மெய்த்துவிட்ட ஒரு கசப்பான ஆரூடம்:014மரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 13:42, 11 ஆகஸ்ட் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் இந்தக் கட்டுரைத் தொடரை ஆரம்பித்ததே 1961- ல் நான் எழுதிய கட்டுரை ஒன்றில் தமிழ் சமூகம் என்றைக்காவது ஒரு கலை உணர்வு கொண்ட சமூகமாக இருக்குமா என்பதில் எனக்கு சந்தேகம் என்று எழுதியிருந்ததையும் அந்த மிகக் கசப்பான ஆரூடம் போன்ற தமிழ்ச் சமூகத்தின் குணச்சித்திரம் அன்று என் மனத்தில் பட்டது. இன்று வரை மெய்யாகிக் கொண்டிருக்கும் அவலத்தைச் சுட்டிக் காட்டிச் சொல்லியே ஆரம்பித்தேன். அறுபது வருடங்கள் கடந்து விட்டன. அது பற்றி இன்று மறுபடியும் யோசிக்கும்போதுகூட அந்த ஆரூடம், இனியாவது என்றாவது பொய்த்துப் போகக்கூடும் என்று சொல்லுவதற்கான சூசகங்கள் ஏதும் அடி வானம் பூமியைத் தொடும் எல்லையில் கூட, ஒரு சிறு கரும்புள்ளியாகக் கூடத் தென்படுவதாயில்லை.
இக்கட்டுரைத் தொடருக்கு வரும் எதிர்வினைகள் இரு பெரும் வகைகளில் அடங்கும். ஒன்று, நான் நம் தமிழ் சினிமாவைப் பற்றி ஒரு வெறுப்புணர்வுடன், அசிங்கமாக எழுதுவதாக சொல்லும் தரப்பு. இத்தரப்பு, என் மீது அடங்காத கோபத்தில், நான் சொல்வது எதையும் கருத்தில் கொள்ளாமல், தமிழ் சினிமாவின் கனவுலக மயக்கத்தில், நமது ஸ்டார்களின் - (சூப்பர், சுப்ரீம், மெகா என்றெனப்படும், இன்னும் என்னென்ன ரகங்கள் உண்டோ எல்லா ரகங்களையும் ‘சார்’ வகையறாக்களையும் சேர்த்துத்தான்) - மாயா ஜாலப் பிரகாசத்தில் கண் கூசி நிற்கும் ரகத்தைச் சேர்ந்தது. இரண்டாவது தரப்பு, நான் இதையெல்லாம் ஏதோ இப்போது தான் எழுதத்தொடங்கி யிருப்பதாகவும், இதை முன்னரே சொல்லியிருந்தால் தமிழ் சினிமா இதற்குள் உருப்பட்டிருக்கும் என்ற என்ணத்தில் எழுதுகிறவர்கள். தமிழ் சமூகத்தைப் பற்றிக் கொண்டுள்ள, இதை விட, உண்மைக்கு முற்றிலும் புறம்பான, கற்பனையான, தமிழ் சமூகத்தை ஒரு நூற்றாண்டுக் காலம் விடாது பீடித்திருக்கும் நோயைப் பற்றிய தவறான கணிப்பும் சிகிச்சையும் வேறு என்ன இருக்கக்கூடும் என்பது எனக்குத் தெரியவில்லை. இவர்களுக்கு நான் சொல்வது பிடித்திருக்கிறது, ஆதலால் இந்த அவல நிலை மாற வேண்டும் என்ற ஆவலில், அவர்கள் இத்தகைய ஒரு அசாதாரண நம்பிக்கை கொள்கிறார்கள் என்றே எடுத்துக் கொள்கிறேன். நூற்றாண்டுக் காலமாகப் பீடித்திருக்கும் நோய், காலம் செல்லச் செல்ல முற்றிக்கொண்டுதான் வருகிறது அந்த நோய், அது பற்றி, அது நோய் என்ற உணர்வு கூட இல்லாது, மாறாக அதைக் கண்டு பெருமையும் கர்வமும் கொள்ளும் சமூகம், தாம் ஏதோ உலகத் தரத்துக்கு உயர்ந்து விட்டதாக எண்ணும் பிரமையில் இருக்கும் சமூகம், இப்படி ஒரு சில கட்டுரைகளால், சினிமாத் துறைக்கு வெளியே இருக்கும் ஒரு சிலர் வெளிப்படுத்தும் கருத்துக்களால் மாறி விடும் என்று எப்படிக் கனவு காணமுடிகிறது?
