ஶ்ரீராமனின் பாதையில்- அயோத்தி 4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
அயோத்தியை நோக்கி! குப்தார்காட்டிலும், நந்திகிராமத்திலும்!
சிறிது நேரம் ஓய்வெடுக்கும் போதே ஆட்டோக்காரர் வந்து கூப்பிடுவதாக ரிசப்ஷனிலிருந்து தொலைபேசி அழைப்பு வர, உடனடியாகக் கிளம்பினோம்.  சாலை சரியாக இல்லாததாலும், விரைவில் இருட்டி விடுவதாலும் செல்ல வேண்டிய இடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு திக்கிலே சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பதாலும் சீக்கிரம் சென்றால் தான் மாலை ஏழுக்குள் வர இயலும் என ஆட்டோ ஓட்டுநர் கூறக் கிளம்பிவிட்டோம்.  முதலில் சென்றது குப்தார்காட் என்னும் சரயு நதி தீரம்.

http://sivamgss.blogspot.in/2008/08/85.html/கதை கதையாம் காரணமாம்/ராமாயணம்



ஶ்ரீராமர் எந்தச் சூழ்நிலையில் சரயுவில் மூழ்கி மறைய நேர்ந்தது என்பதை என் "கதை கதையாம் காரணமாம்--ராமாயணம்" தொடரின் மேற்கண்ட சுட்டிகளில் காணலாம்.  

அயோத்திக்கு மேற்கே உள்ள சரயு தீரத்தில் ஶ்ரீராமர் சரயுவில் மூழ்கியதாகச் சொல்லப்படுகிறது.  அது குறித்த விளக்கங்களை ஏற்கெனவே எழுதி விட்டதால் சுட்டிகளை மட்டுமே அளித்துள்ளேன். ஹிந்தியில் "குப்த்" என்றால் மறைவாக, ரகசியமாக என்றெல்லாம் பொருள்படும்.  இங்கே தான் ராமர் மறைந்தார் என்பதால் குப்தார்காட் என இதை அழைக்கின்றனர்.  இங்கே நதிக்கரையில் ஒரு கோயிலும் இருக்கிறது.  இது தான் மதராசி மந்திர், அம்பாஜி மந்திர் என்றெல்லாம் அழைக்கப்படும் கோயில் என அறிந்தேன்.  ஆனால் நாங்கள் சென்ற நேரம் மணி மூன்று.  கோயிலை நான்கு மணிக்கு மேல் தான் திறப்பார்களாம். வெளியில் இருந்தே சில சந்நிதிகளை மட்டும் தரிசித்தோம். அவை கீழே.  சிவன் சந்நிதி மட்டும் பார்க்க முடிந்தது. 



அதற்குள்ளாக ஆட்டோக்காரர் அழைப்பு மேல் அழைப்பு விடுத்துவிட்டார். அயோத்தியின் நிலைமை அப்படி உள்ளது.  எந்த நேரம் எந்த வழியை மூடுவாங்க, அல்லது திறப்பாங்கனு சொல்ல முடியாது. அதோடு இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் வேறே உள்ளன.  அவற்றுக்கு வெவ்வேறு திக்கில் செல்ல வேண்டும். இதுக்கே கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பயணம் செய்து வந்திருந்தோம்.




வழியெங்கும் நெல் வயல்கள்.  கரும்புத் தோட்டங்கள்.  செழுமை பொங்கின. இவ்வளவு நீர், நில வசதி இருந்தும் நாடு ஏன் முன்னேறவே இல்லை என்ற கேள்வியும் மனதைத் துளைத்தது.  ஆங்காங்கே வயல்களில் வரப்போரமாகவோ அல்லது சாலைகளின் ஓரமாக வயல் கரையிலோ இயற்கை உரங்கள் மலை போல் குவிந்து கிடந்தன.  எங்கேயும் செயற்கையான உரத்தையே பார்க்க முடியவில்லை.  ஒவ்வொரு வீட்டிலும் அது குடிசையாக இருந்தாலும் குறைந்தது நான்கு பசுக்கள் இருந்தன.


குப்தார்காட்டின் படகுத் துறை.  காலை பார்த்த இடத்திலும் படகுத்துறை இருந்தது.  அங்கே ஆழம், வேகம் குறைவு. இங்கே ஆழம் நாற்பது அடிக்கும் மேல் என்றார்கள்.  வேகமோ வேகம்.  அதான் ராமர் இதைத் தேர்ந்தெடுத்தாரோனு நினைத்தேன்.


