கிளிகள் – ஒரு தொடர்
பறவைகள் பல விதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்றார் கவிஞர் கண்ணதாசன். ஆம். அவைகள் வண்ணத்திலும் குரலிலும் ஒவ்வொன்றும் ஒரு விதம்.
குயிலின் கணிர் குரல் அழகு.
ஆண் மயில் தன் வண்ணத் தோகை விரித்தாடல் அழகு. ஆனால் அது தன் வாயைத் திறந்தாலோ கர்ண கடூரம்.
ஆந்தையில் கூவலோ பலருக்கு அடி வயிற்றைக் கலக்கும் ஒன்று. ஆந்தையோ கோட்டானோ கூவிடின் அங்கு ஒரு சாவு நிச்சயம் என்று சொல்லி அதைக் கண்டதும் கொன்றிட விழைவோர் பலர் உண்டு இவ்வுலகில்.
சமாதானச் சின்னம் புறாவின் குரல் பலருக்குப் பிடிக்காத ஒன்று. ஏன் ஒரு வகைப் புறாவின் ஆங்கிலப் பெயரே “ஒப்பாரி வைத்திடும் புறா” (Mourning dove) என்பதாகும்.
ஆனால் கிளியின் குரலும், வண்ணமும் மனிதனுக்கு மிகவும் பிடித்த ஒன்று.
குழந்தையின் மழலையைக் கிள்ளை மொழி என்கிறோம். மிகவும் பிடித்த நபரை (காதலியை) “கிளியே” என்றழைக்கிறோம். “அவள் குரலில் கிளி கொஞ்சும்” என்கிறோம்.
சரி. வாங்க நாம கொஞ்சம் கிளிகளெப் பாக்கலாம் இந்தத் தொடரிலே.
பறவைகள் அனைத்துமே அழகானவைதான். அவற்றுள் சற்று கூடுதலாகவே அழகு கொண்டது கிளி. ஆனால் அந்தக் கூடுதல் அழகே அதன் எதிரியோ? அதற்குதான் மனிதர்களிடம் இருந்து எத்தனை இன்னல்கள் பாருங்கள்.
கூண்டுக் கிளி - 1
அன்பே உருவான அன்னை
பாசமிகு அண்ணன் தம்பி
கேட்டவை எல்லாம்
கேட்ட உடன் கொண்டு குவித்திடும் தந்தை
கூண்டுக் கிளியாய்
வாழ்ந்திருந்தேன் நான்
ஊர் உலகம்
ஏதென் றறிந்திடாதே
வந்தார் அவர் ஒரு நாள்
என்னைப் பார்த்திடவே
நன்றாய் என்னை அலங்கரித்தார்
என் வீட்டார்
வந்தவர் சொன்னார் சிறிது
சிந்தனை செய்தே
தொடருங்கள் மேலே என்றே
தொடர்ந்த தென் பயணம்
வந்தடைந்தேன் புது வீடு
வந்த நாள் முதல்
இந்த நாள் வரை ஏனோ அறியேன்
எந்தன் நாத்திக்கும் மாமிக்கும்
கொஞ்சமும் பிடிக்கவில்லை என்னை
நின்றால் குற்றம்
நடந்தால் குற்றம்
உட்கார்ந்தால் குற்றம்
பாடினால் குற்றம்
ஆடினால் குற்றம்
என்தன் உற்றார் உறவினரோ
என்றுமே மட்டம்
கூண்டுக் கிளியாய்
இருந்த போதிருந்த
சுதந்திரம்
இல்லையே சிறகு முளைத்து
வெளி வந்த
இந்தச் சிறு கிளிக்கு
பூனைகள் மத்தியில்
ஏனோ சிற கொடிந்த கிளியாய் நான்
வாழ்ந்திடவும் முடியாது
புகுந்த வீட்டில் இன்பமாய்
திரும்பச் சென்றிடவும் முடியாதே
பிறந்த என் விட்டிற்கே
நடராஜன் கல்பட்டு