ஏதோ ஒன்று முதலில் நிகழ வேண்டும். “இதென்னய்யா இது? ஒரே பைத்தாரக் கூத்தாட்டம் இருக்கு? நம்மை என்ன மடையன்னு நெனச்சிட்டிருக்காங்களா இவனுக. இவனுங்களுக்குத் தான் மூளெ பெரண்டு கிடக்குன்னா, நம்ம எல்லாருக்குமில்ல ஒட்டு மொத்தமா மூளை பெரண்டு கிடக்குமுன்னு நெனச்சிக்கிட்டானுவ, கபோதிப் பயலுவ ” என்று மக்கள். இந்தத் தமிழ் சினிமா என்னும் விவஸ்தை கெட்ட ஆட்டத்தை அறவே ஒதுக்கியிருக்க வேண்டும். அது தான் நியாயமாக, மக்களின் பொதுப்புத்தி செய்திருக்க வேண்டும். அல்லது, இந்த சினிமா உலகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருக்கும், (இருக்கும் என்று தான் நினைக்கிறேன். எல்லா ஜீவன்களுக்கும் கடவுள் அருளால் பொதுப்புத்தியும் இருக்கத் தான் செய்கிறது) தம் வீட்டுப் பரணில் தூக்கி எறியப் பட்டிருக்கும் தங்கள் பொதுப்புத்தியைத் திரும்ப எடுத்து வந்து, பின் தான் ஸ்டுடியோக்குள் நுழைய வேண்டும். அது நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. 1960-61 வருடங்களில் எழுதிய “பாலையும் வாழையும்” கட்டுரையிலா, இல்லை பான்ஸாய் மனிதன் கட்டுரையிலா எதில் என்று சரியாக எனக்கு இப்போது நினைவில் இல்லை.
\இது சினிமாத் துறையிலிருந்து எழ வேண்டும். பராசக்தி வசனத்தைப் படித்தும், பீம்சிங் அவருடைய பொதுப் புத்தியைப் பயன்படுத்தி இருந்தால் கருணாநிதியிடம், ”;இதென்னங்க உங்க கட்சிக் கூட்டத்திலே பேசற மாதிரி இருக்கு. கோர்ட்டிலே எல்லாம் இப்படி பேசமாட்டாங்கன்னு தெரியாதுங்களா உங்களுக்கு?. இதெல்லாம் பெரியார் திடல்லே கட்சிக்காரங்க கூட்டத்திலேதான் எடுக்கும். மொதல்லே ஒண்ணு ரெண்டு கோர்ட்டுக்குப் போய் அங்கே என்ன எப்படி நடக்குதுன்னு பாத்துட்டு, இதையெல்லாம் திருத்தி எழுதிட்டு வாங்க. உங்க இஷ்டத்துக்கு எதையும் எழுதிட்டு வந்தா ஆச்சா,. இது சினிமாங்க, உங்க கட்சிப் பொதுக்கூட்டம் இல்லே” என்று அடுத்த நிமிடம் திருப்பிக் கொடுத்திருப்பார்.அது நடக்கவில்லை. மாறாக, அது தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை, புது அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த மைல்கல்லாகிவிட்டது. இன்று வரை அது தொடர்கிறது.
