சிங்கங்களைத் தேடிக்காட்டுக்குச் சென்றோம் அஹோபிலம் 6

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Images.jpgroute to bargava narasimha temple.jpg
Images.jpgbargava narasimhar temple.jpg

 அடுத்து நாம் காணப் போவது பார்கவ நரசிம்மர். படிகள் ஏறவேண்டும். படிகள் என்றாலும் சாமானியமாய் இல்லை. மலை ஏற்றம் கூடப் பரவாயில்லை எனும்படிக்குப் படிகள். படிகள் என்னமோ 150க்குள் தான் சொல்கின்றனர். ஆனாலும் நமக்கு அவை 15,000 போல் தெரிகின்றன. வேதாத்திரி பர்வதத்திலே அமைந்துள்ளது இந்தக் கோயில். கீழ் அஹோபிலம் கோயிலில் இருந்து சுமார் இரண்டு கிமீட்டர் தொலைவில் உள்ளது. அடர்ந்த காடுகளில் நுழைந்தே செல்லவேண்டும். நடு நடுவில் சீர் செய்யப் படாத காட்டுப் பாதைகளும் குறுக்கிடும். ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. பல்வேறு விதமான பட்சிகளின் குரல்களில் இருந்து எழும்பும் இனிய இன்னிசைக் கீதங்கள். சுற்றிலும் மலைகள் சூழ்ந்திருக்க ரம்மியமான இயற்கைச் சூழலில் அமைந்துள்ளது கோயில். இன்னும் சிலபடிகள் மேலே ஏறினால் கோயில் சொல்லிக் கொண்டே நம்மை அழைத்துச் செல்கின்றனர். கடைசியில் வரும் எனக்காகச் சற்று நின்று கவனித்துக் கூட்டி வரும் அமைப்பாளர் சுரேஷ். நான் நிற்கும்போதெல்லாம் அவரும் எனக்குப் பின்னாலேயே நின்று விடுகின்றார். ஆசுவாசம் செய்து கொண்டு கிளம்பினால் பின்னாலேயே பாதுகாப்பாய் வருகின்றார். மற்ற அனைவரும் முன்னால் சென்றிருக்க, நாங்கள் இருவர் மட்டும் மெல்ல மெல்ல மேலே ஏறுகின்றோம். இந்தப் படிகளுக்கு இவ்வளவு கஷ்டப் பட்டு வந்து யார் காவிப்பட்டையும், வெண்மைச் சுண்ணமும் அடிச்சாங்களோ தெரியலை. மனதில் ஈசன் குடி கொண்டால் எல்லாத்துக்கும் வேகம் வரும்போல.

Images.jpgstaircases to bargava.jpg

அப்பாடி, இதோ நிஜமாவே வந்துட்டோமே! ஆனால் இது என்ன இங்கே ஒரு குளம் போல இருக்கே? ஆம், நிஜமாவே குளம் தான் இது. பார்கவ தீர்த்தம் எனப் பெயர் இதுக்கு. நீர் எந்தக் காலத்திலும் வற்றுவதே இல்லையாம். அக்ஷய தீர்த்தம் எனவும் சொல்லப் படுகின்றது. பார்கவர் இங்கே எங்கே வந்தார்? வந்திருக்கார். பார்கவ ராமர் ஆன பரசுராமர் இங்கே தீர்த்த யாத்திரை வந்திருக்கின்றார். நரசிம்மரைத் தரிசித்திருக்கின்றார். அவர் வேண்டுகோளுக்கு இணங்க ஸ்ரீமந்நாராயணன் தசாவதாரத் திருக்கோலம் காட்டி மகிழ்வித்திருக்கின்றான். என்ன? அவதாரத்துக்கே அவதாரம் பூஜித்ததா? எனத் தோன்றுகின்றதா? என்றால் ஆம். என்ன இருந்தாலும் பரசுராமர் ஒரு மானிடனாய்த் தானே தோன்றினார். விஷ்ணுவின் அவதாரம் என எந்த இடத்திலும் சொல்லிக் கொள்ளவே இல்லை அல்லவா? ஆகவே அவர் இறை சக்தியாகவே தோன்றிய நரசிம்ம அவதார மூர்த்தியை வழிபட்டு இருக்கின்றார். இப்போ பார்கவ நரசிம்மரைப் பார்ப்போமா??

