"சத்சங்க மஹிமை 2" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடுமரபு விக்கி இருந்து
10:23, 10 ஜூன் 2015 இல் கடைசித் திருத்தம்அழகின் மயக்கு அனைவரும் எனக்கு ஏங்கிடுவர் அழகின் உருவெனத் தாம்புகழ்வர் ஆயினும் உன்னை அணைதலே வாழ்வென ஆயிழை வந்தேன் ஹரிதாஸா ! அன்பெனை ஏற்பாய் ஹரிதாஸா ! நிச்சயம் ஏற்பேன் பெண்மணியே ! தீக்ஷை இதுவும் முடிந்தவுடன் மூன்று லக்ஷம் ஜபம் ஹரிநாமம் முடிந்ததும் உன்மனம் நிறைவேறும். அதுவரை பெண்ணே துளஸியை வணங்கி அமர்ந்து உரைத்திடு ஹரிநாமம் ஹரிபோல் ஹரிபோல் ஹரிபோல் ஹரிபோல் ஹரி ஹரி ஹரி போல் ஹரி போல் போல் முனிவனே உன் ஜபம் முடிந்ததுவா? கனிந்திட நேரம் பிறந்ததுவா ? பெண்ணே ! பொறுமை. முடிந்துவிடும். எண்ணத்தில் நீயும் ஹரிபோல் போல். மூன்று நாட்களும் கழிந்தன முதல்வன் நாமமே ஒலித்தது முனிவன் எழுந்தான் மாதவ முரளியின் ப்ரேமையினில் மங்கை எழுந்தாள் மனமாசு அகன்றாள் முனிவன் திருப்பதம் தான் பணிந்தாள் 'ஐயனே ! என்னை மன்னிப்பாய். ஆசைக்கும் காசுக்கும் விலையானேன் வேசையெனும் சொலுக்கிலக்கானேன். பொறாமைகே நான் பணியானேன். பொறுத்தருள்க எம் புண்ணியனே !' ஹரியின்நாமம் உரைத்ததும் உன்னை கோவிந்தன் ஏற்றான் அஞ்சாதே ! பொய்மை அகன்றது புண்ணியம் பிறந்தது உய்வகை ஆகும் ஹரிநாமம் தெய்வத் திருவருள் வாழ்வு தொடர்ந்திட தொடர்ந்திடு என்றும் ஹரிநாமம் இவ்விடம் உன்னிடம் ஆகிட என்றும் பவபயம் பொன்றப் பாவனம் ஆம். ஹரிபோல் ஹரிபோல் ஹரிபோல் ஹரிபோல் ஹரிஹரி ஹரிஹரி ஹரிபோல்போல் *** (ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின் மிகுந்த அன்புக்கும், மதிப்பிற்கும் பாத்திரமான ஹரிதாஸர் ஒரு யவனர் ) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் * கண்ணை மூடு! கண்ணைத் திற ! பக்தி என்றால் அது கண்ணை மூடிக்கொண்டு செய்வதா? அல்லது கண்ணைத் திறந்து கொண்டு செய்வதா? அனைத்து உலகும் அவனுடைய திருமேனி என்றால் கண்ணை மூடினால் என்ன? கண்ணைத் திறந்தால் என்ன? கண்ணுக்குப் புலப்படும் காட்சி ப்ரபஞ்சம்; அகத்தில் துலங்கும் மானத ப்ரபஞ்சம் எல்லாம் அவன் விபூதிதானே. இங்கு விபூதி என்றால் சாம்பல் அன்று. விபவம் என்றால் அவனுடைய வெளிப்படையான தோற்றம். விபூதி என்றால் அவனுடைய வெளிப்பட்ட சம்பத்து. உலகம் என்ற