சிவஞான கற்பம்-4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 சிவஞானகற்பம்

நான்காம் தந்திரம்: காண்டற்கலை

அளத்தல் என்பதுவும் கற்றல் என்பதுவும் அறிவுத்திகள் பெய்து நூலெனத் தோன்றுவனவற்றின் அப்பிரகாசத்தைப் போக்கலும் இன்னும் இவை போன்றவையும் ஒரே கருத்தினவே. வாழ்வின் எல்லாக் கூறுகளிலும் இத்தகைய கற்றல்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன. ஒருவன் ஓர் தொழிலைச் செய்யும் பொழுதும், பற்பல இடங்களுக்கு பயணம் செய்யும் பொழுதும், பலரோடு உறவாடும் பொழுதும், மனைவி மக்களோடு மகிழ்ந்து இஇல்லறம் நடத்தும்போதும், சரியா கிரியைகளில் ஈடுபட்டு தெய்வங்களை வழிபடும்போதும், இவ்வாறான செயல்களிலிருந்து ஒதுங்கி ஞான நூற்களை ஓதும்பொழுதும், அமர்ந்து ஆய்கின்றபோதும், ஒன்றினை ஆய்வுகளத்தில் சோதிக்கும் போதும், தியானம் சமாதி போன்ற யோகப் பயிற்சிகளில் ஈடுபட்டு மேலான அவத்தைகளைப் பெற்று மகிழும்போதும், மேலும் சொப்பனம் சுழுத்தி துரியம் துரியாதீதம் போன்ற அசாதாரண அவத்தைகளில் விழும்போதும் யாதாவதோர் கற்றல் நடக்க, அதன்வழி உண்மைகள் பலவற்றை அறிகின்றனன். கற்றல்கள் அனைத்துமே ஐயம் திரிபுகளைப் போக்கி மெய்மை பயப்பதாகின்றன. இவற்றையெல்லாம் காண்டல், கருதல் , ஆகமம் என்ற மூன்று பெரும் பிரிவுகளில் அடக்கலாம் என்கின்றார் அருணந்தி. இவற்றை இங்கு 'கலைகள்' என்று கூறுதற்குக் காரணம் இவை அனைத்தும் அகத்திலிருக்கும் அறியாமையைப் போக்கும் கற்றல்வினைகளே என்பதால் என்க.

இவற்றில் முதற்கண் காண்டற் கலையை விரிக்கத் தொடங்குகிறார் ஆசிரியர். சைவ சித்தாந்த சாத்திரங்களில் வாயிற்காட்சி ( sensory perception), மானதக் காட்சி ( mental perception), தன்வேதனைக் காட்சி (self perception), விஞ்ஞானக் காட்சி (transductive perception), சிவஞானக் காட்சி ( transcendent perception) என்பவற்றையே அனுசரித்துச் சென்று அவற்றை விளக்குகின்றார்.

4.1

கலைகளிற் றொழில்களில் கருத்துள்வளர் பலநிலைகளிற்
காண்டல் நிகழுங்கருள் இரிய

(இ-ள்)

ஆடல் பாடல் நாடகம் போன்ற கலைகளிலும் மேலும், ஆய்வுக் களங்களில் செய்யப்படும் ஆய்வுப் பணிகளாகிய கலைகளிலும், இவற்றிற்கு வேறாகிய பிழைப்பினைக் கருதி செய்யப்படும் உழவு, வாணிபம் போன்ற தொழில்களிலும் மேலும் கற்பனைச் செய்தல், திட்டமிடுதல், கோட்பாடு விளக்கல், சிந்தித்தல், கனவு காண்டல் போன்ற கருத்துள் வளர் பல நிலைகளிலும் காண்டல் எனப்படும் கலை நிகழ்ந்து அகத்துள் செறிந்திருக்கும் அறியாமை, தெரியாமை போன்ற கருள்களை இரித்து(dispel) இல்லாதாக்கும் என்றவாறு. இதனால் 'காண்டல்" என்பதை கட்பொறிவழி உருவங்களை மாத்திரம் காண்பதல்ல என்றும் , யாங்காங்கு எவ்வழியினும் ஓர் உண்மை வெளிப்பட்டு தெளிவாக நின்று பொருளாகச் சுடர்கின்றதோ, ஆங்கெல்லாம் காண்டற்கலை நிகழுவதாக கொளப்படும் என்பதாயிற்று. காண்டல் என்பது மேற்கூறிய பல்வகை காட்சிகளை பயப்பதாம்.

ஈட்டற்குரிய கரணங்களோடு காண்டற் திறத்திற்குரிய தொடர்புகளை அடுத்து விளக்குகின்றார் கண் கட்டியாருடன் உடன்பட்டு.

*4.2

மறைந்துமலத் திற்கரணம் வாய்த்திடலும் அத்தம்
அறிந்திடுங் காலங்காண்ட லாம்

(இ-ள்)

இது 'காண்டல்' என்றால் என்ன என்பதை இன்னும் தெளிவாக்குகிறது. அறிவினைத் தரும் பல்வேறு கரணங்கள் ஆணவமலத்திற்குள் மறைந்து வெளிப்படாது நின்றிருக்க, அதுபொழுது ஆங்கேயாகும் அருட்பதிவின் காரணமாக, இந்த ஆணவமலத்தின் மறைப்பு நீங்கி புதையுண்டு கிடக்கும் கரணங்கள் வெளிப்பட்டு ஆன்மாவின் கருவியாக நிற்க, அதன்வழி இஇதுவரை புலப்படாதிருந்த ஓர் பொருளை உண்டென்றும், இஃது இற்று என்றும் அறியவருங்கால் அங்கு காண்டற்கலை பயில்கின்றது என்பதாம்.