Imagesbargavanar.jpg

நரசிம்மர் இங்கே ஹிரண்யனை வதைக்கும் தோற்றத்தில்ல் தான் காட்சி அளிக்கின்றார். மடியில் ஹிரண்யன். இரு கரங்களால் அவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டிருக்கின்றார். சங்கு, சக்ர தாரியாய்க் காட்சி அளிக்கின்றார். ஆஹா, இது என்ன? ஹிரண்யன் வாளை உயர்த்திய வண்ணம் காட்சி அளிக்கின்றானே? ஆம், ஹிரண்யன் நரசிங்கத்தை வெட்டுவதற்கென உயர்த்திய வாள் உயர்த்திய வண்ணமே காட்சி அளிக்கின்றது. வியப்பில் உறைந்து போன முகத்தோடு ஹிரண்யன்! நரசிங்கம் தன்னை மடியில் கிடத்திக் குடலைக் கிழித்து எடுப்பதை உணர்ந்து, தன்னால் ஒன்றும் செய்யமுடியாது என்பதையும் உணர்ந்ததால் மட்டும் அல்ல. வந்திருப்பது யார் என்பதைப் புரிந்து கொண்டுவிட்ட வியப்பு, சாட்சாத் பகவான் கையாலேயே தனக்கு மரணம் சம்பவிக்கிறதை எண்ணி வியப்பு! இந்த அசுரனுக்காக பகவானே தூணில் இருந்து கீழே இறங்கி வந்துவிட்டானே என்ற வியப்பு! இதை அறியாத நிர்மூடனாய் இருந்து விட்டோமே என்ற வியப்பு! அனைத்தும் ஒருசேரக் காட்சி அளிக்கின்றது ஹிரண்யன் முகத்தில். அருகே பக்த பிரஹலாதன் நடப்பது அனைத்தும் தனக்காவே என்ற எண்ணம் சிறிதுமின்றி அடியாரிலும் அடியாராகக் கை கூப்பித் தொழுத வண்ணம் நிற்கின்றான். இந்த அழகை மட்டும் கண்டு களித்தால் போதுமா? சிற்பத்தின் தோரணத்தில் சுற்றிலும் தசாவதாரங்களும் செதுக்கப் பட்டிருப்பதை பட்டாசாரியார் ஹாரத்தி காட்டி விளக்குகின்றார்.

Imagesnavanarasim.jpg

இந்தக் காட்டில் தரிசனம் செய்யவே இவ்வளவு கஷ்டம் என நாம் நினைத்துக் கொண்டு அதையே ஒரு பெருமையாகவும் எண்ணிக்கிறோமே? இந்தச் சிற்பிகள் எவ்வளவு கஷ்டப் பட்டு இந்தக் குகைகளுக்குள்ளே வந்து சாப்பாடு, தண்ணீர் எது இருக்கோ அதை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இத்தகைய தெய்வீகச் சிற்பங்களைச் செதுக்கி இருக்கின்றார்களே. அந்தக் காலத்தில் என்ன வசதி இருந்தது? சிற்பிகள் சிற்பங்களைச் செதுக்கும்போது ஒவ்வொரு காட்சிகளையும் கண்ணார, மனமாரக் கண்டு, கேட்டு, பேசி, அனுபவித்தே செய்திருக்க முடியும். அத்தனை அழகு ஒவ்வொன்றும். பரிபூரணமாய் உணராமல் இத்தகைய தெய்வீகம் வராது. சந்நிதிக்கு வெளியே மஹாவிஷ்ணுவின் விக்கிரஹம் ஒன்றையும் செதுக்கி இருக்கின்றனர்.


பார்கவ நரசிம்மரைத் தரிசித்தால் சந்திரனால் ஏற்படும் சகல தோஷங்களும் விலகும் என்று சொல்கின்றார்கள். பாவங்கள் தொலைந்து மனதில் நிம்மதி உண்டாகும். கற்பனைத் திறன், கதைகள் எழுதும் ஆற்றல், கவிதை எழுதும் ஆற்றல், குடும்பத்தில் மனமகிழ்ச்சி, கவலை இல்லா மனம், நோயற்ற வாழ்க்கை, வெளிநாடு செல்லும் சந்தர்ப்பம் போன்றவை கிட்டும் எனச் சொல்கின்றனர். அடுத்து நாம் காணப் போவது கடைசியான கராஞ்ச நரசிம்மர்.



