14:10, 10 மே 2011 இல் நிலவும் திருத்தம்
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில்
மூலவர் : வேதபுரீஸ்வரர், வாழைமடுநாதர்
அம்மன்/தாயார் : மங்கையர்க்கரசி
தல விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : வைத தீர்த்தம்
-
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவேதிகுடி
ஊர் : திருவேதிகுடி
மாவட்டம் : தஞ்சாவூர்
மாநிலம் : தமிழ்நாடு
பாடியவர்கள்:
அப்பர், சம்பந்தர்
தேவாரப்பதிகம்
வருத்தனை வாளரக்கன்முடி தோளொடு பத்திறுத்த
பொருத்தனைப் பொய்யா அருளனைப் பூதப்படையுடைய
திருத்தனைத் தேவர்பிரான் திருவேதி குடியுடைய
அருத்தனை ஆரா அழுதினை நாமடைந் தாடுதுமே.
-திருநாவுக்கரசர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 14வது தலம்.
தல சிறப்பு:
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆண்டுதோறும் பங்குனி 13,14,15 தேதிகளில் சூரியனின் ஒளி கதிர்கள் சிவ லிங்கத்தின் மீது விழுகிறது.
கிழக்கு நோக்கிய 3 நிலை ராஜகோபுரம். ஒரு பிரகாரம். உள்பிரகாரத்தில் செவி சாய்த்த விநாயகர், 108 லிங்கங்கள், சுப்பிரமணியர், தெட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், துர்க்கை, முருகன், மகாலட்சுமி, நடராஜர், சப்தஸ்தான லிங்கங்கள் உள்ளன.
ராஜசேகரிவர்மன், கோப்பரகேசரிவர்மன் இவர்கள் காலங்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் இறைவனின் பெயர் திருவேதிகுடி மகாதேவர் என்றும், பரகேசரி சதுர்வேதிமங்கலத்து மகாதேவர் என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
வாழைமடுவில் இறைவன் தோன்றிய காரணத்தினால் வாழைமடுநாதர் என்ற பெயரும் உண்டு. பல்லவ மன்னர்களும் திருப்பணி செய்துள்ளனர்.
தலபெருமை:
பொதுவாக சம்பந்தர் கோயில் இறைவனைப்பற்றி பாடுவார். ஆனால் இத்தலத்தில் திருமணத்தடை நீக்கும் பாடலை பாடியுள்ளது சிறப்பு. திருஞானசம்பந்தர் இக்கோயிலைப்பற்றி தான் பாடிய பதிகத்தின் ஏழாவது பாட்டில், ""உன்னி இருபோதும் அடிபேணும் அடியார்தம் இடர் ஒல்க அருளி துன்னிஒரு நால்வருடன் ஆல்நிழல் இருந்த துணைவன் தன் இடமாம் கன்னியரொடு ஆடவர்கள் மாமணம் விரும்பி அருமங்கலமிக மின் இயலும் நுண்இடை நன்மங்கையர் இயற்றுபதி வேதிகுடியே
என்று பாடியுள்ளார்.
பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள். ஆனால் இங்கு பெண்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சிவனின் வலது புறம் அம்மன் இணைந்துள்ள அர்த்தநாரீஸ்வர கோலம் இங்கு வித்தியாசமாக உள்ளது.
விசேஷ விமானம்: சப்தஸ்தான தலங்களில் நான்காம் கோயில் இது. முழுவதும் கல்லால் அமைக்கப்பட்ட விமானத்தின் கீழ், வேதபுரீஸ்வரர் வீற்றிருக்கிறார். விமானத்தின் நான்கு திசைகளிலும் வேதங்களை உணர்த்தும் நந்திகள் உள்ளன. வடதிசையில் சிவனுடன் எப்போதும் இருக்கும் மனோன்மணி அம்பிகை சிலை உள்ளது. சிவன் சன்னதிக்குப் பின்புள்ள (கோஷ்டம்) அர்த்தநாரீஸ்வரர், விசேஷமானவர். வழக்கமான சிவனுக்கு இடப்புறம்தான், அம்பாள் இருக்கும்படி அர்த்தநாரீஸ்வரர் சிலை இருக்கும். இங்கு, அம்பிகை வலப்புறம் இருக்கிறாள். இத்தகைய அமைப்பைக் காண்பது மிக அபூர்வம். தற்போது இந்த சிலை சேதமடைந்த நிலையில் உள்ளது.
தல வரலாறு:
பிரம்மாவிடம் இருந்த வேதங்களை, அசுரன் ஒருவன் எடுத்துச் சென்று கடலுக்கடியில் ஒளித்து வைத்தான். அதை, பெருமாள் மீட்டு வந்தார். அசுரனிடம் இருந்ததால் உண்டான தோஷம் நீங்க, வேதங்கள் சிவனை வழிபடவே, அவர் வேதங்களை புனிதப்படுத்தினார். பின், வேதங்களின் வேண்டுதலுக்காக வேதபுரீஸ்வரராக எழுந்தருளினார். தலத்திற்கும் திருவேதிகுடி என்ற பெயர் ஏற்பட்டது. பிரம்மா தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்திற்கு, இங்கு சிவனை வேண்டி விமோசனம் பெற்றார். பிரம்மாவிற்கு "வேதி' என்ற பெயர் உண்டு. இதனாலும் சிவனுக்கு இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்வர்.
சோழமன்னன் ஒருவன் தன் மகளின் திருமணம் தொடர்ந்து தடைபட்டு வந்ததால் மிகவும் வருந்தினார். ஒரு முறை அவன் இக்கோயில் வந்து மங்கையர்க்கரசி அம்மனை தரிசனம் செய்து, தன் மகளின் திருமணம் விரைவில் நடக்க வரம் வேண்டினான்.
அம்மனின் கருணையால் அவனது மகளுக்கு விரைவில் திருமணம் நடந்தது. அன்றிலிருந்து தன் மகளுக்கு மங்கையர்க்கரசி என்று செல்லப்பெயர் சூட்டி தன் நன்றியை தெரிவித்தான். அதன்பின் கோயிலுக்கு பல திருப்பணிகளும் செய்தான்.
திருவிழா:
திருவையாறு ஐயாரப்பர் சித்திரை மாதத்தில் எழுந்தருளும் ஏழு சிவத்தலங்களுள் இத்தலம் நான்காவதாகும். ஐப்பசியில் அன்னாபிஷேகம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, சிவராத்திரி
திறக்கும் நேரம்:
காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
ஆன்மீகச் சிந்தனை மலர் :
எண்ணம் தூய்மை ஆகட்டும் - ஸ்ரீ அரவிந்தர்.
ஆன்மிகப் பொருளுடைய கனவு ஒன்றைக் கண்டால் அது அனுபவம். அதன் பொருளை உணர்ந்தால் ஞானம்.
- ஆண்டவனின் அருளாட்சியில் தீமை
என்பது இல்லை. நலத்தையோ அல்லது நலத்தை உண்டாகுகின்ற முயற்சியையோ நாம் செயகிறோம்.
* அனைத்து காலங்களிலும் மனிதன் ஓர் அறிவிலியாகத் தோன்றுகின்றான். இதுதான் தெய்வத்துக்கும்மனிதனுக்கும் உள்ள வேறுபாடாகும்.
* கடவுளை நாம் அறிய வேண்டுமானால் அகந்தையையும், அஞ்ஞானத்தையும் அறவே ஒழித்துவிட வேண்டும்.
பவள சங்கரி திருநாவுக்கரசு
தேதி - டிசம்பர் - 12 - 2010.
நன்றி - தின மலர்.
.