இது எவ்வாறெனின், ஒன்றறிவுயிர்களாகிய மரஞ்செடி கொடிகட்கு, உற்று அறிகின்ற திறனோடு வேறு கரணங்கள் இல்லையென, நாவால் சுவைத்து ஓர் பொருளின் சுவை அறிதல் கூடாதாயிற்று. இனி நத்தைபோன்ற உயிர்கள் உற்றும் சுவைத்தும் அறிகின்ற கரணங்களைப் பெற்றும் மூக்கினால் முகர்ந்தறியும் திறனில்லாது போக, ஓர் பொருளின் மணம் இஇவற்றால் காணமுடியாத வொன்றாகவே கிடக்கும். இதேப் போன்று கண், செவி போன்ற பொறிகளோடு கடைசியாக மனன் என்றவொன்று வெளிப்பட்டு அறிதற்கரணமாக நிற்க, மனிதனைப் போன்று ஆறறிவுடைய பிறவிகளாகின்றன. இவ்வாறு உயிர்கள் கூர்ந்து பக்குவ முதிர்ச்சி அடைய, அதற்கேற்ப புதுப்புது கரணங்கள் வந்தமைய, அதற்கேற்றவாறு புதுப்புது காண்டற்கலைகளும் வளருகின்றன. இவ்வாறு பண்டே கூறுகின்றது தொல்காப்பிய மரபியல்:

"ஒன்றறி வதுவே உற்றறி வதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே
ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிபடுத் தினரே"

(தொல். 1526)

இங்கு தோன்றாது மறைந்து கிடந்து பிறகு கூர்ந்து பதவூழிப் பெற புதிய கரணங்கள் வந்து வாய்த்திட, அதுவரை காணமுடியாதவை காணவருகின்றது என்ற குறிப்புண்டு.

இனி நீலகேசியார் விலங்குகதியினராகிய ஐயறிவுகள் வரை சென்று பிறகு ஆறாவது அறிவுடைய மக்களை நல்லவர், தீயவர், திப்பியர், குமானுயர் என்றவாறு வகுத்து அவர்கட்கு பொருந்திய போகநிலங்கள் ஆகவே அறிகரணங்கள் வெவ்வேறு என்கின்றனர்.
இனி சைவர்கள் மேற்கூறியவற்றைப் பசுகரணங்கள் என்றும் சிவஞான தரிசனத்தின் ஈட்டித் தருவதாகிய சிவகரணங்களும் உண்டென்பர். இவை பிறகு விளக்கப்படும்.

இனி இவ்வாறு மக்களுக்கிடையேயும் அதற்கு மேம்பட்ட தெய்வகதிகட்கும் வெவ்வேறு அறிகரணங்கள் வாய்ப்ப, இஇக்கதிகள் அல்லது பக்குவங்கள் என்றும் அறியக் கிடக்கின்றது. அத்தோடு புத்துலகில் குழந்தை வளர்வியல் ஆய்விலும் அந்த கரணங்கள் அடுத்தடுத்து வெளிப்பட்டு அவர்களது அறிதிறனை நிறுத்துகின்றது என்றும் காணப்பட்டுள்ளது. இவற்றைப் 'பதவூழிகள்' (stages of development) என்று பகரலாம்.
"ஆகமவுளவியலும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியும்" என்ற எனது சிறுநூலில் இதன் விளக்கங்கள் உண்டு. "அருட்குறள்" இல்லியக் காண்டத்திலும் இன்னும் விரிவாக. கண்டு தெளிக.
பியாஜே (Piaget) என்பார் ஆய்விற்கு உடன்பட்டு, குழந்தைகளின் வளர்வியலை மனக்கரும பதநிலை, சிந்தனாக் கரும மூன்னிலை, சிந்தனாக் கரும நிலை, ஏரணச் சிந்தனாக் கரும நிலை என்ற பதவூழிகளாக கணித்து, இவற்றில் முதலில் மனமும், பிறகு ஆங்காரமும் பிறகு புத்தியும் முடிவாக சித்தமுமாகிய அந்தக்கரணங்கள் அடுத்தடுத்து புதையுண்ட நிலையிலிருந்து வெளிப்பட்டு ஆன்மாவிற்கு அறிகரணமாக பயன்பட்டு காணமுடியாது கிடந்தவற்றை காணத் தருகின்றது என்றும் விளக்கப்பட்டுள்ளது.

இனி இந்நூலிலும் மற்றும் பல சைவாகமங்களிலும் கடப்புருகாண்திறத்தின் (transductive perception) விஞ்ஞானக் காட்சி சமைவதாகவும் அதன்வழி மறையாக நிற்கின்ற பல விடயங்கள் நேரிதாய்க் காணவருகின்றதென்றும் அதனை நடக்கவிருப்பவற்றை முன்கூட்டியே காணுந் திறனும் வந்தமையும் என்றும் கூறப்படுள்ளது. இவையெலாம் மலத்தில் மறைந்து கிடக்கின்ற கரணங்களை வெளிப்படுத்தி தனதாக்கிக் கொள்ள அதனால் வரும் காண்டல் திறன்களாம் என்க.

இவ்வாறு காண்டலின் தோற்றுவாயைப் பற்றி விளக்கியபின் இரண்டிற்கும் உள்ள இயைபுகளை அடுத்து விளக்குகின்றார் ஆசிரியர்.

4.3

கரணங்களோ டொன்றித்துக் கருவிகளோடு புல்லவுலகம்
திரணப்பொலி வின்தெருட்டுக் காட்சி

(இ-ள்)

கரணங்கள் என்பது வேறு, அதனோடு வரும் கருவிகளென்பது வேறு. கண் காது மூக்கு நாவு தோல் என்பனவும் மூளையின் பல பகுதிகளும் கருவிகளாகும். கரணங்கள் என்பன இக்கருவிகள் மெய்ப்பொருளாக நிற்பதற்கு மூல காரணமானவை . காணுங் கரணம் சித்திக்க , அதனோடு அத்திறன் வெளிப்பட்டு நிற்கின்ற உயிர் இனங்களுக்கு வெவ்வேறு வகையான கண்கள் ஆகின்றது. மானிடர்களுக்கு இரண்டு விழிகள், பட்டாம்பூச்சிகாட்கு ஆயிரம் கண்கள். இவற்றை எல்லாம் விலங்கியல் நூற்களில் கண்டு தெளியலாம். இவ்வாறு அந்தக்கரணங்களோடு வேறற நின்று, அந்தக் கரணங்கள் வெளிப்பட்டு ஆய் நிற்கும் பொறிகளோடு பொருந்தி அனுபவிக்க, அதுபொழுது திரணமாகிய வானவில்லைப் போன்று பற்பல குணங்களோடு சுடர்ந்து நிற்கும் பொருளறிவினைத் தரும் தெளிவான காட்சிகள் மெய்யாகும் என்றவாறு. இஇதனால் காட்சிகள் அனுபவத்து உண்மைகள் ஆகிட, இத்தகைய கரணங்களோடு( cognitive faculties, competencies), செம்மையான அகப்புறக் கருவிகளும் (sensory apparatus, cognitive utensils) வேண்டப்படுகிறது என்பதாம்.

கேட்குந் திறன் உடையவொன்று, அதனை வெளிபடுத்தும் காதெனும் கருவி செவ்வித்தாக அமையாது போயின், கேட்டறிதல் என்னும் சத்தங்காண்டல் சித்தியாது போவதைக் காண்க. இனி எறும்பு போன்ற உயிரிகட்கு கேட்டற் கரணம் சித்தியாது போக, அதற்குரிய செவியும் இல்லாது போக ஓசையறிதல் இஇவைகட்கு ஆகாவொன்று என்றறிக. இதேப் போன்று பசுகரணங்கட்கு மேலாகிய சிவகரணங்கள் சித்தித்தாலே ஒழிய, மேலும் அதனோடு வரும் மூளையின் சிலப் பகுதிகளை எட்டி அவற்றைத் தொழிற்படுத்தினாலே ஒழிய, கரந்துரு காண்திறன்
வந்தமையாதென்றும், அதனின் மறையாக நின்றிலங்கும் மந்திரத் திருமேனிகளின் காட்சி சித்தியாகாதென்றும் குறிப்பிட்டவாறு.
இனி இவ்வாறு சனிக்கும் காட்சிகளின் தோற்றத்தை அருளினோடு தொடர்பு படுத்துகின்றார் அடுத்து.

4.4

அறிவுதரு கரணங்களும் அறிவிலாடும் பொருட்களும்
அருளின் விளைவதவ னியில்

(இ-ள்)

இங்கு கரணங்கள் தரு அறிவு எனப்படுவது பொருட்களின் தோற்றவறிவாகும்(appearances). இவ்வாறு தோற்றவறிவினைத் தரும் கரணங்களும், ஆகவே கருவிகளும், அவற்றின்வழி உளதாக அறியப்படும் பொருட்களும், ஆகவே இவ்வுலகத்து தோன்றி உளதாயுள்ள பொருட்பிரபஞ்சமும் கருத்துப்பிரபஞ்சமும், அருளின் வெளிப்பாடே; அவனியில் உரிப்பொருளாய், அந்த அவனியேயாகும் கருப்பொருளாய் உளதாகும் அனைத்தும் அருளாலேயே உளதாகின்றது .

இனி தோற்றமாவது, இருளினைக் கிழித்துக்கொண்டு அறிவிற்படுவதாக நின்றிலங்கும் பொருள் நிலையாகும். உள்ளதே தோன்றும் என்பதால், "தோற்றம்" என்பது ஏதானுமோர் வகையில் காண்டற்குரியதாய் வெளிப்பட நிற்கும் நிலை என்றவாறு. பொருட்களை வெளிபடுத்தி நிறுத்தலும் அவற்றைக் காணுதற்குரிய கரணங்களும் உயிர்கட்கு உரித்தாதலும் இறையருளினால் தான் என்றவாறு.

எவ்வாறு எனின், மலத்தில் பொருட்களும் கரணங்களும் மறைந்து வெளிப்படாது கிடக்க, அவற்றை வெளிபடுத்தி காணுதற்குரியதாய் நிறுத்தலும், அவற்றைக் காணுந்திறனை கரணங்கள் வழி உயிர்கட்கு நல்களும், ஆணவமலத்திற்கு அப்பாலாகி அதனையே தொழிற்படுத்த வல்ல சங்காரகாரணனாகிய இறைவனாலேயே முடியும் என்பதால் என்க.

இவற்றின் விரிவு பின் வரும் படலங்களில்.
இனி உளதாய் நின்றாலும் அகத்துத் தெரியாமை என்பது விளங்க, அதனினும் சித்தியாது போகும். இஇது எவ்வாறு என்று விளக்குகின்றார் ஆசிரியர்.

4.5

இறையருள் வேண்டி இயங்கிடு மாந்தர்க்குயர்
அறிகரணங் கள்வாய்க்கு மருளின்

(இ-ள்)

உலகத் தோற்றமும் அதனுள் இருப்பதாய் அறிகின்ற பொருட்களின் தோற்றமும் அறிவினை மயக்குகின்ற மாயவிளையாட்டுக்கள் அல்ல, அனைத்தும் வேதாந்திகள் சொல்வது போன்று மித்தியா ஞானமோ , ஆரோபிதங்களோ அல்ல; மாறாக அவற்றில் பெரும்பாலும் உண்மைகளாகிய அருளின் வெளிப்பாடே . பொய் உணர்வுகளின் விபரீதக் கற்பனைகளை போக்குதற்கு இறைவனைத் தொழுது செருக்கழித்து தற்போதம் போக்கி சிவபோதம் மகிழ அருள் வேண்டித் தொடர்ந்து உழைக்க வேண்டும். அவ்வாறு செய்ய திருநெறிபால் ஊய்கின்ற பெரும் பேறு அமையும். அதுபொழுது இதுவரை காணகிலாது தடுமாறித் திரியும் நிலை போக்கும் வகையில் , வெளிப்படாது மாலத்திற் புதையுண்டு கிடக்கும் மேலான அறிகரணங்களை வெளிபடுத்தி ஆன்மாக்களுக்கு வாய்ப்பதாக அருளி கண்களைத் திறந்து விடுவன் நுதல்விழி நாட்டத்து இறைவன் என்பதாம்.

அவன் அருளாலேயன்றி எவ்வகைய காண்டலும் கூடாதுபோக, அவன் அருளை மறவாதே வேண்டிநிற்க வேண்டும் என்பதாயிற்று. இவ்வகையில் மெய்ஞான வாழ்க்கை வாழ, அமைகின்ற பக்குவத்திற்கேற்ற அறிகரணங்களை அருளி பல்வேறு புது வகை தரிசனங்களை மகிழச் செய்து ஞானம் வளர்க்க உதவுவன் இறைவன் என்பதாம். இங்கு குறிப்பாக, இருக்கின்ற பசுகரணங்களோடு மேலான சிவகரணங்களை அருளுவதாகும். இந்த சிவகரணங்களே, ஊனவிழிக் காட்சியின் மேலான நுதல்விழிக் காட்சியை தந்து துரியம் துரியாதீதம் போன்ற அவத்தைகளை அடைய உதவுவனவாகும்.

பொருள் வெளிப்பட்டு நிற்க, அதனைக் காணமுடியாமை அதற்கேற்ற அறிகரணங்களை பெற்றிடாதிருப்பதின் என்றவாறு. இருப்பனவெல்லாம் அனைவருக்கும் காணவரும் என்பதில்லை. காணும் கண்ணுடையார்க்கே, உண்டு எனும் உணர்வினைத் தரவல்ல தரிசனங்கள் என்பதாம்.

இனி இவ்வாறு மேலான அறிகரணங்கள் எவ்வாறு வாய்க்கின்றன என்பதை இன்னும் சற்று விளக்குகிறார் ஆசிரியர்.

4.6

கற்றளிப் பெயர்வின் கரணங்க ளீட்டல்
உற்றலின் உயர்நிலை யறிவு

(இ-ள்)

இருந்தறிவுகள் (existential understanding) பலவகைப்பட அவை எழூஉம் நிலங்கள் கற்றளி எனப்பட்டது. கல்+அளி= கற்றளி. இது தொல்காப்பியரின் திணைபோன்றதும், திருமூலரின் ஆதாரத்தலங்கள் போன்றதுமாகும். எவ்வாறு ஓர் நிலத்திணையில் இருப்பானது அறிவு, அந்தத் திணையில் புகுந்து வாழ்வதால் வரை செய்யப்படுகின்றதோ(ecological determinations of understanding) அதேப்போன்று ஆன்மா நிற்கும் அகத்துக் கற்றளிகளாகிய ஆதார நிலங்கள் வழியாக, ஆங்கு வெளியாகி வாய்ப்பதாகிய கன்மங்களாலும் கரணங்களாலும் அந்த ஆன்மாவின் அறிவெல்லை அறுதி செய்யப்படுகிறது. இக்கற்றளிகள் விடயங்களையும் அறிகரணங்களையும் அவற்றோடு வரும் அறிவுத்திகளையும் ஓர் வரம்பிற்குட்பட்டதாய் கிடத்த, அவற்றை நீங்கிப் பெயர்ந்து அதற்கு மேலான ஓர் கற்றளி அடைந்தாலன்றி, முன்பிருந்த வரம்பிற்கு அப்பாற்பட்ட விடயங்களும் அறிகரணங்களும் வந்தமையா என்றவாறு. காட்டாக மணிபூரகக் கற்றளி புகுந்தான் ஒருவனுக்கே அறிதுயில்வழி மந்திரத் திருமேனிகளை காணுந்திறன் வந்தமைகிறது. அதற்குக் கீழான கற்றளிகளில் இருப்பவனுக்கு அது அமையாது போக, இத்தகைய மந்திரத் திருமேனிகளை, அத்திகாயங்களை (archetypes) நேராக தரிசிக்க முடியாதவன் ஆகின்றான்.

இப்படிப்பட்ட கற்றளிப் பெயர்ச்சிகளே பக்குவ முதிர்ச்சிகளைத் தரும் ஆன்ம வளர்ச்சியுமாம். சில உண்மைகள் ஒரு சிலர்க்குப் புலப்பட்டிருக்க வேறு சிலருக்கு புலப்படாமற் போவது, எடுத்துச் சொன்னாலும் புரியாமற் போவது, அவை பொய் , வெற்றுக் கற்பனைகள் என்பதால் அல்ல-- அவற்றைக் காணுகின்ற அறிகரணங்கள் ஈட்டப்படாது போதலின் என்பதாம்

இனி கண்கட்டியார் மதம்பற்றி, இஇவ்வகைக் காண்டல்களினால் வரும் எல்லா அறிவுகளையும் தோற்ற நிலைக் கண்டு வகுத்துக் கூறுகின்றார்.

  • 4.7
    அவ்விகற்பம் சவ்விகற்பம் என்றிரண்டாம் அக்காட்சி
    இவ்விகற்பங் காட்டுவம்பார் ஈண்டு

(இ-ள்)

காண்டலால் அறியவருவது பொருட்களின் தோற்றங்களாகும். அதனை விகற்பித்து அறிய சவிகற்பமாய்த் தோன்றலும், அதனின் அதற்கு முன் இத்தகைய விகற்பங்களின்றிய , அதாவது நிருவிகற்பாக அல்லது இந்த ஆசிரியர் கூறுமாபோல் அவ்-விகற்பமாகத் தோன்றுதல் என்றும் பொருட்தோற்றம் இருவகை ஆகும். இவ்வாறேக் கூறுவார் அருணந்தியாரும் அவரைச் சார்ந்து சென்றோரும்:

"மாசறு காட்சி ஐயம் திரிபின்றி விகற்பம் முன்னா
ஆசறு அறிவது ஆகும்"

என்று கூறியபின்

"பெயர் சாதி குணமே கன்மம் பொருள் என ஐந்துண்டு
அவ் விகற்ப உணர்வினுக்குப் பொருளின் உண்மை மாத்திரத்தின்
விண்டல் இல்லா அறிவாகும் விகற்பம் இல்லாக் காட்சியே"
என்று இன்னும் விளக்குகிறார்.(சித்தியார் ,அளவையியல்)
மேலும் சிவாக்கிரயோகியார் தம் அழகிய சிவநெறிப்பிரகாசத்தில்

"ஒன்று இதெனக் காண்டல் மருவியிடு நிருவிகற்பக் காட்சியாகும்,
மற்றதனை பேர் ஆதியால் மதித்தல் விகற்பம்"

என்றும் கூறுவர். காண்க 25-ஆம் செய்யுள்

இவற்றின் வேறுபாடுகளெல்லாம் இன்னும் தெளிவாக்கப்படுகின்றது அடுத்து.

  • 4.8

அவ்விகற்பம் அத்தமுள தென்றறிகை பின்பறிகை
சவிகற்பம் நாமாதி சார்ந்து

(இ-ள்)

ஓர் பொருள் வெளிப்பட்டுத் தோன்றி நிற்பதாலும், அதனை அறிதற்குரிய கரணங்களும் வாய்க்கப் பெற்றமையாலும், முதற்கண் உண்டென அறிகின்ற மாத்திரத்தில் ஆங்கு மெய்யாகும் பொருட்தோற்றம் நிருவிகற்பக் காட்சியாகும். இவ்வாறு தோன்றியதை விடாது மனதில் பற்றி, பிறவற்றோடும் அதன் பிறநிலைகளோடும் பல காலம் அதனை ஒப்பிட்டு நோக்கி, அதனது சிறப்பியல்புகளையும் பிறவற்றோடு ஒத்துவரும் பொதுவியல்புகளையும் பிரித்தறிந்து அதனின் அப்பொருளின் இயல்பினை தெற்றென அறிதல் சவ்விகற்பக் காட்சியாகும். இத்தகைய சவ்விகற்பக் காட்சிகள் வழியாகவே ஓர் பொருளை பெயரிட்டு அழைத்தல் கூடுமென்பதாயிற்று. இஇது இஇன்னது என்று பொதுவியல்பு நோக்கி பொருளறிவு தெளிவுறாத போது உண்டு என்றுதான் கூறமுடியுமேத் தவிர பெயரிட்டு அழைத்தல் கூடாது என்பதைக் காண்க.

