"திருக்கைலை யாத்திரைப் பயணம் 1" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்:  '''''நமச்சிவாய வாழ்க!நாதன் தாள் வாழ்க!<br>இமைப்பொழுதும் என் நெ…)

08:16, 2 ஏப்ரல் 2011 இல் நிலவும் திருத்தம்

 நமச்சிவாய வாழ்க!நாதன் தாள் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில்நீங்காதான் தாள் வாழ்க! 
தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா
போற்றி!


சின்ன வயசிலே பள்ளிப் பாடத்தில் கைலாஷ்னு ஒரு மலை இருக்கிறதா பூகோளத்தில் படிச்சது தான். அது பற்றி அப்போ
ஒண்ணும் குறிப்பிடத் தகுந்த மாதிரியா தோணியது இல்லை.
அதுக்கு அப்புறம் ஒருமுறை ஆனந்த விகடனில் திரு நம்பியார்
அவர்கள் கைலாய யாத்திரை போய் வந்தது பற்றி எழுதி
இருந்தார். அட்டைப் படத்திலே போட்டுக் கெளரவித்து
இருந்தார்கள். அப்பவும் இது எல்லாம் நாம் போகப் போகிறோம்
என்ற மாதிரியான எண்ணம் எல்லாம் இல்லை. அதன் பிறகு
கொஞ்சம் கொஞ்சமாகக் கைலாய மலை பற்றியும், மானசரோவர்
பற்றியும் அறிய அறிய நாமும் ஒருமுறை போக முடியுமா என்ற
எண்ணம் வந்தது. ஆனால் அது திபெத்தில் இருக்கிறதாலும்,
நடுவில் கொஞ்ச நாள் சீன அரசு யாத்திரீகர்களை
அனுமதிக்காததாலும் இதெல்லாம் நம்மால் முடியாத ஒன்று என்ற
நினப்புத் தான் இருந்து வந்தது. பிறகு அனுமதிக்கு இந்திய அரசு
முயற்சி செய்து யாத்திரீகர்களை வடிகட்டி அனுப்பி வரும் விஷயம்
தெரிந்ததும் சுத்தமாக நம்மால் முடியாது என்றே இருந்தேன்.

அதுக்கு அப்புறம் என் கணவரின் வேலை நிமித்தமாகவும், வேறு பலகாரணங்களாலும் ஊர் ஊராகச் சுற்ற நேர்ந்த போதும் இந்த
மாதிரி ஒரு நினைப்பு இல்லை. சமீபகாலமாக யாத்திரீகர்கள்
அதிகம் போக ஆரம்பித்ததிலும்,அதைப் பற்றி எழுதியதைப் படிக்க நேர்ந்ததிலும் கொஞ்சம் கொஞ்சமாக ஆசை துளிர்
விட்டது. ஆனால் மருத்துவப் பரிசோதனைக்கு உள்ளானால்
மறுக்கப் படும் என்ற உண்மைநெஞ்சைக் குடைந்து
கொண்டிருந்தது. இந்தச் சமயத்தில் தான் என் கணவர் தான்
மட்டும் போய் வருவதற்கு ஆயத்தங்கள்செய்யஆரம்பித்தார்.அப்போது தான்
தெரிந்தது மருத்துவப் பரிசோதனைக்கு உட்படாமலேயே
நேபாளம் வழியாகப் போக முடியும் என்று. நேபாளம் போவதற்கு விசாதேவை இல்லை. அங்கிருந்து திபெத் போவதற்குத் தான் தேவை. என்ன செய்வது? இங்கே சென்னை, மயிலாப்பூரில் உள்ள
"அன்னபூர்ணா யாத்திரா" நடத்துபவர்களைப் போய்ப்
பார்த்தார். அவங்க வீட்டிற்கு வந்து பாஸ்போர்ட் காப்பி வாங்க வந்த சமயம் என்னைப் பார்த்து விட்டு, "நீங்க வரலியா?" என்று கேட்க நான் என்னுடைய உடல் நிலையைச் சொன்னேன். அவங்க
உங்களை விட உடல் நிலை மோசமானவர்கள் எல்லாம்
வராங்க! தைரியமா வாங்க! விசா நாங்க குழுவாக வாங்குவதால்
பிரச்னை இல்லை," என்று சொல்லி என்னுடைய பாஸ்போர்ட்
காப்பியும் வாங்கிப் போய் விட்டார்கள். இப்படியாக நான்
போவதும் ஒரு மாதிரியாக உறுதி செய்யப் பட்டது.

ஆனால் விஷயம் முதலில் யாருக்கும் சொல்லவில்லை. எங்களோட பையன், பெண்ணுக்குக் கூட விசா வந்ததும் தான் சொன்னோம்.
அப்போ கூட இங்கே சென்னையில் உள்ள உறவினர்கள் கிட்டேயோ அல்லது என் கணவரின் வயதான அம்மாவிடமோ கூடச் சொல்லவில்லை. டெல்லி போனதும் அவங்க கிட்டே நேபாள்
போகிறோம் என்று மட்டும் தான் சொன்னோம்.முக்திநாத் கோவிலுக்கு என்று நினைத்த அவர்கள் அதுக்கே கவலைப் பட்டார்கள். டெல்லியில் தங்குவதாக இருந்த நான்
திடீரென ஏற்பட்ட மாறுதலால் பயணத்திற்குத் தயாரானேன். ஒரு
விதத்தில் சந்தோஷம் தான். அவரை மட்டும் தனியாக எப்படி
அனுப்புவது? என்று குழப்பமாக இருந்தது தற்சமயம் நானும்
போவதால் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. ஆகஸ்ட் 30-ம் தேதி
சென்னையில் இருந்து புறப்பட்டுத் தமிழ்நாடு விரைவு வண்டியில்
டெல்லி போனோம்.

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam