கோவிலூர் ஆதீனப் பதிவுகள் பதிவு 7

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
தலையாய சமூகம் என்பதற்கு உதாரணமாக ஒரு சில நிகழ்வுகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.  இக்காலத்தில் வருமானவரி, சொத்துவரி என்று அரசாங்கத்தால் விதிக்கப் படுகிறதென்றால் இந்த வழக்கத்தை ஆதியிலே கண்டவர்கள் நகரத்தார்கள் தான்.  தான் ஈட்டிய பொருளைக் காத்து சேமித்து, வகுத்து, பகுத்துக் கொடுத்தவர்கள்.  ஒரு குறிப்பிட்ட தொகையை தர்ம வட்டிக்குக் கொடுத்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை தர்ம காரியங்களுக்கு, ஆலயப் பணிக்கு என ஆக்கபூர்வமாகப் பகுத்து வழங்கியவர்கள் தான் நகரத்தார்கள்.  வட்டி என்றதும் அநியாய வட்டி, ரன் வட்டி, மீட்டர் வட்டி என்று கூறப்படும் வட்டிகளல்ல.... நியாயமான வட்டி, அதைத் தான் தர்ம வட்டி என்றேன்.  இந்தத் தர்ம வட்டி சதவீதம் தான் அரசுக்கு இன்றைய வரிவிதிப்புக் காரணமான மூலம்.

கோவிலூர் சுவாமிகள் அமெரிக்காவில் புகைப்படக் கலையிலும், அச்சகத் துறையிலும் கொடிகட்டிப் பறந்தவர்கள்.  இந்தத் துறைகளில் உலகத்தில் மிகச் சிறந்தவர்கள் வரிசையில் நமது சுவாமிகளும் ஒருவர். அப்படித் தன் சுய உழைப்பால் ஈட்டிய செல்வத்தையெல்லாம் கோவிலூர் மடத்துக்குக் கொண்டு வந்தார். கொண்டு வந்த செல்வத்தை நலிந்தோருக்குப் பயன்படவேண்டும் என்று விரும்புகிறார்.

பட்டினத்தடிகளும் தன் செல்வங்களை யெல்லாம் தனது கணக்காளரிடம் கொடுத்து, "ஏழை எளியோருக்குக் கொடுத்துவிடு" என்று கூறி துறவறம் மேற்கொண்டார்.  ஆனால் நமது நாச்சியப்ப அடிகளோ,  தான் ஈட்டிய செல்வங்களைத் தானே முன்னின்று ஏழை, எளியோர் மற்றும் அறப்பணிகளுக்கு வாரி வழங்குகிறார் என்றால் வாழும் பட்டினத்தடிகளாக நான் சுவாமிகளைப் பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார்.

அடுத்துத் "தலையாய மக்களைத் தந்த தலையாய சமூகம்" என்ற பொருளில் கண்ணகியைப் பற்றி நா. மீனவன் அவர்களும், காரைக்கால் அம்மையாரைப் பற்றி இராம. செளந்திரவல்லி அவர்களும், பட்டினத்தாரைப் பற்றி முனைவர் அர. சிங்கார வடிவேலன் அவர்களும், பாடுவார் முத்தப்பர் பற்றி பழ.முத்தப்பன் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள்.  கோவிலைச் சார்ந்த குடிகள் என்ற பொருளில் சொ.சொ.மீ. சுந்தரம் அவர்களும் உரையாற்றிய பின்னர், மதிய உணவுக்குப் பிறகு 2-30 மணிக்குக்  குழு விவாத அரங்கம்  நடைபெற்றது.  மாநாட்டில் பங்கேற்றோர் தங்களுக்குள் தனித்தனிக் குழுவாக அமைத்துக் கொண்டு எந்த வகையில் உதவிடலாம் என்று கீழ்க்கண்ட பொருளில் விவாதித்தனர்.

1. கல்வி மேம்பாட்டு உதவிகள்; 2. வேலை வாய்ப்புகள்;  3. மணமுறிவைத் தவிர்த்தல்: 4. முதியோருக்கு உதவுதல்: 5. நலைவடைந்த நகர விடுதிகளின் சீரமைப்பு: 6. மகளிர் மேம்பாடு: 7. திருமண நடைமுறைகள்.

ஆகிய பொருளில் விவாதம் நடத்தி ஆக்க பூர்வமான அறிக்கைகளைத் தயார் செய்தனர்.

மாலை 6--00 மணி அளவில் "மாறி வரும் காலத்தில் நகரத்தார் மாறியது, மாறாதது, மாறக் கூடாதது" என்ற பொருளில் சமூக அரங்கம் நடைபெற்றது.

