"மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 5" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
(புதிய பக்கம்: fromrajam <rajam@earthlink.net><br>toமின்தமிழ் <mintamil@googlegroups.com> dateSun, Dec 26, 2010 at 6:38 AM<br>subject[MinTamil] …)
 
சி ("மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - 5" காக்கப்பட்டது ([edit=sysop] (indefinite) [move=sysop] (indefinite)))
 

07:11, 15 ஜனவரி 2011 இல் கடைசித் திருத்தம்

fromrajam <rajam@earthlink.net>
toமின்தமிழ் <mintamil@googlegroups.com>

dateSun, Dec 26, 2010 at 6:38 AM
subject[MinTamil] மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பகுதி 5

இந்தப் பகுதியில் ஒரு சிறப்புக் குறிப்பு உண்டு -- "சம்புத் தீவில் தமிழக மருங்கு" பற்றி! அதனாலேயாவது ... இந்தப் பகுதியைப் படிக்கவும்!!!

பொருளடக்கம்



மணிமேகலை: காயசண்டிகையின் கதை

இதற்கு முன் பகுதியில் ... மணிமேகலைக்கு அமுதசுரபியில் பிச்சை இட்ட ஆதிரையின் கதையைப் பார்த்தோம்.


இந்தப் பகுதியில் மணிமேகலையிடமிருந்து பிச்சை பெற்ற காயசண்டிகையின் கதையைப் பார்ப்போம்.



காயசண்டிகை கதை


வட திசையில் சேடியில் ("வெள்ளி மலையில்") காஞ்சனபுரம் என்ற நகரிலிருந்து காயசண்டிகை என்பவள் ஒரு விஞ்சையனோடு ("வித்தியாதரனோடு") தென் திசையில் உள்ள பொதிய மலையைக் காண வருகிறாள். ஒரு காட்டாற்றங்கரையில் அவளும் விஞ்சையனும் சேர்ந்து இருக்கிறார்கள்.


அப்போது அங்கே ஒரு முனிவன் வருகிறான்.


அவன் ...


"புரி நூல் மார்பின் திரி புரி வார் சடை
மரவுரி உடையன் விருச்சிகன் என்போன்"


[சுருக்கமான பொருள்: திரித்த நூல் அணிந்த மார்பினையும் திரிந்த நீண்ட சடையினையும் உடைய, மர உரி உடுத்த விருச்சிகன் என்பவன்.]


விருச்சிகன் கையில் ... கருமையான நுங்கு போல் பெரிதாக ஒரு நாவல் கனி. அந்த நாவல் கனியை அவன் ஒரு தேக்கிலையில் வைத்துவிட்டுத் தொலைவில் உள்ள பொய்கையில் நீராடப் போகிறான்.


காயசண்டிகைக்குத் தீவினைப் பயன் உருவெடுக்கிறது. அதனால் அவள் செருக்கு மிகுந்து, அந்த நாவல் கனியைக் காலால் சிதைத்துவிடுகிறாள்.


நீராடிவிட்டு, நாவல் கனியை நாடி வந்த முனிவன் நாவல் கனியின் சிதைவோடு நிற்கும் காயசண்டிகையைப் பார்க்கிறான். அந்த நாவல் கனியின் அருமையைச் சொல்கிறான்.


"இந்த நாவல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரே ஒரு கனியைக் கொடுக்கும்; அந்தக் கனி மக்களின் உடம்பிற்கு உண்டாகும் பசியை 12 ஆண்டுகளுக்குத் தீர்த்துவைக்கும். 12 ஆண்டுக் காலத்தில் அப்படிப்பட்ட கனியை உண்ணும் ஒரு நாளில் மட்டுமே நான் உண்ணாநோன்பு இருப்பதில்லை. அப்படி நான் உண்ணக் கூடிய கனியைச் சிதைத்துவிட்டாய்."


பசிக் கொடுமை முனிவனுக்கு; சாபம் கொடுக்கிறான் காயசண்டிகைக்கு!


"அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து
தந்தித் தீயால் தனித் துயர் உழந்து
முந்நாலாண்டில் முதிர்கனி நான் ஈங்கு
உண்ணும் நாள் உன் உறு பசி களைக"


[சுருக்கமான பொருள்: வானில் செல்லும் மந்திரத்தை இழந்துவிடுவாய். யானைத்தீ (என்ற பசி நோயால்) கொடுமையான துயரப்படுவாய். (இனி வரும்) 12 ஆண்டுகளில் பழுக்கும் ஒரு கனியை இங்கே நான் உண்ணுகிற அந்த நாளில் உன் பசியும் நீங்கும்.]


