தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களேமரபு விக்கி இருந்துKsubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:41, 22 டிசம்பர் 2012 அன்றிருந்தவாரான திருத்தம் தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே!
இது என் மனதில் பல நாட்களாக இருந்த ஒரு சந்தேகம். தில்லையிலே குடி கொண்டிருப்பவர் கோவிந்தராஜர். அதிலும் அவரின் கதையும் அனைவரும் அறிந்ததே. மஹாவிஷ்ணு பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கையில் ஆதிசேஷன் பாரம் தாங்காமல் தவிக்க, இறைவனைக் காரணம் கேட்கிறார். அப்போது தன் உள்ளத்துள்ளே நடனமாடும் நர்த்தனசுந்தரநடராஜரின் அருட்கோலத்தையும் நடனத்தையும் ரசித்தே தான் அஜபா ஜபம்(மனதிற்குள்ளாகவே ஜபித்தல், இதன் மேலதிக விளக்கம் இந்தக் கட்டுரையின் நோக்கம் அல்ல என்பதால் மன்னிக்கவும்) ஜபித்ததையும் கூறத் தானும் காணவேண்டும் என்று ஆதிசேஷன் பதஞ்சலியாக அவதரித்துத் தில்லை வந்து வியாக்ரபாதரோடு சேர்ந்து திருநடனத்தைக் கண்ணாரக் கண்டதும், அங்கேயும் பெருமாள் ஶ்ரீகோவிந்தராஜராக வந்து ஈசனின் திருநடனத்தைக் கண்ணாரக் கண்டதாகவும், தாம் கண்ட இக்கோலத்தை இவ்வுலக மக்களும் காணவேண்டி அவ்வண்ணமே காட்சி தரப் பதஞ்சலியும், வியாக்ரபாதரும் பிரார்த்தித்ததும், அவ்வாறே இன்றுவரை இருவரும் காட்சி தருவது அனைவரும் அறிவோம். சிதம்பர ரகசியம் தொடருக்காக வேண்டிப் பல புத்தகங்களைப் படித்தபோதும், பல குறிப்புகளைத் தேடியபோதும் தெய்வத்தின் குரலில் பரமாசாரியார் அவர்கள் கீழ்க்கண்ட விஷயத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் பெருமாள் திருமொழியைப் பல்வேறு சமயங்களில் படிக்க நேர்ந்தபோதும் தில்லை விளாகம் ஶ்ரீராமரைப் பற்றித் தெரிய வந்தபோதும் இதுதான் சரியானதாய் இருக்கவேண்டும் எனப் புரிந்து கொண்டேன். பலநாட்களாய் மனதில் உருப்போட்டு வைத்திருந்த ஒன்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
ஆனால் குலசேகராழ்வாரோ எல்லாக் கோயில்களிலும் உள்ள பெருமாளை ஶ்ரீராமராகவே கண்டார் என்பார்கள். உதாரணமாகத் திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாளைக் கூட
தென்னிலங்கை கோன்முடிகள் சிந்துவித்தாய் செம்பொஞ்சேர் கன்னிநன்மா மதிள்புடை சூழ் கணபுரத்தென் கண்மணியே என்னுடைய இன்னமுதே இராகவனே தாலேலோ.”
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை.”
அதிலும் ஶ்ரீநடராஜர் விக்ரஹம் அம்பல ஊருணி என்னும் குளத்தருகே கண்டுபிடிக்கப்பட்டதால் அம்பலம் ஒன்று இங்கே இருந்திருக்கிறது. ஆகவே திருவெண்காட்டை ஆதி சிதம்பரம் எனச் சொல்வதைப் போல் இதையும் இரண்டாவது சிதம்பரமாகச் சொல்லி இருக்கலாம். சிதம்பரம் தீக்ஷிதர்களில் சிலர் இங்கே இருந்து வழிபாடுகள் நடத்தி இருக்கலாம். மேலும் ஶ்ரீராமர், சீதா, லக்ஷ்மண, அநுமத் சமேதராய்க் காட்சி கொடுக்கும் சந்நிதிகளையே சித்ரகூடம் என்பார்கள். எப்படிப் பெருமாள் சந்நிதிகளில் கருடாழ்வார் முக்கியமோ அதைவிட முக்கியமாய் ஶ்ரீராமர் சந்நிதியில் அநுமன் இல்லாமல் இருக்கமாட்டார். ஆகவே தில்லை விளாகம் ஶ்ரீராமர் கோயிலையே தில்லைத் திருச்சித்ரகூடம், என்று அழைத்திருக்கவேண்டும். இந்தக் கோயில் விக்ரஹங்கள் அந்நியப்படையெடுப்பின் போது பூமியில் புதைக்கப்பட்டுப் பின்னர் சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் மீட்டெடுக்கப்பட்டுக் கோயிலும் கட்டப்பட்டிருக்கிறது. முதலில் ராமர் குடும்பத்தினரின் விக்ரஹங்களே கண்டெடுக்கப்பட்டாலும் இதற்குச் சுமார் 30 ஆண்டுகளிலேயே நடராஜர் விக்ரஹமும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. 1862-ஆம் ஆண்டு ஶ்ரீராமர் குடும்பமும், 1892-இல் ஶ்ரீநடராஜர், சிவகாமி விக்ரஹங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஶ்ரீராமர் குடும்பத்தினரின் விக்ரஹங்களின் அமைப்பும், ஶ்ரீநடராஜர், சிவகாமி விக்ரஹ அமைப்பும் ஒரே மாதிரியாக இருந்ததாலும் இவை இரண்டும் ஒரு காலத்தில் ஒருசேரக் கோயில் கொண்டிருந்திருக்கவேண்டும் என்பதும் தாத்தா அவர்களின் தீர்மானமான கருத்து. ஆகவே தில்லைத் திருச்சித்ரகூடம் என்பது தில்லை விளாகமாகவே இருக்கவேண்டும். ஏனெனில் சீதா, லக்ஷ்மணரோடு மட்டும் ஶ்ரீராமர் இருந்து அருள்பாலிக்கும் தலங்களையே திருச்சித்ரகூடம் என்பார்கள். பட்டாபிஷேஹ ராமர் என்றால் சகலமான உறவினர்கள், நட்பு வட்டங்கள் சூழ அமர்ந்திருப்பார். ஶ்ரீராமர் தனித்து சீதையோடும், லக்ஷ்மணனோடும் இருந்தது பஞ்சவடியும், சித்ரகூடமும் மட்டுமே. இதிலே பஞ்சவடியிலே ராவணன் வந்து சீதையைத் தூக்கிச் சென்ற துக்கமான சம்பவம் நடந்ததால் சித்ரகூடத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு, சீதை, ராமர், லக்ஷ்மணர் மூவர் மட்டும் அநுமனோடு காட்சி கொடுக்கும் தலங்களே சித்ரகூடம் எனப்படும். தில்லைவிளாகம் ராமர் மிகவும் பிரபலமானவர்.
கீதா சாம்பசிவம் --Ksubashini 06:40, 22 டிசம்பர் 2012 (UTC) |