இனி இவ்வாறு வரும் சவிகற்பக் காட்சிகள் வெற்றுக் கற்பிதங்கள், ஒவ்வொருவரும் தத்தமக்கேற்ற புத்தி விகற்பத்தால் ஆகுவதே, மெய்யாக யாதொன்றும் பெயரிடப்படுவதில்லை என்பர் புத்தரில் சிலரும் வேதாந்திகள் பலருமாகும்.

சொற்பிறப்பிற்கு புத்தி தன் தொழிலாகிய கற்பிதங்கள் வேண்டுமெனினும், எல்லாச் சொற்களும் அப்படியல்ல என்று முன்பே விளக்கியாயிற்று. நூலிய அறிவியலிற்கு அடிப்படையான நூலியப் பார்வை இங்கு தேவைப்படுகிறது.
நூலியப் பார்வையில் ஓர் பொருளை இரட்டுரு நூலெனக் காண , தொடக்கத்தில் அதன் புறவுருவே வெளிப்பட்டு நிற்க , அது உண்மையில் யாதென்று புரியா நிலையில் வெளிப்பட்டு நிற்கும் தோற்றமே நிருவிகற்பமாகும். இனி அதனைப் பற்றி நின்று புறவுரு தோற்றுவிக்கும் அப்பிரகாசத்தையும் அதற்கு மூலமாக இஇருக்கும் இன்னும் தெளிவுபடா புதையுருவையுங் காண, அப்பொருளைபற்றிய அப்பிரகாசம், அறியாமை நீங்குகின்றது, அப்பொருளும் இன்னது இது என்று தெளியவும் படுகிறது. அதுபொழுது பொருளறிவு சவிகற்மாகிறது என்பதொடு ஓர் பெயரால் குறிக்கப்படும் பண்பினையும் பெறுகிறது.

இவ்வாறு நூலிய அறிவியல் வழி பெயராக்கங்களைக் காணும்பொழுது அங்கு பொருட்களின் மெய்யறிவு இருக்கின்றது, ஆகவே அவை புத்தியின் வீணான கற்பனா சேட்டைகளாலாகும் வெற்றுக் கற்பிதங்கள் அல்ல என்றவாறு. இல்லையெனில் உலகில் மெய்யாகிய சுட்டறிவே இல்லை என்பதாகி முரண்பாடாய் முடியுமென்க.

இனி இவ்வாறு காண்டற்கலையின் பொதுவியல்புகளை விளக்கியப்பின், பயன்படுத்தப்படும் கரணங்கள் வழி அவற்றை வகைப்படுத்துகின்றார் கண்கட்டியார் வழி சென்று.

  • 4.9

    இந்திரியம் மானதமே யின்பெழுவாய் யோகமுமென்
    றிந்தவிதம் ஈரிரண்டுண் டீண்டு

(இ-ள்)
பொருட்களின் தோற்றவறிவை சவிகற்பமென்றும் நிருவிகற்பமென்று வகை செய்து, காட்சிகளை பயன்படுத்தப்படும் கரணங்களைக் கொண்டு வகைபடுத்தப்படுகின்றது இஇங்கு. ஐம்பொறிகளால் ஆவதை இஇந்திரியக் காட்சி என்றும், அந்தக் கரணங்களைக் கொண்டு அறியப்படுவதை மானதக்காட்சி என்றும், அகத்தெழு உணர்வுகளை ஓராற்றான் உணர்வதை தன்வேதனைக் காட்சி என்றும், பசுக்கரணங்கள் நீக்கி சிவகரணங்கள் பெற்று அவற்றின் வழி அறியப்படுவதை யோகக்காட்சிகள் என்றும் வகைப்படுத்துகிறார் இங்கு.

அருணந்தியாரும்:

"உயிரோடு உணர்வு வாயில் ஒளி உரு ஆதி பற்றிச்
செயிருறு விகற்பமின்றி தெரிவது இந்திரியக் காட்சி"
என்றும்

" அயர்வில் இந்திரிய ஞானம் ஐம்புலன் சார்ந்து
உயிர்க்கண் மயர்வற வந்த ஞானம் மானதக் காண்டாலே"

என்றும்

"அருந்து இன்பத் துன்பம் உள்ளத்து அறிவினுக்கு அராகம்
ஆதி தரும் தன்வேதனைக்காட்சி"

என்றும் , மேலும்

"சாமாதியான் மலங்கள் வாட்டிப் பொருந்திய தேசகால
இயல்பகல் பொருள்களெல்லாம் இருந்து உணர்கின்ற ஞானம்
யோக நற்காண்டல் ஆமே"

என்றும் வகைபடுத்துவார். (சிவஞானசித்தியார், அளவையியல்)
இதன் வளர்ச்சியாக "சிவநெறிபிரகாசத்து" சிவாக்ரயோகியாரும், இந்திரியக் காட்சியை புறக்கட்சி(பொறிக்காட்சி?) என்று புகன்று

அதனை:

கலையாதியால் விளங்கும் ஞானம் அந்த
கரணத்துடன் கூடக் காற்றுடனே மனந்தான்
நலமாரு நேத்திரத்தை யாதி பொறியைந்தை
நண்ணவவை யுருவாதியே நண்ணும்
புலனாய பொருளடைந்தே ஐயமுடன் திரிபும்
பொருந்தாமல் அறிதல் புறக்காட்சியாய் புகல்வர்.

என்றும் விளக்கிச் செல்வர். அடுத்து இதன் பின் எழும் மானதத்தை;

"அலமாரும் பொறிவழியால் வந்த விடயத்தை
அகத்தினுள்ளே சிந்தித்தல் ஆயிடும் மானதமே"

என்றும் விளக்குவர்.

யோகக்காட்சியை இன்னும் சற்றுத் தெளிவாக, விஞ்ஞானக் காட்சி, சிவஞானக் காட்சி என்று வகுத்து அவற்றை:

"புறக்கருவி தனைநீக்கி யுட்கருவி யான
புத்திமன மாங்காரம் பொருந்த லின்றிச்
சிறப்புடைய யோகத்தால் ஆணவத்தை நீங்கித்
திரிகாலத் தியல்புணர்தல் விஞ்ஞானக் காட்சி"

என்று விஞ்ஞானக் காட்சியை விளக்கிய பின்னர், சிவஞானக் காட்சியை:

" அறப்பெரிய ஞானத்தா லான்மாவுஞ் சிவனும்
அனனியமாய் அனுபவத்தால் அறிந்திடுதல் அதுவும்
துரப்பரிதாம் சிவஞானக் காட்சி யென்று
சொல்லிடுவர் சிவஞானத் துய்மையோரே"

என்றும் விளக்குவர்.

இவற்றின் விரிவெலாம் பிறகு. அழிவுலுண்மை எனும் பிறிதோர் நூலில் இவையே புதுமையாக பொறிலியப் பார்வை, நூலியப் பார்வை, நுதலியப் பார்வை, பரப்பார்வை, சிவப்பார்வை, அதீதப்பார்வை என்றெல்லாம் விளக்கப்படுகிறது. காண்க. இங்கும் விரிவாக பிறகு.

இனி அடுத்து மேற்கூறிய இருவகை தோற்றவறிவுகட்கும் தொழிற்படுத்தப் படும் கரணங்கட்கும் உள்ளத் தொடர்புகளை சிறிது விளக்குகின்றார்.

  • 4.10
    அவ்விகற்பம் இந்திரியக் காட்சியென ஆய்ந்தறியாய்
    சவ்விகற்பம் மானதமே தான்

(இ-ள்)

விகற்பமின்றி தோன்றுவதும் பல்வேறுவகைப் பட்ட விகற்பங்களோடு தோன்றுவதுமாகிய பொருட் தோற்றமிரண்டில், முன்னது இந்திரியங்களாலேயே ஆவதென்று தெளிவர் பொருட்தோற்றத்தை ஆராந்தறியின் என்கிறார். ஆக பின்னது இதனால் மனோகரணங்களின் தொழிற்பாட்டால் பெறப்படும் மானதக்காட்சியாம் என்றவாறு. பொறிகளின்றி எவ்வறிவு கிட்ட வாராதோ அது நிருவிற்பக் காட்சி எனப்படுகிறது. அதன்வழி ஒன்று "உண்டு" என அறிய வருமே யல்லாது பலவித பொருண்மைகளோடு-- காருகங்களோடு(concepts) -- வரும் பொருட் தோற்றம் அதுவல்ல என்றவாறு.

இனி இத்தன்மைய வேறுபாடுகள் புறத்துப்பொருட்களின் தோற்றத்திற்கு ஒவ்வும். ஆனால் அகத்திலே பொருட் தோற்றங்கள் உண்டல்லவோ? அங்கும் முதற்கண் தெளிவுபடாது தோன்றுபவை பின்பு தெற்றென "இது இன்னது" என்று உணரப்படுவதும் உண்டல்லவோ? அங்கு இவ்வேறுபாடுகளின் இலக்கணம் யாதெனின் , அடுத்து அதனையும் விளக்குகின்றார் தம் புதியவோர் சிந்தனையின் வழி ஆசிரியர்.

4.11

ஆதிசித்தா வொன்றரும்பிட அலசிடுங்காற் சிற்சத்தி
அந்தசித்தா வதையறி வாக்கும்

(இ-ள்)

வாயிற்காட்சியில் நிருவிகற்பாய் தோன்றும் ஓர் பொருளின் அப்பிரகாசத்தை, மனோகரணங்கள் (cognitive activities) வழியா நீக்கிட , அதுவும் சிற்சத்திப் பதிவின் வழி அமைய, அது பொழுது "இது இன்னது" "இது இற்று" என்பன போன்ற தெள்ளறிவுகள் பிறக்கின்றன. இதனை புறவுருவிலிருந்து அதன் தற்பண்புகளை நிறுத்தும் புதையுருவிற்கு ஊடுறுவி செல்வது என்றும் கண்டோம். இப்படிப்பட்ட தெள்ளறிவு பிறக்கும் போதே மொழியால் உணர்த்தப்படும் பண்புகளோடு அது வர அதனை சவ்விகற்ப வுணர்வு என்றும் கூறுகின்றோம்.

இவ்வாறு தெளிவற்று கிடந்து பின் தெளிதல் என்பது பொதுவாய ஓர் அகத்து நிலை ஆகும்.

ஓர் கேள்வியை சிந்திப்பான் ஒருவனுக்கு அதன் விடை தொடக்கத்தில் தெளிவற்று தோன்ற, பிறகு இன்னும் தொடர்ந்து விடாது சென்று ஆழமாக அலசிட, அது தெளிவறிவாகின்றது. இதுபோன்ற எண்ணிறந்த சூழல்கள் உண்டு. "இறைவன் உண்டு" என்ற உண்மை முதலில் தெளிவற்றுப் பட, பிறகு அது தெளிவாகி அவன் இருக்கின்றான் என்பதொடு மேலும் இன்ன குணத்தினன் பன்பினன் என்றெல்லாம் உணர்ந்து தெளிதலும் உண்டு. இவ்வாறு நிருவிகற்பமாய் யாது யாது , வாயிற்காட்சியில் மாத்திரம் அன்றி பொதுவாகத் தெளிவின்றித் தோன்றுகின்றதோ அதனையெல்லாம் "ஆதிசித்து" என்பம். இதனை விடாது பிடித்துக் கொண்டு, வைரக்கல்லை பட்டைத் தீட்டித் தீட்டி சுடர வைப்பதுபோல, அலசி அலசி தெளிவு படுத்திக் காண, அது மிக மிகத் தெளிவாக சுடரும்போது, "அந்தசித்து" அல்லது "சித்தாந்தம்" என்று கூறுவோம்.

இங்கும் இரண்டிற்கும் புறவுரு புதையுரு பேதங்கள் என்பதொடு, முன்னதில் சிற்சத்தி குறைவாக இருப்பதும் பின்னதில் அது நிறைவாக இருப்பதும் வேறுபாடுகளாகும்.
இவற்றின் விரிவையெல்லாம் (எனது) 'சித்தியல்' எனும் சிறு நூலில் கண்டு தெளிக. ஆங்கு" ஆதிசித்து " "அந்தசித்து" எனப்படும் இவற்றின் தோற்றுவாயும் வேறுபாடும் கீழ்கண்டவாறு விளக்கப்படுகிறது.