கராஞ்ச நரசிம்மரைத் தரிசிப்பது மிகவும் எளிது. மேல் அஹோபிலம் கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே வண்டிப் பாதையிலேயே சற்றே தள்ளி அமைந்துள்ளது. என்றாலும் செளகரியத்தை உத்தேசித்துக் கடைசியில் இங்கே தரிசனம் வைத்துக் கொள்ள முடிவு செய்யப் பட்டது. கருடாத்ரி மலையின் மேற்கே அமைந்துள்ளது கராஞ்ச நரசிம்மரின் ஆலயம். வாகனங்கள் வரும் சாலையில் அடர்ந்த மரங்களின் நிழலில் பார்த்தாலே ஒரு அருமையான சோலை போன்ற இடத்தில் அமைந்துள்ளது கராஞ்ச நரசிம்மரின் ஆலயம். ஆலயம் புதுசாய்த் தெரிகின்றது. விசாரித்ததில் அண்மையில் புதுப்பித்திருப்பதாய்ச் சொல்கின்றன. நுழைந்ததும் ஒரு மண்டபம் முகப்பிலேயே, சிற்ப வேலைப்பாடுகளுடன். மண்டபத்தைத் தாண்டினால் இடப்பக்கம் ஆஞ்சநேயர், கராஞ்ச நரசிம்மரைப் பார்த்தபடிக்குக் காட்சி அளிக்கின்றார். இரு கைகளையும் கூப்பியபடி காட்சி அளிக்கும் அஞ்சனை புத்திரன் சந்நிதிக்குச் சற்றுத் தள்ளி கராஞ்ச நரசிம்மர் சந்நிதி. நரசிம்மரை ஒரு கணம் பார்த்துவிட்டுத் திகைப்புடன் மீண்டும் பார்க்கின்றோம். என்ன இது? வில்லா? ஆம் வில்லே தான். கையில் வில் ஆயுதத்துடன் நரசிம்மரா? வியப்பிலும் வியப்பாய் உள்ளதே?

Images.jpgprahlathan.jpg

ஆம், வில் ஆயுதத்துடனேயே நரசிம்மர் காட்சி அளிக்கின்றார். யாருக்காக?தன் அருமைத் தோழனும், தொண்டனும் ஆன ஆஞ்சநேயனுக்காக. ஆஞ்சநேயருக்காக நரசிம்மர் ஏன் வில் தரிக்க வேண்டும்? ஆஞ்சநேயர் இந்த மலைக்கு வந்து கருங்காலி மரத்தின் கீழே ராமரை நோக்கித் தவம் இருந்தார். கருங்காலி மரம் தான் கராஞ்ச விருக்ஷம் எனப் படுகின்றது. ஸ்ரீமந்நாராயணன் தன் பக்தனோடு சற்றே விளையாட நினைத்தான். நரசிம்மன் அழகிய சிங்கராய்க் காட்சி அளித்தான், ஆஞ்சநேயர் முன்னே. ஆஞ்சநேயர் அசரவில்லை. “எனக்கு வேண்டியது ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் தரிசனம். நீ யார் சிங்க முகத்துடன்?” என்று கேட்டார். நரசிம்மம் பதில் சொன்னது. “இது என்னுடைய இடம். நரசிம்ம க்ஷேத்திரம். இங்கே நீ நரசிம்மரைத் தான் காண முடியும். நானும், ராமனும் ஒன்றே! என்னில் ராமனைக் காண்பாயாக!” என்று சொல்கின்றார். ஆஞ்சநேயர் நம்மளைப் போல பிடிவாதக் காரர். (பிள்ளையார் தான் வரணும்னு நான் சொல்லி இருப்பேன்) ஒத்துக்கவே இல்லை.