 கால்நடைப் பராமரிப்பும் சரி, வளர்ப்பும் சரி அமோகமாக இருப்பதும் தெரிந்தது.  பசுக்கள் மேயப் புல்வெளியும் ஏராளம்.  ஆகவே எந்தப் பசுவும் சினிமா போஸ்டரையோ, ப்ளாஸ்டிக் பைகளையோ சாப்பிட்டும் பார்க்கலை.  இதை இங்கே ஶ்ரீரங்கத்திலும் பார்க்கலாம்.  பசுக்களுக்கு மாட்டுச் சொந்தக்காரர் அறியாமல் நாமாக ஏதேனும் உணவைக் கொடுத்துவிட முடியாது. கொடுத்தால் அகத்திக்கீரை மட்டும் கொடுக்கலாம். பாழாய்ப் போனதெல்லாம் பசுவன் வயித்திலே என்ற பழமொழி இங்கே எடுபடாது.  ஏன் நீ சாப்பிடேன், என்று திருப்புவார்கள். இது மாட்டின் நன்மைக்கே என்றாலும் முதலில் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது.  பின்னர் பழகி விட்டது. 


குப்தார் காட்டிலிருந்து நாங்கள் சென்றது நந்திகிராமம். இங்கே தான் ஶ்ரீராமன் வருவதற்கு நேரம் ஆகிறது என்பதால் இனி அவன் வருவானோ மாட்டானோ என்ற சந்தேகத்தில் பரதன் தீக்குளிக்க இருந்ததும், அப்போது அநுமன் தூதுவனாக வந்து பரதனைக் காத்ததும் நடந்தது.  இங்கே அநுமனும், பரதனும் ஆலிங்கனம் செய்து கொள்ளும் சிற்பம் ஒன்றும், அநுமன் சந்நிதியும் உண்டு. பரதன் தவம் இருந்த குகையில் இப்போது ஶ்ரீராமன், பரிவாரங்களோடு கோயில் கொண்டிருக்கிறார். இந்தக் கோயிலின் அருகேயே இன்னொரு பழமையான கோயில் அது தான் உண்மையான பரதன் குகை என்று சொல்கிறது.  இதைக் கண்டறிந்ததும் விக்கிரமாதித்த அரசன் என்றும் சொல்கிறது. இரண்டையுமே சென்று பார்த்தோம்.  இரண்டாவது கோயிலில் கீழுள்ள குகைக்குச் செல்ல முடியவில்லை.  அநுமதி கொடுப்பதில்லை என்றனர்.  சிலர் அநுமதி கொடுப்பவர் வரவில்லை என்றனர்.  ஆக மொத்தம் பார்க்க முடியவில்லை. 

 நந்திகிராமத்தின் காட்சிகளைக் காண வேண்டாமா?

நந்திகிராமத்தில் முதலில் சென்ற பரத்குண்ட் என்னும் இடம்.  இந்தக் குளத்து நீரைக் குளிக்கவோ, குடிக்கவோ மற்ற எதற்கும் பயன்படுத்துவதில்லை. மேலும் இங்கே பித்ரு காரியங்கள் செய்ய உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. நாங்கள் சென்றபோது மாலை நான்கு மணி ஆகிவிட்டபடியால் எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டில் சென்னை, திருவல்லிக்கேணியிலிருந்து வந்திருந்த ஒரு குழுவினரை இங்கே சந்தித்தோம். கிட்டத்தட்டப் பதினைந்து, இருபது ஆண், பெண்கள் வந்திருந்தனர்.


பரதனை ஆஞ்சநேயர் சந்தித்து ஶ்ரீராமர் வருகிறார் என்ற தகவலை அளித்த இந்த இடம் பரத்-அநுமன் மிலன் மந்திர் என அழைக்கப்படுகிறது.  முற்றிலும் இயற்கையான சூழலில் அமைந்துள்ளது.  உள்ளே ஶ்ரீராமர் சந்நிதிக்கு இடப்பக்கமாகக் கீழே சென்றால் பரதன் இருந்த குகையும், பரதனும் ஆஞ்சநேயனும் சந்தித்து ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு மகிழ்ந்ததைக் காட்டும் சிற்பத்தையும், ராமர் பாதுகையையும் காணலாம்.


பரதனும் ஆஞ்சநேயனும் ஒருவரை கட்டி அணைத்த வண்ணம் காட்சி அளிக்கின்றனர்.


காட்டில் ஶ்ரீராமன் தவம் இருந்தான் எனில் நாட்டிலேயே தவம் இருந்த பரதன்.


ஆஞ்சநேயர் தனி சந்நிதியில்


ஆஞ்சநேயருக்கு மேலே சுவத்திலே நம்மாளு இருந்தாரா, கொஞ்சம் தூரக்க இருந்தாலும் விடலை!  பிடிச்சுட்டேன்.





லவ, குசர்களின் பாணத்தால் காயமடைந்த ஹநுமான் இங்கே வந்து வீழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. 



விக்கிரமாதித்தனைக் குறித்த விளக்கத்தைக் கொடுக்கும் அறிவிப்புப் பலகை. 

--Geetha Sambasivam (பேச்சு) 09:27, 30 ஜனவரி 2014 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 30 ஜனவரி 2014, 09:27 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,381 முறைகள் அணுகப்பட்டது.