காண்டல் கருதல் உவமை என்றா
ஆர்தல் ஓர்தல் அடங்கல் என்றா
தேர்தல் மதித்தல் தெருளல் என்றா
கேட்டல் செத்தல் தெளிதல் என்றா
ஆய்தல் நோக்கல் அளத்தல் என்றா
பார்த்தல் பழகல் பதிதல் என்றா
புலக்கோள் மனக்கோள் உயிர்க்கோ ளென்று
எத்திறத் தானும் எவ்வகை யானும்
உணர்வுதன் விளக்காய் உறுவது சித்தே

"அலசுதல்" என்பது அழுக்காய் இருக்கும் ஓர் பொருளைக் கழுவி சுத்தம் செய்வது போன்றது. குறையொடும் நிறையொடும், மெய்யொடும் பொய்யொடும் தெளிவற்ற நிலையில் ஐயத்திற்கும் திரிபிற்கும் இடனாய் தோன்றும் ஆதிசித்து; அதனது அப்பண்பே அதனை அலசிடுமாறு ஊக்குவிக்க, அதனால் இவையெலாம் அகன்று, பொருள் செவ்விதாய் உண்மையாய்த் தெளிவாய் அறியலுறும்போது அது அந்தசித்தாகின்றது. இதுவும்:

அந்தம தாக்கும் அருந்திறன் தெரிப்பின்
சுட்டிய பொருளின் தற்சிறப் பொட்டி
வகைமைக் கேற்ப வகுத்து நிற்கும்

என்று 'சித்தியல்" பகர்கின்றது. அலசிடுதல் என்பது கற்பனை வயப்பட்டு, பொருளைப்பற்றியிலாது விட்டகன்று தான் கருதியவாறு அதனைப் பார்ப்பதல்ல. அதன்பாலே விட்டகல்தன்றி, ஊன்றி நின்று அதனுள்ளேயே ஆழவழுந்தி அகத்திலே அதுபற்றி நிற்கின்ற அப்பிரகாசத்தைப் போக்கி, அதனைப் பிரகாசமாக்கும் அறிவுத்திகள் பெய்து தெளிதலே இங்கு அலசிடுதல் எனப்படுகின்றது. அதுபொழுது சிற்சத்தி பதிவு நடைபெற அதன்வழி ஐயமும் திரிபும் போக்கிய தெளிந்த காட்சி சித்திக்க, அதுவே அந்தசித்து அல்லது"சித்தாந்தம்" என்று உணரப்படுகிறது என்பதாம்.
இனி மேலே விரித்த காட்சிகளில் மானதக் காட்சியை அடுத்து அதனது விரிவாக, அதனுள் கிடந்த வெளிப்படுவதாக இஇலங்கும் தன்வேதனைக் காட்சியை சிறிது விளக்கப் புகுகின்றார் ஆசிரியர், கண்கட்டியாரைச் சார்ந்து

  • 4.12
    வேதனைதான் இன்பத்துன் பத்தின் விளக்கமதன்
    சாதனமே வித்தையது தான்

    (இ-ள்)

    வேதனை என்பது தற்கல்வி பயப்பிக்கின்ற தன்வேதனைக் காட்சியாம். தன்வேதனையெனினும் தொல்காப்பியர் கூறும் மெய்ப்பாடுகள் எனினும் ஒக்கும். இவை அனைத்தும் இன்பம் துன்பம் என்பவற்றின் விளக்கமாமென்றும், இவற்றை தோற்றுவித்து அறிவிலே விளக்கமுற தருகின்ற தத்துவம் 'வித்தை' என்றும் கூறுகின்றார். இதனால் விந்து அல்லது வித்தை எனும் தத்துவம் தன்னுணர்வு ஈட்டப்படுவதைற்கு ஒர் சாதனமாக, ஓர் கருவியாக அமைகின்றது என்றும் விளக்கப்படுகின்றது. விந்துவாதுவது வேட்கைகளைத் எழுப்புவதாகும்
    தொல்காப்பியர் மெய்ப்பாடுகளை:

நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப

என்று கூறி அவற்றை தொகுத்து வகைப் படுத்தி அளப்பர்.
அக்காலத்திருந்த பொதுவாகிய இக்கருத்துகளுக்கு உடன்பட்டு அவை தோன்றும் சூழலையும் ஆய்ந்து கண்டு இன்னும் விரிக்கின்றார் தொல்காப்பியர் தம் மெய்ப்பாட்டினுள்.

ஆங்கவை ஒருபால் ஆக, ஒருபால்
உடைமை இன்புறல் நடுநிலை அருளல்
தன்மை அடக்கம் வரைதல் அன்பெனாஅக்
கைமிகல் நலிதல் சூழ்ச்சி வாழ்த்தல்
நாணுதல் துஞ்சல் அரற்றல் கனவெனாஅ
முனிதல் நினைதல் வெரூஉதல் மடிமை
கருதல் ஆராய்ச்சி விரைவுயிர்ப் பெனாஅக்
கையா றிடுக்கண் பொச்சாப்பு பொறாமை
வியர்த்தல் ஐயம் மிகைநடுக் கெனாஅ
இவையும் உளவே அவையலங் கடையே
என்றவாறு நுணுக்காக விளம்பிச் செல்கின்றார்.

இப்படிப்பட்ட உணர்வுகள் எழும் இடமாக விந்து அல்லது வித்தை இருப்பதின் அதுவே இவ்வுணர்வுகளின் சாதனமாக கொள்ளப்படுகின்றது.

இனி இவ்வாறான உணர்வு நிலைகளே அல்லது மெய்ப்பாடுகளே ஆன்மபோதகமாக அமைவது என்பதின், எவ்வாறு இது தற்கல்வியுடன் தொடர்புடையது என்று அடுத்து விளக்குகின்றார் ஆசிரியர்.

4.13

தன்னின் இருப்புநிலை தனைவிளக்கும் மெய்ப்பாடு
எண்ணின் எழூஉ மறிவு

(இ-ள்)

நகை இளிவரல் பெருமிதம் உவகை போன்ற இன்பத் துன்பப் பொதுமல்கள் ஆன்மாவின் இருப்புநிலைகளை வெளிப்படுத்துவனவாகும். இன்பத்தில் இஇருப்பது, துன்பத்தில் இருப்பது சினத்தில் இருப்பது போன்ற இஇருப்புநிலகளாகும். இவை மெய்ப்பாடுகளாலும் ஏனைய அபுத்திபூர்வமாக செய்யப்படும் வினைகளாளும் பிறர்காண வெளிபட்டு நிற்பதுவும் செய்யும் -- அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல். இருப்புநிலைகளில் இத்தகைய உணர்விற்கு வரும் இருப்பு நிலைகளை ஆன்மாவெனும் பொருளின் தோற்றங்கள் எனக் கொள்ளலாம். இப்படிப்பட்ட இருப்புநிலைகள் எவ்வாறு அறிவாகின்றனதெனின், இவை ஆன்மாவில் எழும் பண்பினால் என்பதாம். ஒன்றினைக் கருதி செய்து அல்லது பற்பல கலைகள் பயின்று பெருவனவல்ல மெய்ப்பாடுகள்-- பயனாகவன்றி ஒன்றினைச் செய்ய ஓர் கலையைப் பயில அதனைச் சார்ந்து எழுகின்ற ஓர் உணர்வு நிலயாம். நல்லதோர் இசையை சுவைக்கும்போது இன்பமெய்ப்பாடு எழுகின்றது; ஒன்றினை இழக்க துக்கந் தோன்றுகிறது; தான் விரும்பாதவொன்று நடக்க சினம் வெடிக்கின்றது. ஏனைய மெய்ப்பாடுகளும் இவ்வாறே என்று அறிந்து கொள்க.

