கள்ளன் பெரிதா காப்பான் பெரிதாமரபு விக்கி இருந்து(பழமொழிகள் ஆராய்ச்சிக் கட்டுரைகள் 4. இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பழமொழி ஆராய்ச்சிக் கட்டுரை 4 ”கள்ளன் பெரிதா காப்பான் பெரிதா” கள்ளன் பெரியதா காப்பான் பெரியதா…? என்று அடிக்கடி ஒரு பழமொழியை உபயோகப்படுத்துகிறோம். என்ன ஒரு வினாச்சொல் வழக்கு, ஆச்சரியமாக இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் அந்தக் காலத்துப் பெரியவர்கள் எவ்வளவு யோசித்து ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லி இருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமே மிஞ்சுகிறது. மா,பலா வாழை என்று ஒரு சொல் அடுக்கு உண்டு, பழங்களில் முதன்மையானது மாம்பழம், அடுத்து பலாப்பழம், அடுத்து வாழைப்பழம் மூன்றுமே மருத்துவ குணமுள்ள இனிப்பான சுவையான பழங்கள். ஆங்கிலத்திலே (riverse engineering) என்று சொல்லுவார்கள். ஒரு யந்திரத்தை கட்டுமானம் செய்ய அதே போன்ற ஒரு யந்திரத்தை ஒவ்வொரு பாகமாகப் பிரித்து தலைகீழாக எண்ணிக்கை வரும்படி அடுக்கி வைத்துவிட்டு, மீண்டும் அதே வரிசையில் அதை கட்டுமானம் செய்வார்கள். அது போல நாம் நம்முடைய முன்னோர்கள் சொன்னதையெல்லாம் ஒவ்வொரு சொல்லாக எடுத்து அவற்றை பிரித்து அடுக்கி வைத்துவிட்டு, மீண்டும் கட்டுமானம் செய்ய ஆரம்பித்தால்தான் தெரிகிறது. அவர்கள்: அதற்குள்ளே எவ்வளவு நுணுக்கமான விஷயங்களை பொதிந்து வைத்திருக்கிறார்கள் எனபது. வண்டு துளைத்த பழம் இனிப்பாக இருக்குமென்று சொல்லுவர். ஆனால் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று மாட்டிக் கொள்ளும் வண்டு ஒரு கள்ளன் ,அந்தக் கனியின் சுவையைக் கூட அறிய முடியாமல் , சுவைக்க முடியாமல் மாங்கொட்டையின் உள்ளே மாட்டிக் கொண்டு அவதிப்படுகிறது. பூ மூடிக் கொண்டு காயாகி பின் கனியாகி அதை யாராவது உண்ணும்போதுதான் வெளியே வரமுடியும் அதனால் கள்ளனாய் இருப்பதை விட காப்பனாய் இருப்பதே மேல்.
அடுத்தது வாழை , வாழைப்பழமே மருந்து , வாழைதண்டு சாற்றினை பாம்பு கடி விஷத்துக்கு முறிவாக அளிப்பர், வாழைப்பட்டையில் பாம்பு கடித்தவர்களை படுக்க வைப்பர்,விஷ முறிவான இந்த வாழைமரம் இருந்தால்தான் கொண்டாட்டங்களே களை கட்டும். அதே போல் வாழைப் பழம் இருந்தால்தான் விருந்தே களைகட்டும் தலை வாழை இலையில் முதலில் வாழைப்பழமும் சர்க்கரையும் போட்டுவிட்டு ,பிறகுதான் மற்ற உணவு வகைகளை பறிமாறுவர். வாழைப்பழம் நம்முடைய உள் உறுப்புகளின் இயக்கத்தை எளிதாக்குகிறது, இறைப்பையின் இயக்கத்தை துண்டுகிறது உண்ணும் உணவுகள் செரிக்க உதவுகிறது. அந்த வாழை மரத்தை ஆராய்ந்தால் வாழைக் குருத்து முளை விட்டு பின் வளர்ந்து , மரமாகி குலைதள்ளும் பருவத்திற்கு சற்றுமுன்பாக பெரிய பெரிய இலைகள் வருவது நின்று போய், ஒருநாள் ஒரு பளபளப்பான ஒரு சிறு இலை தோன்றும் அதைக் " கண்ணாடி இலை " என்பர் .அந்தக் கண்ணாடி இலை தோன்றிய பிறகுதான் குலைவிடும், அந்தக் கண்ணாடி இலை அந்தக் குலை சிறியதாக இருக்கும்போது பாதுகாக்கும், பிறகு வாழைக் குலை பெரியதாக ஆகும்போது அந்தக் கண்ணாடி இலை அந்த வாழைக்குலைக்கு வழிவிட்டு ஒதுங்கி இருக்கும்வாழையடி வாழையாய் குருத்துகள் அந்த வாழை மரத்தின் கீழே தோன்றிக் கொண்டே இருக்கும், ஒரு வாழை மரம் வைத்தாலே அது தானாகவே வாழைத்தோப்பாகும் . ஒரு நல்ல பெண்மணி ஒருத்தி வந்தாலே எப்படி குலம் தழைக்குமோ அது போல. நம்மை வளர்க்கும் தாய் எப்படி நம்மை ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் வளர்த்து நாம் பெரியவனானவுடன் நம் சுகத்துக்காக ,நம் மகிழ்ச்சிக்காக, சற்றே ஒதுங்கிக் கொள்கிறாளோ அதுபோல கண்ணாடி இலை ஒதுங்கிக் கொள்ளும். பிறகு குலையில் வாழைப்பூ தோன்றும் அந்த வாழைப்பூவில் உள்ளிருக்கும் தனித்தனியான ஒவ்வொரு மடலும் ஒரு கொத்துப் பூக்களை பாதுகாத்து அவை முற்றி காய்களானவுடன் மடல்கள் ஒதுங்கிக் கொள்ளும், இப்படி ஒவ்வொரு மடலும் இதழ் விரிந்து காப்பானாக இருந்து ஒதுங்க வேண்டிய நேரத்தில் ஒதுங்கிக் கொள்ளும், ஆனாலும் கடைசியாக காயாக முடியாத சில சிறு பூக்களை கடைசீ வரையில் மடல்கள் மூடிக் கொண்டு பாது காத்துக் கொண்டிருக்கும். அந்த அமைப்பை நாம் வாழைப் பூ என்கிறோம் மனிதன் எப்படி வாழவேண்டும் என்று அறிவுறுத்துமாறு வாழ்க்கைப்பாடம் நடத்தும் ஒவ்வொரு வாழை மரமும் காப்பானே, என்பதில் ஐயமே இல்லை. பிறகு அந்த வாழைப்பூவை மடல் பிரித்து அந்த சிறும் பூக்களை கொத்தாக எடுத்து அரிந்து அதை சமைத்து நாம் உண்ணுவோம், அப்படி சிறும் பூக்களை அரியும் போது ஒவ்வொரு சிறும் பூக்களையும் கூர்ந்து கவனித்தால், சுற்றிலும் அந்த சிறும் பூக்களின் பாகங்களும் நடுவில் தலை கொழுத்து ஒரு மொட்டுமாய் இருக்கும் அந்த மொட்டுடன் கூடிய தண்டை கள்ளன் என்று சொல்லுவார்கள் , அது உடலுக்கு கெடுதியானது ஆகவே அந்த கள்ளனை நீக்கி விட்டு சமைப்பர். அதைக் காட்டித்தான் உள்ளே கள்ளன் ஒளிந்திருக்கிறான் பார் என்று என் அன்னை கூறுவார்கள்
|