அவன் உருவைக் காணப் பயின்றுவிட்டால் பின்னர் வாழ்பவன், வாழப்படும் உலகம், உலகத்துப் பொருள்கள் எல்லாம் அவன் ஆகிய ஒன்றில் அமிழ்ந்து விடுகின்றன. *** மடிப்பாக்கம்வரை போய் மீண்டேன். நடை. வரும்பொழுது நட்டநடு ரோடில் இருட்டு கலந்த ட்யூப் லைட் ஒளியிலும் கண்ணைக் கட்டும் ஒரு படம், பழைய காலண்டராகக் கிடக்கிறது. எனக்கு மிக நெருக்கமாகத் தெரிந்தவரின் படம். ஆனால் அப்படி ஒரு தெளிவான அச்சில் இதுவரை நான் அவர் படத்தைப் பார்த்ததில்லை. படத்தைப் பார்த்து யார் படம் என்பதை உணர்ந்து, அதன் தெளிவான அச்சை ரசித்து, எல்லாம் பின்ன கணம்தான் ஆகியிருக்கும். 'ஐயோ!' என்று வயிறு பகீர் என்றிடக் குனிந்து அதைப் பொறுக்கிக்கொண்டேன். அக்கம் பக்கம் கடையில் வாங்கிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் என்னை ஒரு மாதிரி லுக் விட்டதை அப்புறம்தான் கவனித்தேன். யார் என்ன நினைத்தால் எனக்கென்ன? என் தோழரின் படம் தெருவில் கிடக்க எப்படி நான் போகமுடியும்? ஸ்நேகம் மானாபிமானங்களை அறியுமா? கூடவே வந்து என்னோடும் என் குப்பைகளுக்கிடையிலும் ஜம்மென்று அமர்ந்துகொண்டு விட்டார் தோழர், வயதான தோற்றத்திலும் அதே சிரிப்பு. விட்டால் படம் பேசி விடுமோ என்ற துல்யம். காலண்டர் என்று போட்டுவிட்டு இப்படியா தெருவில் கடாசுவது? பின் எதற்கு இப்படிப்பட்ட படங்களைப் போட்டு விநியோகிக்க வேண்டும்? சரி, தவறு சொல்ல எனக்குத் தெரியவில்லை. படத்தில் உள்ள தோழர், பகவான் ஸ்ரீரமண மஹரிஷி. *** (ஸ்ரீ கிருஷ்ண சைதன்யரின் அந்திம லீலையில், அவர் ஸ்ரீகிருஷ்ண விரஹ தாபத்தால் (ஸ்ரீ கிருஷ்ணைக் காணாத பிரிவின் வேதனை) ராதையின் மனோபாவத்தில் முற்றித் தன்னை மறந்து துடித்துக் கொண்டிருந்தார். அணுக்கச் சீடர்கள், பக்தர்கள் கண்ணில் வைத்துக் காப்பாற்றிய பொழுதினும் ஒரு நாள் காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அணுக்கன் கோவிந்தனுக்கும், ஸ்வரூப தாமோதரருக்கும் ஒரு சந்தேகம். கடலின் கருமை வண்ணத்தைக் கண்டு கிருஷ்ணன் என்று மயங்கி கடலில் விழுந்து விட்டாரோ என்று துணுக் என்றது. கடல் பக்கம் பார்க்கலாம் என்று வரும் பொழுது பீதியடைந்து ஒரு மீனவன் வாய் குழறியபடித் தனனை மறந்து கிருஷ்ண நாமம் உரக்கக் கூவியவாறு ஏதேதோ உளறியபடித் தள்ளாடி வந்ததை நின்று கேட்கின்ற சமயம்......) * கட்டுமரம் செலுத்திவந்தோம் ஏலேலோ எலேலோ கண்ணிவலை வீசிநின்றோம் ஏலேலோ எலேலோ பெரியமீனு சிக்கிருச்சோ ஏலேலோ எலேலோ அரியபரிசு நமக்கல்லவோ ஏலேலோ எலேலோ சாதுமீனு போல இருக்கு ஏலேலோ எலேலோ ஏதும்வம்பு பண்ணலையே ஏலேலோ எலேலோ கள்ளவகை மீன்தானோ ஏலேலோ எலேலோ உள்ளமெல்லாம் துள்ளுவதேன் ஏலேலோ எலேலோ வயிறுநிறைஞ்சு பார்த்ததில்ல ஏலேலோ எலேலோ வாழ்க்கைநிறைஞ்சு காண்பதென்ன ஏலேலோ எலேலோ உயிருக்குள்ள ஒளிர்வதென்ன ஏலேலோ எலேலோ மயிலிறகு ஆடக்கண்டால் ஏலேலோ எலேலோ வச்சிரம் வயிரமீனு கெண்ட கெளுத்தியினு வாய்வார்த்தை போனதென்ன ஏலேலோ எலேலோ உச்சி குளிர்ந்திடவே ஒருபேரு கிருஷ்ணாவென உயிரூத்தாய் பாய்வதென்ன ஏலேலோ எலேலோ தாகம் எடுக்கல்லியே வயிறும் பசிக்கல்லியே தவிப்புமட்டும் ஏறுவதேன் ஏலேலோ எலேலோ தன்னை மறந்தநிலை தான் அவர்க்கே ஏங்கும் நிலை என்னிடத்தில் எழுந்ததென்ன ஏலேலோ எலேலோ கண்ணன் என்னும் கரும்பூதம் கடலில்வந்து பிடித்ததய்யோ உடலில் புகுந்து நின்று உள்ளெல்லாம் ஆட்டுதய்யோ ஊராரே உறவினரே உற்றவரே மற்றவரே கடலில் நான் பிடிக்க வலையில் அது கிடக்க உடலில் புகுந்ததென்ன உள்ளத்திலே மிகுந்ததென்ன ஒருகோடி நாமசெபம் கிருஷ்ணனை உரைக்கும்வரை உள்ளிருந்து ஆட்டுகின்ற ஒருபூதம் விரட்டிடவே உருவேத்தும் மாந்திரிகன் உள்ளானோ இல்லானோ கள்ளம் கபடு எல்லாம் கால்பறந்து போகையிலே விள்ளாத ரகசியங்கள் விளங்குகின்ற வேளையிலே.. ஐயய்யோ சாமீமாரே அம்மா அய்யாமாரே மையிருட்டு வேளையிலே கைவலையில் சூனியந்தான் எய்தவன்யார் எனக்குள்ளே மெய்யெழுந்து ஆடுகின்ற மயிற்பீலி பேயிதற்கே மருத்துவனை நாடியேநான் போயாகணும் சாமீ -- நாளை போணியாகணும் சாமீ ! - *** ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் தன் நிலை இழந்து ஸ்ரீகிருஷ்ணனுக்காக ஏங்கி, ஸ்ரீஜகந்நாதனின் கொடிமரத்தின் பக்கமாக நின்றபடி பாடிக்கொண்டிருக்கிறார். * இன்று எனக்கருளாய் மமநாதா ராதாகாந்தா வ்ரஜ பாலா கேசவ முகுந்த முரளி மனோஹரா அன்று நீ திரிந்தாய் பன்னிருவனங்களில் கன்று காலிகள் மேய்த்துத் திரிந்தாய் என்றும் துலாலியின் இனிமையுகந்தாய் இன்று எனை நீயும் ஏனோ மறந்தாய் ? பிரிவினில் துடிப்பேன் கோவிந்தா பரிவுடன் அருள்வாய் கோபாலா எரிகின்றது உடலெங்கும் கோவிந்தா என் கண்காண வருவாய் ஸ்ரீகிருஷ்ணா கிருஷ்ண முராரீ ! முகுந்த முராரீ ! கோபால கோவிந்த ராதா விஹாரீ ! * (பட்டிக்காட்டுப் பெண் ஒருத்தி ஸ்ரீஜகந்நாதனைப் பார்க்க வேண்டி ப்ரயாசை