அசோக் குமார் என்று ஒரு ஹிந்தி நடிகர். அச்சுத் கன்யா காலத்திலிருந்து அவர் ஒரு ஹீரோ. அதாவது நாற்பதுகளிலிருந்து. ஐம்பதுகளில், திலீப் குமார், தேவ் ஆனந்த், ராஜ் கபூர் ஆகியோரின் சிகரத்தில் இல்லையென்றாலும் அடுத்தபடியில் அவரும் ஒருவர். அவரைத் தமிழ்ப் படம் அழைத்தது. வாசனோ, மெய்யப்பச் செட்டியாரோ, யாரென்று நினைவில் இல்லை. முதல் நாளே ஷூட்டிங் போது, அவர் சொன்னாராம். “ பக்கத்திலே தானே இருக்கீங்க பின்னே என்னத்துக்கு இந்தக் கூச்சல் போடறீங்க? ரெண்டு பேரும். மெதுவா எப்போதும் பேசறாப்போல பேசுங்களேன். ஏன் இப்படி உரக்கக் கத்திக் கத்திப் பேசறீங்க?” என்றாராம். பராசக்தி, நடிகர் திலகம் “ஓடினாள், ஓடினாள்… சமாசாரங்க ” எல்லாம் நமக்கு பொரச்சி ஆயிடுச்சே. உணர்ச்சி பொங்க நடிக்கறதுண்ணு அர்த்தமாமே அதுக்கு, நாமும் ஏதாச்சும் ஒரு திலகம் ஆகணுமில்லே, உப்புச்சப்பில்லாமே பேசினா எப்படி? அசோக் குமாருக்கு இருந்தது வெறும் பொதுப் புத்தி. நம்ம சினிமா வரலாறு என்ன, கலாச்சாரம் என்ன, , பண்பாடு என்ன, அது எதினாச்சும் அவருக்கும் தெரியுமா என்ன? விஷயம் தெரியாம பேசிப்புட்டாரு. எனவே அவர் கேட்டதை நாம் கண்டுக்கவே இல்லை. பீம்சிங் வாய்மூடி இருந்த அந்த கணம் மு.க.கருணாநிதியின் வசனம் சினிமாவானது. அவரும் கலைஞர் ஆனார். விழுப்புரம் கணேசன் போட்ட கூச்சல் அவரை நடிகர் திலகம் ஆக்கியது..
அதற்கு முன்னால், தியாகராஜ பாகவதர் தான் சினிமாவாக இருந்தார்.. அவர் பாட்டுக்காக அவரையும் பாட்டையும் மையமாகக் கொண்டு சினிமா உருவானது. கேட்கச் சுகமாக இருக்கலாம் .(அன்று 40-50 களில். ஆனால், இன்று “உயிரணுக்கள் உடம்பில் எத்தனை” என்று கிதாரை வைத்துக்கொண்டு தென் அமெரிக்கப் பாலைவனத்தில் பாட வேண்டும் “கா. கா. கா…பாட்டு.ஆரம்பித்து வைத்த புரட்சி) அன்று எந்த இயக்குனரும் பாகவதரிடம், “சரிங்க நல்லா பாடறீங்க.அதெல்லாம் சர்த்தான். கேக்க சுகமாத்தான் இருக்கு. ஆனால் இதெல்லாம் சினிமா இல்லிங்க. இதுக்கு இசை நாடகம்னு சொல்லுவாங்க. பாட்டிலேயே. கதை சொல்ற நாடகம்.” என்று யாரும் நினைக்கவில்லை. சொல்லவில்லை. அப்போது பாட்டாவது கேட்க சுகமாயிருந்தது. போகுது போ,” என்று விடத் தோன்றியது. அது இப்போது, ”நாக்க மூக்க” வில் வந்து நிற்கிறது. ‘பொரச்சி தான். உலகத் தரம் தான். இந்த டெக்னிக்கில பாருங்க, நம்ம தமிழ் சினிமா கிட்ட யாரும் வந்துக்கிட முடியாது பாத்துக்கங்க.” தான்.
இப்படியே யாரும் ஏதும் கேள்வி கேட்காமலேயே, அழுக்குப் போகக் குளிப்பது போல, பொதுப் புத்திபோக நன்றாகத் தேய்த்து குளித்துவிட்டுத் தமிழ் சினிமாவில் புரட்சி செய்துகொண்டி ருக்கிறோம். எப்போதும், ஒன்று அது தியாகராஜ பாகவதரோ, இல்லை நடிகர் திலகமோ, இல்லை, மக்கள் திலகமோ, இப்படித்தான்,, வரிசையாக, ஒவ்வொருவரும் தம்மை மையமாக வைத்துக்கொண்டே, தம்மையே சினிமாவாக்கிக்கொண்டு வந்துள்ளனர். இப்போது அது உலக நாயகனையும், சூப்பர் ஸ்டாரையும் சினிமாவாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
எப்போதும் ஒரு ஸ்டாரை வைத்து அவருக்கேற்றவாறு கதை எழுதுவது, அந்த ஸ்டார் தன்னையே சினிமா முழுதும் வியாபித்துக்கொள்வது, அதுவும் அவர் விருப்பத்துக்கேற்ப, அல்லது அந்த ஸ்டார், தன் ரசிகர்கள் எப்படித் தன்னைப் பார்க்க விரும்பிறார்கள் என்று நினைக்கிறாரோ அதற்கேற்ப, படம் முழுதும் தன்னை வியாபித்துக் கொள்வார் என்றால், இது கடை வைக்கிற காரியம். வெறும் வெறும் வியாபாரம். அந்த ஸ்டார் நடிகரும் இல்லை. கதை தமிழ் வாழ்க்கையும் இல்லை. அந்தப் படம், சினிமாவும் இல்லை. வெங்காய வியாபாரம். ஒவ்வொரு ஸ்டாரும் ஒரு ப்ராண்ட்.
இயக்குனர் என்பவர் கடைக்கு வந்து யார் என்ன கேட்கிறார்களோ, புளியோ, பருப்போ, பொட்டலத்தில் மடித்துக் கொடுத்து, கல்லாவில் காசைப் போடுகிறவராயிருக்கிறார் இங்கு. . தயார் செய்தது யாரோ, யார் விருப்பத்திற்கோ, என்று ஒரு இயக்குனர், ‘கமல் சார், ரஜனி சார் என்று எப்போது ஒரு நடிகனைப் பார்த்துச் சொல்கிறாரோ, அந்த இடத்தில் சினிமா இராது. நடப்பது வெங்காய பஜ்ஜி வியாபாரம். ரஜனிசார் என்றால் வாழைக்காய் பஜ்ஜி, சத்ய ராஜ் என்றால் (பாவம் இவருக்கு ஏன் சார் இல்லை?) கத்தரிக்காய் பஜ்ஜி. கமல் சார் என்றால் வெங்காய பஜ்ஜி. வெங்காயத்தைச் சுற்றி, அதை மையமாகக் கொண்டுதான் மற்றதெல்லாம். ரோல், கதை, துணைநடிகர்கள், நடிகைகள், ஹீரோயின்கள் பாட்டு, டான்ஸ் இத்யாதி எல்லாம், வெங்காயத்தை மையமாகக் கொண்டு தான், மற்ற, கடலை மாவு, அரிசிமாவு, மிளகாய்த் தூள், உப்பு, எண்ணெய் எல்லாம். மற்றதெல்லாம் இல்லாமல் வெங்காயம் மாத்திரம் பஜ்ஜி ஆகாது. அதற்காக, வெங்காய பஜ்ஜி என்ற ப்ராண்ட் மாறாது.
