02:18, 26 ஏப்ரல் 2012 இல் கடைசித் திருத்தம்
இன்னம்பூரான்
சூரிய குஞ்சு!
நிலா! நிலா! ஓடி வா! நில்லாமல் ஓடி வா!
கனியென்று நினைத்து ஆதவனை கவ்வ முனைந்தார், அனுமான்! ராகுவுக்குத் தோல்வி.
ஜலத்தில் சந்திரபிம்பத்தை காண்பித்து, அடம் பிடித்த குட்டி ராமரை சமாதானப்படுத்தினார், சுமந்திரன்.
வாண வித்தையை விட, வான வித்தை கன ஜோர்.
அன்றொரு நாள், ராஜ்கோட் நகரிலிருந்து அதிகாலை, அஹமதாபாத் நோக்கி பயணித்தபோது, வலது கை பக்கம், வானத்தில் மாட மாளிகைகள், கூட கோபுரங்கள், உப்பரிகைகள். மனைவி பக்கத்தில் இருந்ததால், மாடப்புறாக்கள் தென்படவில்லை. ஆனால், யான் கண்ட இந்த அற்புத மாயாஜாலங்களை (மிராஜ்) அவளும் கண்டு வியந்தாள். ஆயிரம் விளக்கங்கள் வந்தன. ஒன்று கூட வெளிச்சம் போடவில்லை. அது போகட்டும்.
ஹைதராபாத் அருகில் உள்ள ரங்காப்பூரில் பூரண சூர்யகிரஹணம் காண சென்றிருந்தோம். அடடா! சூரியன் முற்றிலும் ஒளிந்து கொள்ள, பகல் வேளையில் இருட்டி விட்டது. பறவைகள் வீடு திரும்பின, கலக்கத்துடன். விரித்த வெள்ளை ஜமக்காளத்தில் ஓடிய பாம்பு போன்ற பட்டை ரேகைகள்! ஆஹா! இதோ! எட்டிப்பார்க்கிறான், கதிரொளி வீசும் கதிரவன். எம்மாம் பெரிசுடா, அந்த வைர மோதிரம்! கண்ணாயிரம் கூச டால் அடிக்குது, அந்த மெகா மோதிரம்!
அடுத்தக்காட்சி: அக்னி ஏவு கணை முந்தா நாள் மேலே போச்சு.பல்லாயிரம் அக்னி பாணங்கள் ஒரு நாள் இரவு மழையென பொழிந்தன, விண்கற்கள் (மீட்டியார்ஸ்).
இப்படியாக, கல்லும், மண்ணும் தோன்றுவதற்கு,முன்னால், யுகாந்திரம், யுகாந்திரமாக, இந்த பிரபஞ்ச மாயாஜாலங்கள் நடந்து வருவதை, நாம் கவனிக்காவிட்டாலும், ஒரு ஓவியர் சூரிய குஞ்சுகளை கண்டு அசந்து போய், அந்த அரிய காட்சியை மனதில் ஒருமைப்படுத்தி, ஓவியமொன்று படைத்தார். ‘ஜிவ்’ ‘ஜிவ்’ என்று ஜவ்வு மிட்டாயைப்போல் இழுத்தாயிற்று. விஷயத்துக்கு வருவோம்.
ஏப்ரல் 20, 1535 அன்றைய காலைப்பொழுது, நார்வேயின் ஸ்டாக்ஹோம் நகரில், ஆகாயம் ஒரு புதுப்பொலிவுடன், சக்ராயுதம் போன்ற சூரியபகவான், பிள்ளைகுட்டிகளுடன் தரிசனம் தந்தார். ஆங்காங்கே, சக்ர வ்யூகங்கள். அழகு, எழில், கவின் என்ன சொன்னாலும் போதாது. அத்தனை கொள்ளை அழகு. மனிதன் பொறுப்பானோ? நோ! சார்.தெரு முனை, சந்து பொந்து, திண்னை, எங்கு பார்த்தாலும் பேச்சு: குஸ்தாவ் வாஸா என்ற மன்னன், கத்தோலிக்கத்தை விட்டு, ப்ராடெஸ்ண்ட் ஆனானே, அதற்கு தண்டனை என்று! ஓலாஸ் பெட்றி என்ற லூதரன் வல்லுனர் அந்த அரியகாட்சியை ஓவியமாக வரைய சொன்னார். அதை கண்ட மதியிழந்த ராசா, தன்னை ஆதவனாக பாவித்துக்கொண்டு, ஓவியத்தில் இருந்த சூரியகுஞ்சுகளை ஜஹாங்கீர் போன்ற உள்குத்து எதிரி என்று நினைத்து, அவரையும், சகபாடி லாரன்ஷியஸ் ஆண்டிரியாவையும் துரோகிகள் என்றான். அவர்கள் தப்பித்து விட்டாலும், ஓவியம் தொலைந்து போய் விட்டது. டூப்ளிகேட் ஓவியம் அங்குள்ள ஸ்டார்கைரன் மாதாகோயில் உளது. அதன் பெயர்:Vädersolstavlan: "The Sundog Painting".
இது அரிஸ்டாட்டில், சிசிரோ ஆகியோர் பார்த்தது தான். வராஹிமிஹிரர், ஆரியபட்டர் எல்லாரும் பார்த்திருப்பார்கள். எனக்கு ஆதாரபூர்வமான தகவல் கிடைக்கவில்லை. எதற்கும் படமும், வீடியோவும் இணைத்துளேன்.
இன்னம்பூரான்
20 04 2012
http://www.stockholmskallan.se/ContentFiles/UTB/Medeltid/vädersol.bmp
http://www.youtube.com/watch?v=fMSnDKnNiI4
http://www.youtube.com/watch?v=fMSnDKnNiI4
உசாத்துணை:
http://books.google.com/books/about/Vädersolstavlan.html?id=k61RXwAACAAJ
YouTube - Videos from this email
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:18, 26 ஏப்ரல் 2012 (UTC)