இனி ஏன் இவை "தனை விளக்கும்" எனப்படுகின்றது எனின், இத்தகைய மெய்ப்பாடுகள் வழியே "தான்" எனும் ஆன்மா இருப்பது உண்மை யாவதோடு , தான் என்ன குணத்தினன், பண்பினன், இயல்பினன், தனது விருப்பு வெறுப்புக்கள் யாவை என்றெல்லாம் தெளிவாக்குவதால் அவ்வாறு என்பது.

ஓர் ஆன்மா தன்னையேத் தானறிய உதவுவன மெய்ப்பாடுகள் அல்லது தன்வேதனைக் கட்சிகள் என்று கண்டோம். இவ்வாறு உணரவரும் ஆன்மத்தோற்றங்களில் புதையுண்டு கிடக்கும் ஆன்மாவைப் பற்றிய தத்துவ உண்மைகளை அடுத்து விளக்குகின்றார் ஆசிரியர்.

4.14
காண்டற் றன்னிலை கருதிட வான்மா
வேண்டுதல் வேண்டா மையென

(இ-ள்)

இன்பதுன்பங்களில், சுகதுக்கங்களில் பல்வேறு வெளிப்பாடுகளாக தன்வேதனைகள் அமைவதை அனுவபூர்வமாக அனைவரும் காணலாம். தன்னைப் பற்றிய மெய்யறிவு பயப்பிக்கின்ற ஆத்மானுபவங்கள் இவையாகும். (self perceptions)இ இவற்றால் ஆகும் பயன் யாதும் உண்டோவெனின், உண்டு என்பதாம். ஒரே அனுபவம் ஒருவனுக்கு இன்பமானதாக இருக்க வேறு ஒருவனுக்கு அப்படியிருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதனால் இஇந்த மெய்ப்பாடுகளுக்கு மூலமாக ஆன்மாக்களிடையே ஒற்றுமை வேற்றுமைகளை நிறுத்தும்படியான ஓர் மூலக்கூறு இருக்கவேண்டும். அதுவே ஓவ்வொரு ஆன்மாவிற்கும் அமைந்திருக்கும் வேண்டுதல்-வேண்டாமை அல்லது விருப்பு-வெறுப்பு எனப்படும் இருவினைச் சிந்தனையின் ஒரு கூறுவாகும். ஓர் வகை உணர்விற்றாக அல்லது மெய்ப்பாடாக யாது உதித்தாலும் , அதனை நுகரும் ஆன்மா விரும்பல் வெறுத்தல் என்றவாறு மதித்துத் துணிய, அதன் அகத்திலே அதுவறியாது வேண்டுதல்-வேண்டாமை இருப்பதும் புரியவரும் என்பதாம். தான் வேண்டுவது, வேண்டாவென நிற்பது இதுவென அதுபொழுதே அவ்வான்மா அறியவருகின்றது. அதனோடு இன்னொரு ஆழவறிவும் அப்பொழுதே உதிக்கும். வேண்டுதல் -வேண்டாமையோடு இருப்பது, தான் இச்சைவயத்தானாகி இருக்கின்றேன் என்று அறிதலுமாம். இதன் பயன் என்னையோவெனின், தனக்கு சுக துக்கங்கள் என மெய்ப்பாடுகள் அமைவது தான் இச்சைவயத்தானாக ஆகவே ஓர்வகையில் கட்டுற்று நிற்பதால்தான் என்ற தெளிவும் பிறக்க, பிறகு இவ்வாறன இஇச்சைகளிலிருந்து தான் விடுபட்டாலேயே ஒழிய தனது விருப்பு-வெறுப்பு எனும் இருவினைச் சிந்தனை பக்குவத்திலிருந்து தான் விடுபட முடியாது என்று உணரவருவதுமாகும் என்பது. இதுவும் ஓர்வகையான ஆன்மக் காட்சியே என்பது

இதனையே வேறொரு வகையில் இன்னும் விளக்குகின்றார் ஆசிரியர்.

4.15
பற்றிய வாசைகட் பயனாய் விளையுமிவை
உற்றிடு முணர்வரு பொருளாய்.

(இ-ள்)

இப்படிபட்ட ஆன்மாக்களின் மெய்ப்பாடுகள் வழிவரும் அதன் தோற்றங்கள், மூலத்தில் அவை பற்று உற்று நிற்பதால் வருவன என்பதை உணர்த்தி, "பற்று" எனும் ஒன்று ஆனமாக்களின் ஆழக்கூறாய் இருப்பதைக் காட்டும் என்பது. பற்றுற்று நிற்பதாவது அபூரணனாய் பற்பல ஆசைகளோடு உழல்வதை, இதை வேண்டி அதை வேண்டி , இதை வெறுத்து அதை வெறுத்து இருவினைவயப்பட்டு வாழ்வதை உணர்த்தும் என்பதாம். சிலவற்றை விரும்பியவாரும் சிலவற்றை வெறுத்தவாறும் கிடப்பதே பற்றுற்று வாழ்வதாகும். இதன்வழி பற்பல முயற்சிகளில் இறங்கிட, இச்சித்தது கிட்டிட இன்பமும் இல்லையெனில் துன்பமுமாக இந்த மெய்ப்பாடுகள் விளையும் என்றாயிற்று.
இப்படிப்பட்ட ஞானத்தெளிவுக்கட்குப் பிறகே இவற்றிலிருந்து விடுவேண்டும் என்ற எண்ணம் உதிக்க அதற்குத் தான் பற்றற்றப் பற்றை தலைப்படவேண்டும் என்ற எண்ணமும் உதிக்கும் என்றவாறு.

சிவஞானகற்பம்: நாங்காம் தந்திரம் "காண்டற்கலை" முற்றும்
















பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=சிவஞான_கற்பம்-4&oldid=10955" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 23 மே 2012, 08:01 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,689 முறைகள் அணுகப்பட்டது.