இதில் கூட பஜ்ஜிகள் பெயர் மாறுவது போல, உலக நாயகன் பஜ்ஜி வேறு. சூப்பர் ஸ்டார் பஜ்ஜி வேறு. இரண்டு பேருமே, சந்தைக்கு வரும் சரக்குகள் தாம். இவர்கள் மாத்திரமல்ல, எல்லாருமே, எல்லாமுமே. சுப்ரீம் ஸ்டார் ஆகட்டும்- (சுப்ரீம் ஸ்டார் என விருது கொடுக்கப்பட்டது நேத்துக்கு முந்தின நாள். இன்று திமுகவை விட்டுப் பிரிந்து வேறு ஒரு முன்னேற்றக் கழகம் தொடங்கிய பின், சுப்ரீம் ஸ்டார் எனக் கலைஞர் அழைப்பாரா என்பது சந்தேகம் தான்) - அது இயக்குனர் சிகரமாகட்டும், இசை ஞானி யாகட்டும், மதராஸ் மொஸார்ட்டே ஆகட்டும், எல்லாம் இந்த பஜ்ஜிகளுக்கு இரண்டாம் பட்ச சாமக்ரியைகள் தான். ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசங்கள் உண்டு. இரண்டும் கறிகாய் வகை தான். ஆனாலும், வெங்காயம் வெங்காயம் தான். உருளைக் கிழங்கு உருளைக் கிழங்குதான்.
ரஜனி சார், அதாவது சூப்பர் ஸ்டார் தான் மையம். அவரைச் சுற்றித் தான் மற்ற எல்லாமே..உருவாகியுள்ள தன் இமேஜ், தன் ரசிகர்கள் தன்னிடம் எதை எதிர்பார்க்கிறார்கள் என்பதை மாத்திரம் இயக்குனர் மனத்தில் இருத்திக்கொள்ளவேண்டும். அதற்கேற்பக் கதை, அதற்கேற்ப அவருக்கு ரோல், இத்யாதி. இதைத் தவிர இயக்குனரையும் மற்றவர்களையும் அவர் படுத்த மாட்டார். சூப்பர் ஸ்டார் என்ற இமேஜைக் கண்டு அவர்கள் தங்களையே படுத்திக் கொண்டால் அது வேறு விஷயம். படுத்திக்கொள்கிறார்கள் தான், பின் அதைப் பற்றிப் பெருமையாக மேடைகளில் பேசிப் புளகாங்கிதமும் அடைவார்கள்.
ஆனால், உலக நாயகன் விஷயமே வேறு. அவர் பெரிய கலைஞர். உலக சினிமால்லாம் பாக்கறவர். ஊர்லே இருக்கற கவிஞர்களுக்கெல்லாம் அவர் தோஸ்த் ஞான குரு. ஜாக்கி சானெல்லாம் அவர் கூப்டா ஓடியாருவாங்க. ஓரோரு படத்திலேயும் அவர் மேக்கப் போடறதே தனி. மேக்கப்பும் போடணும், அது கமல்ஹாஸன் உலக நாயகன்னும் தெரியணும். அதிலே தான் இருக்கு விஷயமே. குள்ளனா வருவாரு. டான்ஸ் ஆடுவாரு. டான்ஸ் ஆடி பெரிய பெரிய பட்டமெல்லாம் வாங்குவாரு. தானே பாடுவாரு. பொம்பிள வேஷம் போடுவாரு. பத்து வேஷம் போட்டு தசாவதாரம் பண்ணுவாரு. சொல்லப்போனா, தன் படத்திலே இருக்கற எல்லா வேஷமும் அவரே போட்டுக்குவாரு. அவர் போடாத வேஷம் ரொம்ப கொஞ்சம் தான்., படத்திலே வர்ற குதிரை நாயி, இந்த வேஷங்க தான் அவர் இன்னும் போடலை. மனோரமா ஆச்சி மாதிரி ஏதாச்சும் இருந்தா, போனாப் போகுது அவங்களே வந்து நடிச்சுக்குடுத்துட்டுப் போகட்டும், என்று தாராளமாக விட்டுக் கொடுத்து விடுவார். அப்படித்தான் அசின், ஜோதிகா, ஸ்ரீதேவி, சிம்ரன், இப்படி இவங்க வேஷங்களை எல்லாம் அவர் விட்டுக் கொடுத்துடுவாரு., கவிதை எல்லாம் எழுதுவாரு. தான் நடிக்கிற படத்துக்கு தானே கதையும் வசனமும் எழுதிக்குவாரு. இயக்குனர் வேலை முக்காவாசியையும் அவரே செஞ்சிக்குவாரு. டான்ஸ் ஆடறதுக்கு டோரண்டோ, பிராங்க்ஃபர்ட்ன்னு தான் போவாரு. இங்கே நம்ம ஊரிலே டான்ஸ் பண்றது அவ்வளவா அவருக்கு பிடிக்காது. அவர் ரசிகர்களுக்கும் பிடிக்காது.