பட்டுக் கூட்டமாக இருந்ததால், அங்கு ஏறி இங்கு ஏறி, ஸ்ரீகிருஷ்ண சைதன்யரின் தோளில் கால் வைத்துக் கொண்டு கொடிமரத்தின் பக்கம் எம்பி ஜகந்நாதனை தரிசிக்கிறாள்.....) ஐயா கன்னய்யா சுகமா சொல்லய்யா? வெய்யில் கொளுத்தையிலே காடு மேடு திரியாமல் எண்ணை தேச்சு குளிக்கிறியா? என்னைக் கொஞ்சம் நினைக்கிறியா? மண்ணைக் கொஞ்சம் தின்னுப்பிட்டு மாமிகிட்ட உதை வாங்குறியா? ஐயா கன்னய்யா ! அண்ணாரு தான் சுகமா? ஒய்யாரமாக நீரு எங்க காட்டுப்பக்கம் வருவியளே ! ஏனய்யா காணவில்ல? எங்க எண்ணம் தோணவில்ல? வேகாத வெய்யில்ல நான் உனக்காக இங்கு வந்தா ஊர்கூடி வச்சுகிட்டே ஓராட்டம் போடுறீரு மாராப்பு போடையிலே உன் நினைப்பு குத்துதய்யா என் நினைப்பு முள்ளாச்சோ? எங்களை நீ வெறுத்தாச்சொ? கண்களையே வெறுத்துகிட்டுக் காணத்தான் ஆகிடுமோ? கூட்டத்துல கூட்ட குரல் கேட்டதுவோ கேக்கலையோ வாட்டத்துல பாட்ட மழை உன்முகத்தைப் பார்த்துப் புட்டேன் ஏட்டெழுதி படிக்காக என்னமோ உனைப் பாடுறாக காட்டுமணல் குஞ்சத்துல கண்டதெல்லாம் மறக்காத வாட்டம் மிகுந்திருச்சா வாருமய்யா வாஞ்சையில.... * (அணுக்கன் கோவிந்தன் விரட்டப் போக, ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் தடுத்துத் தம் தோளை அலுங்காமல் வைத்திருந்து தீனசுரத்தில் பாடுகிறார்) * கார்மேக வண்ணைக் கண்டாயோ அம்மா? பார்புகழும் மன்னனைப் பார்த்தாயோ அம்மா? யார்பெற்ற புண்ணியளோ? எங்குற்ற விண்ணியலோ? நின்பாத தூளிதனை நான் பெறவே கொடுத்துவைத்தேன். * ஐயய்யோ சாமீ ! அபசாரம் சாமீ ! அடியள் நான் பாக்கலையே, ஆகாது சாமீ ! மன்னிக்கணும் சாமீ! மனமறிஞ்ச குத்தமில்ல கன்னய்யாவைக் காணவேண்டி கண்மறைச்சக் குத்தமிது பெரும்பெரிய பண்டிதரு அரும்பெரிய ஞானியரு தருமதுரை செல்வந்தரு தரணிவேந்தர் வீரர் எல்லாம் கூடி யிருக்கையிலே கோவாலு உள்ளிருக்க பட்டிக்காட்டாள் நானும் வந்து எட்டிஎட்டிப் பார்த்திருக்க கன்னய்யன் கண்டுகிட்டான் கண்ணடிச்சுப் போகச் சொன்னான் எண்ணம்போல் வருவமின்னான் என்னிக்குன்னு சொல்லல்லியே உன்னிடம் ஏதும் சொன்னா -- சாமீ ஊருக்கு சேதி சொல்லு கண்ணனைக் கண்ணிமையா கவனிச்சுக்க சாமீ நீயும் கண்ணு முண்ணு தெரியாம காலு வச்சு நின்னுப்புட்டேன் கால்விழுந்து கும்பிடுறேன் கருணை வையி சாமீ ! கண்ணின் இமையாகக் கண்ணனைக் கருத்து வையி சாமீ ! *** | |||||||||||||||||||||