“ஆஹா, நீ என்ன சிங்க முகத்தோடும், மனித உடலோடும் வந்து நீயும், ஸ்ரீராமனும் ஒன்றே என்கின்றாய்? யாரை ஏமாத்தப் பார்க்கிறாய்? என் ஸ்ரீராமன் எத்தனை அழகு? எவ்வளவு செளந்தரியம்? ,முகத்தில் என்ன சாந்தம்? கண்களின் கருணையைச் சொல்லவும் முடியுமோ? இது என்ன உன் கைகளில் இவ்வளவு நீண்ட நகங்கள்? இவை எல்லாம் என் ஸ்ரீராமனுக்கு இல்லவே இல்லையே? மேலும் தன் கைகளைப் போன்ற நீண்ட வில்லைத் தரித்துக் கொண்டு, என் ஸ்ரீராமன் இன்னமும் தனக்கு அழகு சேர்த்துக் கொண்டல்லவோ காண்பான்? வில்லில்லாமல் அவனைக் காணவும் முடியுமோ? என் ராமனையே நான் காண விரும்புகின்றேன்.” எனச் சொல்ல, நரசிம்மர், “ஆஞ்சநேயா, உன் பக்தியை நான் மெச்சுகின்றேன். நானே நாராயணன், நானே நரசிம்மன், நானே ஸ்ரீராமன், என்னை நன்றாய்ப் பார்ப்பாயாக! என்னில் ஸ்ரீராமனைக் காண்பாய் நீ!” என்று சொல்லவும், உடனேயே ஆஞ்சநேயர் கண்களில் வில்லும், அம்பும் ஏந்திய ஸ்ரீராமன் தென்பட்டான். ஆஞ்சநேயர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அங்கே ஒரு கணம் ஆதிசேஷன் படமெடுத்துக் குடை பிடிக்க ஸ்ரீமந்நாராயணன், தோன்ற, உடனேயே அதே ஆதிசேஷன் படமெடுத்த குடைக்கீழேயே நரசிம்மர் வலக்கையில் சக்ரத்தோடும், இடக்கையில் வில்லோடும் காட்சி அளிக்கின்றார். ஆஞ்சநேயருக்கு உண்மை புரிந்தது.இந்த வித்தியாசத் திருக்கோலத்தோடேயே கராஞ்ச நரசிம்மர் காட்சி அளிக்கின்றார். கராஞ்ச நரசிம்மர் சந்நிதியிலும் ஆரத்தி முடிந்து பக்தர்கள் அனைவருக்கும் சடாரி, துளசி, தீர்த்தம் பிரசாதம் வழங்கப் படுகின்றது. மணியும் மூன்றுக்கு மேல் ஆகிவிட்டது. அனைவரும் காலை ஆகாரம் என்று பெயரளவில் சாப்பிட்டதே. இப்போது தான் எல்லாருக்கும் பசி, சாப்பாடு என்ற உணர்வே ஏற்பட்டது. கராஞ்ச நரசிம்மர் கோயில் இருந்து வரும் வழியில் தென்படும் நூற்றுக்கால் மண்டபம் மிகப் பழமை வாய்ந்ததாய்த் தென்படுகின்றது. ஆறு நூற்றாண்டுகளுக்கு முன்னே இங்கே முதலாம் ஜீயர் ஸ்ரீமத் சடகோப யதீந்திர மஹாதேசிகர் பல்வேறு விதமான சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருப்பதாய்ச் சொல்கின்றனர்.


கராஞ்ச நரசிம்மர் கேதுவினால் ஏற்படும் தோஷங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர். இவர் ஞானம், வைராக்கியம், தீவிர பக்தி ஆகியவற்றை அருளுவார். ஞானிகள், மருத்துவ மாமேதைகள் உருவாவதற்கும் இவரின் கடாட்சம் தேவை என்று சொல்லப் படுகின்றது. கருடாத்திரி மலையின் மேற்குப் பகுதியில் கருங்காலி மரத்தினடியில் எழுந்தருளி இருக்கும் இவரைத் தரிசித்துவிட்டுப் பின்னர் விடுதிக்குத் திரும்பி ஓய்வெடுத்துக் கொண்டு, இரவு எட்டு மணிக்குப் பேருந்து அங்கிருந்து கிளம்பி சென்னை வந்தடைகின்றது. இத்துடன் அஹோபிலப் பயணம் முடிவடைந்தது.


--Geetha Sambasivam 14:06, 10 மார்ச் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 10 மார்ச் 2011, 14:06 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,857 முறைகள் அணுகப்பட்டது.