இதெல்லாம் ஏன்? அவர் ஏன் பத்து வேஷம் போடணும், ஏன்? ஒவ்வொரு படத்திலேயும் மேக்கப் புதுசு புதுசா போட்டுக்கினே இருக்காருங்கறதுக்கு, அவரது சுய மோகம் தவிர வேறு ஏதாகிலும் கலாரீதியான தேவை, காரணங்கள் இருக்கா என்று யோசித்தால் அவரும் சொல்லவில்லை. நமக்கும் புலப்படவில்லை. சுய மோகம். அத்தோடு தன் புதுப் புது அவதார மகிமைகளுக்கு வேறு யாரும் உதவியதாகக் கூட அவர் மூச்சு விடுவதில்லை. எல்லாச் சிறப்புக்களும் தனக்கே என்று ஆசைப்படுபவர். எல்லாவற்றிலும் இருக்கும் பரம்பொருள் மாதிரி. பாத்த ஆளுங்கள்ளாம் உலக நாயகன் தான். சகலகலா வல்லவன் தெரியுமில்லே. அதான். இந்த சுய மோகம் தான் தன் வேஷங்களில் கூட அது கமலஹாஸன் தான், உலக நாயகன் தான் என்று தன்னையே காட்டிக்கொள்வதில் பிரியமுள்ளவர். இன்னுமொன்று. நடிப்பிலே மன்னன். அதுக்கு வேண்டிய இடம் படத்தில் தனக்கு வேண்டும் என்பதற்காகவே தன்னையே படம் முழுதுமாக விஸ்தரித்துக்கொள்வார். அந்த வசதிக்குத் தான் கதையைத் தானே எழுதிக்கறதும். அதுக்கு வசதியாத்தான் இயக்குனரின் பாதி வேலையைத் தானே செய்யறதும். அதிலே அயல் நாட்டு ஷூட்டிங்குக்கும் வழி செய்துக்கணும். தன் இடம் கலை சார்ந்தது. தன் ஒரு காலத்திய சகா ரஜனியோ பாமர ரசனைக்குத் தீனி போடுகிறவர்.
தன்னைப் போல உலகத்துக் கலைப் படங்களையெல்லாம் பார்த்து, அது எல்லாத்தையும் தமிழுக்கு கொணாந்துடனும்னு ஆசப்பட்டுத்தான், (இதை மத்தவங்க காப்பின்னு சொல்றாங்க) ஒவ்வொரு படமும் விதவிதமா, விதவிதமா வேஷம் போட்டு எடுக்கற காரணம். பாரதியாரே சொல்லியிருக்கருல்லே. “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரமெல்லாம் தமிழில் மொழி பெயர்த்தல் வேண்டும்”னு. அதைச் சினிமாலே வேறே எப்படிச் செய்யறதாம். அவர் குரு பாலசந்தரே அதைத் தான் நாளும் செஞ்சிட்டிருந்தார்?
|