"நற்றிணை - தேய்புரி பழங்கயிறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடுமரபு விக்கி இருந்து
17:09, 23 ஜனவரி 2010 இல் கடைசித் திருத்தம்முனைவர் கி.சுப்பிரமணியன்
பல நாள்கள் ஆகிவிட்டன. அந்த வழியில் அடிக்கடி போய்வந்தவர் தான் புலவர். அந்தக் கோயில், குளம், கோபுரம், தேர் எல்லாம் பழக்கமானவை தாம். தேரடியில் ஒரு மூலையில் சுருட்டிப் படுக்க வைக்கப்பட்டிருந்த தேர்வடமும் பழக்கமானது தான். சிறிய கயிறுகள் மூன்று சேர்த்து திரிக்கப்பட்ட ஒரு கயிறு. அதுபோல ஏழோ ஒன்பதோ கயிறுகள் சேர்ந்த பெருங்கயிறுகள் முறுக்கப்பட்டு, இறுகப் பிணைந்த வடம்.
முதன்முதலில் தேர்வடம் செய்யப்பட்டபோது, நார்கள் புதியனவாகவும், மினுமினுப்புடனும் உறுதியாக இருந்தன. அதனால் அவை - ஒன்று சேர்ந்ததால் - தேரையும் இழுக்கும் வலிமை பெற்றது. திருவிழாக் காலத்தில் அதைத் தூக்கி வந்து வெளியே வைத்து விரித்து நீட்டித் தேரின் முன் வளையத்தில் கட்டிப் பொருத்துவதற்கே பல ஆடவர்களின் உதவி தேவையாக இருந்தது.அது ஒரு காலம். விழா முடிந்த பிறகு மீண்டும் அந்தக் கயிற்றைச் சுருட்டி உருட்டி அதனுடைய இடத்தில் மீண்டும் வைத்து விடுவார்கள்.
ஏன் இப்படி? புரிகள் தேய்ந்த பழங்கயிறாக ஆகிவிட்டதே!
அந்த இளைஞனைப் பார்த்துப் பல நாள்கள் ஆகிவிட்டன. புலவருக்கு நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த வீட்டின் - குடும்பத்தின் - நல்ல மகன் அவன். அவர் அடிக்கடி அங்கு போய் வருவது உண்டு. அப்படிப் போகும் போதெல்லாம் இளைஞனின் உடல்கட்டைப் பார்த்துப் பாராட்டுவார். இளமை கொலுவிருக்கும் பொலிவு; திண்மை; வலிமை; அழகு எல்லாமாக ஒன்று திரண்டு "ஆடவர் கண்டு அவாவும்" தோளுடையவனாக அவன் இருந்தான்.
"உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி வாடி இருக்கிறாய்? உன்னுடைய உடம்பு இப்படித் தேய்ந்து மெலிந்து போய் விட்டதே ஏன்?" அடுக்கடுக்காகப் புலவர் கேட்டார்.
"புலவர் பெருமானே! நீங்கள் என்னைப் பலமுறை என் வீட்டில் கண்டவர். திருமணம் ஆகும் வரை நன்றாகவே இருந்தேன்; கவலையற்றுத் திரியும் கன்று போலக் காலம் கழித்தேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இல்லறம் தொடங்கினேன். அதிலும் சிக்கல் ஏதும் இல்லை. அழகும் பண்பும் கொண்ட மனைவியே வாய்த்தாள். அது நான் செய்த தவம். அவளுடைய கூந்தல் முதுகுப் புறத்தில் இறங்கி இடுப்புவரை தவழ்ந்து கருமையாகப் பொலியும். மலரின் மெல்லிய இதழ்களைப் போன்ற நிறத்தையும் குளிர்ச்சியையும் ஒளியையும் பெற்ற அவளது கண்கள் எப்போதும் மைதீட்டப்பட்டு மணியாய் மிளிரும். எனக்காகவே வாழ்பவள். அவளைப் பிரிந்து பொருள்தேடி அடிக்கடி பிரிய வேண்டி வருகிறது. அப்போதெல்லாம் என் நெஞ்சம், "போதும் பொருள் ஈட்டியது. உன்னுடைய பிரிவை எண்ணி எண்ணித் தலைவி வருந்துவாளே! அவள் வருத்தத்தைத் தீர்க்க வேண்டாமா? வா வீட்டுக்குப் போகலாம்" என்று வற்புறுத்துகிறது. நெஞ்சம் சொல்வது சரிதான் என்று வீட்டுக்கே திரும்பலாம் என முடிவு செய்தபோது, உடனே என் உள்ளிருந்து இன்னொரு குரல் பேசியது. அது அறிவு.
ஒரு செயலைச் செய்துவிட வேண்டும் என எண்ணி முன் வந்தாயிற்று. அதனால் வருவது இன்பம் தானே?
இடையே துன்பம் வரத்தான் செய்யும். பிரிவுத் துன்பத்தைத் தாங்கும் ஆற்றல் அந்தத் தலைவிக்கு இருக்கிறது. இவனுக்கு இல்லை போலும் என்று ஊரார் தூற்றுவார்கள். கொஞ்சம் எண்ணிப்பார். காலம் தாழ்த்தாதே விரைந்து போ" இப்படிச் சொல்லிற்று அறிவு.
அப்பாடல் வருமாறு:- "புறம் தாழ்பு இருண்ட கூந்தல்; போதின்
நன்றி:- தினமணி |