இப்படிச் சாபம் கொடுத்துவிட்டு விருச்சிகன் போய்விடுகிறான்.


தன் துணைவனான விஞ்சையனோடு காயசண்டிகை வானத்தில் எழுந்து போக முடியவில்லை. வான்வழியே செல்ல உதவும் மந்திரம் மறந்துவிட்டது. உயிர் நீங்குவது போன்ற பசி. இனிய பழங்கள், கிழங்குகள், செழுமையான காய்கள் எல்லாம் கொண்டுவந்து தருகிறான் விஞ்சையன். ஆனாலும் ... காயசண்டிகையின் பசி அடங்கவில்லை.


விஞ்சையன் காயசண்டிகைக்கு அருளோடு சொல்கிறான்.


"சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்பம் இல்லாக் கழி பெரும் செல்வர்
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணையாகி
நோற்றோர் உறைவதோர் நோனகர் உண்டால்;
பல நாள் ஆயினும் நிலனொடு போகி
அப்பதிப் புகுக ..."


[சுருக்கமான பொருள்: சம்புத் தீவில், தமிழகத்தில், சிறப்புடைய நகரம் ஒன்று உண்டு. அங்கே குறையாத செல்வம் உடையவர்கள் உண்டு. அவர்கள் வேறு ஒன்றும் செய்ய முடியாதவர்களுக்கு உதவுபவர்கள். அந்த நகரத்தில் நோன்பு மேற்கொண்டவர்கள் வாழ்கிறார்கள். (அங்கே போவதற்குப்) பல நாட்கள் ஆனாலும் நில வழியாகவே அந்த நகரத்திற்குப் போ.]


அதனால் காயசண்டிகை காவிரிப்பூம்பட்டினத்துக்கு வந்து தங்குகிறாள். அதுமுதல் அவள் கணவனான விஞ்சையனும் ஒவ்வோர் ஆண்டும் இந்திர விழாவின்போது அங்கே வந்து காயசண்டிகையையும் அவளுடைய பசித் துன்பத்தையும் பார்த்துவிட்டு அடுத்த ஆண்டு மீண்டும் அங்கு வருவதை நினைத்துப் போவான்.


காயசண்டிகை அந்த நகரிலேயே திரிந்துகொண்டிருக்கிறாள்.



மணிமேகலையும் காயசண்டிகையும்

மணிபல்லவத்திலிருந்து அமுதசுரபியுடன் காவிரிப்பூம்பட்டினத்துக்குத் திரும்பிய மணிமேகலை மாதவியுடனும் சுதமதியுடனும் சேர்ந்து போய் அறவண அடிகளைக் கண்டு வணங்குகிறாள். அறவண அடிகள் அவர்களுக்கு அறம் உரைக்கிறார்.


"மக்கள் தேவர் என இரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்
பசிப்பிணி தீர்த்தல்"


[சுருக்கமான பொருள்: மக்கள் தேவர் என்ற இருவகைப்பட்டவர்களுக்கும் தகுந்த ஓர் அறம் சொல்லுவேன். அது பசியாகிய பிணியைத் தீர்ப்பதே.]


அதோடு, அமுதசுரபியைக் கோமுகியில் இட்ட ஆபுத்திரன் கதையையும் மணிமேகலைக்குச் சொல்லி, அந்த நாட்களில் காவிரியில் நீர் நிறைய இருந்தும் மக்கள் வறுமையில் வாடுவதைக் குறிப்பிடுகிறார்:


"துறக்க வேந்தன் துய்ப்பிலன்கொல்லோ!
அறக்கோல் வேந்தன் அருள்இலன்கொல்லோ!
சுரந்து காவிரி புரந்து நீர் பரக்கவும்
நலத்தகை இன்றி நல்லுயிர்க்கெல்லாம்
அலத்தற்காலை ஆகியது"


[சுருக்கமான பொருள்: துறக்க வேந்தனுக்கு ("இந்திரனுக்கு") நுகர்வதற்கு ஒன்றும் இல்லாமல் போனதோ! அறத்தைக் கோலாகக் கொண்ட மன்னன் அருள் இல்லாமல் போனானோ! காவிரியில் நீர் பெருகியிருக்கவும் மன்னுலகில் உயிர்களுக்கு நன்மை இல்லை; அவர்கள் அல்லல்படும் காலமாக இருக்கிறது.]


"வெண் திரை தந்த அமுதை வானோர்
உண்டு ஒழி மிச்சிலை ஒழித்துவைத்தாங்கு
வறன் ஓடு உலகின் வான் துயர் கெடுக்கும்
அறன் ஓடு ஒழித்தல் ... தகாது"


[சுருக்கமான பொருள்: வெண்மையான அலைகள் தந்த அமுதத்தை வானவர்கள் ("தேவர்கள்") உண்ட பின்னர் மிஞ்சியதை (பயன்படுத்தாமல் தனியே) எடுத்து வைத்ததைப் போல... வறுமை பரவியிருக்கிற உலகத்தின் பெரிய துயரத்தை நீக்கக் கூடிய அமுதசுரபியைப் பயன்படுத்தாது தனியே வைப்பது சரியில்லை.]


இப்படி அறவண அடிகள் சொல்லக் கேட்டு மணிமேகலை மாதவியுடனும் சுதமதியுடனும் சேர்ந்து அறவண அடிகளைப் பணிந்து பலமுறை வாழ்த்துகிறாள்.


தொடர்ந்து... பிக்குணிக் கோலம் கொண்டு ஊரின் பெரிய தெருவுக்குச் செல்கிறாள். ஊர் மக்கள் எல்லோரும் அவளைச் சூழ்ந்துகொண்டு வருந்துகிறார்கள்.


"உதயகுமரன் உளம் கொண்டு ஒளித்த
மதுமலர்க் குழலாள் வந்து தோன்றி-ப்
பிச்சைப் பாத்திரம் கையில் ஏந்தியது
திப்பியம் என்றே சிந்தை நோய் கூர..."


[சுருக்கமான பொருள்: உதயகுமரனின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட மதுமலர்க் குழலி இப்போது பிச்சைப் பாத்திரத்தைக் கையில் ஏந்தியது வியப்பே என்று சொல்லி மனம் வருந்த...]


மலர்வனத்துக்குப் போன மணிமேகலையைப் பார்த்துப் புலம்பிய மக்கள் ... சில நாட்கள் அவளைக் காணாமல் இருந்து ... இப்போது திடீர் என்று இந்தப் புதுமையான பிக்குணிக் கோலத்தில் பார்த்தால் வியப்புத் தட்டாமல் என்ன செய்யும்! வருத்தம் வாராமல் இருக்குமா!


அப்போது ... தணியாத பசியுடன் அங்கே திரிந்துகொண்டிருந்த காயசண்டிகை மனிமேகலையிடம் ஆதிரை நல்லாளின் நல்ல மனையைக் காட்டி அந்த மனைக்கு மணிமேகலையை வழிப்படுத்துகிறாள். ஆதிரையின் கதையை மணிமேகலைக்குச் சொல்லி ...


"ஆங்கனம் ஆகிய ஆதிரை கையால்
... பிச்சை பெறுக"


என்றும் சொல்கிறாள்.


மணிமேகலையும் அதன்படியே... ஆதிரையின் மனையகம் புகுந்து "புனையா ஓவியம்" போல நிற்கிறாள். ஆதிரை அவளைத் தொழுது வலம் வந்து, துன்பம் நீக்கும் வகையில், "பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக" எனச் சொல்லி அமுதசுரபியின் அகன்ற உட்புறம் நிறைய ஆருயிர் மருந்தாகிய பிச்சையை இடுகிறாள்!


காயசண்டிகை அதைப் பார்க்கிறாள்.


"பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்றமலை
அறத்தின் ஈட்டிய ஒண்பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉம் செய்கை போல
வாங்கு கை வருந்த மன்னுயிர்க்கு அளித்துத்
தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி"


[சுருக்கமான பொருள்: (ஆதிரையிடமிருந்து) பிச்சைப் பாத்திரத்தில் (மணிமேகலை) பெற்ற பெரிய சோற்றுத் திரள் குறையாமல் பெருகுகிறது. அறத்துவழியில் சேர்த்த பொருள் பெருகுவது போலப் பெருகுகிறது. வாங்குபவர் கை வருந்தும்படி மன்னுயிர்க்கெல்லாம் அளித்துத் தான் குறையாமல் இருக்கிறது. அந்தப் பெருமையைக் (காயசண்டிகை) பார்த்து ...]


மணிமேகலையை வணங்கிக் கேட்கிறாள்:


"நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடுமலை எல்லாம்
அணங்குடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டழல் கடும் பசிப்
பட்டேன் எந்தன் பழவினைப் பயத்தால்;
அன்னை, கேள்! நீ ஆருயிர் மருத்துவி!
துன்னிய என் நோய் துடைப்பாய்!"


