடுகிறது, ஐயா! அவன் தேடி வரித்த புரவியோ, ராகுஷின் மகவு! ஸோஹ்ரப் அணுகிய சான்றோன் பெரன் விசா கூட தடுக்கவில்லையே. போட்டாபோட்டி. ஒருவரை ஒருவர் அறியாத பரிதாப நிலை. கடுமையான மோதல். தந்தை மகனை படுகாயப்படுத்தி விடுகிறான். தன் தந்தைக்கு மட்டுமே அந்த வலிமை உண்டு என்று நம்பிய ஸோஹ்ரப் அந்த வைடூர்யத்தைக் காட்டுகிறான். என்னை ‘மகனே’ என்று அழைக்கவேண்டும் என கோருகிறான். அது முடிந்த பின் தந்தை மகனுக்கு எழுப்பிய கல்லறையில், ‘அறியாமையினால், தந்தை ரஸ்டம் கொன்ற ஸோஹ்ரப் இங்கே உறங்குகிறான்’ என்று செதுக்கி வைக்கிறான். அபிமன்யூ வதம் போல் இல்லை?

...So, on the bloody sand, Sohrab lay dead;
And the great Rustum drew his horseman's cloak
Down o'er his face, and sate by his dead son.
As those black granite pillars, once high-reared
By Jemshid in Persepolis,to bear
His house, now 'mid their broken flights of steps
Lie prone, enormous, down the mountain side —
So in the sand lay Rustum by his son....’

மாத்யூ அர்னால்ட் 1853ல் எழுதிய இந்த நீண்ட கவிதை, ஒரு அருமையான ஒரிஜினலில் இருந்து மொழியாக்கமே. ஒப்பற்ற அசல் கவிதை ‘ஷாநாமா’ என்ற பெர்சியன் காப்பியத்திலிருந்து. 60 ஆயிரம் செய்யுள்களை கொண்ட அந்த காப்பியத்தின் ஆயிரமாண்டு விழா உலக இலக்கிய மையங்களில், 2010ல் விமரிசையாக கொண்டாடப்பட்டது. ஈரானின் வரலாற்றுத் துவக்கத்திலிருந்து கிருத்துவுக்கு பின் ஏழாவது நூற்றாண்டு வரை அந்த நாட்டை அரசு வம்சாவளி, மெய்க்கீர்த்தி, இந்த காப்பியம். கிரேக்கக் காப்பியங்களுடன் ஒப்பியல் செய்தால், இதன் பெருமைக்கு மெருகு ஏறுகிறது. அதை எழுதி முடித்த தினம்: மார்ச் 8, 1010.


தன்னுடைய காப்பியதை அதீதமாக அனுபவித்தது, அவரே. அவர் பேச்சை கேளும்: ‘...நாம் வாழும் இல்லங்கள், மாரி பெய்து, வெயில் காய்ந்து அழிந்து போகும். ஆனால், எந்ததொரு சூறாவளியும், பெருமழையும் என்னுடைய கவிதை ஆகிய மாடமாளிகையை தொட இயலாது...’ என்று தொடங்கி, காப்பியம் அரங்கேற்றமான பின் , அழுத்தம் திருத்தமாக சொல்கிறார், ‘...இந்த வரலாற்றுக்கவிதையை முடித்து விட்டேன். உலகே என்னை பற்றித்தான் பேசும். எனக்கு அமரத்துவம் பிராப்தம். இங்கு நான் ஊன்றிய விதைகள் என் பெயரையும், புகழையும் என்றென்றும் போற்றி பாதுகாக்கும். சான்றோர்களும், ஆன்றோர்களும் என்றென்றும் என் கீர்த்தியை இசைப்பார்கள்...’

நியாயம் தான். தொன்மை ஐதீகங்களும், வரலாறும், மெய் கீர்த்தியும், பாமரகீர்த்தியும், குடமுருட்டி ஆற்று வெள்ளம் போல், உருண்டும், திரண்டும், புரண்டும் வரும் இந்த காப்பியத்தை வடிக்க அவர் எடுத்துக்கொண்ட காலம் 35 வருடங்கள். மூன்று வம்சாவளிகளும், ஐம்பது மன்னர்களும் அதில் உலா வருகின்றனர். ஆங்காங்கே, எள்ளலும், நகைச்சுவையும் மெருகைக் கூட்டுகின்றன. தார்மீக சிந்தனைகளும், வாழ்வியலின் நுணுக்கங்களும் ஆங்காங்கே தீபாரதனை செய்கின்றன.

தமிழா! நீ எல்லா சமுதாயங்களை பற்றியும், கலாச்சாரங்களை பற்றியும், பண்புகளை பற்றியும், மரபுகளை பற்றியும் கற்றுணர்ந்து மகிழ்வாயாக.

இன்னம்பூரான்

09 03 2012

http://www.livius.org/a/iran/tus/firdausi.JPG


உசாத்துணை

http://www.angelfire.com/rnb/bashiri/Farr/iranhistdawn.html










--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:46, 17 மார்ச் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=அன்றொருநாள்:_மார்ச்_8&oldid=10752" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 17 மார்ச் 2012, 02:46 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,020 முறைகள் அணுகப்பட்டது.