02:32, 26 ஏப்ரல் 2012 இல் கடைசித் திருத்தம்
இன்னம்பூரான்
என் ஆழி வண்ணன்பால்...!
மனிதனின் யத்தனங்களில் சிகரமேறுவதும், ஏழ்கடல் கடப்பதும், கண் காணாத நாட்டில் கால் வைப்பதும் சாதனைகளாக பாராட்டப்படுகின்றன. ஸர் எட்மண்ட் ஹிலாரியும், டென்ஸிங்க் நார்க்கேயும் எவரெஸ்ட் வெற்றி அடைந்த நிகழ்வை விட, இர்விங் மலோரி காணாமல் போனதும், டாக்டர் ஸோமர்வில் வெற்றி அடையாமல் திரும்பியதும், கே-2 முயற்சியும் உருக்கமானவை. ஆஃப்பிரிக்கா கண்டத்தில் என்றோ கால் வைத்த ஒத்தை ஐரோப்பியரை, ‘Dr. Livingstone, I presume..’ என்று ஸ்டான்லி விளித்த வினா, வரலாற்றுப்பதிவாகி விட்டது. அந்த மாதிரி தான், வடதுருவ/தென் துருவ பயணங்கள். அமுண்ட்ஸன், ஸ்காட், ஸர் எர்னெஸ்ட் ஷேக்கில்டன் இத்யாதி. நடுக்கடல் சாகஸம் அல்லவா! நடுவிலேயிருந்து ஆரம்பிக்கிறேன்.
ஏப்ரல் 24, 1916 அன்று ஜேம்ஸ் கைர்ட் என்ற கப்பல் கடலில் இறங்கியது. கேப்டன் ஒர்ஸ்லி துல்லியமாக நடத்திச் செல்லவேண்டும். என்ன தான் இன்னல் இருந்தாலும், உன்னிப்பான கவனிப்பு குறையக்கூடாது. வாயு பகவான் உதவினாலும், சமுத்ரராஜன் கோபத்தில். கடல் கொந்தளிப்பு. பயங்கர குளிர். கப்பல் மேலே பனிமழை. போதாக்குறைக்கு, வாயு பகவானும் கட்சி மாறி விட்டார். ராக்ஷஸ அலைகள். இம்மாதிரியான அலைகளை தனது 26 வருட அனுபவத்தில் கண்டதில்லை என்கிறார், ஸர் எர்னெஸ்ட் ஷேக்கில்டன். பனிச்சுமையுடன் ஆமை வேகத்தில், கப்பல் தத்தளித்துக்கொண்டே செல்கிறது. ஒரு பாடாக, கிங் ஹாக்கன் பே என்ற இடத்தில் கரை சேர்கிறார்கள். கொஞ்சம் ஓய்வு என்றாலும், கப்பல் சப்பையாகிவிட்டதாலும், சில பயணிகள் மிகவும் சோர்ந்து விட்டதாலும், ஸர் எர்னெஸ்ட் ஷேக்கில்டன் நடந்தே அடுத்த இலக்கான தெற்கு ஜியார்ஜியாவுக்கு செல்ல முடிவு எடுக்கிறார்.
முன்கதை சுருக்கம்:
தரை வழியாக கடப்பது மிகவும் கடினமான பயண. 1914ல் செவ்வனே திட்டமிட்டு, எப்படியோ நிதி திரட்டி, ஆள் சேர்த்து, கப்பல்கள் இரண்டு வாங்கி, ஸர் எர்னெஸ்ட் ஷேக்கில்டன் இரு முனை பயண திட்டம் தயார் செய்தார். இவர் பயணிக்க வேண்டிய ‘எண்டூரன்ஸ்’ என்ற கப்பல் பிளிமத் துறைமுகத்திலிருந்து ஆகஸ்ட் 8, 1914 கிளம்பியது. பல இடர்ப்பாடுகள், தாமதங்கள், இன்னல்கள் எல்லாம் கடந்தாலும் கப்பல் பனிமண்டலத்தில் சிக்கிக்கொண்டது. ஸெப்டம்பர் 30 அன்று அது பந்தாடப்பட்டு, உடைந்து விட அது கைவிடப்பட்டது. இனி கால் நடை தான். கிட்டத்தட்ட 400-500 கிலோமீட்டர்கல், உறைந்த பாறாங்கல் போன்ற பனிக்கட்டிகள் மீது. இரண்டு மைல் நடக்க மூன்று நாள் பிடித்தது. பயணம் நீண்டது. உருக்கமான சம்பவங்கள் தினந்தோறும். உசாத்துணையில் ஸர் எர்னெஸ்ட் ஷேக்கில்டன் அவர்களே எழுதிய நூல். அவருடைய நாட்குறிப்பு ஒன்று:
“ இறைவன் தான் எங்களுக்கு வழித்துணை. நாங்கள் மூவர் தான் இந்த மிகவும் கடினமான பனி நடையில் இருந்தாலும். நாலாவது நபர் கூட இருந்தார் என்பது திண்ணம்..’ மற்றும் இருவர் இவ்வாறே கூறினர். கவிஞர் டி.எஸ். எலியட் அவர்களில் ‘தெ வேஸ்ட் லேண்ட்’ என்ற கவிதை, இதை பற்றி தான்.
நமக்குத் தோன்றுவதோ:
“திருக் கண்டேன்; பொன்மேனி கண்டேன்; திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்; – செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன், புரி சங்கம் கைக் கண்டேன்
என் ஆழி வண்ணன்பால் இன்று”
இன்னம்பூரான்
24 04 2012
http://ryanraddatz.com/blog/wp-content/uploads/2011/02/Shackleton.jpg
உசாத்துணை:
SIR ERNEST SHACKLETON C.V.O.: THE STORY OF SHACKLETON'S LAST EXPEDITION:1914-1917
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:32, 26 ஏப்ரல் 2012 (UTC)