[சுருக்கமான பொருள்: திருமால் மண்ணுலகில் தோன்றி அடைக்க முடியாத கடலை அடைத்த நாளில் குரங்குகள் கொண்டுவந்து போட்ட பெரிய மலைகள் எல்லாம் வருத்தம் தரும் கடலின் வயிற்றில் புகுந்ததைப் போலவே ... என் பழவினையின் பயனாக வயிற்றில் எதைப் போட்டாலும் அடங்காத கடும்பசியை உடையேன். அன்னையே, கேள்! நீ அருமையான உயிர்களுக்கு வேண்டிய மருந்தை உடையவள். என்னைப் பிடித்திருக்கிற நோயைப் போக்குவாய்.]


மணிமேகலையும் தன் பாத்திரத்தில் ஏந்திய அமுதத்தைப் பிடித்து எடுத்துக் காயசண்டிகையின் கையில் கொடுக்கிறாள். காயசண்டிகையின் "வயிறு காய் பெரும் பசி" நீங்குகிறது!


அதன்பின்னரே காயசண்டிகை தன் கதையை மணிமேகலைக்குச் சொல்கிறாள்.


தணியாத தன் பசியைத் தீர்த்துவைத்த மணிமேகலையை வணங்கி, அந்த ஊரில் சக்கரவாளக் கோட்டத்தில் இருக்கும் உலக அறவிக்குப் போகும்படிச் சொல்கிறாள்.


"துக்கம் துடைக்கும் துகள் அறு மாதவர்
சக்கரவாளக் கோட்டம் உண்டு; ஆங்கு அதில்
பலர் புகத் திறந்த பகுவாய் வாயில்
உலக அறவி ஒன்று உண்டு; அதனிடை
ஊர் ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர்
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர்
இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால்
... அதன்பால் போக..."


[சுருக்கமான பொருள்: துக்கத்தைத் துடைக்கிற, தூய பெருந்தவம் செய்கிறவர்கள் இருக்கும் சக்கரவாளக் கோட்டம் இருக்கிறது. அங்கே பலரும் நுழையும்படியான அளவு பெரிதாக அமைந்த வாயிலைக் கொண்ட உலக அறவி ஒன்று உள்ளது. பல ஊர்களிலிருந்தும் பசியால் வாடி வருந்தி வந்தவர்களும், காப்பாற்றுவதற்கு யாரும் இல்லாததால் கொடிய நோயால் துன்புறுவோரும் (பிச்சை) இடுபவர்களைத் தேடி அங்கே இருக்கிறார்கள். நீ அங்கே போ.]


இப்படிச் சொல்லிவிட்டுக் காயசண்டிகை தன் வழியே போய்விடுகிறாள்.



பசி தீர்ந்த காயசண்டிகை எங்கே போகிறாள்?

அதுவரை தீராத பசி தீர்ந்ததும் ... காயசண்டிகை வானத்தில் எழுந்து போகிறாள். அப்படிப் போகும் போது ... விந்திய மலைக்கு மேலே செல்கிறாள்.


வான் வழியே செல்பவர்கள், அந்தரி ("துர்க்கை"?) இருக்கும் விந்த மால் வரையின் மேலே போக மாட்டார்கள். அப்படியே யாராவது போனாலும், போகிறவர்களை விந்தாகடிகை விழுங்கிவிடுவாள்.


"அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த
விந்த மால் வரை மீமிசைப் போகார்;
போவார் உளர் எனின் பொங்கிய சினத்தள்
சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம்
விந்தம் காக்கும் விந்தா கடிகை"


[சுருக்கமான பொருள்: அந்தரத்தில் செல்பவர்கள் அந்தரி இருந்த, பெரிய விந்த மலைக்கு மேலாகப் போகமாட்டார்கள். அப்படியே போகிறவர்கள் உண்டானால், பொங்கிய சினத்தை உடையவளும் விந்தத்தைக் காப்பவளும் ஆகிய விந்தாகடிகை அவர்களுடைய நிழல் மூலம் அவர்களை இழுத்துத் தன் வயிற்றில் அடக்கிக்கொள்வாள்.]


காயசண்டிகை அந்த மலைக்கு மேலே போனதால் அந்த விந்தாகடிகையின் வயிற்றில் அடங்கிவிட்டாள், பாவம்!


அன்புடன்,
ராஜம்

--Ksubashini 07:10, 15 ஜனவரி 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Ksubashini

இப்பக்கம் கடைசியாக 15 ஜனவரி 2011, 07:11 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 7,320 முறைகள் அணுகப்பட்டது.