முனைவர் சுப. அண்ணாமலை தலைமையில் முனைவர் தமிழண்ணல், விசாலாட்சி சுப்பிரமணியன், ச. மெய்யப்பன், பழ. கருப்பையா ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.  இரவு 8-00 மணிக்கு "நகரத்தார் இதழ்"களுக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.  தன வணிகன், நகரத்தார் மலர்,  நகரத்தார் இதழ், ஆச்சி வந்தாச்சு ஆகிய இதழ்களின் ஆசிரியர்களுக்குப் பொன்னாடை அணிவித்து சுவாமிகள் ஆசி கூறினார்கள்.  இதழ்களின் ஆசிரியர்களைப் பாராட்டி கவிஞர் செல்வ--கணபதி உரை நிகழ்த்தினார்.  அன்றைய நிகழ்ச்சி நிறைவுற்று இரவு உணவுக்கு அனைவரும் சென்றனர்.

மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள்;  நீதியரசர்,  டாக்டர். அரு. லெட்சுமணன் அவர்கள் தலைமையில் தொடங்கியது.

குழு விவாதம் நடத்தி ஆக்கப்பூர்வமான அறிக்கைகளைத் தயாரித்த குழுவின் தலைவர்கள் அறிக்கையினைச் சமர்ப்பித்து உரையாற்றினர்.  அவர்கள் சமர்ப்பித்த அறிக்கை பற்றி அறிஞர்களின் கருத்துரையும் நடைபெற்றது.  தீர்மானங்களை நிறைவேற்றி நகரத்தார் நல்வாழ்வு அறநிலை துவங்குதலும் ஏகமனதாக நிறைவேற்றப் பெற்றது.

நாச்சியப்ப சுவாமிகள் நிறைவுரையாற்றினார்.  செயலாளர் நா. நாராயணன் நன்றியுரையாற்றினார்.  கூடிக் கலைந்தோம் என்றில்லாமல் நம் நிறைகுறைகளைக் கூட்டிக் கழித்ததாகவும், கூடிக் களித்தோம் என்ற உணர்வோடு மாநாடு நிறைவுற்றது.  இறை வணக்கம் பாடி முடிந்ததும் தேசிய கீதம் முழங்கியது.  இறைப்பற்றும், தேசப் பற்றும் மிக்கவர்கள் நகரத்தார்கள் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்வதாக அமைந்தது.  மூன்று நாள் மாநாட்டில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர். இனி வரும் ஆண்டுதோறும் 96 ஊர் நகரத்தார் மாநாடு நடத்த வேண்டும் என்ற உறுதியோடு மாநாட்டுத் திருவிழா மகிழ்ச்சியுடனும், நம்பிக்கையுடனும் எதிர்காலத்தில் வரும் சந்ததியினருக்கும் உதவவேண்டும் என்ற சுவாமிகளின் தொலை நோக்குத் திட்டமும் நிறைவேறும் என்ற நம்பிக்கையோடு ஒருவருக்கொருவர் விடைபெற்றுக் கொண்டும், சுவாமிகளிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டும் தங்கள் இல்லங்களுக்குப் புறப்பட்டனர்.

தொகுப்பு திரு நாகேஷ்

நகரத்தார் ரத்தினங்கள்:-

நகரத்தார் ஒவ்வொருவரும் ஒரு ரத்தினம் தான் என்றாலும் தாங்கள் ஏற்றுக் கொண்ட துறைகளில் சாதனை நிகழ்த்தியதற்காகவும், நிகழ்த்திக் கொண்டிருப்பதற்காகவும் நகரத்தாரில் நால்வருக்கு, 'நகரத்தார் ரத்தினங்கள்' என்ற பட்டமும், தங்கப் பதக்கமும் பெற்றுப் பாராட்டுப் பெற்றனர்.  நீதித்துறைச் சாதனை நாயகர் ஆந்திர மாநில உயர்நீதிமன்ற தலைமை  நீதியரசர் டாக்டர் அரு.லெட்சுமணன் அவர்களும், வாழும் தமிழாம் முனைவர் தமிழண்ணல் அவர்களும், பாரதிதாசன் பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் முத்துக்கருப்பன் அவர்களும், நகரத்தாரில் இரண்டாவது ஐ.ஏ.எஸ். என்ற பெருமையுடன் கர்நாடக மாநிலம் பெங்களூரில் இந்திய விண்வெளித்துறைக் கூடுதல் செயலாளராகப் பணியாற்றி வருபவருமான சொ.சொ. மீனாட்சி சுந்தரம் ஐ.ஏ.எஸ். அவர்களுமாகிய நால்வரும் "அருந்தவச் செல்வர்கள்" என்று சுவாமிகள் பாராட்டுத் தெரிவித்தார்கள்.  ரத்தினங்கள் நால்வரும் ஏற்புரை நிகழ்த்தினர்.



--Geetha Sambasivam (பேச்சு) 10:22, 25 டிசம்பர் 2013 (GMT)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 4 ஜனவரி 2014, 09:42 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,436 முறைகள் அணுகப்பட்டது.